Friday, December 29, 2006

நடைமுறை

மக்களாட்சி தன்னை காக்க வாங்கோ
மக்கள் மேல ஏறி ஓடி வாங்கோ
தேசிய பறவை இனி காக்காதாங்கோ
மந்திரி எல்லாம் மன்னர்தாங்கோ

மக்கள் வரிப்பணத்தில் குளிப்பாட்டுங்கோ
மாசமொரு பட்டம் கொடுக்கோனுங்கோ
அடுத்தவன் சொவரில போஸ்டருங்கோ
ஆளுயர மாலை போடனுங்கோ
கம்யூட்டர் பாண்டிலும் கட்சி உண்டுங்கோ
உழுதவன் எலி தின்னாலும் மாறாதுங்கோ

மானம் வெட்கம் பார்க்க முடியாதுங்கோ
மையநீரோட்டம் இப்ப அதுதானுங்கோ
கொள்கை பேச்செல்லாம் மறந்திடுங்கோ
தேவை பட்டா துடைக்க எடுத்துக்குங்கோ

கட்சிக்கு கொடிதான் பறக்கோனுங்கோ
கோவணம் நீங்க கழட்டிதாங்கோ
காரியம் ஆக கால் பிடிக்கோனுங்கோ
கலாச்சாரம் அதுதானு முரசடிங்கோனுங்கோ

அடிப்படை தேவை செலைதானுங்கோ
அடுத்ததெல்லாம் மறந்திடுங்கோ
கலர் டிவி பார்த்து குஷியாகுங்கோ
கையூட்டு இனி தப்பிலிங்கோ
புத்தகமா கொடுக்க உத்தரவுங்கோ

சாதி பேரை சொல்லி கட்சி உண்டுங்கோ
காரணம் கேட்டா மாவோ உண்டுங்கோ
சமூகநீதி இப்ப சக்கை ஜோக்குங்கோ
ஊழல் இங்கே நடைமுறைங்கோ
புத்திசாலியா நீங்க பொழைக்க பாருங்கோ

விலங்குகளும் நிலநடுக்கமும்


Springy Snake
Originally uploaded by Yogi.
அண்மையில் சீன தேசத்தில் நில நடுக்கத்தை கவனிக்க பாம்பு பண்ணைகளில் வெப் கேம் பொருத்தியுள்ளனர். இந்த பாம்பு பண்ணைகளில் உணவிற்காக பாம்புகளை வளர்ந்து வருகின்றனர். நானிங் எனும் நகரத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இந்த நகரம் நிலநடுக்கத்தை உண்டாக்க கூடிய நில தகடுகளில் அமைந்துள்ளது.

இந்நகரத்தின் நில நடுக்க கண்காணிப்பு துறை அதிகாரிகள் பாம்புகள் நிலநடுக்க உருவாக்கத்தை 120 மைல்களுக்கு அப்பாலிருந்தே கவனிக்க வல்லன என்று கூறியுள்ளார்கள். நிலநடுக்கம் கடுங்குளிர் காலங்களில் ஏற்படும் போது கூட பாம்புகள் தங்கள் புற்றினை விட்டு வெளியேறி பதட்டமான நிலைக்கு மாறி விடுகின்றன. கடுமையான நில நடுக்கம் உருவாகுகையில் தங்கள் தலையினை சுவர்களில் மோதவும் செய்கின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நகரத்தில் பாம்பு பண்ணை வைத்திருக்கும் குடும்பங்கள் நிறைய உள்ளனவாம். அக்குடும்பங்கள் இந்த திட்டங்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்துள்ளன.

Paso Robles Earthquake
Originally uploaded by Hey Paul.

வரலாற்றில் விலங்குகளின் சுபாவம் நிலநடுக்கம் ஏற்பட்டும் காலத்தில் மாறுவது பற்றிய குறிப்புகள் உண்டு. கிருத்து பிறப்பதற்கு 373 ஆண்டுகளுக்கு ஹெலிஸ் எனும் கிரேக்க நகரத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கதின் முன் எலி,பாம்பு போன்றவை நகரத்தை விட்டு நீங்கின போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

1975ம் ஆண்டு சீன அதிகாரிகள் விலங்களுகளின் பதட்டமான குணங்களை கண்டு ஹாய்செங் நகரத்தின் ஒரு மில்லியன் மக்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். சிலநாட்களுக்கு பின் அந்நகரத்தை 7.3 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியது. அரசின் முன்னச்சரிக்கையால் பெருமளவு உயிர் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது.

அறிவியல் பூர்வமாய் விலங்கினங்களின் மாறுபடும் குணங்களையும், பதற்றத்தையும் நிலநடுக்கத்தோடு இதுவரை இணைக்க இயலவில்லை. ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

Thursday, December 28, 2006

அரசு விழாவில் பரிசு பொருள்கள்

அரசு விழாக்களில் பொன்னாடை போர்த்துவதற்கு பதிலாய் புத்தகம் பரிசாக வழங்குமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.

இந்த நேரத்தில் மனதில் கேள்விகள் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை

மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு விழாக்களில் ஏன் பொன்னாடையோ, புத்தகமோ கொடுக்க வேண்டும்? மக்கள் பிரதிநிதி மக்களிடமிருந்து ஏன் இதை எதிர்பார்க்கிறார்?

இது போல் பரிசு பொருள்கள் வழங்க ஆரம்பித்தல் சிறிது சிறிதாய் காக்காய் பிடித்தல், சோப்பு போடுதல் போன்றவையாய் திரிந்து பரிசு வழங்குதலில் போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி தவறுகள் நடக்க அடி போடுகிறதல்லவா? இந்த தவறுகளை அரசு சட்டரீதியாக அங்கிகரிக்கிறதா?

அரசு அலுவலகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தவோ, புத்தகம் வாங்கவோ நிதி எங்கிருந்து கொண்டு வருகின்றார்கள்?

இதற்கு வரிப்பணம் பயன்படுத்தபட்டால் அது வீண் செலவு அல்லவா?

வரிப்பணம் இன்றி பிற வழி பணம் வசூலிக்கப்பட்டால் அது அரசு ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு பணம் கொடுப்பது போல் ஆகுமே? அது தவறில்லையா?

சிலைகளால் வரும் போராட்டமோ, சலசலப்போ இது போன்ற விஷயங்களுக்கு வருவதில்லையே ஏன்?

மக்கள் பிரதிநிதி எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் நேர்மையையாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறா?

வாழ்க மக்களாட்சி என்று சொல்லி கேள்விகளை தூக்கி புதைத்து ்விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியதுதான் போலிருக்கிறது.

Wednesday, December 27, 2006

ஈரம்

பாசி படர்ந்து ஈரம் கட்டும்
மொட்டை மாடியின் வாசனையுடன்
அவளும் நானும் ஈரமுமிருந்த
மழை ஒய்ந்த ஒருநாளில்
முன்னை போல் நீயில்லையென்றாள்
மாடியின் சிதறிய எச்சங்களாய்
மனதில் நினைவிருக்க
மாறி போனது நம்முறவென்றாள்

எச்சங்கள் மேல் தங்கும்
ஈரந்தான் உள்ளிறங்கும்
ஈரமடி நம் உறவு
என்றென்றும் உள் உண்டு

காய்ந்தாலும் காய்வதென்றும் மேல்பரப்பில்
இதமான குளிரோடு
உன்னன்பின் ஸ்பரிசங்கள்
என்னுள்ளே என்றுமுண்டு

Tuesday, December 26, 2006

பலி


Coastal erosion
Originally uploaded by fredericknoronha.
பலி கொடுக்கின்றோம்
வலியோ உடன் தெரியாது
எனக்கும் பிறருக்குமான
எல்லோருக்கு பொதுவானதுமான
பலி தினமும் உண்டு

வாகனத்தின் புகையிலும்
வாரி இறைக்கப்படும் ப்ளாஸ்டிக்கிலும்
நதி நீரில் கலக்கும்
நாசம் கொண்ட கழிவாலும்
மறக்காமலுண்டு சுற்றுச்சூழலின் பலி

பனிக்கரடியின் தூக்கம் கலைத்திட்டோம்
புலிக்கூட்டத்தின் இருப்பை அழித்திட்டோம்
இடம் மாறும் பறவையை நிறுத்திட்டோம்
சூழலும் சுற்றமும் தாங்கிடுமோ பலி
கடல் கொண்டு காணாமல் போன
குமரிக்கண்ட கதை ஆவோமா நாம்

புடைத்த வேர்களுள்ள
பருத்த மரத்தில் விஷமூட்டி
கனி காண நிற்கின்றோம்

தனைகாத்தல் மரத்தின் இயல்பு
தனைகாத்தல் மரத்தின் அவசியம்
அரவங்களாய் வேர் மாற்றலாம்
அதன் முறுக்கின பிடியில்
பலி கொடுத்தவன் அன்று பலியாடு

Sunday, December 24, 2006

மேய்ச்சல் 6

மக்களாட்சி அருமையான கருத்தாக்கம். இந்த தத்துவத்தில் கூட்டாய் வாழும் சமுதாயம் தனது தேவைகள், பாதுகாப்பு,நிதி அளவு போன்றவற்றை தானே விவாதித்து, வரையறுத்து, செயல்படுத்தும் திறனை கொண்டிருக்கிறது.

இவ்வாறான உயரிய கருத்தாக்கத்தை கிருத்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய பெருமை கிரேக்க நாகரித்தவருக்கே உரியது. அக்காலத்தில் கிரேக்க தேசம் ஒற்றை நாடாய் அமைந்திருக்கவில்லை, பிளேட்டாவின் வார்த்தைகளில் சொன்னால் குட்டையை சுற்றியிருக்கும் சிறு தவளைகள் போல்தான் இருந்தது. மத்திய தரைகடலையையும், கருங்கடலையையும் சுற்றி சுமார் 1500 தனி தனி அரசாய் அமைந்திருந்தன.

எல்லா அரசுகளும் மக்களாட்சியாய் இல்லாமல் சில அரசுகள் இப்போதுள்ள இந்தியாவின் சில மாகாணங்கள் போல் வாரிசுரிமை சார்ந்த அரசுகளாகவும், சில அரசுகள் வசதியான குடும்பங்களின் கையிலும் இருந்தது. இவற்றின் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மக்களாட்சிகளில் ஒன்றாய் ஏதேன்ஸ் மாநகரம் விளங்கியது. அங்கிருந்த மக்களாட்சியின் தீர்மானங்களில் முழு நகரமும் பங்கேடுத்தது. மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்காமல் தீர்மானங்களுக்கான வாக்களிப்பு வர்க்க பேதமின்றி மக்களிடமிருந்தே வந்த பூரண மக்களாட்சி நிலவியது. கிரேக்கத்தில் அக்காலத்தை ஒட்டி அடிமைகளும், பெண்களும் ஒட்டுரிமை இல்லாதவர்களாய் இருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு நிர்வாக காரணங்களுக்காக பின்னர் வந்து ஒட்டிக் கொண்டது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மனசாட்சியை பட்டம் விட கற்றுக் கொள்கையில் பிரதிநிதிக்கு மன்னனான நினைப்பும், மக்களுக்கு பிச்சை பாத்திரமும் வழங்கப்பட்டது.

மகாராஷ்ட்ராவின் விதர்பாவில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆளுமை திறனை(?) பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயின் பிரச்சனையை தீர்க்க இயல்வதை பார்த்தால் மெய் சிலிர்த்து போகிறது. செத்து போனவன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுகிறார்கள். உயிரோடு இருப்பனுக்கு கிடைப்பது அனுதாபமும், மேடை பேச்சுகளுந்தான். இப்படி செய்தால் தற்கொலை குறையுமென்று நம்புகிறார்களா என்ன?




எல்லா பழியையும் தூக்கி மரபியல் மாற்றம் செய்யப்பட்ட பிடி காட்டன்(Bt cotton) மேல் போட்டு விட்டால் பாசன வசதி குறைவும், மின்சார தட்டுப்பாடும், பருத்தி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக கோளாறும், நிதி உதவி அளித்தலில் நடக்கும் குறைபாடுகளும் யாருக்கு தெரிய போகிறது? ஒற்றை பரிணாம பார்வையில் எப்படி பிரச்னை தீரும்? சூ மந்திரகாளி வித்தை காட்டி மக்கள் கவனத்தை திருப்புவதில் மக்கள் பிரதிநிதிகளின் திறமையை பாராட்டியே தீர வேண்டும்.

நமது இந்திய மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு செய்யும் நல்ல விஷயம் ஒன்றும் உண்டு. கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் மூலங்களில் உலக தட்ப வெப்ப உயர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை களையும் பனியில் சீன தேசத்துடன் நம் தேசமும் கரம் கோர்த்து இறங்கி உள்ளது. உலக வெப்ப உயர்வின் காரணமாய் புலிகளின் சரணலாயமாய் இருந்த சுந்தர்பன் காடுகளின் இரு தீவுகளை ஏற்கனவே இழந்து விட்டோம். கடல் மட்டம் புவியின் வெப்ப உயர்வால் அதிகரித்து நிலப்பரப்பை விழுங்கி வருகின்றது.

இக்தகைய சூழலில் சுத்திகரிக்கபட கூடிய மாற்று எரிபொருள் அவசியம். அமெரிக்காவின் சான்டியகோ பல்கலைகழகத்தை சேர்ந்த கென்னத் நீல்சன் தலைமையிலான குழு பாக்டீரியாவின் உதவியானல் மின் உற்பத்தி செய்யும் துறையில் ஆய்வு மேற் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். எம்-ஆர்1 எனும் இந்த பாக்டீரியா பால், தேன் மற்றும் மீன் முதற் கொண்டு 75 வகை கார்பன் பொருள்களை மின் உற்பத்திக்கு மூலப் பொருளாக பயன்படுத்தும் திறனுள்ளது. இந்த பாக்டீரியா உலோகங்களின் அரிப்பையும் தடுக்க வல்லது.

கென்னத் நீல்சன் இந்த பாக்டீரியாவின் மின் உற்பத்திக்கு காரணமான ஜீன்களை கண்டறிந்து அதை மேம்படுத்தி புதிய வகை எம்-ஆர் 1 பாக்டீரியாவை உருவாக்கியுள்ளார். இந்த ஆய்வின் வெற்றி மாற்று எரிபொருள் துறையில் ஒரு மைல் கல்லாகும்.


Saturday, December 23, 2006

இளமையின் ரகசியம்

என்றென்றும் இளைமையாக இருக்க சூரணம் பல உண்டு. வேலை செய்கிறதோ , செய்யவில்லையோ வாங்க நிறைய நபர்கள் உண்டு. என்றென்றும் பதினாறாய் இருக்க எல்லோருக்கும் ஆசைதான். மார்க்கண்டேயன் கதையில் அது சூரணமின்றி சாத்தியமானது. அறிவியல் உலகமும் இந்த சூரணம் உருவாக்க ஆர்வமாய் முயன்று வருகின்றது. கண்டுபிடிப்பவன் ஜாக்பாட் லாட்டரி அடித்தவன் போல் ஆகி வடுவான்.

நெதர்லாந்தின் மருத்துமனை ஒன்றில் 1990ல் ஆப்கானை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் ஒரு விதமான மரபியல் குறைபாட்டின் காரணமாய் அவனுது வயதை கடந்த வளர்ச்சியை அடைந்து ஹைப்பர் டென்ஷன், காது மற்றும் பார்வை குறைபாடு , பலகீனம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு தவறி விட்டான்.இந்த வகை குறைப்பாடு எக்ஸ்பிஎப் ப்ரோகிராய்ட் சின்ட்ரோம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

டிஎன்ஏ சேதங்கள் உயிரினங்களில் உடலில் தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு முறை டிஎன்ஏ சேதம் நிகழ்கையிலும் எக்ஸ்பிஎப்(XPF) என்சைம் இஆர்சிசி1(ERCC1) புரதத்தோடு இணைந்து செல்களில் டிஎன்ஏ பாதிப்பை சரி செய்கின்றது. வயதாகும் போது இந்த சரி செய்து கொள்ளும் தன்மை குறைய ஆரம்பிக்கிறது. மருத்துவ உலகம் இப்போது இந்த என்சைம் உற்பத்தி குறைவை கட்டுப்படுத்துவதன் மூலம் வயதாவதை ஒத்தி போடலாமா என்று பார்த்து வருகின்றது.

நெதர்லாந்தில் மருத்துவர்கள் ஆப்கன் சிறுவனிடத்து எக்ஸ்பிஎப் என்சைம் உருவாக்கும் ஜீன்களில் குறைபாடுகளை கண்டறிந்தனர்.மருத்துவ உலகம் தொடர்ந்து இந்த துறையில் முயன்று வருகின்றது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தில் எலியிடத்து இதை பரிசோதனை முறையில் சோதித்து வெற்றியும் கண்டுள்ளார்கள்.

தமிழ் கூறும் நல்லுலகை பவுடர் கோட்டிங் வைத்துக் கொண்டே வயசான கதாநாயகர்கள் பாடாய் படுத்தி வருகிறார்கள். இந்த சோதனை மருத்துவ பரிசோதனைகள் நடைமுறைக்கு வந்தால் கொடுமைதான் போங்க.

Wednesday, December 20, 2006

துணையின்றி கருவுறும் ப்ளோரா


Komodo Dragon
Originally uploaded by Stephen Childs.

லண்டனை சேர்ந்த செஸ்டர் விலங்கியல் பூங்காவில் உள்ள ஊர்வன வகையை சேர்ந்த ப்ளோரா என்ற கமோடா ட்ராகன் துணையின்றி கருவுற்று இருக்கிறது. கமோடா ட்ராகன்கள் இந்தோனேஷியாவின் காடுகளில் வாழும் ப்ராணிகள் ஆகும். இது போன்ற துணையற்ற கருவறுதலுக்கு பார்த்தினோஜெனிஸிஸ் என்று பெயர். இந்த வகை கருவறுதல் மிக அபூர்வமான ஒன்றாகும். சென்ற ஏப்ரலில் இதே விலங்கியல் பூங்காவில் உள்ள சூங்காய் எனும் கமொடோ ட்ராகனும் துணையின்றி கருவுற்றது.


பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவுறல் முதுகெலும்பில்லாத சிறிய உயிரினங்களில் சாதாரணமானதொரு நிகழ்வு. உதாரணத்திற்கு சூப்ளாங்கெட்டன் எனும் கடல்வாழ் உயிரிலும், ஆப்பிட் எனும் பூச்சி வகையிலும் இவ்வகை கருவுறலை காணலாம். ஆனால் முதுகெழும்புள்ள உயிரிகளில் இந்நிகழ்வு அரிதான ஒன்றாகும்.


இவ்வகை கருவுறலில் தோன்றும் உயிர்கள் ஆணிணமாகதான் இருக்கும் மற்றும் அவற்றின் நோயெதிர்ப்பு திறனும், சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனும் குறைவாகவே இருக்கும்.



பாலூட்டிகளில் பெண்களிடத்து ஒரே வகை குரோமோசோம்களே உண்டு(XX குரோமோசோம்கள்). மாறாக கோமோடா ட்ராகன் போன்ற ஊர்வனவற்றிலும், சில பறவைகளிலும் பாலூட்டிகளை போல் அல்லாமல் பெண்களிடத்து இரு வேறு வகை குரோமோசோம்கள் உண்டு(ZW). இவ்வகை உயிரினங்களில் ஆண்களிடத்து ஒரே வகை குரோமோசோம்கள்தான் உண்டு. பெண்களிடத்து சினைமுட்டை உருவாக்கத்தில் போது செல் நான்காக பிரிகிறது, நான்கில் ஒன்று சினை முட்டையாகவும், மற்ற மற்ற மூன்றும் போலார் பாடியாகவும் மாறுகின்றது. இதில் பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவாக்கத்தில் இந்த போலார் பாடிகளில் ஒன்று விந்தனு போன்று செயலாற்றி சினைமுட்டையோடு இணைகிறது. இரண்டு ZZ குரோமாசோம்கள் இணைகையில் ஆண் குஞ்சு பிறக்கிறது. இரண்டு WW குரோமாசோம்கள் இணைகையில் கருவுறல் நேர்வதில்லை.



ஜப்பானில் அறிவியலார் எலிகளில் செயற்கை முறை பார்த்தினோஜெனிஸிஸ் சாத்தியம் என்பதை நிறுபித்துள்ளனர். ஏப்ரல் 2004ல் ஜப்பானியர்கள் பரிசோதனையில் வெற்றி ்பெற்றனர். இது வரை இயற்கையான பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவுறல் பாலூட்டிகளில் நிகழ்ந்ததாக பதியப்படவில்லை


Tuesday, December 19, 2006

ஜோ பார்பேரா

கார்ட்டூன் பார்க்கும் ஒவ்வொருவரும் பிரியமாய் ரசிக்கும் பாத்திரங்கள் டாம் மற்றும் ஜெர்ரி. இந்த பூனை, எலி விளையாட்டு பல காலமாய் எல்லோரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் மகிழ்வித்திருக்கிறது.இந்த பாத்திரங்களை நமக்கு தந்த ஜோ பார்பேரா நேற்று காலமானார். அவருக்கு வயது 95. இவரும் இவரது சகா பில் ஹன்னாவும் காலத்தால் அழியாத கார்ட்டூன் பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்கள். ஸ்கூபி டூ, யோகி கரடி மற்றும் பிளின்ட்ஸ்டோன் கார்ட்டூன்களும் இவர்களது கற்பனையே.

Monday, December 18, 2006

மேய்ச்சல் 5

காட் மஸ்ட் பி கிரேசி என்ற திரைப்படம் சின்ன வயதில் பார்த்தது. ஆப்ரிக்க கண்டத்தின் புஷ்மென் எனப்படும் பழங்குடியினரை பற்றியது. நகைச்சுவையாய் இயல்பாய் பயணிக்கும் கதை. இரண்டு பாகங்களாய் வந்தது. அண்மையில் படித்த ஒரு செய்தி இந்த திரைப்படத்தை நினைவு படுத்தியது.போட்ஸ்வானா நாட்டின் உயர் நீதி மன்றம் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 1000 புஷ்மென் பழங்குடியனருக்கு அவர்கள் நிலத்தை திரும்ப வழங்கியிருக்கிறது. பழங்குடியினர் அந்நிலத்தில் உள்ள தாதுப் பொருள்களின் மேலுள்ள ஆசையால் வெளியேற்றப்பட்டார்கள். இப்போது நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்றுக் கொண்ட போட்ஸ்வானா அரசு அந்நிலத்திற்கு திரும்பும் பழங்குடியினருக்கு மிக கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அவர்களது தண்ணீரிலும்,அவர்கள் பயன்படுத்தும் குதிரை, கழுதைகளளிலும் கை வைத்துள்ளது. இருபதாயிரம் ஆண்டுகளாக காலகாரியில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான நீதி கிடைக்குமாவென தெரியவில்லை. சனநாயகம் கேலிக் கூத்தாய் சனங்களின் உரிமையில் விளையாடுவதாய் மாறி வருகின்றது.

காலகாரி பாலைவனம்

நம்மூரிலும் சனநாயகத்திற்காக அரசியல் இல்லாமல் அரசியலுக்காக சனநாயகம் மாற இங்கு வேதனையான சூழ்நிலை நிலவுகிறது. எல்லா விஷயங்களும் அரசியல் துகிலுரிக்கப்படுகின்றன. மக்களை மேல் நோக்கி கூட்டி செல்வதற்கு பதிலாய் சனநாயக காவலர்களாய் நியமிக்கப்பட்டவர்கள் கண் கட்டு வித்தை நடத்துகிறார்கள். காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், நாட்டை பாதுக்காப்பவனின் மரணமாய் இருக்கட்டும், எல்லாமே எத்தனை ஒட்டுக்கள் கிடைக்கும், எவ்வளவு பரபரப்பை கிளப்பலாம் என்ற ரீதியிலியே கையாளப்படுகின்றது. சனநாயகம் வளர்சிதை மாற்றங்களில் ஆரோக்கியமாய் வளராமல் இது போன்ற திசைகளில் நகரும் போது சற்று மிரட்சியாய் உள்ளது.

பொது சொத்து எனபதை பற்றிய அறிவும், அதை பாதுகாப்பதன் ஆர்வமும் சமூகத்தில் குறைவாய் இருக்கிறது. எதுவாயிருந்தாலும் எடுத்து உடைப்பதில்தான் புரட்சி இருப்பதாய் நினைக்கும் ஆட்டு மந்தை மனநிலையே சமூகத்தில் உள்ளது.ராம்கி என்னும் ஜென்ராம் பொது சொத்து பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

நீலச்சட்டை நாயகர்கள் வெள்ளைச்சட்டை போட்டவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கங்குலியின் பங்கு இந்த வெற்றியில் குறிப்பிடதக்கது. எல்லாரும் வந்து வந்து போன முதல் இன்னிங்ஸில் உருப்படியாய் ஏதேனும் செய்தவர் இவர் ஓருவரே. இந்த வெற்றியில் அனில் கும்ளேவின் ஆறு விக்கெட்களை மறக்க கூடாது. போலாக்கை இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தாவிட்டால் கணக்கு மாறியிருக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் என்பது மிக பெரிய நகைச்சுவை துணுக்காக ஆகி கொண்டிருக்கிறது. வாஸிம் ஜாப்பர் பெவிலியனிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. வீணாய் களத்துக்கு வந்து அவர் ஒன்றும் பங்களிப்பதில்லை. சேவாகிற்கு வாழ்வுதான், மற்றப்படி சொல்ல ஒன்றுமில்லை.

காசநோயை பற்றி இரண்டு செய்திகள். ஒன்று நல்லது, மற்றொன்று அதற்கு மாறானது. புழக்கத்தில் உள்ள மாத்திரைகளின் வீரியத்தை தகர்க்கூடிய வலுவுள்ளதாய் காசநோய் கிருமிகள் மாறி உள்ளன. இந்தியா, ரஷ்யா மற்று சீன தேசத்தில் உள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை உலகின் காச நோயாளிகளில் பாதிக்கு மேல். ஒவ்வொரு வருடமும் காசநோய் 9 மில்லியன் மக்களை பாதிக்கின்றது, அதில் இரண்டு மில்லியன் மக்களை காவுக் கொள்கின்றது.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின்-மேடிசன் கல்லுரியின் மருத்துவ பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் காசநோயை உருவாக்கும் பாக்டிரியாவிற்கும், உடலின் நோய் எதிர்க்கும் வெள்ளை செல்களும் இடையேயான போராட்டத்தை ஆராய்ந்து அதன் நுட்பங்களை பதிபித்துள்ளனர். வெள்ளை செல்கள் உருவாக்கும் தாமிர சத்து தாக்குதலை பாக்டிரியா ஒரு வகை புரத சத்தை கொண்டு தடுக்கின்றது. பாக்டிரியாவின் புரத சத்து உருவாக்கத்தை மட்டுறுதுவதன் மூலம் பாக்டிரியாவினை வலுவிலக்க செய்யலாம் என்று கருதுகிறார்கள். இந்த ஆய்வு சராசரி மனிதனுக்கும் பயனுறும் வகையில் நடைமுறை படுத்தப்படும் போது பலரை காவு வாங்கும் காசநோய் ஒழிய வாய்ப்புண்டு.

இயற்கைமுறை விவசாயிகள் சங்கத்தை பற்றி ஹிண்டுவில் செய்தி வந்திருந்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் இந்த அமைப்பு விவசாய பொருள்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு வருகின்றது. இடை மனிதர் எதுவும் கிடையாதாம். உரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் தகவல்களுக்கு

காலசுவட்டில் கவிதைகள் பகுதியில் கவிதா என்பவரின் கவிதையை படித்தேன். அழகான வார்த்தைகளால் கோர்கப்பட்டு இருந்தது. சேர்ந்து வாழ்க்கையை பயணிக்கும் முன் பயணத்தை பற்றிய எண்ணங்கள் பல. நடைமுறை சாத்தியமாகுமா , ஆகாதா என ஆராயாத மனநிலையில் உருவாக்கப்படும் பிம்பங்கள் அவை. பயணம் நகர்கையில் பிம்பம் நொறுங்கிறது.அப்போது பிம்பங்களை நகர்த்தி உண்மை ஏற்றுக கொள்ளுதல் சிரமமாய் இருக்கையில், பயணத்தை வெறுத்தல் சுலபமான தீர்வாக தோன்றலாம்.

அவன் எழுதுகோல் காதலன்
அவள் பிரபஞ்சத்தின் வாசகி
காலம் அவர்களை நேர்க்கோட்டில் நிறுத்தியது.
அங்கு கனவு போன்ற ஒரு சிறுகதை
உருவாவதாக அவர்கள் நினைத்தார்கள்
அவன் வேண்டும்போது அவள்
தன்னை ஒரு முத்தமாக மாற்றிக்கொண்டாள்.
அவள் விரும்பும்போது அவன்
பெயரற்ற இசையாக வெளிகளில் கரைந்தான்
சிறுகதைக்குள் இருக்கும் அவன்தான்
அந்தச் சிறுகதையை எழுதுவதாக
அவன் நம்பினான்.
கனவிலுள்ள அவள்தான் நிஜமென்று
அவளும் நம்பினாள்.
அகாலம் சிரித்தது.
அவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்
தான் வசித்த கனவு கலைந்த கோபத்தில்
அவள் பைத்தியக்காரியாகவும்
களவுபோன எழுதுகோல் தேடி
அவன் நாடோ டியாகவும்
நமக்கு மிகவும் பழகிய வீதிகளிலேயே
திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

புகைபடத்திற்க்கு நன்றி quinnums

Saturday, December 16, 2006

வலி

ஐயோ, அப்பா, அம்மா, கடவுளே என்ற நான்கு சப்தங்களும் வலியோடு பிண்ணி பினைந்திருக்கின்றன. என்ன வலி வந்தாலும் மூளைக்கு செல்லும் வேதியல் சிக்னல்கள் இந்த வார்த்தைகளை வடிவமாக்குகின்றன. ஒரு சில நபர்களுக்கு இந்த பிரச்சனையே கிடையாது. அவர்களுக்கு வலி உணர்வே இல்லை. ஆகாயத்திலிருந்து யாரும் வந்து இதை வரமாய் தந்து போகவில்லை. ஒரு வகை மரபியல் மாற்றங்களால்தான் வலியின்மையை உருவாக்குகிறது

பாகிஸ்தானின் வடபகுதியில் இது போன்ற மரபியல் மாற்றங்கள் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். விஞ்ஞானிகள் இந்த குறிப்பிட்ட மரபியல் மாற்றத்தை உருவாக்கும் ஜீனை அடையாளம் கண்டுள்ளனர். வலி கொல்லும் மாத்திரை பற்றிய அறிவியல் துறையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த மரபியல் மாற்றத்தை மரபியல் குறைபாடாக அறிவியலார் கூறுகிறார்கள், ஏனேனில் இந்த மரபியல் மாற்றம் ஏற்படும் போது அது பெரும்பாலோரின் மூளையின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மிக குறைவான நபர்களே இந்த மரபியல் மாற்றத்தோடு இயல்பான மூளை வளர்ச்சியோடு உள்ளனர். இந்த மரபியல் மாற்றம் உள்ளவர்களுக்கு தட்ப வெப்பங்களை அறியும் உணர்வும், அழுத்தங்களை உணரும் உணர்வும் மற்றும் கூர்மையான பொருள்களை மழுங்கிய பொருள்களோடு வேறுபடுத்தும் உணர்வும் இருக்கின்றது. ஆனால் வலி இருப்பதில்லை.

வலி வரும்போது நரம்பின் செல்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் வலிக்கான மின்சார சிக்னல்களை எடுத்துச் செல்லும் புரதத்தை உருவாக்குகிறது. இந்த மரபியல் மாற்றங்களுக்கு ஆளானவர்கள் உடம்பில் நரம்பு செல்கள் வலியின் மின்சார சிக்னல்களை கடத்தும் புரதத்தை உருவாக்குவதில்லை. இந்த மரபியல் குறைபாடு CIPA (Congenital insensitivity to pain with anhidrosis) என்று அழைக்கப்படுகின்றது.

வலிக்கு காரணமான ஜீனை போல் சொரணைக்கும், அடிமை தனத்திற்கும் ஏதாவது ஜீன்தான் காரணமாய் இருக்கும். அதை கண்டறிந்து சொரணையை அதிகரித்து, அடிமை தனத்தை குறைக்கும் மரபியல் மருந்துகள் வருங்கால் சமூக விழிப்புணர்வு நாட்டில் வர வாயப்புண்டு.

Tuesday, December 12, 2006

மேய்ச்சல் 4

புது வருடம் வரப் போகிறது. கலிபோர்னியாவில் குடியிருந்த போது புது வருட இரவை கொண்டாட சான்பிரான்சிஸ்கோ யுனியன் ஸ்கோயர் போவது வழக்கம். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் போகும். வர்ஜினியா வந்த பின் யார் யாரோ ஆரவாரமாய் கொண்டாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து முடித்துக் கொள்வதே திருப்தியாய் உள்ளது.

விதர்ப்பாவில் கிராமத்தை விற்பதற்கு விவசாயிகள் முன் வந்துள்ளனர். டோரிலி கிராமத்தை சேர்ந்த அவர்கள் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக தங்கள் கிராம நிலங்களை விற்க முன் வந்துள்ளனர். இதற்காக மத்திய அமைச்சர் சரத்பவாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தி விவசாயிகளான அவர்களுக்கு நல்ல மழை இருந்தும் இந்த வருடம் விளைச்சல் போதவில்லை. கடன் சுமை தாங்காமல் கூலி வேலைக்கு போய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் வாழ்க்கை முறையாகவும் இல்லாமல், தொழிலாகவும் இல்லாமல் இடை நிலையில் நின்று கொண்டிருக்கிறது.

விதர்ப்பாவை பொறுத்தவரை எதனால் இந்த வருடம் விளைச்சல் சரியில்லை? போன வருடமும் இதே பிரச்சனையா? கடன் யாரிடம் வாங்கியிருக்கிறார்கள்? கடன் தொகை எதில் செலவு செய்யப்பட்டுள்ளது? யார் அவர்களை இவ்வருடம் பருத்தி பயிரிட ஆலோசனை கொடுத்தது? என்ற பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. அதை பற்றி சிஎன்என்-ஐபின் செய்திகளில் விவரம் இல்லை.

தஞ்சை பக்கம் சொந்தக்காரர்கள் விவசாயத்தை பார்த்த போது மழை அதிகம் பெய்தால் பயிர் மழையில் மூழ்கிவிடும். குறைவாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் பிரச்சனை. மழை ஒரு அளவாக பெய்தால் மட்டுமே பிரச்சனை இல்லை. என் உறவினர் இது தாள முடியாமல் இந்த முறை சவுக்கு போட்டு விட்டார். இன்னோரு பிரச்சனை என்னவென்றால் குறுகும் நில அளவு. உதாரணத்திற்கு தாத்தாவிடம் 10 ஏக்கர் இருந்தது. அடுத்த தலைமுறையில் அது இரு மகனிடம் 5 ஏக்கராய் பிரிந்தது. அதற்கு அடுத்த தலைமுறையில் இரண்டரை ஏக்கராய் பிரிந்தது. இவ்வாறு நிலம் குறுகி கொண்டே போகிறது.குறுகிய நிலத்தில் பயிரிட லாபம் குறையும் என்றும் உறவினர் கூறினார்.

மிதமான மழை வருவது இனி குறையும் என வானிலை ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். மழை பொழிவு இனி குறைவாக இல்லையென்றால் மிக அதிகமானதொரு நிலையிலியே இருக்கும். பூமியின் வெப்ப அதிகரிப்பே இதற்கு காரணம். இதெல்லாம் பற்றி கவலைப்பட என்ன உள்ளது? ஏதோ சிலை வைத்தோமா மாலை போட்டோமா என போய் கொண்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் அடையாளமாய் உள்ளது.

இந்த வாரம் என்பிஆர் வானாலியில் சக்கரை வியாதிக்கான முக்கிய மருந்து இந்த வருடத்தில் மூன்றாம் நிலை சோதனைக்கு வந்ததுள்ளதை பற்றி அறிவித்தார்கள். 2008 இறுதியில் இந்த மருந்து நடைமுறை படுத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஊசி வடிவில் இன்சுலினை செலுத்தாமல் இன்ஹேலர் வடிவில் இன்சுலினை கொண்டு வந்துள்ளனர். இந்த மருந்தை மான்கைன்ட் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோரின் எடை அதிகரிக்கும். ஆனால் மான்கைன்ட் நிறுவனத்தாரின் மருந்தினால் அப்பிரச்சனை இல்லை என்று தெரியவருகின்றது.

மேலும் தகவல்களுக்கு

மரம் நடுவதால் பூமியின் வெப்ப அதிகரிப்பை மட்டுறுத்தலாம் என்பதேல்லாம் நடைமுறையாகாது என அமெரிக்கன் ஜியோபிசிக்கல் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் கோவிந்தசாமி பாலாவின் ஆய்வு பதிப்பிக்கபட உள்ளது. பாலாவின் கூற்றுப்படி அட்ச ரேகை மிதமானது முதல் அதிகமாகும் பகுதிகளில் நடப்படும் மரங்களும் பூமியின் வெப்பநிலையை அதிகப்படுத்தும். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள மழைக்காடுகளை பாதுக்காப்பதன் மூலமும் , அக்காடுகளை விரிவு படுத்தலுமே பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும். அவரது ஆய்வுகளை காடொழித்திலால் கடல், நிலம்,வெளி எனப்படும் மூன்று இடங்களில ஏற்படும் பாதிப்பை முப்பரிமாண சூழல்-கார்பன் மாடல்களை கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் நிறுப்பித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு

Thursday, December 7, 2006

நியாபகம் எங்கே உள்ளது

ரொம்ப தர்ம சங்கடமான கேள்வில ஒன்று என்ன என்னை உங்களுக்கு நியாபகம் இருக்காங்கறதுதான். முதல்லலாம் யாரும் இப்படி கேட்டா ஙேனு முழிக்க வேண்டியதா இருந்தது. இப்பல்லாம் இல்லைனு நேரா சொல்லிடறது. வீணா சமாளித்து ஒன்றும் ஆகவில்லை. இப்படி இருக்கறது அலுவலக மற்றும் நட்பு வட்டாரத்தில சரியா இருக்குது. ஆனால் ஊர்ல கல்யாணம் காதுகுத்துனு போகும் போது யாரும் கேட்டா ஞாபகம் இல்லைனு சொல்ல யோசனையா இருக்கு. வெளியூர் போனப்புறம் பசங்க யாரையும் மதிக்கறதில்லைனு முத்திரை குத்திடுவாங்க. அதனால ஒரு மாதிரி மையமா சிரிச்சி மழுப்பி பேச வேண்டியிருக்கும்.

இந்த மாதிரி தர்ம சங்கடமான வேளைகளில் மூளையின் நரம்பு செல்களில் உள்ள டென்ரிடிக் ஸ்பயின்ஸ் என்னும் அமைப்பைதான் அதிகம் திட்ட வேண்டும். இந்த அமைப்புகள் நியாபகங்கள் சேகரிக்கையிலும், கற்றுக் கொள்கையிலும் உருவாகுகின்றன. ஒவ்வொரு டென்ரிடிக் ஸ்பயினும் அதன் அருகில் உள்ள நியுரான்களின் டென்ரிக் ஸ்பயினுடன் வேதியல் சிக்னல்களை பரிமாற்றி கொள்ள முடியும். புதிய டெனெரிடிக் ஸ்பயினின் வளர்ச்சி புதிய நியாபகங்களை மூளையில் உருவாக்குகிறது. இந்த டென்ரிடிக் ஸ்பயின்களின் அளவிலும், உருவத்திலும் நியாபகங்களுக்கு தக்க வித்தியாசம் இருக்கும். இதில் ஏற்படும் பாதிப்புகள் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும், அல்சைமர் வியாதி, ஆட்சிசம் போன்ற குறைபாடுகளையும் உருவாக்குகின்றன. இவற்றின் உருவாக்கத்திற்கான அடிப்படை புரதங்களை ஆய்வு குழுக்கள் சோதனை செய்து வருகின்றன. அமெரிக்காவின் ட்யுக் பல்கலைகழகம் டென்ரிடிக் ஸ்பயினின் வளர்ச்சியை படமாக எடுத்துள்ளனர்(படம் பார்க்க )


எத்தனை நாளைக்குதான் இதயம் முழுதும் நீயேனு ஒரு பம்பை வைச்சிட்டு கதை கொடுத்திட்டு இருக்கறது,டென்ரிடிக் ஸ்பையினெல்லாம் டேட்டாவாக நிறைந்தாயேனு காதல் கவிதையையும் எழுத வேண்டியதுதான்.

Wednesday, December 6, 2006

மேய்ச்சல் 3

உடம்பில் சூடு ஏறினால் கண்ணை கட்டிக் கொள்கிறது. அப்புறம் எண்ணைய் தேய்த்து குளித்து வெந்தய பொடி சாப்பிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நான்கு நாளாகிறது. சொந்த விஷயங்களை பற்றி கவலைப்படுவதில் உலக விஷயங்கள் ஒளிந்து கொள்கிறன.





Not so much thin...
Originally uploaded by m.o.m.o..







உலகத்தின் சூடும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. இதை குறைக்க, கட்டுப்படுத்த விஞ்ஞான துறையும் முயன்று வருகின்றது. பூமிக்கு எண்ணைய் குளியலா, வெந்தய பொடியோ உதவாது. வேறு ஏதாவதுதான் வர வேண்டும்






மாற்று எரிபொருள் துறையில் முக்கிய கண்டு பிடிப்புகள் கடந்த வாரத்தில் பதிபிக்க பட்டு இருக்கிறது. ஆரம்ப கால சோலார் செல் தொழில் நுட்பம் சிலிகானை அடிப்படையாக கொண்டது.

இதில் முக்கிய மாற்த்தை கொணர்ந்தது மைக்கேல் கிரட்சல் எனும் சுவிசர்லாந்து நாட்டின் அறிவியலார் ஆவார். இவரது 1991ம் வருடத்திய Ti02(டைடானியம் டை ஆக்ஸைடு) அடிப்படையாக கொண்ட புதிய வகை செல்கள் கண்டுபிடிப்பு சோலார் செல்கள் தயாரிப்பை எளிமைப்படுத்தின. கிரட்சல் செல்கள் என்று இவர் பெயராலேய அந்த வகை சோலார் செல்கள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் மைக்கேல் கிரட்சலின் அணி சூரிய ஒளி கொண்டு நீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரிக்கும் தொழில் நுட்பத்தில் 42 சதவீத குவாண்டம் திறனுள்ள கருவியை கண்டறிந்துள்ளனர். போட்டோ ஆக்ஸிடைஷேசன் தொழில் நுட்பம் இது வரை 37 சதவீத குவாண்டம் திறனுடைய அளவிலியே இருந்தது. குவாண்டம் திறன் என்னும் அளவீடு ஒளியின் போட்டான்கள், எலக்ட்ரானாக மாறுவதை குறிக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மிக சுத்தமானது. அதனால் சுற்று புற சூழல் கேடுகள் விளையாது.

மேலும் தகவல்களுக்கு

இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புற சூழலின் வெப்பம் அதிகரிக்கும் ஆய்வை யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான்டியாகோவை சேர்ந்த ராமநாதன் மற்றும் ஜெப்ரி வின்சென்ட் என்பவர்கள் நடத்தி பதிப்பித்துள்ளனர். இவர்களின் முடிவு படி சுற்று புற சூழல் கேடுகளே மழை அளவை நம் நாட்டில் குறைக்கிறன என்றும், சுற்று புற சூழலில் கார்பன் டை ஆக்ஸைட் போன்றவற்றின் அதிகரிப்பே இரவு நேரங்களில் வெப்பநிலையை குறையவிடாமல் பயிரை பாதிக்கின்றன. உணவு தன்னிறைவு அவசியமாதலால் இது பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் வர வேண்டும். , 4000ம் ஆண்டு என பழம் பெருமை என வெட்டிப் பேச்சு பேசுவதிலும், சிலைகளை வைப்பது இடிப்பது என காலம தள்ளுதலையையும் விட இது போன்ற ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நோக்கி செல்லுதல் முக்கியமானதாக எனக்கு படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

மற்றுமொரு சுவராஸ்யமான செய்தி என்னவெனில் செல்போனிலும், லேப்டாப்பிலும் பொருந்தக்கூடிய புரோஜக்டர் தொழில்நுட்பம் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோலாகிராபி அடிப்படையாக கொண்ட இந்த வகை புரோஜக்டர்கள் LCOS வகை பேனல்களால் ஆனது. முதன் முதலில் ஹாலாகிராபி தொழில் நுட்பம் சாதாரண நுகர்வோருக்கும் பயன்படும் வகையில் இந்த தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு



புகைப்படத்திற்கு நன்றி m.o.m.o

Thursday, November 30, 2006

மகள்

முத்தே நவமணியே என்
மூச்சிருக்கும் கண்மணியே
சின்ன சின்ன பாதமதை
சிங்காரமாய் மேல் தூக்கி
வெள்ளிக் கொலுசுதனை
விரல் பிடித்து அளவெடுத்து
வாய் நிறைய நீ சிரிக்க
மனம் நிறைந்து போகுதடா

மெல்ல எழுந்து நீயும்
பட்டு பாதந்தான் தேய
வீடெங்கும் ஒடியாடி
விதவிதமாய் குறும்பு செய்ய
வரப்போகும் திருநாளை
விழி வைத்து காத்திருப்பேன்

Monday, November 27, 2006

மேய்ச்சல் 2

ஒரு வழியாய் நன்றி நவிலும் விடுமுறை முடிந்தது. இலையுதிர் காலம் போல விடுமுறை காலத்தில் சோர்வை உதிர்க்க மனம் பாரம் குறைக்கிறது.ஊர் கதை, திரைப்படம் இரண்டு, மகளுடன் பொழுது , பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று என கலவையாய் போனது. மீண்டும் அடுத்த வருடம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடுமுறை விடை பெற அலுவலகம் வந்து சேர்ந்தாகி விட்டது.

விடுமுறையே இல்லாத வேலையை எண்ணி பார்க்கையில் சற்று பயமாக உள்ளது. ஊர் பக்கம் அது போல் உறவினர் நிறைய உண்டு. சொந்த தொழில் புரியும் அவர்களுக்கு ஒய்வு, ஒழிச்சலே இருப்பதில்லை. மனதில் சக்கரம் கட்டிய வாழ்க்கை. எப்போதும் தொழில் ரீதியான சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும். முதல் போட்டவனுக்குதான் தொழிலின் வலி புரியும் என்பார்கள். சொந்த தொழில் புரிவோருக்கு சோதிடம், கடவுள் ரீதியான நம்பிக்கை அதிகமாய் இருப்பதாய் எப்போதும் ஒரு எண்ணம் உண்டு. தொழிலின் மேடு பள்ளங்களின் போது அவை ஒரு குஷனாக அவர்களுக்கு அவை உதவுகின்றன.

கடல் சார்ந்த கரையோரங்கள் இனிமையானவை. இரு வருடங்களுக்கு முன் டேடோனா பீச்சில் செலவிட்ட விடுமுறை நாட்கள் நியாபகம் வந்தது. நாள் முழுதும் கடலுக்குள் செல்வதும், கரைக்கு வருவதுமாய் போனது. ரசிக்கதக்க பொழுது அது. சூடும் , குளிர்ச்சியும் ஒன்றாய் பரவும் அந்த கணத்தின் ஈரச்சுவடுகள் இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளன.

கடலை பற்றி யோசனை வருகையில் பசிபிக் கடலில் ஹவாய் அருகே உருவாகி இருக்கும் ப்ளாஸ்டிக் வோர்டெக்ஸ் பற்றி படித்தது பற்றி சொல்ல வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் சுழல் கிட்டதட்ட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணம் அளவிற்கு பெரியது. பொறுப்பற்ற முறையில் கடலில் வீசப்படும் ப்ளாஸ்டிக் இந்த சுழலை உருவாக்கி கடல் உயிரினங்களை கொன்று கொண்டு வருகிறது. சுற்றுலா, கடலில் கலக்கும் கசடுகள்,மீன் பிடிப்பு, கப்பல்களில் இருந்து வரும் குப்பை என்ற நான்கு காரணிகளால் கடலில் இந்த பாதிப்பு உருவாகி வருகிறது. கையிலிருக்கும் ப்ளாஸ்டிகை மறுசுத்திகரிக்கும் குப்பை கூடையில் போட மறுக்கும் தனி நபரின் சோம்பேறி தனமோ, அலட்சியமோ இன்று இந்த அளவுக்கு கடலை பாதிக்கும் ஒரு காரணியாய் பெரிதாய் வளர்ந்துள்ளது. இது வருந்த தக்க ஓரு விஷயம்.






இன்று படித்த ஒரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் ஹம்ப்பேக் திமிங்கலங்களிடம் ஸ்பின்டில் நியுரான் எனப்படும் மனிதரிடமும், சிம்பன்ஸி வகையினத்திலும் காணப்பட்ட மூளை செல்கள் இருப்பதாய் அறிவியலார்கள் அறிவித்துள்ளனர்.


ஸ்பின்டில் நியுரான்கள் மனித அறிவிற்கும், சிந்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான செல்கள் ஆகும். நம்மிடையே வாழும் சில சிந்தனாவாதிகள்(!) போல் இந்த ஸ்பின்டில் நியுரான்கள் ஹம்பேக் திமிங்கலங்களால் எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பதை இன்னும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

சுற்றுப்புற சுழலின் கேடுகளின் பாதிப்பு கங்கையை தொட்டு விட்டதை பற்றி இந்திய செய்திகளில் பார்க்க முடிந்தது. பல்வேறு அரசியல் மற்றும் கிரிகெட் காமெடிகளுக்கு இடையே இந்த செய்தி மறைந்திருந்தது. கங்கோத்ரியில் பனி 1935ம் வருட வாக்கில் ஏழு மீட்டர் கணக்கிற்கு ஓவ்வொரு வருடமும் உருகி வந்திருந்ததாம், இப்போது இது இருபத்தி மூன்று மீட்டர் ஒரு வருடத்திற்கு உருகுகிறதாம். புனித நதி , வருட விழா என கங்கையை கொண்டாடினால் மட்டும் போதுமா? அதன் இருப்பை பற்றி அக்கறை கொள்ள வேண்டாமா? உட்கார்ந்து யோசிக்க வேண்டும்.


உட்கார்ந்து யோசிக்கையில் ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும். 90 டிகிரியில் நேராய் உட்கார்தலே நலம் என்று நினைத்து தவறு என்று அறிவியலார் கூறுகின்றனர்.135 டிகிரியில் உட்கார்தலே நலம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.முதுகு வலி வராமல் இருக்க இதுவே நல்ல வழி என கனடாவை சேர்ந்த அல்பெர்ட்டா பல்கலை கழக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

(ஹம்பேக் திமிங்கலத்தின் பட உரிமை gwoodford. )

Tuesday, November 21, 2006

பருத்தி விதை

பருத்தி விதையும், தேங்காய் புண்ணாக்கும் மாட்டு தீவனமாய் ஊரில் பார்த்ததுண்டு. டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த எ அன்ட் எம் கல்லூரியை சேர்ந்த கீர்த்தி ரத்தோர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதை மனிதருக்கும் உணவாய் மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பருத்திக் கொட்டை புரதசத்து அதிகமுள்ளது. ஆனால் பருத்தி விதையில் உள்ள காஸிபோல் என்னும் நச்சு பொருள் இரத்ததில் உள்ள பொட்டாசியம் அளவை குறைக்கும், இதன் விளைவாய் கிட்னி பாதிக்கப்படும். ஆகவே இப்போதுள்ள நிலையில் பருத்தி விதை மனித உணவாக பயன்படுத்துதல் சரி வராது.

ரத்தோரின் ஆய்வுக் குழு புதிய ஜீன் மட்டுறுத்தும் முறையின் மூலம் பருத்தி விதையில் உள்ள காஸிபோலை அப்புற படுத்துகின்றனர். ஓரு மில்லிகிராம் பருத்தி விதையில் 10 மைக்ரோ கிராம் அளவிலான காஸிபோல் உள்ளது. அதை 0.1 மைக்ரோ கிராமாக குறைத்துள்ளனர். ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 0.6 மைக்ரோ கிராம் அளவிருந்தால் மனித உடல் நல பாதிப்பு கட்டுப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளது. அதோனோடு ஓப்பிடுகையில் 0.1 மைக்ரோகிராம் உள்ள பருத்தி விதை நல்ல உணவாக உலவ வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான உணவுகளையும், உடல் இளைக்க வைக்க வைக்கும் உணவு முறைகளையும் தேடி செல்லும் மேற்குலகம் அதிக புரதம் உள்ள பருத்தி விதையையும் அரவணைக்கலாம். இப்போதைக்கு ஆய்வு சாலையில் உள்ள இந்த முயற்சி சந்தை மயமாகிறதா என பார்க்கலாம்.

எந்த அப்பாவாது நீ பருத்திக் கொட்டை திங்கதான் லாயக்கு என திட்டினால் நல்ல உடல்நலத்தை பார்க்க சொல்கிறார் என மகிழலாம்.

Monday, November 20, 2006

மேய்ச்சல் 1

மற்றுமொரு தேங்ஸ் கிவ்விங் டே வந்து விட்டது. கண்ணை கட்டி திறப்பதாய் காலம் நகர மீண்டும் முளைத்து நிற்கிறது. தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் விடுப்பு. நவம்பர் மாத கடைசி வாரத்தின் வியாழனில் இப்பண்டிகை கொண்டாப்படுகிறது. அமெரிக்க மரபுபடி இந்நாளில் வான்கோழி உணவு சாப்பிட்டு இரவு உணவு நடக்கும். நம்ம ஊர் பக்கம் தீபாவளி சமயங்களில் வான்கோழி பிரியாணி திடீர் கடைகள் தோன்றுவதை பார்த்திருக்கிறேன்.

அக்காலத்தில் குடியேறிய அமெரிக்க மூதாதைகள் இங்கிலாந்தின் உழவர் திருநாளை இங்கு தேங்ஸ் கிவ்விங் டேயாக கொண்டாட ஆரம்பித்தார்கள் என உடன் வேலை பார்க்கும் அமெரிக்க தோழர் கூறினார்.

இப்பண்டிகைக்கு அடுத்த நாள் கறுப்பு வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆடிமாச சிறப்பு தள்ளுபடி கும்பல் போல் கறுப்பு வெள்ளி அன்று இங்குள்ள கடைகளில் கும்பல் அள்ளும். காலை இரண்டு மணி வாக்கில் இருந்தே கடுங்குளிரில் நின்று இந்த தள்ளுபடி விற்பனைக்கு கும்பல் காத்திருக்கும்.முதல் நாள் செய்திதாளில்தான் இந்த தள்ளுபடி பற்றிய அறிவிப்புகள் வரும். காலை ஆறு மணிக்கெல்லாம் எல்லா செய்திதாளும் விற்றுப் போகும்.

போன வருடம் மனையாள் அலுவலகம் சென்று விட நானும் நண்பன் ஒருவனும் வீடியோ கேம் நாள் என கறுப்பு வெள்ளியை எக்ஸ் பாக்ஸூடன் கொண்டாடினோம். இந்த முறை முதன் முறையாக அம்மா, அப்பா மற்றும் மகளுடன். வீடியோ கேம் வீட்டின் அடித்தளத்தில் படுத்துக் கொண்டு பார்க்கும் போதேல்லாம் என்னை பார்த்து புலம்பிக் கொண்டே இருக்கிறது.

செய்திகளில் வாசிக்கையில் குவாண்டம் கணிப்பொறி பற்றி படித்தேன். அசாத்திய ஆற்றல் உடையதாய் அதை பற்றி சொல்லியிருந்தார்கள். அமெரிக்காவின் உடா மாகணாத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஓன்று சிலிக்காவில் பொதிக்கப்பட்ட பாஸ்பரஸின் அணுக்களின் சுழற்ச்சியில் தகவலை பொதித்து அதை படிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். குவாண்டம் கணிணி தொழில் நுட்பம் அதன் முதல் அடிகளில்தான் இன்னும் இருக்கிறது.

தற்போதுள்ள கணிணிகளில் தகவல் 0 மற்றும் 1 என பிட்ஸ்(bits) ஆக சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு பிட்டும்(bit) 0 அல்லது 1 என்ற நிலையைதான் சேமிக்க முடியும். குவாண்டம் கணிணி நுட்பத்தில் க்யுபிட்(qubit) என்பதில் தகவல் சேமிக்கப்படுகிறது. ஓரு க்யுபிட் என்பது 0 மற்றும் 1 என்ற இருநிலைகளிலும் ஓரே சமயத்தில் இருக்க முடியும். ஆக சாதாரண பிட்டை விட க்யுபிட்டில் இரு மடங்கு தகவல் சேமிக்க முடியும். அப்படியானால் இதன் ஆற்றலை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போதைய யுடா சோதனையில் தனிப்பட்ட அணுவின் சுழற்சியை படிக்க முடியவில்லை. ஆனால் ஓரே நேரத்தில் 10,000 அணுக்களின் சுழற்சியை படிக்கும் முறை வரை வந்திருக்கின்றனர். இதற்கு முந்தைய முயற்சிகளில் 10 பில்லியன் அணுக்களின் சுழற்சியையே படிக்க முடிந்தது. அதனோடு ஓப்பிட இது பெரிய முன்னேற்றம்.

மேலும் தகவல்களுக்கு

சென்ற வார இறுதியில் எம்டன் மகன் என்ற படம் பார்த்தேன் சாவு வீட்டின் நகைச்சுவை நன்றாய் வந்திருந்தது. தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அதன் தாக்கம் இயக்குனரிடம் உண்டு.கிளைமாக்ஸ் காட்சி அதற்கு உதாரணம். ஓரு பாட்டில் பணக்காரனாய் மாறுவதை எப்போதுதான் நிறுத்த போகிறோமோ? பரத் நன்றாக செய்கிறார். கோபிகா வடிவாய் இருக்கிறார். யுகபாரதியின் கோலி குண்டு பாடல் ரசிக்க வைக்கிறது.

சாக்லேட் சாப்பிடுவது பற்றி சுவையான தகவல் ஓன்றை என்.பி. ஆர் ரேடியோவில் கேட்டேன். சக்கரை இல்லாத சுத்தமான சாக்லேட் இதயத்திற்கும், குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் நல்லதாம். இது எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்களின் ஆய்வு முடிவு. சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்ட்ஸ் என்னும் கெமிக்கல் இக்தகைய நல்லதை செய்யும். அதற்காக தட்டு நிறைய அள்ளி வைத்து சாப்பிட வேண்டாம். அது என்றும் நல்லதற்கில்லை.

Wednesday, November 15, 2006

விழா

உச்சி வெய்யில் பளிச்சென்று இருந்தது. மாணவர்கள் வரிசையாய் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.சண்முகத்துக்கு வெயில் தலையில் அடித்தது. சட்டை வேர்த்து உடலோடு ஒட்டிக் கொண்டது. விடுமுறை நாளுக்கும் வீட்டில் இருக்க முடியவில்லையே என ஏக்கமாய் இருந்தது. முன்னால் நின்று கொண்டிருந்த சத்திய சீலன் சற்று முன் கால் வலிக்கிறதென உட்கார பிடி மாஸ்டர் கணபதி வெளு வெளு என்று வெளுத்து விட்டார். சுற்றும் பார்த்தான். பி.டி மாஸ்டர் மூன்றாம் கிளாஸ் பசங்களை ஐந்தாறு வரிசை தள்ளி விரட்டிக் கொண்டிருந்தார்.

"சார் " - சண்முகம் சத்தமாய் கூப்பிட்டான்.

"என்னடா"- கணபதி வேகமாய் வந்தார். ஞாயிற்று கிழமையும் அதுவுமாய் தாலி அறுக்கிறார்களே என கோபமாய் இருந்தார்.

"தலை சுத்துது சார். மயக்கமா இருக்கு சார். ஓடி போய் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்திடறேன்"- சண்முகம்

அவர் கையில் இருந்த பிரம்பு சுழன்றது. சண்முகத்தின் பின்புறத்தில் நிச்சயம் ஒரு கோடு விழுந்திருக்கும்.

"ஏமாத்தவாடா பாக்கறே. உன்னோடத்த பசங்கதானே மத்தவன்லாம். அவன்லாம் நிக்கல. எவனும் நகர கூடாது. காலைல பத்து மணிலருந்து கஷ்டப்பட்டு இப்பத்தான் வரிசைல நிக்க வச்சிருக்கேன். எவனாவது நகர்ந்திங்க பின்னிடுவேன் பின்னி. மினிஸ்டர் வந்து போன பின்னாடிதான் நகரனும்."-கணபதி

***************
வெயில் இன்னும் ஏற ஆரம்பித்தது. கணபதி மெல்ல நடந்து மைதானத்தின் ஓரமாய் மர நிழலில் நின்று கொண்டார். ஏற்கனவே கணக்கு வாத்தியார் பரமசிவன் அங்கே நின்று கொண்டிருந்தார்.

"என்னா சார் இது. இன்னைக்கு வயலுக்கு போகனும். இங்க வந்து நிக்க வேண்டியிருக்கு. அந்தாளு பதினோறு மணிக்கு வரேன்னான். இப்ப மணி ஓன்னாச்சு இன்னும் காணலே. இவனுங்க போஸ்டர் ஒட்டிக்க நாம காய வேண்டியிருக்கு" - பரமசிவன்

"ஆமா சார். ஞாயித்து கிழமையாச்சே. சித்த சாப்பிட்டோமா, தூங்கினோமானு இருக்கும். இன்னைக்கு எல்லாம் போச்சு. காலாண்டு தேர்வே முடிஞ்சு போச்சு. இப்ப போய் புத்தகம் இலவசமுனு கொடுக்கறானுங்க. இந்த கூத்துக்கு நாம வேற வந்த நிக்க வேண்டியிருக்கு. மினிஸ்டருக்கும் அறிவில்ல. அவன் கூட இருக்கவனுக்கும் அறிவில்ல."-கணபதி

"பத்து புள்ளைகளுக்குதான் வேற தாரானுங்க. அதுக்குதான் இத்தனை அலம்பல். அந்த பத்தும் பாத்திங்களா, நம்ப பள்ளிக்கூடமே இல்லை. கட்சிகாரன் புள்ளைங்க. பாவம் நம்ம நண்டும் சிண்டுந்தான் வெயில்ல கருகுதுங்க"- பரமசிவன்.

"நீங்க வேற. ஆயிரம் புள்ளைங்களுக்கு இலவச புத்தக கணக்கு காட்டியாச்சு. காசும் கை மாறியாச்சு, இப்ப பண்ணறது வர எலக்ஷனுக்கு கொசரம். மினிஸ்டருக்கே இவனுங்க பண்ணி கூதல் முழுசா தெரியுமானு தெரியல"-கணபதி
***************

சண்முகத்துக்கு கண்கள் இருள ஆரம்பித்தது. நாக்கு வரண்டு உதடு ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. பசி வேறு வயிற்றை கிள்ளி கொண்டிருந்தது. அழுகையாய் வந்தது. மர நிழலில் நிற்க்கும் வாத்தியாரை பார்த்தான். கை பிரம்பு இடதும் வலதும் நகர்ந்து பெண்டுலம் போல் இருந்தது.

தரை நழுவுவது போல உணர்வு ஏற்பட்டது.மயங்கி விழுந்தான். விழுந்த சுருக்கில் வரிசையில் சலசலப்பு ஆனது. கணபதி ஓடி வந்து, ஞாயித்து கிழமை தூக்கம் போன வேதனையில் பிரம்பால் இரண்டு அடி விட்டார். சண்முகம் அசைய கூட இல்லை. அதற்க்குள் இரண்டு கரை வேட்டியும், அசிஸ்டன்ட் எஜிகேஷன் ஆபிஸரும் ஓடி வந்தார்கள்.

"யோவ் வாத்தியாரே. என்னையா இதெல்லாம். நீ பார்க்கறதில்லையா. மினிஸ்டர் ஐயா வர நேரம் ஆச்சு. இந்த பயலை தூக்கிட்டு போய் ஸ்கூல்குள்ள போடு"- கரை வேட்டி ஓன்று.

கணபதிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. இதில் கரை வேட்டி ஓருமையில் பேசியது வேறு கோபம் வந்தது. ஆனால் கரை வேட்டியை பார்த்த பயம் கோபத்தை தின்று விட்டிருந்தது.

"சார் நான் தூக்கிட்டு போறேன். நீங்க பசங்க வரிசை கலையாம பார்த்துகுங்க. மினிஸ்டர் ஐயாவுக்கு டிசிப்ளின்னா உயிரு"- எஜிகேஷன் ஆபிஸர்.

சண்முகத்தை தோளில் போட்டுக் கொண்டு கொண்டு ஓடினார்.

"நம்ம ஆளுங்க இரண்டு பேரையும் இங்க ஓரு கண்ணு வச்சுக்க சொல்லு. இன்னும் ஏதேனும் மூதேவி மயக்கம் போட்டா உடனே எடுத்திட சொல்லு. வூட்டை விட்டு கிளம்பும் போதே அம்மா மூஞ்சில முழிச்சிட்டு கிளம்பினேன். தாலியறுத்த மூஞ்சை பார்த்திட்டு போகாதிங்கனு வீடல சொல்லியும் கேட்காம அவசரத்தில ஓடி வந்திட்டன். கருமம் இங்க இப்படி ஆகுது."- கரை வேட்டி இரண்டு புலம்ப ஆரம்பித்தது.

கரை வேட்டி ஓன்று காலையில் தான் யார் மூகத்தில் முழித்தோமென யோசிக்க ஆரம்பித்தது.

கணபதி பதட்டமாய் லேசாக கலைந்த வரிசைகளை ஓழுங்கு படுத்த ஆரம்பித்தார்.

********************

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸர் மைதானத்தில் இருந்து கொண்டு வந்த சண்முகத்தை மேடைக்கு பின்புறம் போய் பெஞ்ச் ஓன்றில் படுக்க வைத்தார். தண்ணீரை தேடி சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தார்.

"சார் உங்களை எங்கெல்லாம் தேடுறது. மினிஸ்டரோட ஓன்னு விட்ட மச்சினி கூப்பிடறாங்க. அவங்களுக்கு மினரல் வாட்டர் எடுத்து வரச் சொன்னா சாதா தண்ணீயை கொண்டு போய் கொடுத்திடிங்களாமே"- தலைமயாசிரியர் வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்தார்.

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸருக்கு பேச்சு மூச்செல்லாம் நின்றிடும் போல் இருந்தது. ஏதாவது தண்ணியில்லா காட்டுக்கு மாற்றல் வந்தால் என்ன செய்வதென்ற கவலையும் வந்தது.

"அப்படி கொடுப்பேனா சார். ப்யூன் ராஸ்கல் மினரல் வாட்டர்னுதான் சொல்லி க்ளாக்ஸை கொடுத்தான். அவனை என்ன பண்ணறேன் பாருங்க'- சொல்லிவிட்டு தலை தெறிக்க அந்த அம்மாவை பார்க்க ஓடினார்.

தலைமை ஆசிரியரும் நடக்க போகும் கூத்தை பார்க்கும் ஆர்வத்தில் பின்னால் ஓடினார். சண்முகம் வெய்யில் கிடந்தான்.

**************************

கூட்டம் முடிகையில் மூன்று மணியாகி விட்டது. வெயில் அதிகமாக இருந்ததால் ஏசி காரில் வந்த ஏழை பங்காள தலைவர் குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலமென முழங்கி, உண்மை , நேர்மை, கடமை பற்றி அறிவுறுத்தி, எதிர் கட்சிகாரனுக்கு எச்சரிக்கை விடுத்து இலவச புத்தகம் பத்து பிளைகளுக்கு கொடுத்து விட்டு ஓய்வெடுக்க ஏசி அறை தேடி சென்று விட்டார்.

தலைவர் என்னமா பேசினாரென கட்சிக்காரர்கள் பெருமையாடு பேசிக் கொண்டனர். வள்ளுவருக்கு அப்புறம் சுருங்க சொல்லி இவ்வளவு அர்த்தமா பேசறது தலைவர் ஓருத்தர் தானேன கரை வேட்டிகள் சொல்லி பெருமை பட்டுக் கொண்டனர்.

பிள்ளைகள் பசியோடு வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர். சத்திய சீலன் சண்முகத்தை தேடி பள்ளியை சுற்றி வந்து விட்டு மேடைக்கு பின்னால் போன போது சண்முகத்துக்கு மூச்சு காற்று இல்லை.

விளையாட போன சண்முகம் தடுக்கி விழுந்து தலையில் காயம் பட்டு இறந்து விட்டதாக கட்சிக்காரர்கள் சொன்னார்கள். யாரும் அதை மறுக்கவில்லை.

Monday, November 13, 2006

செய்திகள் இரண்டு

நாம் எதில் மிக திறமையானவர்களாக இருக்கிறோமோ அதை முழுக்க தொழில் ரீதியாக பயன்படுத்தும் வாய்ப்பை அவுட்சோர்சிங் இந்தியர்களுக்கு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு ஐபின்-சிஎன்என் நியுஸை மேய்கையில் பெங்களுரில் இருக்கும் ப்ரிக் வொர்க் எனும் கம்பெனி அமெரிக்க செனட்டருக்கு பேச்சு எழுதி கொடுத்திருக்கிறது.

சந்தைமயமாக்கப்படுதல் எல்லா வகை திறமை வாயிலாக பணம் ஈட்ட வழி செய்கிறது. அமெரிக்காவின் ஆரிகான் மாகாண செனட்டர் ப்ராங் மார்ஸ் என்பவருக்கு இவ்வுரை எழுதி வழங்கப்பட்டுள்ளது. இவர் புஷ் கட்சியை சேர்ந்தவர். நான் பேச நினைப்பெதெல்லாம் நீ எழுத வேண்டும் என்று காலாட்டிக் கொண்டு பாடிக் கொண்டு இருந்தால் கை மேல் பேச வேண்டியது உட்காரும் காலம் வந்து விட்டது.

பெங்களூரில் இருந்து இயங்கும் உஜ்ஜிவன் என்னும் மைக்ரோ நிதி நிறுவனம் பற்றியும் செய்தி இருந்தது. முகமது யுனுஸின் சிந்தாந்தங்களை பின்பற்றி பெங்களூரில் இயங்குகிறார்கள். இரண்டாயிரத்து ஓன்றாம் ஆண்டின் கணக்கு படி பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவீதம்
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். இப்போது இன்னமும் இது அதிகரித்து இருக்கலாம். இதனை நிறுவியவர்களில் நியுக்ளியஸ் மென்பொருள் நிறுவன தலைவரும் உண்டு. இவர்கள் சேவை அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு போய் சேருகிறதென பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, November 9, 2006

உத்தமர்

இலவச வேட்டி ஓன்று
இரு கோவணமாச்சு
இடையில் நடந்த ஊழலில்

ஆதியில் உடுத்தது இதுதானென
ஆள்பவன் பிரச்சாரம் பேச
வழக்கம் போல் தலையாட்டி
வக்கணையாய் கைதட்டி நாங்கள்

இவனாவது வேட்டியை கோவணமாக்கினான்
அவனிருந்தால் கட்டியிருப்பதும் காணாமல் போகும்
அவனோடு பார்க்கையில் இவன்
என்றும் உத்தம கொளுந்து

Monday, November 6, 2006

கிப்ரா எனும் புரதம்

ஞாபகம் என்பது மூளையில் எங்கிருக்கிறது? எது ஞாபகத்தை உருவாக்குகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலாக ஜெனிடிக் அறிவியலார்கள் ஞாபகத்துக்கு சொந்தமான ஜீனை கண்டறிந்து விட்டார்கள்.

கிப்ரா எனும் அந்த அற்புதமான ஜீன் ஞாபகங்களின் காரணமாக அடையாளம் காண பட்டதன் விளைவாக மருத்துவ உலகில் பல புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.ஆயிரம் வேறு வேறு ஞாபக திறனுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஜெனிடிக் ப்ளுபிரிண்ட்களை ஆராய்ந்து இந்த ஜினை கண்டுபிடித்துள்ளார்கள்.

ஞாபகம் ஒரு மனிதனையும், மனிதத்தையும் வரையறுக்கிறது.ஞாபகத்தின் மூலம் வழியே இனி ஞாபகத்திற்கும் அளவுகோல் கொணர முடியும்.

இந்த ஜீன் மூளையின் ஞாபகங்களுக்கான பாதையென வழங்கப்படும் ஹிப்போகேமஸ் என்னும் இடத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஹிப்போகேமஸ் மூளையின் டெம்போரல் லோபுக்கு கீழே இருபுறமும் உண்டு. அல்சைமர் நோயினால் பாதிப்பு வருகையில் ஹிப்போகேமஸ்தான் முதலில் சேதம் ஆகிறது. இந்த பகுதியின் பாதிப்பு அண்டேராகிரேட் அம்னிசியா என்ற புதிய ஞாபகங்களை சேமிப்பதை தடுக்கும் வியாதியையும் உருவாக்கலாம்.

அல்சைமர் நோய் உடையவர்களுக்கு கிப்ரா மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.கிப்ராவை பற்றிய இந்த ஆராய்ச்சி கடைகளில் கிடைக்கும் மருந்தாக மாற சிறிது காலம் எடுக்கும்.

இந்த ஆராய்ச்சியை டி ஜென் என்னும் அரிசோனாவை சேர்ந்த ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.இந்த சோதனையின் முடிவுகளை மறு ஆய்வின் மூலம் உறுதியும் படுத்தப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு

Friday, November 3, 2006

கடலுணவு

வீட்டில் அம்மா சைவமாக இருந்ததால் அசைவம் சாப்பிட பழகின காலங்களில் முழுக்க முழுக்க ஹோட்டல்களில் மட்டன் வகையறாவில்தான் வாழ்க்கை இருந்தது. ஓரு நாள் அக்கா கையால் வறுத்த மீன் சாப்பிட எல்லாமே மாறி போனது. சாப்பிட்டது என்ன மீன் என்று நியாபகம் இல்லை. ஆனால் அந்த ருசி இன்னமும் மனசில் உண்டு. அப்போது தஞ்சை பக்கம் வீடு. அக்கா வீட்டு மீனுக்காக திருச்சி வர ஏக்கமிருக்கும்.

அமெரிக்கா வந்து பிரம்மசாரியாய் இருந்த போது கோழிதான் பிராதான அசைவ உணவு. அறை நண்பர்களின் அற்புத சமையல்களில் வகை வகையாய் கிடைத்தது. மீன் சமையல் செய்தல் யாருக்கும் புலப்படவில்லை. நல்ல மீன் வருவல் வெளியிலும் கிடைப்பதில்லை. அப்போது கிரிலில் வாட்டி எடுத்த அமெரிக்க மீனிற்கு நாக்கு பழகவில்லை.

ஆரம்ப காலத்தில் கிராப் கேக் என்ற நண்டு உணவு மட்டும் மிக பிடிக்கும். அதை மட்டும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்போது இந்த ஊர் கடல் உணவும் பழகி விட்டது.

இன்று காலை அலுவலகம் வரும் போது என்.பி.ஆர் வானோலியில் அதிர்ச்சி தரும் செய்தியை கேட்க நேர்ந்தது. 2048ல் கடலுணவு எல்லோருக்கும் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். அதிகப்படி மீன் பிடிப்பும், மாசுப்படுத்தப்பட்ட இயற்கை சூழல்களும் கடல்வாழ் உயிரிகளின் இருப்பை பெரிதும் பாதிக்கின்றன. 1960ல் இருந்து மீன் பிடிப்பது கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இந்த நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். காரை நிறுத்தி விட்டு நடந்து செல்லாமா என்று யோசித்தேன். என் காரும்தானே சுற்று சூழலின் மாசுக்கு ஒரு காரணம்.நடைமுறையில் சாத்தியமானது அலுவலக பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தி அலுவலகத்திற்கு நடப்பது மட்டுமே.

மீன் பிடித்தல் பலரின் வாழ்க்கை முறையாய் உள்ளது. அவர்களது அன்றாட வாழ்வும் இது போல் கடல் உயிர்கள் அரிதாவதால் பாதிக்கப்படும். கவலையான விஷயம்.

இதை தவிர்க்க கடலுக்குள் கடல் உயிர்களுக்கான சரணாலயமும், மீன் பிடிப்புகள் தடை செய்யப்பட்ட பகுதிகளும் வர வேண்டியிருக்கும். இது போல் கொணர்தலின் பயன் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் வெளிப்படையாக உள்ளது.

ஏற்கனவே மாசுப்பொருள்களால் உலகில் ஏறி வரும் வெப்பம் துருவ முனைகளில் பனி உருகுதலை அதிகப்படுத்தி உள்ளது. அதன் விளைவுகளையும், கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அதன் பக்க விளைவுகளாய் ஏற்படும் கடல் உயிரிகளின் பாதிப்பும் எதிர்கால மாசுக்கட்டுப்பாடு பற்றிய திட்டமிடல்களின் அவசியத்தை இன்னமும் அதிகமாய் வலியுறுத்துகின்றன.

Thursday, November 2, 2006

இலவசம்

இலவசமாய் கிடைத்தால்
இனிப்பாய்தான் இருக்கிறது
பனி போல் கரைந்தாலும்
பாவனையாய் சுகமுன்டு

மூன்று நாள் மழையில்
மூழ்கி போன வீட்டுக்குள்
ஓரு வேளை உணவுக்கும்
ஓட்டாண்டியாய் ஆக
வரிசையில் நின்று
வக்கனையாய் அரைபடி அரிசியோடு
வேட்டி சேலை வாங்கையில்
வாயெல்லாம் பல்தான் வருகிறது

இலவசமாய் கொடுத்தேன் என்றும்
இறைவன் நானே என்றும்
சுவரோட்டியில் சிரிக்கிறார்
சுந்தரமாய் தலைவர்
கையெடுத்து கும்பிட்டு
அடுத்த வருட மழைக்கு
அடியெடுத்து நாங்கள்

கர்ணணுக்கு பிறப்பில் உண்டு
கவச குண்டலம் உடலோடு ஒட்டி
எங்களுக்கும் பிறப்பில் உண்டு
வழிந்தோடும் தெருக்களும்
வாய்க்கரிசி இலவசமும்
வாழ்வோடு ஒட்டி

தண்ணீருக்குள் தலை முங்கி
மூச்சு தடுமாறும் வேளையில்
முடி பிடித்து அழுத்துபவன்
சிறிதேனும் வெளி இழுத்தாலும்
தயை கொண்டு
தானம் செய்தவனாகிறான்
இங்கு சலவை செய்த
சட்டை இல்லையானாலும்
மூளைகள் நிறைய உண்டு

Wednesday, November 1, 2006

ரெஸ்வெர்டால்

ஆராய்ச்சியாளர்கள் சிகப்பு வைனில் உள்ள ரெஸ்வெர்டால் என்ன மூலக்கூறு ஆயுளை கூட்டும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

குண்டு வெடிப்பு, கொசுக்கடியெல்லாம் இது போக்காது. அதையெல்லாம் தாண்டி பிழைத்து இதை அருந்தும் போது ஆயுள் நீளும்.

டையட் இருந்து உடம்பை காய்த்து நாக்கு செத்து போவது தண்டனைதான். ரெஸ்வெர்டால் இது போன்ற டையட் முறைக்கு மாற்றாயும் வரும்.

நாம் சாப்பிடும் அதிக கலோரி உணவின் கெடுதல்களை கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. ஆந்திரா மெஸ் போகும் போது முழு மீல்ஸ் சாப்பிட்ட யோசிக்க வேண்டாம்.

எலிக்கு கொடுத்து பரிசோதித்து பார்த்துள்ளார்கள். நன்கு வேலை செய்துள்ளது. இன்னமும் இதிலிருந்து மருந்து செய்யவில்லை.

ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. டையாபடீஸ் பயம் உள்ளவர்களும் இது நல்ல செய்தி.

Saturday, October 14, 2006

குதிரைக்கு சொந்தகாரர்கள்


காலில்லாத முகம் அழிந்த
குதிரைக்கு சொந்தகாரர்கள்
குதிரை மேல் குந்தி
புவி வெல்ல போகிறார்கள்

கால் வளர்க்கவும்
முகம் கொடுக்கவும்
நேரம் இல்லாதவர்கள்
சவாரிக்கு மட்டும்
முந்தி இருக்கிறார்கள்

பார்ப்போம் இந்த
பயணத்தின் திசைகளை

Friday, October 13, 2006

விழிப்பு பெற

போராட்டங்கள் வெற்றி பெற
பாவனைகள் ஆக்கபட
பரிணாம கோணல்களில்
பாவனைகளே போராட்டங்களாயின

உண்ணவும் கழிக்கவும்
உயிரான சுயமரியாதைக்கும்
தானமாய் தயவுகளை தேடி
தயவுகளே வாழ்வின்
நிதர்சனங்கள் ஆயின

கவுரவமும் விழிப்புணர்வும்
கல்லான தெய்வங்கள் போல
காட்சி பொருளாக
நெஞ்சினில் சுமந்து
நேர்வழி செல்லாமல்
கதவுகள் சாத்தப்பட்ட
கல்லறையிலும் கருவறையிலும்
அலங்காரமும் அர்ச்சனையையும்
அடக்க மறைந்திருகின்றன

கல்வியும் வேலையும்
குடிநீரும் சாக்கடையும்
ஆற்றல் மிக்க மின்சாரமும்
அனைத்தையுமினைக்கும் சாலைகளும்
இல்லோர் இருப்போரேன
இடம் பார்க்காமல்
எல்லோரிடமும் சேர
எழுந்திடும் விழிப்பு

மகள்

வெல்லக்கட்டி
என் வெண்ணிலாக்குட்டி
பட்டு கன்னம் தேய
பாயினிலே புரண்டு
மொட்டு வாயை கூட்டி
மெல்ல பேசும் பேச்சில்
சித்திரங்கள் ஆக்கி
சிந்தையிலே வைத்தேன்
**********************
பாதி இரவில் விழித்து
பாலும் கொஞ்சம் குடித்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஓங்கி அவள் அழுது
தூக்கமவள் வாஙக
அவள் உதட்டில்
வழியும் சிரிப்பில்
பக்கம் நிரப்பும் எழுத்தும்
பயனிலாமல் போகும்

Wednesday, October 11, 2006

நிஜம்

குருட்டுபயல்கள் யானையை
பார்ப்பது போல் பார்த்து விட்டு
பார்க்க கூடாததை பார்த்ததாக
பதட்டமும் ஆகிறார்கள்

எப்போதும் சவுக்கு வைத்திருப்பவனுக்கு
வசதிக்கு வார்த்தை வராதவரை
விசிறு விசிறுவதில் ஏது குறை
அரசியலமைப்பை அப்பாலெறிந்து விட்டு
அண்ணாச்சிகளுக்கு பட்டம்
கட்ட வேண்டியதுதான் போலிருக்கு
நீதிமானாய் நியாயவாதியாய்

புகைமூட்டி நிஜம் மறைத்து
கண் திறந்து நிஜம் தேட
வழி காட்டுகிறார்கள்
புகை கலைகையில்
புகையை நிஜமாகவும்
நிஜத்தை புகையாகாவும்
மாற்றிக் கொள்கிறார்கள்

பாண்டம் செய்பவன் கை
பானையாகிறது நிஜம்
கண்கட்டி தலைசுற்றி
நிற்கும் வரை
அவர்கள் விடுவதாயில்லை
மயக்க நிலை மனிதருக்கு
வித்தை விற்றல் சுலபம்

Sunday, October 8, 2006

Thank You For Smoking- திரை விமர்சனம்

கருத்தாக்கங்கள் சந்தை மயமாக்கப்பட்டு, அலங்காரமான வார்த்தைகளில் வாதங்களை பொட்டலம் கட்டி விற்கும் மனிதனை பற்றி சினிமா இது.

அமெரிக்காவில் லாபி செய்வது என்பது ஒரு தொழில். உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் அதற்கு அரசின் உதவி வேண்டுமென்றால் இவர்கள்தான் அதற்கான இடை மனிதர்கள். பல்வேறு பட்ட தொழில்கள், அமைப்புகள், நாடுகள் இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக வாடகைக்கு எடுத்து அரசை தங்கள் பக்கம் திருப்ப பயன்படுத்துகிறன. கிட்டதட்ட இந்தியன் படத்தில் கமல் போக்குவரத்து அலுவலகம் முன் பண்ணும் வேலை. ஆனால் சட்டபூர்வமாக அங்கிகரிப்பட்ட வேலை,

படத்தின் நாயகன் உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது அவனது முடிவு.

சிகரெட் தொழில் அமெரிக்காவில் பல்வேறு தடைகள், வழக்குகள் மத்தியில் இருக்கிறது. கதை நாயகன் அந்த தொழிலை பற்றிய கருத்தாங்கங்களை மக்களுக்கு விற்பவன்.

சிகரெட் வேண்டும் என்ற வார்த்தைகளை தவிர்த்து, மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்ற உரிமை வேண்டும் என்பதே அவனது வாதமாக வைக்கிறான். தனி மனிதனுக்கான நல்லது , கெட்டதுகளை முடிவு செய்யும் உரிமையை எந்த அரசோ,அமைப்போ தவறென வாதாட முடியாது. ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 1200 நபர்களை கொல்லும் ஒரு பொருளை எளிமையான ஒரு வாதம் கொண்டு அவனால் நியாயப்படுத்த முடிகிறது

படத்தில் அவனது நண்பர்களாக வருபவர்கள் இரண்டு நபர்கள். ஒருவர் ஆயுத விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர், இன்னோருவர் மது விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர். மூவரும் தங்களை மரண விற்பனையாளர்கள் என்று நகைச்சுவையாக அழைத்து கொள்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் நடக்கும் உணவருந்தும் இடத்திற்கான உரையாடல் மிக அழகாய் செல்கிறது. அவர்கள் உணவருந்தும் இடத்தின் பின்னே இருக்கும் ஒரு புகைப்படத்தில் அமெரிக்காவின் பெருமையை பறை சாற்றும் வாக்கியங்கள் இருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

கதாநாயகனின் மகன் தந்தையை கண்டு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவராக காட்டப்படுகிறான்.அப்பாவின் அஸ்திரமான சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லா வாதங்களும் நியாங்களே என்பதை தன் அம்மாவுக்கே பயன் படுத்தி அவள் பலவீனத்தை முன்னகர்த்தி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள தயங்குவதில்லை.

மகனின் பாத்திரம் அப்பா தன் தொழிலில் மூழ்கி முத்தெடுக்கும்(!) போது சிறிது காற்றாய் இருந்து சுவாசிக்கவும் வைக்க உபயோகப் படுத்த படுகிறது.

நாகரிக உலகத்தில் திரைப்படங்களின் தாக்கமும் இந்த படத்தில் காட்டப்படுகிறது. திரைப்படங்களின் மூலம் சிகரெட் விளம்பரம் செய்ய லாஸ் ஏஞ்சலிஸ் போகும் நாயகன் தன்னை விட பெரிய வியாபார புலியை சந்திக்கும் இடங்கள் அருமை.

சிகரெட் தொழிலுக்கு எதிராய் போராடும் செனட்டர் படும் தடுமாற்றங்கள் நகைச்சுவையுடன் படம் முழுக்க வருகிறது. எண்ணங்கள் சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதாது, அதை மக்களிடம் கொண்டு செல்ல தெரிய வேண்டும் என்பது இந்த பாத்திரம் வழியாக காட்டப்படுகிறது. டிவி நிகழ்ச்சியில் ஓரு கேன்சர் நோயாளியை வைத்துக் கொண்டு சிகரெட்டின் தீமைகளை சொல்ல ஆசைப்படுவதும், அதை சரியாக சொல்ல முடியாமல் கதாநாயகனிடம் குட்டு படுவதுமான இடங்கள் இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

சிகரெட் குடித்து கேன்சர் வந்து கோர்ட்டுக்கு செல்லவிருக்கும் நோயாளியை கதாநாயகன் சுலபமாக கையாளுவான். யாருக்கு எது பலவீனமோ அதை கொண்டு அவன் பொருள் விற்பான்.

இந்த தொழில மனசாட்சிக்கு விரோதமாய் தோன்றாதா என யாராவது கேட்கும் போது சால்ஜாப்பு சொல்லுதலையையும் காட்டியிருப்பார்கள். அந்த சால்ஜாப்பு கதாநாயகன் தனக்கு சொல்லிக் கொள்வதல்ல, அடுத்தவருக்காக அவன் வைத்திருக்கும் பொட்டலத்தில் அதுவும் ஒரு ்பகுதி

பெண் பத்திரிக்கை நிருபருடன் ஏற்பட்ட தொடர்பினால் பழி ஏற்பட்டு பணி இழப்பதையும், பின் நடந்த சம்பவத்தை திரித்து பழியை தனக்கான விளம்பரமாக்குவதும் கதாநாயகனுக்கு லாவகமாய் வருகிறது.

இந்த படம் போதனைகளுக்கான படமல்ல. லாபி உலகின் நடப்புகளை நகைச்சுவையாக சித்தரிப்பது. ஆர்ப்பாட்டமான சண்டைகளோ, அதிரடி திருப்பங்களோ கிடையாது. ஆனால் அவசியம் பார்க்கலாம். அதற்கு முன் அமெரிக்க லாபி பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வார இறுதியில் இந்த படத்தை பார்த்தேன். மரியா பெல்லா, கேட்டி ஹோம்ஸ் ,வில்லியம் மேசி ஆகியோர் தெரிந்த முகங்கள். மரியா பெல்லாவை history of violence படத்தில் பார்த்து இருக்கிறேன். கேட்டி ஹோம்ஸ் batman returns-ல் வருவார். பட கதாநாயகன் ஏரான் ஹேக்ஹார்ட். பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். இயக்குனர் ஜேசன் ரிட்மேனின் திறமை படம் முழுதும் தெரிகிறது.

மறக்காமல் இருப்பவை

சனநாயகத்தின் இரண்டு தூண்கள்
ஊரின் நாட்டாமைகளும்
ஓட்டு போட்ட சனங்களுந்தான்

மறக்காமல் நாட்டாமைகள் செய்வது
ஊர்காசில் விருந்து வைத்து
உபயதாரரில் தன் பெயர் போடுவது

மறக்காமல் சனங்கள் செய்வது
முதல் பந்திக்கு முந்தி
மூழ்கும் அளவுக்கு முகஸ்துதி வழங்குவது

எல்லோரும் மறக்காமல்
இழுத்து போட்டு கடமை செய்ய
என்ன குறை சனநாயகத்துக்கு

Friday, October 6, 2006

அம்மா

பக்கத்து வீட்டு
பேச்சின் சுவராஸ்யத்தில்
பாதம் ஏறி செல்லும் பாம்பை
கவனிக்காமல் இருக்கலாம்
அசரமால் உழைத்ததில்
ஏதாவது ஒரு ஏகாதசி
விரதம் விட்டுப் போகலாம்
விடிகாலை சமையலில்
சோற்றின் உப்பும் மறக்கலாம்
அவ்வப்போது சொல்லும்
கணக்கு பாடத்தில்
ஒரிரண்டு தெரியாமலிருக்கலாம்
எதுவிருந்தாலும்
கண்கள் மூடி உறங்கும் போதும்
பிள்ளைகள் இருவரை விடுவதில்லை
தூக்கத்தின் வார்த்தைகளும்
அம்மாவுக்கு எங்கள் பெயர்தான்

Thursday, October 5, 2006

பிஞ்சு முகம்

நசுக்கி போடும்
ஓரு நாள்
அசந்து காய்ந்து
நொந்து முடிகிறது

உதறி தள்ளி
ஒட விடாமல்
தளையாய் கட்டும்
முடிந்து போன
நாளின் நிகழ்வுகள்

ஏக்கப் பார்வையோடு
நாளை வரும்
தீபாவளி பட்டாசுக்காக
நேற்றிலிருந்து பட்டியலோடு
வாசலில் காத்திருக்கும்
பிஞ்சுமுகம் பார்க்கையில்
தளை அவிழ்கிறது

Wednesday, October 4, 2006

கோபம்

காலை விடியலில் கோவில் கண்டு
விரல் நுழையா உண்டியல் தேடி
செய்ததற்கு கையூட்டளித்து
செய்யபோவதற்கு முன்பணம் கட்டி
சிறப்பு கட்டண சேவையில்
சிந்தை மகிழ்ந்து அய்யனின் நாமம்
போற்றி போற்றி என
பொங்கி வழிய வாசல் வருகையில்
முழம் பூ வழிக் கடையை விட
முக்கால் ரூபாய் கூட வைத்து
கூவி விற்கும் ஐந்து வயது
பெண்ணிடம் கோபம் வருகிறது

Tuesday, October 3, 2006

X-Men: The Last Stand

அன்பு அண்ணன் உல்வோரைன் கலக்கும் X-Men: The Last Stand டிவிடி இன்று வெளி வருகிறது. இது பிரைன் சிங்கர் இயக்கம் இன்றி வெளி வரும் முதல் X-Men படம். திரை அரங்கு சென்று பார்க்க திட்டங்கள் பல தீட்டியும் வீட்டில் செல்லமாக தட்டி சும்மா இரு என்று சொல்லி விட்டதால் அடங்கி போக வேண்டியதாயிற்று.

சாயங்காலம் வீட்டுக்கு போகையில் டிவிடி எடுத்து விட வேண்டியதுதான். தலைவி ஹேலி பேரியும் உண்டு. cat womanல் சம்பாதித்த கெட்டப் பெயர் எல்லாம் இந்த படத்தில் போக்கி கொண்டார்.

வில்லியம் ஸ்ட்ரைக்கருக்கு தண்ணி காட்டிய இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட விறுவிறுப்பு.


மற்றுமொரு முக்கிய தகவல் மியுட்டன்ட் மனிதர்கள் பரிணாம வளர்ச்சியால் உருவானவர்களாய் காட்டபடுகிறார்கள். இந்த படம் டார்வினை ஆதரிக்கிறது.

உல்வோரைனுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு தனி திரைப்படம் எடுப்பதாக பேசிக்கொள்கிறார்களாம்.

முதல் முதலில் பார்த்த பிரைன் சிங்கர் படம் usual suspects. திரில்லர் படம். கைசர் சூசே என்ற பெருங்கோபமும், புத்திசாலிதனமும் உள்ள வில்லனை பற்றி சுழன்ற படம். நம்ம ஊர் வில்லன்கள் எல்லாம் வட்டமாக உட்கார்ந்து அட்டை பெட்டி நடுவே கவர்சி நடனம் பார்த்து ஹிரோவிடம் அடி வாங்கி சாகையில் இது போல் வித்தியாசமான வில்லன் பார்க்கையில் பிடித்து போகிறது. கெவின் ஸ்பேசி கலக்கி இருப்பார்.

லாஸ் ஏஞ்சலிஸ் ஆரஞ்சு கவுண்டியில் படையப்பா பார்த்து விட்டு இரவு காட்சியாக நண்பன் வீட்டில் இந்த படம் பார்த்து கிட்டதட்ட ஆறு வருடம் ஆகி விட்டது. ஆரஞ்சு கவுண்டி என்ற உடன் நினைவு வருவது உடுப்பி ஹோட்டல். வடை நன்றாக இருக்கும். இப்போது மூடி விட்டார்களாம். பயானிர் போலிவார்டில் மனதுக்கு பிடித்த ஒரே விஷயம் காணாமல் போனதில் வருத்தம் உண்டு.

அறுமிடம் எது

தளை அறுமிடம் எது
அன்னியர் அகலையில் இல்லை
அகன்ற பின் தெரிந்து கொண்டோம்
சனங்களின் வாக்கினில் இல்லை
கையிட்ட மை காயும் முன் புரிந்து கொண்டோம்
கூவிட்ட கோஷத்தில் இல்லை
காதடைக்கையில் விளங்கி கொண்டோம்
விளிம்பு தளும்பும் உணர்ச்சியில் இல்லை
தூண்டி காய்வோர் தரிசித்து தெரிந்து கொண்டோம்
அறிவகற்றும் குருட்டு பக்தியில் இல்லை
கூழை கும்பிடின் முடிவில் அறிந்து கொண்டோம்
புரிதலில் அறுமோ விழித்தலில் அறுமோ
தன்னை போல் பிறர் நோக்கையில் அறுமோவென
விட்டம் பார்த்து வீணாய் யோசிக்கையில்
நிச்சயம் அறவில்லை

Monday, October 2, 2006

அழைப்பு

கருவறைக்குள் ஒளிந்திருக்கும் தாண்டவகோனே
கதவுடைச்சி வந்திடடா தாண்டவகோனே
அச்சமாக இருக்காடா தாண்டவகோனே
அரவணைக்க நாங்கருக்கோம் தாண்டவகோனே

தீட்டோடு நான் நிற்க தாண்டவகோனே
தினம் பூசை கேட்குதாடா தாண்டவகோனே
பாலும் சோறும் மறந்திடுடா தாண்டவகோனே
மேளத்தோடு நாயனங்கள் தூக்கி எறி தாண்டவகோனே
வானிருக்கு மண்ணிருக்கு தாண்டவகோனே
நடுவில் கொஞ்சம் நாமிருப்போம் தாண்டவகோனே
கள்ளோடு கவுச்சி உண்டு தாண்டவகோனே
மோதும் பறை இசைகள் கேளு தாண்டவகோனே

பக்தனாக நானிருக்க தாண்டவகோனே
உன் வேசம் நீயும் கலைச்சிடனும் தாண்டவகோனே
குறீயிட்டில் அடங்காதே தாண்டவகோனே
வெறும் பேச்சில் மயங்காதே தாண்டவகோனே
வெளி நீயும் வந்திடடா தாண்டவகோனே
வீடுபேறு காட்டிடுவேன் தாண்டவகோனே
பகுத்தறிவு தேடிடலாம் தாண்டவகோனே
பயம் மறந்து வந்திடடா தாண்டவகோனே

Saturday, September 30, 2006

ஆசை

விடுதலை கடவுள் பக்தன். வீரனை கும்பிடாமல் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டான். அவனது அப்பா தமிழக அரசியலில் ரொம்ப ஈடுபாடுள்ளவர். அவனது சேரியில் கழகங்களின் கொடி என்றைக்கு ஏறினாலும் அவர்தான் முன்னே நிற்பார். சொந்த காசை செலவு செய்து கட்சி வேலைக்கு காய்ந்ததால், இன்றைக்கு அடுத்த வேளை உலை வைக்க கட்சி ஆபிஸ் வாசலில்தான் நிற்க வேண்டிய வாழ்க்கை.

விடுதலைக்கு அப்பாவை ஒரு பிழைக்க தெரியாத மனிதராய்தான் தெரியும். இன்னமும் மேடைப் பேச்சு, கைத்தட்டலுக்கான ஏங்கல், கட்சி பெருந்தலைகள் வருகையில் கார் கதவை பிடித்து அவர்களது முதுகு தட்டலுக்கு காத்திருப்பு என இவர் இன்னமும் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமலே இருக்கிறார் என வருத்தம் உண்டு.

அவன் இருபதொன்றாம் நூற்றாண்டின் ஒரே நிதர்சனமாய் கண்டது பணத்தை மட்டுந்தான். அவனை பொருத்தவரை அது மட்டுமே ஒருவனது தலை எழுத்தை திருப்பி போடும் ஆற்றலுடையதாய் இருந்தது. அதில் மட்டுமே யாரும் தீட்டு பார்ப்பதில்லை,சேரியிலும், அக்ரகாரத்திலும், ஆண்டைகளின் வீட்டிலும் ஒரே மதிப்பு உள்ளது என்பது அவனது கணிப்பு. இன்றைக்கு சாதி பார்த்து வீட்டு திண்ணையில் மழைக்கு ஒதுங்க விட மறுப்போறும், காசு வரும் போது முகம் முழுதும் சிரிப்பை கொண்டு வந்து கூழை கும்பிடு போட மறப்பதில்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அது ஒரு தேர்தல் நேரம். விடுதலையின் அப்பா ஏறாத மேடை இல்லை. பேசாத பேச்சு இல்லை. குடும்பத்திற்கும் நல்ல வருமானம். விடுதலை அவன் தந்தையுடன் எல்லா இடத்திற்கும் போவான். அதிகம் அவர் குடிக்காமல் பார்த்துக் கொள்வது அவன் வேலை.

உள்ளூர் புளியமரத்தடி கூட்டம் பரபரப்பாய் போய்க் கொண்டிருந்தது. தலைவர் வழக்கம் போல் நான்கு மணி நேரம் தாமதமாய் பத்து அம்பாசிடர் கார்களில் ரத கஜ துரகபதாதிகள் சகிதமாய் வருவதால் அது வரை விடுதலையின் அப்பா வாய் வலிக்க பேசிக் கொண்டிருந்தார். எதிர்கட்சிகாரர்களின் குடும்பம் அவர் வாயில் அவலாய் மெல்லப் பட்டுக் கொண்டிருந்தது. போகும் போது அவர் சாராயமும் கொஞ்சம் போட்டு விட்டுதான் போனார். வர வர ரொம்ப நேரம் அவரால் நிற்க முடிவதில்லை. மூட்டு வலி அதிகமாய் இருந்தது. மருத்துவர் பரிசோதித்து விட்டு வாய்க்கு வராத வியாதியை சொல்லி இவர்கள் ஆண்டு வருமானத்தை ஒரு மாத மாத்திரையாய் சொல்லி விட்டார். இவர்கள் மாத்திரையெல்லாம் வாங்கவில்லை,மூட்டு வலி மறக்க சாராயம் ஒன்றே அவருக்கு மருந்தாய் இருந்தது.

அந்த கூட்டத்தில் வைத்தீஸ்வரனையும் பார்த்தான். வைத்தீஸ்வரன் தேசிய கட்சியை சேர்ந்தவர். பணம் அதிகம் புரளும் கட்சி அது. ஆனால் அவர் என்ன அணியிலிருக்கிறார் என விடுதலைக்கு நியாபகம் இல்லை. அணியை பொறுத்து பண புழக்கம் ஏற்ற இறக்கமாயிருக்கும். சமீப காலமாய் விடுதலையின் தந்தையின் கட்சியோடு கூட்டணி வைக்க முயற்சியில் இருக்கிறார்.

"விடுதலை எப்படியிருக்க? அப்பாவுக்கு மூட்டு வலிலாம் எப்படி இருக்கு? "-வைத்தீஸ்வரன்

"என்னத்த சொல்ல சார்? இதெல்லாம் காசுள்ளவனுக்கு வந்திருக்கனும். எங்க குடும்பத்துக்கு வந்திடுச்சு. இந்த எலக்சன் வந்ததுல கொஞ்சம் இசியா இருக்கு, அப்பாவுக்கு வருமானம் அதிகமாயிருக்கு. எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்களேன். உங்களுக்குதான் ரயில்வே காண்ட்ராக்ட்ர்ஸ் எல்லாம் பழக்கமாச்சே. நானும் பார்மாலிட்டிஸ் எல்லாம் உங்களுக்கு செஞ்சிடறேன்"-விடுதலை

"ஆமாண்டா.வேலைக்கு மட்டும் என் தயவு வேணும். கட்சி மட்டும் அங்கேயா? உங்கப்பாவை எங்க பக்கம் கொண்டு வா. இல்லாட்டி உங்க சேரில இருந்து ஒரு நூறு ஆளை கூட்டி வந்து நீ எங்க கட்சிக்கு வந்திடு. நானும் சேரில ஒரு கொடியை எங்க தலைவரை வைச்சி ஏத்திடறேன். அப்புறம் உன் வேலைக்கும் ஏற்பாடு பண்ணிடறேன். பார்மாலிட்டிஸ்ல கொஞ்சம் தள்ளுபடி வேற தர்ரேன். நீதான் முடிவு பண்ணனும்"- வைத்தீஸ்வரன்

"சார் எங்க சேரி ஆளுங்களை ஒரு காலத்தில உங்க தெருவுக்கே விட மாட்டிங்க. இன்னைக்கு நூறு ஆளுங்களோட வா அழைப்பு கொடுக்கறிங்க. சனநாயகத்தோட ஒரே நல்லது இதான். ஆளா கண்ணுக்கு தெரியலேனாலும் ஒட்டாவாச்சும் உங்கள் கண்ணுக்கு படுவோம். அப்பாட்ட சொல்லி பாக்கறேன் சார். உடம்பு நல்லா இருந்த வரைக்கும் இது மாதிரியெல்லாம் சொன்னா குதிப்பாரு. இப்போதான் சுத்தமா எதுவும் முடியலியே. சொல்லி பாக்கறேன். எனக்காக சரினு சொல்லுவாருனு நினைக்கிறேன்"-விடுதலை

"நல்லா உரைக்கிற மாதிரி அவர் கிட்ட சொல்லு. நீங்களாம் சுத்த பத்தமா இருந்தா நாங்க ஏண்டா சேர்த்துக்காம இருக்கப் போறோம். சாக்கடையும் சகதியுமால இருக்கிங்க? "- வைத்தீஸ்வரன்

"எங்களுக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா சார்? சுதந்திரம் ஆகி ஐம்பது வருஷத்தில தெக்கால போற சாக்கடை வடக்காலையும் நகர்ந்திருக்கு அவ்வளவுதான். மத்தபடி ஒன்னும் கிடையாது. கவர்மெண்ட்லாம் உங்களுக்குதான் சார். எங்களுக்கு நாங்கதான். கவர்மென்ட் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதோட சாறு எல்லாம் மேல உள்ளவங்க எடுத்திக்கிட்டு எங்களுக்கு சக்கைதான் வருது. ஆனா இப்ப விவரம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கு, ரிஷர்வேஸன்ல படிச்சிட்டு டவுனுக்கு கொஞ்ச குடும்பம் பிழைப்பு தேடி போய் இப்போ கொஞ்சம் தலை எடுத்திருக்காங்க. இத பத்தி பேசி என்னா சார் ஆக போகுது. வேலையை மறந்திடாதிங்க"-விடுதலை

"சரி சரி நான் போய் உங்க கட்சி தலைவரை பாத்திட்டு வர்ரேன். நீ நாளை மறுநாள் கட்சி ஆபிஸூக்கு வா"-வைத்தீஸ்வரன்

அவர் போவதை பார்த்துக் கொண்டே இருந்தான்.மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சாக்கடை சகதி இல்லையென்றால் இவர் சேரிக்கு வந்து வீட்டில் விருந்தா சாப்பிட போகிறார், வேறு ஏதாவது காரணம் சொல்லுவார் என்று நினைத்துக் கொண்டான். காரியம் ஆக வேண்டுமானால் இதை எல்லாம் பார்த்தால் ஆகாது. அப்பா கட்சி மாவட்ட செயலாளரை நான்கு வருடமாய் வேலைக்கு கேட்டு அரித்ததில், அவர் அவருக்கு வேண்டப்பட்ட பெண் வீட்டில் இவனுக்கு ட்ரைவராக வேலை வாங்கி தந்ததுதான் மிச்சம். சம்பளமும்,பேட்டாவும் வயிறுக்கு பத்தவில்லை. வேறு வேலை தேடிக் கொண்டுள்ளான்

விடுதலையின் அப்பா இன்னமும் பிரச்சார பீரங்கியா முழங்கி கொண்டிருந்தார். இவனுக்கு அவரை பார்த்து சலிப்பாக இருந்தது. வெறும் அலங்காரமான பேச்சு, கூட்டத்திற்கு நல்ல தீனியாய் இருந்தது. புளிய மரத்தடி பெட்டிக் கடைக்கு வந்தான்.

அப்பாவின் கட்சி வட்ட செயலாளர் ஈஸ்வரபக்தன் பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாய் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். ஈஸ்வரபக்தன் என்ற பெயரையும் நியுமராலஜி பார்த்து மாற்றாமல் உள்ளார்.
ஆனால் யாரும் கேட்டால் அம்மா, அப்பா வைத்த பெயர் அதனால் மாற்றவில்லை என்று கூறிவிடுவார். ஆனால் ஊரில் வேறு யாராவது அம்மா, அப்பா தங்கள் குழந்தைக்கு ஆண்டவன் பெயர் வைத்தால் அதை மாற்ற சொல்லி மறக்காமல் அறிவுரை சொல்லுவார்.

"வணக்கம் சார்"- விடுதலை

"என்னடா. என்ன வேணும். அப்பா பேசறதை பார்த்து கத்துக்கோ. நீயும் நாளைக்கு கட்சி பேச்சாளராய் ஆகிடலாம். நம்ப இன பெருமையை பேச நிறைய ஆள் வேணும்டா"- ஈஸ்வரபக்தன்

"கட்சியெல்லாம் வேண்டாம் சார். வெளில தான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். "-விடுதலை

"என்னடா இப்படி பேசற. என்ன வேலை உனக்கு வெளில கிடைக்கும். வேலையாம் வேலை. நீ ஒரு வேளை சோறு சாப்பிடறேனா அது கட்சி போடற சோறுடா. நம்ப இனம் போடற சோறு. அதோட கனலாய் நீ வரனும். தீயா பேச கற்றுக் கொள்ளனும். அப்பாவை பாருடா. அது சரி வைத்தி கிட்ட என்ன பேசிகிட்டு இருந்த? "-ஈஸ்வர பக்தன்

அவரிடம் எதிர்த்து பேச அவனுக்கு பயமாய் இருந்தது. மீட்டிங் முடிஞ்சதும் அவரிடந்தான் காசு வாங்க வேண்டும்.

"சும்மாதான் சார். அப்பாவோட மூட்டு வலி பற்றி விசாரிச்சார். அவ்வளவுதான்"-விடுதலை

"பாத்துடா. அவன் கிட்டே எல்லாம் பேசாதே. இன்றைக்கு நம்ப இனம் சாதி சாதியா பிரிஞ்சி இருக்குனா அதுக்கு அவன்தாண்டா காரணம். கவனமா இருக்கனும் சரியா?"- ஈஸ்வரபக்தன்

விடுதலைக்கு பல சிந்தனைகள் ஒடின.சாதியை அவன் கொண்டு வந்தா என்ன, எவன் கொண்டு வந்தா என்ன இவரும்தானே அதை வச்சி பொழைப்பு நடத்திகிட்டு இருக்காரு. இவர் வீட்ல பொண்ணு கேட்டா சேரி ஆள் கழூத்தைதானே வெட்டுவாரு. பொண்ணை கூட விடலாம், ஊர் தேர் வடம் கூட சேரி ஆள் தொட முடியாது. சேரி பொணத்துக்கு கூட தனி காடுதான். இந்த இனப்பேச்செல்லாம் வாய் பந்தல்தான். ஆனா பந்தல் போடறதில்ல இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. இவர் வைத்தீஸ்வரனுக்கு மண்டகபடி போட்டே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கார். இவரும்,வைத்தீஸ்வரனும் ஆடும் கூத்து ஒன்றுதான்,வேறு வேறு முகமூடி போட்டுகிட்டு பிழைப்பு போகிறது.

"ஐயா சொன்னா சரிதான்"- விடுதலை. ஒரு வரியில் முடித்துக் கொண்டான்.

மெல்ல கடையை தாண்டி முட்டு சந்துக்குள் வந்தான். தூரத்தில் அப்பாவின் பேச்சும் கேட்டது. அது பழசாக,அழுக்காக இருந்தது. இவர்கள் வீட்டின் நிலையையும், சேரியின் நிலையையும் நினைத்தான். அதுவும் பழசாக, அழுக்காகதான் இருந்தது. இவனுக்கு வேலைக்கு போயே தீர வேண்டுமென்ற ஆசை இன்னும் அதிகமானது.வீரனிடம் வேண்டிக் கொண்டான் .

Wednesday, September 27, 2006

மரபெனும் பார்த்தீனியம்

இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை

ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்


குரங்கை போல கேள்விகள்
தொங்க தடியாலும் தட்டினார்கள்
எல்லாம் ஒடுங்கி போக
பழக்கி கொண்டோம் எங்களை
அப்போதே
ஏதேனும் கேட்டிருக்கலாம்
எழுந்து நின்றிருக்கலாம்
களை அகற்றியிருக்கலாம்
எனக்கென்ன என
இருந்து விட்டோம்

கண்ணுக்கு தெரிந்தே
பார்த்தீனியம் படர்ந்தது
எங்கள் இருப்புக்குள்
அதற்கு
மரபெனும் பெயரும் வந்தது
பெயர் வந்த பின்
யாரேனும் வெட்டப் போனால்
தோட்டத்தை கெடுக்காதேவென
பசுமை புரட்சி பேசுகிறார்கள்

பசுமைக்கென்ன கேடு
இந்த பார்த்தீனியம் பிடுங்கி
கொஞ்சம் வேப்பமரம் வைத்தால்
வெட்டவா சொல்ல போகிறோம்

Tuesday, September 26, 2006

குறை

மருந்து வாடையடிக்கும் நீரருந்தி
ஏதேதோ வியாதி வாங்கி
என் வீட்டு பிள்ளைகள்
தனக்கும் சாக்கடைக்கும்
பிரிவினை பேசாமல் எங்கள் தெரு
வேலை செய்ய ஆசையுண்டு
களத்து வேலையோ கட்டட வேலையோ
கூலி கிடைத்தால் வயிறு நிறையும்

விளங்கினப் பயல்கள் ரண்டு பேர்
பஞ்சம் தீர்ப்பதாய் வந்தார்கள்
ஒருவன்
பாரம்பரிய பூமியிது
நாமெல்லாம் சகோதரர்கள்
வந்தே மாதரம் சொல்லு
வண்ண வண்ண மிட்டாயுண்டு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்
மற்றொருவன்
கசங்காத வேட்டி சட்டையோடு
ஏழைப் பங்காளன் தானேன சொல்லி
மொழி பேசி இனம் பேசி
திரைப்படங்கள் சில அலசி
சாக்கடையோடு தெரு முடியுமிடத்தில்
கட்சிக் கொடியேற்றி
வாழ்கவென வாழ்கவென கூவு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்

எங்களுக்கு மயிர் சிலிர்க்காதது
மட்டுந்தான் இவன்களுக்கு
குறையாய் தெரிகிறதாக்கும்

Sunday, September 24, 2006

அவன் அவள் அவன்

நிகழ்காலம்
------------
காரை நிறுத்தி விட்டு கடலை பார்க்க வந்தேன். ஆக்ரோஷமாய் சீறும் அலைகளும் கடலும், வானின் முழு நிலவும் மலையின் மேலிருந்து ்பார்க்க எதையோ என்னிடம் சொல்ல வருவது போலிருந்தது. இன்றைய நாளின் அலைகள் மனதை கரையாக்கி கடலை போல் மோத ஆரம்பித்தன.

காரை விட்டி இறங்கும் முன் அவள் விம்மி விம்மி அழுதாள். அழுகையை அடக்க முயன்று இயலாமல் போக அழுகை இன்னும் அதிகமாய் வெடித்தது. அழுகையில் சிதறலில் கோபம் முளைத்து அதன் விளைவாய் அவள் கையிலிருந்த செல் போன் உடைந்து போனது. ஆங்கிலத்தில் நான்கெழுத்து கெட்ட வாரத்தையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அவனை திட்டுவதாக நினைத்து என்னை பார்த்து கத்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அசதியும், சலிப்பும் போட்டி போட்டு உணர்வுகளை ஆக்கிரமிக்க ஷட் தி .... அப் என்று சொல்லலாமா என்று நினைத்தேன், பரிதாபம் அதை தடுத்தது.

இந்த வாரத்தின் முதல் நாள் புராஜக்ட் லைவ் போனது.மண்டை காயும் வேலை. அறுபது மணி நேரத்தில் சில மணி நேர கோழி தூக்கம் போட்டு மானிட்டரை முறைத்துக் கொண்டு அலுவலகத்தின் செயற்கை வெளிச்சத்தில் இருந்தது சிந்திக்கவே இயலாத அளவுக்கு சோர்வை கொடுத்திருந்தது. நல்ல ஒய்வு தேவை. காலை ஆறு மணிக்கு எழுந்தேன். காரை எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து மான்ட்ரே வரை செல்லும் சாலை ஒன்றில்(route 1) பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். தனியே கார் பயணம் செய்வது மனதை இளைப்பாற்றும். காருக்குள் நாம், இசை, காரை கவ்வி கூட வரும் சாலை, அழகழகான மலையின் மேல் வளைவுகள், சாலை ஒட்டும் கடல். ரம்யமாய் இருக்கும். இரவு வரை சென்று விட்டு எங்கு நிற்க தோன்றுகிறதோ அங்கு ஒரு அறை எடுத்து ஒய்வெடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். நிலவோளியில் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் பசிபிக் கடல் மின்னும்.

காலை காபி சாப்பிட சாண்டா பார்பராவில் நிறுத்திய போது இவளை பார்த்தேன். நீண்ட நாள் முன் தோழி. அப்புறம் தொடர்பு நின்று போனது. எனக்கு அவளை பற்றி அதிகம் தெரியாத நிலையில் பிடித்து போனதென்ற ஒற்றை எண்ணத்தை வைத்து அவளிடம் என் எண்ணங்களை கொட்டியது என் தவறுதான். இது வேண்டாம் எனக்கு விரும்பமில்லை என சில வரிகளில் அவள் முடித்திருக்கலாம். வார்த்தைகள் நிறைய சொன்னாள். ஒவ்வொன்றும் என்னை சுட்டது. அவளிடம் நான் பார்க்காத இன்னோரு பக்கத்தை பார்க்க நேர்ந்தது. மிக அதிர்ந்து போயிருந்தேன். என்னிடம் யாரும் அப்படி பேசியதில்லை. ஓரே அலுவலகத்தில் இருப்பதால் அவளை பார்க்காமல் தவிர்க்கவும் இயலவில்லை. ஆனால் சிறிது சிறிதாய் மனதை பழக்கிக் கொண்டேன். அதற்கப்புறம் இந்த காதல் கத்திரிக்காய் சமாச்சாரமெல்லாம் எடுத்து புழக்கடையில் எறிந்து விட்டு வேலையை மட்டும் காதலிக்க ஆரம்பித்தேன். அது சுலபமாய் உதவியது.

பார்த்தால் விசாரிப்பு அவ்வளவே உறவாய் இருந்தது. இன்று பார்த்ததும் சிரித்தேன். வழக்கமான கேள்விகளை பறிமாற்றிக் கொண்டோம். அவள் மிக களைப்பாக இருந்தாள். கேட்டதற்கு லாஸ்ஏஞ்சலிஸில் இருந்து இரவு உணவு முடித்ததும் காரை எடுத்து 90 மைல் தாண்டி சாண்டா பார்பரா வந்து அவன் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு அவன் அப்பார்ட்மெண்டை பார்த்துக் கொண்டே இருந்தாளாம்.

தூக்கமில்லாமல் அப்படி இருந்தது வயது அதிகம் ஆன தோற்றத்தை அவளுக்கு கொடுத்திருந்தது. ஆத்மாவை வேலை சுத்தமாக உறிஞ்சி எடுத்து விட்டிருந்ததால், அவள் கதை கேட்க அதிக விருப்பமில்லாத நேரத்தில் அவள் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு கண் கலங்கலாம் என்ற இடம் வந்தது. காலையை அனுபவித்து உணவருந்த கடைக்கு வரும் யாருக்கும் எங்கள் உரையாடலை பார்த்தால் அனுபவம் பாழாகும். எனவே என் பிரயாணத்தில் அவளையும் கூட்டிக் கொண்டேன்.

அவள் கதை கேட்க ஆரம்பித்த முதல் இரண்டு மணி நேரம் அவளிடமிருந்த வருத்த உணர்வே எனக்கும் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் அவளோடு சேர்ந்து அவனை கோபப்பட்டேன். அதற்கப்புறம் இரண்டு மணி நேரமாகி விட்டது. இப்போது சலிப்புதான் இருந்தது. புலம்பி புலம்பி மன அழுத்தம் அதிகமாக்கி அதை எனக்கும் கொடுத்து விட்டாள். காலையில் காபி சாப்பிடுவதை விட்டிருந்தால் இவளை பார்க்க நேர்ந்திருக்காது. காபி சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது, இன்றைக்கு கேட்டால் மனதுக்கும் நல்லது. தேய்ந்து போன நாளும் பொழுதும் கட்டிய தளைகளை முடிச்சவிழ்த்து, மூச்சு விடும் நிம்மதி தேடி வருகையில் புதிய முடிச்சுகள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டப்பட்டு கிடப்பதே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

நிகழ்காலத்திலிருந்து 5 வருடங்களுக்கு முன்பு
--------------------------------------
பொறியியல் கல்லுரி படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவை டெல்லராகவும், இன்லேன்ட் லெட்டரை வித்ட்ராவல் ஸ்லிப்பாகவும் பயனபடுத்தும் முதிர்ச்சியே மனதிலிருந்தது. விடுதியின் வாயிலாக வாழ்க்கையின் வேறு திசைகளையும் அறிமுக படுத்தி கொண்டிருந்தது. அது மூன்றாம் வருடத்திற்கும், நான்காம் வருடத்திற்கும் இடைப்பட்ட காலம். கல்லுரி இருக்கும் ஊரில் புரோஜக்ட் ஒன்று கிடைக்க அதை உடனே தொடங்க வேண்டி விடுதியில் விடுமுறைக்கு தங்கியிருந்தோம்.

அவளை அப்போதுதான் பழக்கமானது. எனக்கு ஒரு வருடம் சீனியர். கல்லுரி அருகில் வீடு. பேராசிரியர்களுக்கு விருப்பமானவள், கல்லுரி மேடைகளில், குழுக்களில் நிகழ்ச்சிகளை நடத்துபவள். ஆளுமை திறன் அதிகம். அவள்தான் காம்பஸ் இன்டர்வியு பார்த்துக் கொண்டாள். நான் அவளுக்கு வாரிசாக பதவியேற்பு செய்தததால் அவளிடம் உள்ள அறிவை நாற்றாக பறித்து செய்து என்னிடம் நட்டுக் கொண்டிருந்தாள். இந்த விவசாய வேலைக்காக அடிக்கடி பார்த்துக் கொள்கையில் வேறு சில இடங்களில் வேறு சில விஷயங்களையும் விதைத்துக் கொண்டோம்.

இருவருமே சற்று ஆல்பா சுபாவம். அதனால் முதலில் இருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. வேலைக்காரணமாக இடமாற்றம் அவளுக்கு கட்டாயமானது. புறாக் காலில் தூது விடுவது பற்றி இருவரும் பேசி உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தொலைபேசி உதவியது. அடிக்கடி இன்டஸ்ட்ரியல் ட்ரிப் போகவும் அப்பாவுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் அதிகம் ஆனது.

அன்பாய் இருந்தாள். ஆசையாய் நேசித்தேன். வாழ்த்து அட்டை வார்த்தைகள் கூட இருவருக்கும் கலை அனுபவமாய் இருந்தது. பௌதிக விதிகள் மனதுக்கு இல்லை என்று நினைத்து சிரித்துக் கொள்ள முடிந்தது. மேல் நோக்கி மனம் செல்கையில் கீழ் நோக்கி எதுவும் இழுக்கவில்லை.யார் காதல் என்று சொன்னாலும், பேசினாலும், பாடினாலும் எங்களை போல் இவர்களால் நேசித்திருக்க முடியாது என்று உறுதியாக நம்ப முடிந்தது. அந்த நேரங்களில் அவளை விட பெரிதாய் எதும் இருக்கவில்லை. அவள் சுவாசக்காற்று படும் இடத்தில் இருக்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க சித்தமாய் இருந்தேன்.

கல்லூரி முடிந்ததும் மேல் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன்.மேற்கு கடற்கரை வாழ்க்கை. காதல் சங்கிலி அழகாய் மனிதர்களை கட்டி போடுகிறது.

நிகழ்காலத்தின் முதல்நாள்
----------------------
இரண்டு வாரமாய் இரவு நேரங்களில் பயமாய் உள்ளது. கதவை அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது. அவன் மீண்டும் என்னை தேடி வருவான் என நம்பிக்கை இல்லை. ஆனால் என் கதவுகள் அவன் விரலுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன. தொலைபேசியையும் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறேன். ஏதேனும் எடுக்க மறந்த அழைப்பில் அவன் இருந்திருப்பானோ என எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறை அவன் எண்ணை தொலைபேசியில் அடிக்கின்றேன், அதற்கு மேல் ஏதோ ஒன்று உட்கார்ந்து கொண்டு வேண்டாம் அழைக்காதே என்கிறது. ஒரு முறை என்னை பார்த்தால் அவன் மாறலாம். அதற்காக எப்போதும் அவனுக்கு பிடித்த உடையையே அணிந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது. கண்மனி எனும் அவன் குரலை சேமித்து வைத்திருக்கிறேன். அது கரையக் கூடாதென அதை இறுக்க பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனை அணைப்புகள், முத்தங்கள், பாவனையில்லாத பரஸ்பர அன்பு கனிவாய் இந்த வீட்டில் நிகழ்ந்ததே. அந்த நிகழ்வுகள் என்னை சுற்றி அமர்ந்து என் தனிமையை கேள்வி கேட்கின்றன. தன் குடும்பம் முக்கியம், நான் புரிந்துக் கொள்ள வேண்டுமென அவனால் எப்படி சொல்ல முடிந்தது? நானும் அவன் குடும்பம்தானே? ஐந்து வருடங்களில் கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்வின் போதும் அதையேதான் அவை சொல்கிறன என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

அழுகையை காணும் போது அறுவறுப்பு படும் தைரியத்தை தொலைத்து விட்டேன். வேறு எதையோ கையில் வைத்து வேடிக்கை பார்க்கையில் தைரியம் காணாமல் போயிருக்கிறது. எத்தனையோ முறை இந்த தைரியத்தை வைத்து வார்த்தையால் மற்றவரை கிழித்து போட்டிருக்கிறேன். அவர்கள் அழும் போது அது கையாலாகத தனமாகதானே தெரிந்தது. இன்று நானே அந்த இடத்திற்கு வந்து விட்டேன். ஆறுதலுக்கு யாரை கூப்பிடுவது? இவனைதான் கூப்பிட வேண்டும். இவனுக்காகதானே எல்லாவற்றையும் உதறி விட்டேன். 90 மைல் தள்ளி உட்கார்ந்து கொண்டால் நான் இல்லாமலா போய் விட்டேன். என்னை ஒருமுறை நேராக பார்த்தால் அவன் மனது மாறிவிடும்.

நிகழ்காலத்திலிருந்து இரண்டு வாரம் முன்பு
---------------------------------------
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை. பிரச்சனைகள் அதிகரிக்கையில் அவள் அரவணைப்பு பல நாள் துணையாய் இருந்திருக்கிறது. இன்று அவளே பிரச்சனையாய் தெரிகிறாள். காதலிப்பதென்பது வற்புறுத்தி திணிக்கப்பட்ட உண்ர்வாகவே இப்போதெல்லாம் இருக்கிறது. மூன்று வருடம் முன் அவள் எனக்காக வேலை மாற்றி அமெரிக்கா வந்த போது இருந்த அதிகபட்ச இதய துடிப்புகள் சுத்தமாக மறைந்து விட்டது. கொஞ்சம் சோர்வும், சோகமும்,கோபமும்,மோதல்களுமே இருக்கின்றன. கனவு வாழ்க்கை வாழ காதலித்து, இன்று காதலே ஒர் கனவாய் ஆன வாழ்க்கையாகி கொண்டிருக்கிறது.

இவளை திருமணம் செய்து கொள்ள கேட்டதிலிருந்து அப்பா, அம்மா பேச மறுப்பதே வலி அதிகம் கொடுத்தது. அவளுடன் பழக ஆரம்பிக்கையில் ரொம்ப யோசிக்கவில்லை. வயசைதான் குறை சொல்ல முடியும். ஈசல் விளக்கை பார்த்தது போல் இருக்க வேண்டியதை காந்தங்களின் ஈர்ப்பாய் நினைத்திருந்தேன். அம்மா பூச்சி மருந்து குடித்தால் இதயம் நின்று விடுவது போல் இருக்கும் என்று ஆராயும் நிலையில் அப்போது இல்லை. வெறும் அட்டை கத்தி யுத்தம்தான் பெற்றோருடன் இருக்குமென்று நினைத்தது, இன்று உறவுகளை கிழித்து போடும் கொலைவாள் யுத்தத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.

வளர்க்கும் போது அம்மா, அப்பா எதிர்பார்ப்பையும் கூட வளர்த்து கொள்கிறார்கள். அவர்கள் நிழலில் இருக்கையில் வளர்ப்பு எந்த திசை நோக்கி போக வேண்டுமென வலிக்காமல் வெட்டி விடுகிறார்கள், அவர்கள் நிழல் தாண்டி பயணிக்கும் நேரம் வளரும் திசை அவர்கள் எதிர்பார்ப்பை மீறி செல்கிறது. அதை அவர்கள் விரும்புவதில்லை.அவர்கள் அழுகையை தாங்கும் சக்தி இல்லாமல் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

அவளால் அவள் வீட்டை எனக்காக எப்படி இவ்வளவு சுலபமாக உதற முடிந்தது. வளர்த்தவர்கள் மீது பாசம் இவ்வளவுதானா? இத்தனை வருடம் காத்த பெற்றோரை எனக்காக விட்டு விட்டவளுக்கு ஐந்து வருடமே பழகிய என்னை விட்டு விட வலிக்கவா போகிறது? இந்த திருமணம் நடந்தால் என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியுமென தெரியவில்லை. இன்று அவளுடன் பேச வேண்டும். அந்த சாண்டா பார்பரா வேலையை ஒத்துக் கொண்டு இடம் மாறிட வேண்டும். இந்த ஊர் வேண்டாம். எனக்கும் இவளுக்கும் உள்ள இந்த உறவிலிருந்தத விடுவித்து கொள்ள வேண்டும். அப்பா அம்மாவை குற்ற உணர்வில்லாமல் பார்க்கும் மனநிலைக்கு திரும்ப செல்ல வேண்டும். ஆண்டவா எனக்கு அவளிடம் மனம் விட்டு பேசும் வலிமையை கொடு.

நிகழ்காலம்
---------------
அவன் காரை சாலை ஒரம் நிறுத்தி விட்டு கடலின் அலைகளை பார்த்து நின்று கொண்டான்.நான் காரில் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.இவனை காபி ஷாப்பில் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. பழகிய முகம் ஒன்று சிரிக்கையில் ஒவென்று அழ தோன்றியது. இவனை காகிதம் போல் கிழித்து எறிந்த நாட்கள் அப்போது நியாபகம் வரவில்லை.

இன்றைக்கு இவன் ஆறுதலாய் பேசினான். நான்தான் கொஞ்சம் அதிகம் பேசி விட்டேன்.
களைப்பின் உச்சத்தில்தான் இந்த பயணத்துக்கு இவன் வந்தான். ஒய்வுக்கு வந்தவனை கல்லுடன் கடலில் தள்ளியது போல் ஆக்கி விட்டேன். இவனுக்கும் இளைப்பாறுதல் அவசியம். இன்று நாள் முடிந்தால் என்ன? இன்னமும் நிலவும், கடலும் இருக்கிறதே. திரும்பி போக இன்னும் 300 மைல் தொலைவும் உண்டு. ஒரு பேச்சு துணையாய் ஆவது அவனுக்கு இருக்க முயற்சிக்க வேண்டும்.

யாரிடமாவது கொட்டி விட வேண்டுமென இரண்டு வாரமாய் தேக்கி வைத்த அனைத்தையும் இன்று பேசிவிட்டேன். சிநேகமாய் பார்க்க, பேச ஆளில்லாமல் தவித்த தவிப்பு கொடுமையாக இருந்தது. கண்ணாடியை பார்த்துக் கூட பேசிக் கொள்ள முடியவில்லை.

இவன் காட்டிய கடல் நன்றாய் இருக்கிறது. நிலவொளியில் கரிய நிற அலைகள் பாறைகளில் வலுவாய் மோதிக் கொண்டே இருக்கின்றன. குளிர் காற்று உடலெங்கும் நடுங்க வைக்கிறது. வீட்டிலிருக்கும் போது இருந்த மயான அமைதி இங்கு இல்லை. இவனது அருகாமையின் அமைதி ஒய்வை தருகிறது. வார்த்தைகள் தீர்ந்து போய் பேசாமலிருத்தலும் மனதுக்கு கொஞ்சம் பிடிமானமாக இருக்கிறது.மலை விளிம்பின் தலை சுற்றல் சுகமாய் இருந்தது.

என் சுயத்தை அவனிடம் இழந்து என்ன தேடினேன். நான் நானாக இருக்குமிடம் எனக்கு முக்கியமென்பதை மறந்து போனேன். தன் ஆழங்களை மறந்து விட்டு கரிய அலையாய் கரையோடு கட்டப்பட்டு பாறையை விடாமல் மோதி எதையோ தேடுதல் விட்டு, ஆழ்கடலாய் என் சூட்சுமங்களோடு காத்திருப்பேன், எவனாவது என்னை தேடி அது வரை வந்தால் பார்க்கலாம்.

Saturday, September 23, 2006

வாத்துக்காரன் கதை

நாங்கள் கூட்டாய் வாழ்ந்தோம்
வாத்தொன்று மைதாஸை
போல் எங்களிடமும் இருந்தது
ஓற்றை ஓற்றையாய்
தங்க முட்டை
நிதமும் உண்டு
தீனியும் நிறைய
செலவும் ஆனது

எவன் தீனி கொடுப்பது
எவனுக்கு தங்க முட்டையென
சச்சரவும் வந்தது
வாத்தின் இருப்பை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
வாத்தின் தீனியை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
முட்டையை மட்டும்
எவனும் நிராகரிக்கவில்லை
அது மட்டும்
அடிப்படை உரிமையாம்

வாத்தென்னெவோ எதையும்
கவனிக்காமல் முட்டை கொடுத்தது
தீனிக்கேற்றது போல் சிறிதும்
பெரிதுமாய் முட்டை தினமுண்டு

அறிவு தனக்கு அதிகம்
வளர்ந்தாய் அதிகம்
சொல்லிக் கொண்டிருந்தவன்
அறுத்து விட முடிவெடுத்தான்
மொத்தமாய் எடுத்து
ஒற்றை நாளில் பங்கு
பிரிக்க ஏற்பாடும் செய்கிறான்

மைதாஸூக்கு பெயர் பேராசைக்காரன்
இவனுக்கு பெயர் அறிவுசீவியாம்

// வளர்ந்து வரும் தாய்பூமியை தொடர்ந்து குறை கூறி, இதன் குறைகளை நிறைகளாக்க மாற்ற என்ன செய்ய வேண்டுமென எண்ணாமல், நாட்டை உடைக்க சொல்லி பேசி அறிவுஜீவியாக மாற நினைபோரை நினைத்து எழுதியது//

Friday, September 22, 2006

காலூன்ற இடம்

காலூன்றும் முன்
காலூன்ற இடமே
அவசியமாய் இருந்தது
கண்ணுக்கு தெரியாமல்
கைகள் நீட்டப்பட்டன
காலூன்றும் வரைக்கும்

முகமில்லா உதவிகளின்
மூலம் அறிய
நேரம் இல்லை
ஏனேன்றால் நான்
பார்க்க முடிந்தது
என்னை மட்டுந்தான்
காலூன்றல் என்
உயிர் தவிப்பு

உதவும் கைகள்
வலதாகவும் இடதாகவும்
என் வசதிக்கேற்ப
நகர்ந்திருக்காலாம் என்ற
கோபம் கொட்டினேன்
நின்ற பின்னால்

குறை கேட்டு
அடுத்தென்ன
செய்ய பதில்
கேள்வி கேட்க
முகம் சுழித்தேன் நான்
இது எனக்கு
உடன்பாடு இல்லை
எனக்கென்ன அதை
தேட தலையெழுத்தா?

இன்னும் சிலர்
கீழ் இருந்து
கால் ஊன்ற
கை கேட்க
அருகில் நின்றவன்
கையோடு முதுகையும்
தராத போது
நான் மட்டும் கையை
எப்படி தர முடியும்?
எனக்கு எப்போதும்
நியாயம் முக்கியம்
நியாயத்தை நான்
நிர்ணயிக்கும் போது

---------------------------------------------------
அரசின் பல சலுகைகளை அனுபவித்து அதன் அருமையான
கல்வி முறையில் பயன்பெற்று மெத்தப்படித்து
மேல் வரும் போது இந்த நாடென்ன செய்தது எனக்கு என்று கேட்போரை
காணும் நேரம் தோன்றியது இது.

Thursday, September 21, 2006

வழி

அழகாய் அடுக்கி வைத்த
வார்த்தைகளில் கோலமிட்டு
நிஜங்களை நிராகரிக்கும்
மாயவித்தை முன்னகர்த்தி
ஏறி மிதிக்கப்பட்டாலும்
வாங்கி வந்த
வரமென பார்த்து
சுயம் மறக்கும்
போதாத வாழ்க்கைதான்
வாழ்வின் தேடலென
கொடுக்கும் எதுவும்
தேவையில்லை இங்கு
ஒற்றை வார்த்தையில்
உலகலசும் தத்துவமுண்டு
வலியாய் வர்ணணையற்று
தனித்து இருக்கும்
ஏன் என்ற நெம்புகோல்
கொண்டு சுயம்
புரட்ட வழியுண்டு

சினிமா பார்க்க போனவன்

சண்முகத்துக்கு பேய்கள்னா பயம். ராத்திரி தனியா இருந்தா பேன் இல்லாம, லைட் இல்லாம தூங்கமாட்டான். இன்னைய தேதிக்கு அவனுக்கு தெரிஞ்சு அவன் பேயை நேரா பார்த்தது இல்லை. சண்முகத்தோட அப்பா, அம்மால்லாம் தலைகீழாய் நின்று எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்கள். ஆனாலும் அவனுக்கு அந்த பயம் போகவில்லை. இரண்டு தாயத்து மட்டும் அவங்களுக்கு தெரிஞ்ச சாமிக்கிட்ட வேண்டி கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் சண்முகத்து அப்பாவை போலந்தில வேலைக்கு கூப்பிட்டார்கள். அவனுக்கு இந்தியாவிட்டு வெளிநாடு போக இஷ்டமே இல்லை. அவங்க அம்மா,அப்பாட்ட பிடிவாதமா தான் தனியா இருந்து பார்த்துக் கொள்வேன் என சொல்லி விட்டான். சரி வேற வழி இல்லை என்று அவர்களும் போலந்துக்கு பறந்து விட்டார்கள். இவன் தனியாளாய் உள்ளுரில் இருந்தான்

ஒரு நாள் போரடிக்குதேனு சாயந்தரமா சினிமாவுக்கு கிளம்பினான். இவனுக்கு பிடிச்ச ஒரு படமும் ஒரு தியேட்டர்ல ஒடிக்கிட்டு இருந்தது.சரினு அதுக்கு போனான். தியேட்டர்ல கூட்டம் அதிகம் இல்லை. டாம் குருஸ்க்கே இந்த கதியானு இவனுக்கு இருந்தது

மொத்தம் ஐஞ்சு ஆளுங்க தியேட்டர்ல. ஓரே ஓரு பொண்ணும் இருந்தது. அந்த பொண்ணு வெள்ளை கலர் ட்ரஸ் போட்டிருந்தது. முழி எல்லாம் பெரிசா வேற இருந்தது. தனியா பொண்ணிருக்கவும் இவன் பயந்துகிட்டு இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்துகிட்டான். படம் படு திரிலிங்கா ஆரம்பிச்சுது. ரத்தமும் சப்தமுமா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு அவனுக்கு பக்கதில்ல முச்சு சப்தம் கேட்டது. திரும்பி பார்த்தா அந்த பொண்ணு இவன் கிட்ட வந்தாள். எப்ப இங்க வந்தாளேன இவனுக்கு தெரியலை. காற்று போல் நகர்ந்திருந்தாள். அவள் மூச்சு சப்தம் பெரிதாய் ஆகி கொண்டு இருந்தது.

"எனக்கு இந்த மாதிரி படம்னா கொஞ்சம் பயங்க. அதான் இங்க வந்திட்டேன். தியேட்டரிலியே நீங்க கொஞ்சம் பாக்க டீசெண்டா இருந்திங்க. அதான் இங்க வந்திட்டேன்." - அந்த பெண்

"என்னங்க நீங்க கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் இப்படி பக்கதில வந்து உட்காந்திட்டிங்க"-சண்முகம்

"ஏன் இப்படி எரிஞ்சு விழறிங்க. கொஞ்சம் துணைக்குதான் பக்கதில இருங்களேன்.நான் என்ன கடிச்சா திங்க போறேன். பயமா இருக்கவும் வந்தேன். உங்களுக்கும் ஒரு கம்பெனியா நினைச்சுங்களேன்"- அந்த பெண். குனிந்து அவன் கழுத்தருகில் கிட்ட வந்து காதுக்குள் பேசினாள்.

அவளிடம் ஒரு அதித வசீகரம் இருந்தது போல சண்முகத்திற்கு தோன்றியது.மறுக்க முடியவில்லை. வாசனை அவன் நாசியோடு மூளைக்குள் பரவியது. பெண் வாசனையே அலாதிதான் என நினைத்துக் கொண்டான்.

"சரிங்க" -சண்முகம். சொல்லி விட்டு படத்தில் லயித்து போனான்.

சற்று நேரம் போனது. ஏதோ ஒரு காட்சிக்கு பயப்படுவது போல் அவள் அவன் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்

"இந்த படத்தில வரதெல்லாம் நெஜமாங்க. இப்படில்லாமா இருப்பாங்க. வெள்ளைகாரன் கற்பனை தனிதான் போங்க"-அவள். ஒரு மாதிரியான இளஞ்சூடு கலந்த மூச்சோடு அவள் குரல் அவனை தொட்டது.

"இல்லாமலாங்க எடுப்பாங்க. நிஜந்தாங்க. எனக்கு நல்லா தெரியும். நம்ம ஊர்ல வேற பெயர்ல இருக்கும் "- சண்முகம்.

"இல்லிங்க. பேய் பிசாசெல்லாம் கூட நம்பிடலாம். இந்த மாதிரி குப்பையை நம்ப முடியாது.
நம்மூரு சினிமால இதெல்லாம் இல்லவே இல்ல பாருங்க. இந்த மாதிரி எதுவும் நடந்திருந்தா நம்ம ஊரிலேயும்தான் படமா வந்திருக்கும். இத பாக்கறத்துக்கு அப்படியே வெளியே போகலாம். விடியற வரைக்கும் நான் கம்பெனியா இருக்கேன். என்ன சொல்றீங்க?"- அவள்.

சண்முகத்தை எதோ ஓன்று மறுத்து பேசவே விடவேயில்லை. இந்தப் படம் வேறு அவனுக்கு பார்த்து முடிக்க வேண்டும். இவனை ஒத்த பசங்கள் எல்லாம் பார்த்து விட்டார்கள். இவன் மட்டுமே மீதி. ஆனாலும் அவளின் கவர்ச்சியால் யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டான்

சண்முகமும் அவளும் ஆட்டோ பிடித்து அடுத்த சில நேரத்தில் அவளுடைய வீட்டிற்கு வந்தனர். ஆட்டோவில் அவள் இவன் மடியில் உட்காராத குறையாய் ஒட்டிக் கொண்டாள்.அவனுக்கு ஆசை அதிகமானது. அவள் அழகாய் சிரித்து வந்தாள். ஊரின் ஒதுக்கு புறமாய் அந்த வீடு இருந்தது. பக்கதில் வீடே இல்லை. எப்படி இந்த காலத்தில் இப்படி ஒரு வீடு என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டுக்குள் வந்ததும் குடிக்க எதுவும் வேண்டுமாவென அவள் கேட்டாள். சண்முகத்திற்கு அது வரை அடக்கி வைத்திருந்த ஆசையை அதற்கு மேல் நிறுத்த முடியாமல் அவளை இழுத்து அணைத்து கழுத்தில் கடித்தான். தாகம் தீர சற்று நேரமானது.அவள் துடித்து அவன் கையில் அடங்கினாள்.

அடுத்த ஷோ போய் திரும்ப போய் பாதியில் விட்டு வந்த இன்டர்வியு வித் வேம்பயர் பார்த்து முடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். அம்மா அப்பாவிடம் பேசும் போது வேம்பயருக்கு தமிழில் என்ன என்று கேட்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். யாரும் கேட்டால் சொல்ல முடியாமல் இருப்பது சங்கடமாக இருந்தது. எல்லோரும் வேறு இவனை போன்றவர்களை வெள்ளைக்காரன் கற்பனை என சொல்வது வேறு அவனுக்கு பிடிக்கவில்லை.

Tuesday, September 19, 2006

இரண்டிலோன்றின் பெயர் போதை

சோகத்திலும் சந்தோஷத்திலும்
அவற்றின் அவசியமிருக்கும்
சுயம் மறந்த
பிரபஞ்ச தேடல்
இரண்டிலும் நிரம்பியிருக்கும்

காணாமல் இருந்தால்
மனம் ஏங்கும்
பிடி நழுவும்
தேடல் வரும்
தரிசனம் கிடைக்கையில்
இரண்டிலும் வார்த்தையில்
அடங்கா நெகிழ்ச்சி வரும்
சுவைத்தபின் கை நடுங்கும்
மனம் பதறும்
உடல் உதறும்
இரண்டிலுமே இறுதிதேவை
சுவர்க்கமே

காசிருப்பின் தனிச்சேவையுண்டு
செய்முறை புத்தகம்
சிலவும் உண்டு
மூலபொருள் கையில் கிடைக்க
இடைமனிதன் இரண்டிலுமுண்டு

மொத்தமாய் போகும் போது
கூட இருப்பின வலியில்லை
அளவோடு இருக்கும் வரை
யாருக்கும் சிரமமில்லை
அவனவன் அனுபவம்
அவனவனுக்கு
ஏன் செய்கிறாய்
எனக் கேட்டால்
மூட்டை நிரம்பும்
விளக்கம் முதுகிலுண்டு
இரண்டிலோன்றின் பெயர்
போதை

Monday, September 18, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை vol 2

vol 1இங்கு

அந்த நேரத்தில் அவனை பார்த்த சொப்ன ப்ரியாவுக்கு இது ஏன் இங்கு இருக்கிறதென்ற மனநிலை இருந்தது. சண்முகத்திற்கு படைவீடு அம்மனிடம் சொப்னாவை காட்டு என்று புலம்பி வேண்டிக் கொண்டது நடந்து விட்டதால் ஆடு வெட்டி பொங்கல் வைத்து தான் சாப்பிடுவதாய் முடிவு செய்தான்.

சண்முகம் இது போல் பல வேண்டுதல்கள் வைத்துள்ளான். எல்லாவற்றையும் நிறைவேற்றினால் ஆடு இனமே உலகில் அழிந்து விடும் அபாயமும் உண்டு. அம்மன் அது தெரியாமல் பாவம்.

"ஹாய் "- சண்முகம். அசடு எல்லாப்புறமும் சுடராய் அவன் முகத்தில் இருந்ததது. அவன் கண்ணாடியில் இந்த மாதிரி முகம் பார்த்தால் ரொமான்டிக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வான்.

"ஹாய்"-சொப்னபிரியா. எரிச்சல் குத்துவிளக்கு போல் முகத்தில் துலங்கியது. உடம்பின் மேலே எதுவும் பூச்சி உட்கார்ந்தால் அதை விரட்டும் போது இப்படிதான் அவள் முகமிருக்கும்.

சண்முகத்துக்கு குத்துவிளக்கு வெளிச்சமெல்லாம் பத்தாது. அவனுக்கு ஹோலாஜனாக இருந்தாலே ஒரு மாதிரி மங்கலாக புரிந்து கொள்வான். அவனுக்கு அவள் திரும்ப பேசியதே பத்து நாள் புரோக்ராம் பூச்சியை(bug) ஒரு நிமிடத்தில் தீர்த்த சந்தோஷம் கொடுத்தது.

"தூக்கம் வரலிங்களா?"-சண்முகம்

"இல்லிங்களே. கொஞ்சமா சாப்பிட்டது சேரலை. அசிடிட்டி ஆயிடுச்சு. அதான் சீரியல். நீங்க என்ன இப்படி?"-சொப்னாபிரியா

சண்முகத்தால் சினிமேக்ஸ் குடும்ப படத்தை பற்றி சொல்ல முடியாமல் நாக்கு தட்டியது. கொஞ்சமாய் முழித்து அப்புறமாய் வீட்டிலிருந்த காதலுக்கு மரியாதை டிவிடியை சொல்லாம் என முடிவு செய்தான்

"பழைய தமிழ் படமொன்னு இருக்குது. வேட்டரையனோடது. இளையராஜா மியுசிக். பாட்டை மட்டும ஒட்டி பாக்கலாமுனு வந்தேன்"-சண்முகம்

அப்படியா என அவள் கேட்க இளையராஜாவின் இசை பற்றி இவனுக்கு தெரிந்த எல்லாவற்றையும் அள்ளி இரைத்தான். அவளும் ஆர்வம் காட்ட பேச்சு வளர்ந்தது. விஜய் சாலினியை சின்சியராய் லப் செய்து பாட இரண்டு பேரும் உருகி உருகி கேட்டார்கள். பேச்சு அப்படியே அஜித் சாலினியில் ஆரம்பித்து சூர்யா ஜோதிகா காதல் வரை வந்ததது. குமுதம் ,விகடன், தமிழ் சினிமா டாட் காம் படிப்பதால் குறைவற்ற அறிவு இவனுக்கு இருந்தது. அவளும் மற தமிழச்சியாய் சினிமாவை பிரித்து மேய்ந்தாள்.

ஒத்த அலை வரிசை கண்டு இவனுக்கு மகிழ்ச்சியாயிற்று. மேய்ச்சல் முடிகையில் விடிந்து விட்டது. இந்த மாச கோட்டா இரண்டாயிரம் டாலர் கரைக்க வேட்டரையன் எழுந்து விடிகாலை நான்கு மணிக்கு தொலை பேசி தேடிய போது இவர்கள் தமிழ் சினியமுதம் பருகி கலைந்திருந்தார்கள்.

வேட்டரையன் விழிப்பால் இவர்கள் தூங்கப் போனார்கள். அவள் ஹஸ்கி வாய்சில் குட்நைட் சொல்ல இவனுக்கு நிலவில் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல் நடந்து போய் படுக்கையில் படுத்த போது எதேதோ எண்ணங்கள் வந்து பாட்டு ஹம்மிங்காய் உடன் நின்றது.

மறுநாள் எட்டு மணிக்கு எழுந்த போது சொப்ன பிரியாவின் அறை வாசலில் காப்பி சண்முகத்தோடு காத்துக் கொண்டிருந்தது. மடி கணிணியோடு அலையும் மென்பொருளாளன் போல் காலையில் அவள் குளிக்க செல்லும் முன் அயர்ன் ஸ்டேண்டோடு அவள் பின்னே அலைந்து அவள் துணியை பிடுங்கி அவள் வேண்டாம் வேண்டாமென சொல்லியும் தேய்த்து கொடுத்தான்.

யுனிவர்சல் ஸ்டுடியோவில் பகலெலாம் கழிந்தது. அவளுக்கும் இவனுக்கும் நான்கு முதல் ஐந்து இன்ச் இடைவெளியியே இருக்க படாது பாடு பட்டான். இவள் இல்லாமல் நானில்லை என பாட்டு ஹம்மிங் செய்ய அவள் திரும்பி சிரித்தாள். இவனுடைய மொத்த நாளும் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டது. உலகத்தின் ஆடுகளில் மிச்சமிருக்கும் இன்னோன்றும் படை வீடு அம்மனுக்கு நேர்ந்து விடப் பட்டது

அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் வேட்டரையன் தொலை பேசியோடு பெங்களுர் இருக்கும் திசை நோக்கி பிரார்த்திக்க செல்ல இவனும் இவளும் தனியே விடப்பட்டார்கள்.

நேற்றைக்கு சினிமா மேயப்பட்டதால் இன்று பாலகுமாரனும், சுஜாதாவும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆங்காங்கே ஊறுகாய் போல் பாக்கெட் சைஸ் நாவல் எழுதிய எழுத்தாளர்களும். அசதியாய் இருந்ததால் கொஞ்ச நேரத்தில் சொப்னப்பிரியா தூங்கி விட பேகன் மயிலுக்கு போர்வை போர்த்தியது போல் அவளுக்கு கம்போர்ட்டர் போர்த்தி விட்டு தூங்க போனான்.

போன இடத்தில் பெங்களுர் கிளியிடம் பேசி முடித்து விட்டு மாடு மெல்வது போல் பேசியதை மென்று கொண்டு வேட்டரையன் இருந்தான்.

"என்னடா பேசி தள்ளிட்டியா?"- சண்முகம்

"மச்சி சொன்னாலாம் புரியாது. வந்தாதான்டா தெரியும் இந்த சீக்கு. "-வேட்டரையன்

"எனக்கும் புரிய ஆரம்பிச்சி இருக்குடா. சொப்னாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. செம்புல பெயல் நீர் போல எங்கள் நெஞ்சமும் கலக்க ஆரம்பிச்சு இருக்குனு நினைக்கிறேன்"- சண்முகம்

"அப்படி போடு. அதான் காலைல இருந்து அதிதி உபச்சாரமா? சொப்னா ரொம்ப நல்ல பொண்ணுடா. பிரிலியண்ட். எல்லா சப்ஜக்ட்டும் தெரியும். இந்த வயசிலியே சைட் இன்சார்ஜ் அவ. எவ்வளவு கஷ்ட படுற குடும்பம் தெரியுமா அவளுது. செருப்பு தைச்சிதான் அவங்கப்பா பொண்ணை படிக்க வைச்சாரு. இவ வேலைக்கு போய்தான் குடும்பத்தை தூக்கி நிறுத்தினா" - வேட்டரையன்

அத்தோடு சண்முகம் பேச்சை நிறுத்தி தூங்க போய்விட்டான். காலையில் வேட்டரையனும், கம்போர்ட்டர் கொடுக்கப்பட்ட மயிலும் எழுந்து குளித்து முழுகி டிஸ்ணி லேண்ட் கிளம்பிய போது பேகனான சண்முகம் படுக்கையை விட்டு எழவில்லை. கேட்டால் தலைவலி பிளப்பதாய் சொல்லி விட்டான். அதற்கப்புறம் இரவு அவள் ஊருக்கு கிளம்பும் போது அலுவலக வேலையென கிளம்பி போய் இன்டர்நெட்டில் வழக்கம் போல் தமிழ் மேட்ரிமோனியலில் முழுகி விட்டான். அதுதான் அவனுக்கு வசதியாய் இருந்தது.

(முற்றும்)

Sunday, September 17, 2006

வளர்க நாங்கள்

அவர் சொன்னது
சொந்தமாய் சிந்தி
சுயபுத்தியுடன் இரு
அடிமையாகாதே
அடிமையாக்காதே என்று
அடிமையானோம்
அவர் பேச்சுக்கு

அவர் சிந்தனையை
வெறும் பேச்சாய்
திரித்ததில் இருந்து
கருத்து நிலையில்
கனலாய் இல்லாமல்
வெற்று உணர்ச்சிகளில்
வேக ஆரம்பித்தோம்

அவர் விட்ட இடத்தின்
கோடுகளை பற்றி
தொங்கி கொண்டு
அடுத்த இரண்டடிக்கு
துப்பில்லாமல் நாங்கள்

மினுமினுக்கும் வெள்ளைவேட்டி
வானுயர அட்டை பலகையோடு
கவைக்குதவா பேச்சு எடுத்து
கஞ்சிக்கு காய்ந்தவனிடம்
பேசுகையில் இடையிடையே
எடுத்துவிட அவரையும்
எடுத்து வைத்தோம்
எங்கள் சிலரின்
சட்டைப்பையில் மேற்கோளாய்

ஆராயும் அறிவின்
முதல் நிலையாய்
சிலை வைத்தோம்
பக்தி கொண்டோம்
பரவசமானோம் துதிப்பாடும்
கோஷங்கள் எழுப்பினோம்
இதை எவனும்
ஏனேன்று கேள்வி
கேட்டால் கல்லாலும்
சொல்லாலும் அடித்தோம்
கேள்வி கேட்டால்
வளர்ந்திடுமா பகுத்தறிவு
அவர் ஆவி இறங்கி
சன்னதம் சொல்லவும்
மொட்டைகள் அடிப்பதுமே பாக்கி

அப்பனும் அம்மையும்
ஆக்கிய பெயரழைத்தலில்
கிழிந்திடும் சுயமரியாதை
இது எங்கள் கண்டுபிடிப்பு
ஆகவே கொடுத்தோம்
அவருக்குமொரு பட்டப்பெயர்

மற்றபடி எப்போதும போல
வாழ்க பகுத்தறிவு
வளர்க நாங்கள்