Sunday, September 17, 2006

வளர்க நாங்கள்

அவர் சொன்னது
சொந்தமாய் சிந்தி
சுயபுத்தியுடன் இரு
அடிமையாகாதே
அடிமையாக்காதே என்று
அடிமையானோம்
அவர் பேச்சுக்கு

அவர் சிந்தனையை
வெறும் பேச்சாய்
திரித்ததில் இருந்து
கருத்து நிலையில்
கனலாய் இல்லாமல்
வெற்று உணர்ச்சிகளில்
வேக ஆரம்பித்தோம்

அவர் விட்ட இடத்தின்
கோடுகளை பற்றி
தொங்கி கொண்டு
அடுத்த இரண்டடிக்கு
துப்பில்லாமல் நாங்கள்

மினுமினுக்கும் வெள்ளைவேட்டி
வானுயர அட்டை பலகையோடு
கவைக்குதவா பேச்சு எடுத்து
கஞ்சிக்கு காய்ந்தவனிடம்
பேசுகையில் இடையிடையே
எடுத்துவிட அவரையும்
எடுத்து வைத்தோம்
எங்கள் சிலரின்
சட்டைப்பையில் மேற்கோளாய்

ஆராயும் அறிவின்
முதல் நிலையாய்
சிலை வைத்தோம்
பக்தி கொண்டோம்
பரவசமானோம் துதிப்பாடும்
கோஷங்கள் எழுப்பினோம்
இதை எவனும்
ஏனேன்று கேள்வி
கேட்டால் கல்லாலும்
சொல்லாலும் அடித்தோம்
கேள்வி கேட்டால்
வளர்ந்திடுமா பகுத்தறிவு
அவர் ஆவி இறங்கி
சன்னதம் சொல்லவும்
மொட்டைகள் அடிப்பதுமே பாக்கி

அப்பனும் அம்மையும்
ஆக்கிய பெயரழைத்தலில்
கிழிந்திடும் சுயமரியாதை
இது எங்கள் கண்டுபிடிப்பு
ஆகவே கொடுத்தோம்
அவருக்குமொரு பட்டப்பெயர்

மற்றபடி எப்போதும போல
வாழ்க பகுத்தறிவு
வளர்க நாங்கள்

No comments: