Saturday, September 30, 2006

ஆசை

விடுதலை கடவுள் பக்தன். வீரனை கும்பிடாமல் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டான். அவனது அப்பா தமிழக அரசியலில் ரொம்ப ஈடுபாடுள்ளவர். அவனது சேரியில் கழகங்களின் கொடி என்றைக்கு ஏறினாலும் அவர்தான் முன்னே நிற்பார். சொந்த காசை செலவு செய்து கட்சி வேலைக்கு காய்ந்ததால், இன்றைக்கு அடுத்த வேளை உலை வைக்க கட்சி ஆபிஸ் வாசலில்தான் நிற்க வேண்டிய வாழ்க்கை.

விடுதலைக்கு அப்பாவை ஒரு பிழைக்க தெரியாத மனிதராய்தான் தெரியும். இன்னமும் மேடைப் பேச்சு, கைத்தட்டலுக்கான ஏங்கல், கட்சி பெருந்தலைகள் வருகையில் கார் கதவை பிடித்து அவர்களது முதுகு தட்டலுக்கு காத்திருப்பு என இவர் இன்னமும் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமலே இருக்கிறார் என வருத்தம் உண்டு.

அவன் இருபதொன்றாம் நூற்றாண்டின் ஒரே நிதர்சனமாய் கண்டது பணத்தை மட்டுந்தான். அவனை பொருத்தவரை அது மட்டுமே ஒருவனது தலை எழுத்தை திருப்பி போடும் ஆற்றலுடையதாய் இருந்தது. அதில் மட்டுமே யாரும் தீட்டு பார்ப்பதில்லை,சேரியிலும், அக்ரகாரத்திலும், ஆண்டைகளின் வீட்டிலும் ஒரே மதிப்பு உள்ளது என்பது அவனது கணிப்பு. இன்றைக்கு சாதி பார்த்து வீட்டு திண்ணையில் மழைக்கு ஒதுங்க விட மறுப்போறும், காசு வரும் போது முகம் முழுதும் சிரிப்பை கொண்டு வந்து கூழை கும்பிடு போட மறப்பதில்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அது ஒரு தேர்தல் நேரம். விடுதலையின் அப்பா ஏறாத மேடை இல்லை. பேசாத பேச்சு இல்லை. குடும்பத்திற்கும் நல்ல வருமானம். விடுதலை அவன் தந்தையுடன் எல்லா இடத்திற்கும் போவான். அதிகம் அவர் குடிக்காமல் பார்த்துக் கொள்வது அவன் வேலை.

உள்ளூர் புளியமரத்தடி கூட்டம் பரபரப்பாய் போய்க் கொண்டிருந்தது. தலைவர் வழக்கம் போல் நான்கு மணி நேரம் தாமதமாய் பத்து அம்பாசிடர் கார்களில் ரத கஜ துரகபதாதிகள் சகிதமாய் வருவதால் அது வரை விடுதலையின் அப்பா வாய் வலிக்க பேசிக் கொண்டிருந்தார். எதிர்கட்சிகாரர்களின் குடும்பம் அவர் வாயில் அவலாய் மெல்லப் பட்டுக் கொண்டிருந்தது. போகும் போது அவர் சாராயமும் கொஞ்சம் போட்டு விட்டுதான் போனார். வர வர ரொம்ப நேரம் அவரால் நிற்க முடிவதில்லை. மூட்டு வலி அதிகமாய் இருந்தது. மருத்துவர் பரிசோதித்து விட்டு வாய்க்கு வராத வியாதியை சொல்லி இவர்கள் ஆண்டு வருமானத்தை ஒரு மாத மாத்திரையாய் சொல்லி விட்டார். இவர்கள் மாத்திரையெல்லாம் வாங்கவில்லை,மூட்டு வலி மறக்க சாராயம் ஒன்றே அவருக்கு மருந்தாய் இருந்தது.

அந்த கூட்டத்தில் வைத்தீஸ்வரனையும் பார்த்தான். வைத்தீஸ்வரன் தேசிய கட்சியை சேர்ந்தவர். பணம் அதிகம் புரளும் கட்சி அது. ஆனால் அவர் என்ன அணியிலிருக்கிறார் என விடுதலைக்கு நியாபகம் இல்லை. அணியை பொறுத்து பண புழக்கம் ஏற்ற இறக்கமாயிருக்கும். சமீப காலமாய் விடுதலையின் தந்தையின் கட்சியோடு கூட்டணி வைக்க முயற்சியில் இருக்கிறார்.

"விடுதலை எப்படியிருக்க? அப்பாவுக்கு மூட்டு வலிலாம் எப்படி இருக்கு? "-வைத்தீஸ்வரன்

"என்னத்த சொல்ல சார்? இதெல்லாம் காசுள்ளவனுக்கு வந்திருக்கனும். எங்க குடும்பத்துக்கு வந்திடுச்சு. இந்த எலக்சன் வந்ததுல கொஞ்சம் இசியா இருக்கு, அப்பாவுக்கு வருமானம் அதிகமாயிருக்கு. எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்களேன். உங்களுக்குதான் ரயில்வே காண்ட்ராக்ட்ர்ஸ் எல்லாம் பழக்கமாச்சே. நானும் பார்மாலிட்டிஸ் எல்லாம் உங்களுக்கு செஞ்சிடறேன்"-விடுதலை

"ஆமாண்டா.வேலைக்கு மட்டும் என் தயவு வேணும். கட்சி மட்டும் அங்கேயா? உங்கப்பாவை எங்க பக்கம் கொண்டு வா. இல்லாட்டி உங்க சேரில இருந்து ஒரு நூறு ஆளை கூட்டி வந்து நீ எங்க கட்சிக்கு வந்திடு. நானும் சேரில ஒரு கொடியை எங்க தலைவரை வைச்சி ஏத்திடறேன். அப்புறம் உன் வேலைக்கும் ஏற்பாடு பண்ணிடறேன். பார்மாலிட்டிஸ்ல கொஞ்சம் தள்ளுபடி வேற தர்ரேன். நீதான் முடிவு பண்ணனும்"- வைத்தீஸ்வரன்

"சார் எங்க சேரி ஆளுங்களை ஒரு காலத்தில உங்க தெருவுக்கே விட மாட்டிங்க. இன்னைக்கு நூறு ஆளுங்களோட வா அழைப்பு கொடுக்கறிங்க. சனநாயகத்தோட ஒரே நல்லது இதான். ஆளா கண்ணுக்கு தெரியலேனாலும் ஒட்டாவாச்சும் உங்கள் கண்ணுக்கு படுவோம். அப்பாட்ட சொல்லி பாக்கறேன் சார். உடம்பு நல்லா இருந்த வரைக்கும் இது மாதிரியெல்லாம் சொன்னா குதிப்பாரு. இப்போதான் சுத்தமா எதுவும் முடியலியே. சொல்லி பாக்கறேன். எனக்காக சரினு சொல்லுவாருனு நினைக்கிறேன்"-விடுதலை

"நல்லா உரைக்கிற மாதிரி அவர் கிட்ட சொல்லு. நீங்களாம் சுத்த பத்தமா இருந்தா நாங்க ஏண்டா சேர்த்துக்காம இருக்கப் போறோம். சாக்கடையும் சகதியுமால இருக்கிங்க? "- வைத்தீஸ்வரன்

"எங்களுக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா சார்? சுதந்திரம் ஆகி ஐம்பது வருஷத்தில தெக்கால போற சாக்கடை வடக்காலையும் நகர்ந்திருக்கு அவ்வளவுதான். மத்தபடி ஒன்னும் கிடையாது. கவர்மெண்ட்லாம் உங்களுக்குதான் சார். எங்களுக்கு நாங்கதான். கவர்மென்ட் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதோட சாறு எல்லாம் மேல உள்ளவங்க எடுத்திக்கிட்டு எங்களுக்கு சக்கைதான் வருது. ஆனா இப்ப விவரம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கு, ரிஷர்வேஸன்ல படிச்சிட்டு டவுனுக்கு கொஞ்ச குடும்பம் பிழைப்பு தேடி போய் இப்போ கொஞ்சம் தலை எடுத்திருக்காங்க. இத பத்தி பேசி என்னா சார் ஆக போகுது. வேலையை மறந்திடாதிங்க"-விடுதலை

"சரி சரி நான் போய் உங்க கட்சி தலைவரை பாத்திட்டு வர்ரேன். நீ நாளை மறுநாள் கட்சி ஆபிஸூக்கு வா"-வைத்தீஸ்வரன்

அவர் போவதை பார்த்துக் கொண்டே இருந்தான்.மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சாக்கடை சகதி இல்லையென்றால் இவர் சேரிக்கு வந்து வீட்டில் விருந்தா சாப்பிட போகிறார், வேறு ஏதாவது காரணம் சொல்லுவார் என்று நினைத்துக் கொண்டான். காரியம் ஆக வேண்டுமானால் இதை எல்லாம் பார்த்தால் ஆகாது. அப்பா கட்சி மாவட்ட செயலாளரை நான்கு வருடமாய் வேலைக்கு கேட்டு அரித்ததில், அவர் அவருக்கு வேண்டப்பட்ட பெண் வீட்டில் இவனுக்கு ட்ரைவராக வேலை வாங்கி தந்ததுதான் மிச்சம். சம்பளமும்,பேட்டாவும் வயிறுக்கு பத்தவில்லை. வேறு வேலை தேடிக் கொண்டுள்ளான்

விடுதலையின் அப்பா இன்னமும் பிரச்சார பீரங்கியா முழங்கி கொண்டிருந்தார். இவனுக்கு அவரை பார்த்து சலிப்பாக இருந்தது. வெறும் அலங்காரமான பேச்சு, கூட்டத்திற்கு நல்ல தீனியாய் இருந்தது. புளிய மரத்தடி பெட்டிக் கடைக்கு வந்தான்.

அப்பாவின் கட்சி வட்ட செயலாளர் ஈஸ்வரபக்தன் பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாய் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். ஈஸ்வரபக்தன் என்ற பெயரையும் நியுமராலஜி பார்த்து மாற்றாமல் உள்ளார்.
ஆனால் யாரும் கேட்டால் அம்மா, அப்பா வைத்த பெயர் அதனால் மாற்றவில்லை என்று கூறிவிடுவார். ஆனால் ஊரில் வேறு யாராவது அம்மா, அப்பா தங்கள் குழந்தைக்கு ஆண்டவன் பெயர் வைத்தால் அதை மாற்ற சொல்லி மறக்காமல் அறிவுரை சொல்லுவார்.

"வணக்கம் சார்"- விடுதலை

"என்னடா. என்ன வேணும். அப்பா பேசறதை பார்த்து கத்துக்கோ. நீயும் நாளைக்கு கட்சி பேச்சாளராய் ஆகிடலாம். நம்ப இன பெருமையை பேச நிறைய ஆள் வேணும்டா"- ஈஸ்வரபக்தன்

"கட்சியெல்லாம் வேண்டாம் சார். வெளில தான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். "-விடுதலை

"என்னடா இப்படி பேசற. என்ன வேலை உனக்கு வெளில கிடைக்கும். வேலையாம் வேலை. நீ ஒரு வேளை சோறு சாப்பிடறேனா அது கட்சி போடற சோறுடா. நம்ப இனம் போடற சோறு. அதோட கனலாய் நீ வரனும். தீயா பேச கற்றுக் கொள்ளனும். அப்பாவை பாருடா. அது சரி வைத்தி கிட்ட என்ன பேசிகிட்டு இருந்த? "-ஈஸ்வர பக்தன்

அவரிடம் எதிர்த்து பேச அவனுக்கு பயமாய் இருந்தது. மீட்டிங் முடிஞ்சதும் அவரிடந்தான் காசு வாங்க வேண்டும்.

"சும்மாதான் சார். அப்பாவோட மூட்டு வலி பற்றி விசாரிச்சார். அவ்வளவுதான்"-விடுதலை

"பாத்துடா. அவன் கிட்டே எல்லாம் பேசாதே. இன்றைக்கு நம்ப இனம் சாதி சாதியா பிரிஞ்சி இருக்குனா அதுக்கு அவன்தாண்டா காரணம். கவனமா இருக்கனும் சரியா?"- ஈஸ்வரபக்தன்

விடுதலைக்கு பல சிந்தனைகள் ஒடின.சாதியை அவன் கொண்டு வந்தா என்ன, எவன் கொண்டு வந்தா என்ன இவரும்தானே அதை வச்சி பொழைப்பு நடத்திகிட்டு இருக்காரு. இவர் வீட்ல பொண்ணு கேட்டா சேரி ஆள் கழூத்தைதானே வெட்டுவாரு. பொண்ணை கூட விடலாம், ஊர் தேர் வடம் கூட சேரி ஆள் தொட முடியாது. சேரி பொணத்துக்கு கூட தனி காடுதான். இந்த இனப்பேச்செல்லாம் வாய் பந்தல்தான். ஆனா பந்தல் போடறதில்ல இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. இவர் வைத்தீஸ்வரனுக்கு மண்டகபடி போட்டே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கார். இவரும்,வைத்தீஸ்வரனும் ஆடும் கூத்து ஒன்றுதான்,வேறு வேறு முகமூடி போட்டுகிட்டு பிழைப்பு போகிறது.

"ஐயா சொன்னா சரிதான்"- விடுதலை. ஒரு வரியில் முடித்துக் கொண்டான்.

மெல்ல கடையை தாண்டி முட்டு சந்துக்குள் வந்தான். தூரத்தில் அப்பாவின் பேச்சும் கேட்டது. அது பழசாக,அழுக்காக இருந்தது. இவர்கள் வீட்டின் நிலையையும், சேரியின் நிலையையும் நினைத்தான். அதுவும் பழசாக, அழுக்காகதான் இருந்தது. இவனுக்கு வேலைக்கு போயே தீர வேண்டுமென்ற ஆசை இன்னும் அதிகமானது.வீரனிடம் வேண்டிக் கொண்டான் .

Wednesday, September 27, 2006

மரபெனும் பார்த்தீனியம்

இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை

ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்


குரங்கை போல கேள்விகள்
தொங்க தடியாலும் தட்டினார்கள்
எல்லாம் ஒடுங்கி போக
பழக்கி கொண்டோம் எங்களை
அப்போதே
ஏதேனும் கேட்டிருக்கலாம்
எழுந்து நின்றிருக்கலாம்
களை அகற்றியிருக்கலாம்
எனக்கென்ன என
இருந்து விட்டோம்

கண்ணுக்கு தெரிந்தே
பார்த்தீனியம் படர்ந்தது
எங்கள் இருப்புக்குள்
அதற்கு
மரபெனும் பெயரும் வந்தது
பெயர் வந்த பின்
யாரேனும் வெட்டப் போனால்
தோட்டத்தை கெடுக்காதேவென
பசுமை புரட்சி பேசுகிறார்கள்

பசுமைக்கென்ன கேடு
இந்த பார்த்தீனியம் பிடுங்கி
கொஞ்சம் வேப்பமரம் வைத்தால்
வெட்டவா சொல்ல போகிறோம்

Tuesday, September 26, 2006

குறை

மருந்து வாடையடிக்கும் நீரருந்தி
ஏதேதோ வியாதி வாங்கி
என் வீட்டு பிள்ளைகள்
தனக்கும் சாக்கடைக்கும்
பிரிவினை பேசாமல் எங்கள் தெரு
வேலை செய்ய ஆசையுண்டு
களத்து வேலையோ கட்டட வேலையோ
கூலி கிடைத்தால் வயிறு நிறையும்

விளங்கினப் பயல்கள் ரண்டு பேர்
பஞ்சம் தீர்ப்பதாய் வந்தார்கள்
ஒருவன்
பாரம்பரிய பூமியிது
நாமெல்லாம் சகோதரர்கள்
வந்தே மாதரம் சொல்லு
வண்ண வண்ண மிட்டாயுண்டு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்
மற்றொருவன்
கசங்காத வேட்டி சட்டையோடு
ஏழைப் பங்காளன் தானேன சொல்லி
மொழி பேசி இனம் பேசி
திரைப்படங்கள் சில அலசி
சாக்கடையோடு தெரு முடியுமிடத்தில்
கட்சிக் கொடியேற்றி
வாழ்கவென வாழ்கவென கூவு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்

எங்களுக்கு மயிர் சிலிர்க்காதது
மட்டுந்தான் இவன்களுக்கு
குறையாய் தெரிகிறதாக்கும்

Sunday, September 24, 2006

அவன் அவள் அவன்

நிகழ்காலம்
------------
காரை நிறுத்தி விட்டு கடலை பார்க்க வந்தேன். ஆக்ரோஷமாய் சீறும் அலைகளும் கடலும், வானின் முழு நிலவும் மலையின் மேலிருந்து ்பார்க்க எதையோ என்னிடம் சொல்ல வருவது போலிருந்தது. இன்றைய நாளின் அலைகள் மனதை கரையாக்கி கடலை போல் மோத ஆரம்பித்தன.

காரை விட்டி இறங்கும் முன் அவள் விம்மி விம்மி அழுதாள். அழுகையை அடக்க முயன்று இயலாமல் போக அழுகை இன்னும் அதிகமாய் வெடித்தது. அழுகையில் சிதறலில் கோபம் முளைத்து அதன் விளைவாய் அவள் கையிலிருந்த செல் போன் உடைந்து போனது. ஆங்கிலத்தில் நான்கெழுத்து கெட்ட வாரத்தையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அவனை திட்டுவதாக நினைத்து என்னை பார்த்து கத்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அசதியும், சலிப்பும் போட்டி போட்டு உணர்வுகளை ஆக்கிரமிக்க ஷட் தி .... அப் என்று சொல்லலாமா என்று நினைத்தேன், பரிதாபம் அதை தடுத்தது.

இந்த வாரத்தின் முதல் நாள் புராஜக்ட் லைவ் போனது.மண்டை காயும் வேலை. அறுபது மணி நேரத்தில் சில மணி நேர கோழி தூக்கம் போட்டு மானிட்டரை முறைத்துக் கொண்டு அலுவலகத்தின் செயற்கை வெளிச்சத்தில் இருந்தது சிந்திக்கவே இயலாத அளவுக்கு சோர்வை கொடுத்திருந்தது. நல்ல ஒய்வு தேவை. காலை ஆறு மணிக்கு எழுந்தேன். காரை எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து மான்ட்ரே வரை செல்லும் சாலை ஒன்றில்(route 1) பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். தனியே கார் பயணம் செய்வது மனதை இளைப்பாற்றும். காருக்குள் நாம், இசை, காரை கவ்வி கூட வரும் சாலை, அழகழகான மலையின் மேல் வளைவுகள், சாலை ஒட்டும் கடல். ரம்யமாய் இருக்கும். இரவு வரை சென்று விட்டு எங்கு நிற்க தோன்றுகிறதோ அங்கு ஒரு அறை எடுத்து ஒய்வெடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். நிலவோளியில் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் பசிபிக் கடல் மின்னும்.

காலை காபி சாப்பிட சாண்டா பார்பராவில் நிறுத்திய போது இவளை பார்த்தேன். நீண்ட நாள் முன் தோழி. அப்புறம் தொடர்பு நின்று போனது. எனக்கு அவளை பற்றி அதிகம் தெரியாத நிலையில் பிடித்து போனதென்ற ஒற்றை எண்ணத்தை வைத்து அவளிடம் என் எண்ணங்களை கொட்டியது என் தவறுதான். இது வேண்டாம் எனக்கு விரும்பமில்லை என சில வரிகளில் அவள் முடித்திருக்கலாம். வார்த்தைகள் நிறைய சொன்னாள். ஒவ்வொன்றும் என்னை சுட்டது. அவளிடம் நான் பார்க்காத இன்னோரு பக்கத்தை பார்க்க நேர்ந்தது. மிக அதிர்ந்து போயிருந்தேன். என்னிடம் யாரும் அப்படி பேசியதில்லை. ஓரே அலுவலகத்தில் இருப்பதால் அவளை பார்க்காமல் தவிர்க்கவும் இயலவில்லை. ஆனால் சிறிது சிறிதாய் மனதை பழக்கிக் கொண்டேன். அதற்கப்புறம் இந்த காதல் கத்திரிக்காய் சமாச்சாரமெல்லாம் எடுத்து புழக்கடையில் எறிந்து விட்டு வேலையை மட்டும் காதலிக்க ஆரம்பித்தேன். அது சுலபமாய் உதவியது.

பார்த்தால் விசாரிப்பு அவ்வளவே உறவாய் இருந்தது. இன்று பார்த்ததும் சிரித்தேன். வழக்கமான கேள்விகளை பறிமாற்றிக் கொண்டோம். அவள் மிக களைப்பாக இருந்தாள். கேட்டதற்கு லாஸ்ஏஞ்சலிஸில் இருந்து இரவு உணவு முடித்ததும் காரை எடுத்து 90 மைல் தாண்டி சாண்டா பார்பரா வந்து அவன் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு அவன் அப்பார்ட்மெண்டை பார்த்துக் கொண்டே இருந்தாளாம்.

தூக்கமில்லாமல் அப்படி இருந்தது வயது அதிகம் ஆன தோற்றத்தை அவளுக்கு கொடுத்திருந்தது. ஆத்மாவை வேலை சுத்தமாக உறிஞ்சி எடுத்து விட்டிருந்ததால், அவள் கதை கேட்க அதிக விருப்பமில்லாத நேரத்தில் அவள் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு கண் கலங்கலாம் என்ற இடம் வந்தது. காலையை அனுபவித்து உணவருந்த கடைக்கு வரும் யாருக்கும் எங்கள் உரையாடலை பார்த்தால் அனுபவம் பாழாகும். எனவே என் பிரயாணத்தில் அவளையும் கூட்டிக் கொண்டேன்.

அவள் கதை கேட்க ஆரம்பித்த முதல் இரண்டு மணி நேரம் அவளிடமிருந்த வருத்த உணர்வே எனக்கும் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் அவளோடு சேர்ந்து அவனை கோபப்பட்டேன். அதற்கப்புறம் இரண்டு மணி நேரமாகி விட்டது. இப்போது சலிப்புதான் இருந்தது. புலம்பி புலம்பி மன அழுத்தம் அதிகமாக்கி அதை எனக்கும் கொடுத்து விட்டாள். காலையில் காபி சாப்பிடுவதை விட்டிருந்தால் இவளை பார்க்க நேர்ந்திருக்காது. காபி சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது, இன்றைக்கு கேட்டால் மனதுக்கும் நல்லது. தேய்ந்து போன நாளும் பொழுதும் கட்டிய தளைகளை முடிச்சவிழ்த்து, மூச்சு விடும் நிம்மதி தேடி வருகையில் புதிய முடிச்சுகள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டப்பட்டு கிடப்பதே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

நிகழ்காலத்திலிருந்து 5 வருடங்களுக்கு முன்பு
--------------------------------------
பொறியியல் கல்லுரி படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவை டெல்லராகவும், இன்லேன்ட் லெட்டரை வித்ட்ராவல் ஸ்லிப்பாகவும் பயனபடுத்தும் முதிர்ச்சியே மனதிலிருந்தது. விடுதியின் வாயிலாக வாழ்க்கையின் வேறு திசைகளையும் அறிமுக படுத்தி கொண்டிருந்தது. அது மூன்றாம் வருடத்திற்கும், நான்காம் வருடத்திற்கும் இடைப்பட்ட காலம். கல்லுரி இருக்கும் ஊரில் புரோஜக்ட் ஒன்று கிடைக்க அதை உடனே தொடங்க வேண்டி விடுதியில் விடுமுறைக்கு தங்கியிருந்தோம்.

அவளை அப்போதுதான் பழக்கமானது. எனக்கு ஒரு வருடம் சீனியர். கல்லுரி அருகில் வீடு. பேராசிரியர்களுக்கு விருப்பமானவள், கல்லுரி மேடைகளில், குழுக்களில் நிகழ்ச்சிகளை நடத்துபவள். ஆளுமை திறன் அதிகம். அவள்தான் காம்பஸ் இன்டர்வியு பார்த்துக் கொண்டாள். நான் அவளுக்கு வாரிசாக பதவியேற்பு செய்தததால் அவளிடம் உள்ள அறிவை நாற்றாக பறித்து செய்து என்னிடம் நட்டுக் கொண்டிருந்தாள். இந்த விவசாய வேலைக்காக அடிக்கடி பார்த்துக் கொள்கையில் வேறு சில இடங்களில் வேறு சில விஷயங்களையும் விதைத்துக் கொண்டோம்.

இருவருமே சற்று ஆல்பா சுபாவம். அதனால் முதலில் இருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. வேலைக்காரணமாக இடமாற்றம் அவளுக்கு கட்டாயமானது. புறாக் காலில் தூது விடுவது பற்றி இருவரும் பேசி உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தொலைபேசி உதவியது. அடிக்கடி இன்டஸ்ட்ரியல் ட்ரிப் போகவும் அப்பாவுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் அதிகம் ஆனது.

அன்பாய் இருந்தாள். ஆசையாய் நேசித்தேன். வாழ்த்து அட்டை வார்த்தைகள் கூட இருவருக்கும் கலை அனுபவமாய் இருந்தது. பௌதிக விதிகள் மனதுக்கு இல்லை என்று நினைத்து சிரித்துக் கொள்ள முடிந்தது. மேல் நோக்கி மனம் செல்கையில் கீழ் நோக்கி எதுவும் இழுக்கவில்லை.யார் காதல் என்று சொன்னாலும், பேசினாலும், பாடினாலும் எங்களை போல் இவர்களால் நேசித்திருக்க முடியாது என்று உறுதியாக நம்ப முடிந்தது. அந்த நேரங்களில் அவளை விட பெரிதாய் எதும் இருக்கவில்லை. அவள் சுவாசக்காற்று படும் இடத்தில் இருக்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க சித்தமாய் இருந்தேன்.

கல்லூரி முடிந்ததும் மேல் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன்.மேற்கு கடற்கரை வாழ்க்கை. காதல் சங்கிலி அழகாய் மனிதர்களை கட்டி போடுகிறது.

நிகழ்காலத்தின் முதல்நாள்
----------------------
இரண்டு வாரமாய் இரவு நேரங்களில் பயமாய் உள்ளது. கதவை அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது. அவன் மீண்டும் என்னை தேடி வருவான் என நம்பிக்கை இல்லை. ஆனால் என் கதவுகள் அவன் விரலுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன. தொலைபேசியையும் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறேன். ஏதேனும் எடுக்க மறந்த அழைப்பில் அவன் இருந்திருப்பானோ என எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறை அவன் எண்ணை தொலைபேசியில் அடிக்கின்றேன், அதற்கு மேல் ஏதோ ஒன்று உட்கார்ந்து கொண்டு வேண்டாம் அழைக்காதே என்கிறது. ஒரு முறை என்னை பார்த்தால் அவன் மாறலாம். அதற்காக எப்போதும் அவனுக்கு பிடித்த உடையையே அணிந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது. கண்மனி எனும் அவன் குரலை சேமித்து வைத்திருக்கிறேன். அது கரையக் கூடாதென அதை இறுக்க பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனை அணைப்புகள், முத்தங்கள், பாவனையில்லாத பரஸ்பர அன்பு கனிவாய் இந்த வீட்டில் நிகழ்ந்ததே. அந்த நிகழ்வுகள் என்னை சுற்றி அமர்ந்து என் தனிமையை கேள்வி கேட்கின்றன. தன் குடும்பம் முக்கியம், நான் புரிந்துக் கொள்ள வேண்டுமென அவனால் எப்படி சொல்ல முடிந்தது? நானும் அவன் குடும்பம்தானே? ஐந்து வருடங்களில் கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்வின் போதும் அதையேதான் அவை சொல்கிறன என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

அழுகையை காணும் போது அறுவறுப்பு படும் தைரியத்தை தொலைத்து விட்டேன். வேறு எதையோ கையில் வைத்து வேடிக்கை பார்க்கையில் தைரியம் காணாமல் போயிருக்கிறது. எத்தனையோ முறை இந்த தைரியத்தை வைத்து வார்த்தையால் மற்றவரை கிழித்து போட்டிருக்கிறேன். அவர்கள் அழும் போது அது கையாலாகத தனமாகதானே தெரிந்தது. இன்று நானே அந்த இடத்திற்கு வந்து விட்டேன். ஆறுதலுக்கு யாரை கூப்பிடுவது? இவனைதான் கூப்பிட வேண்டும். இவனுக்காகதானே எல்லாவற்றையும் உதறி விட்டேன். 90 மைல் தள்ளி உட்கார்ந்து கொண்டால் நான் இல்லாமலா போய் விட்டேன். என்னை ஒருமுறை நேராக பார்த்தால் அவன் மனது மாறிவிடும்.

நிகழ்காலத்திலிருந்து இரண்டு வாரம் முன்பு
---------------------------------------
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை. பிரச்சனைகள் அதிகரிக்கையில் அவள் அரவணைப்பு பல நாள் துணையாய் இருந்திருக்கிறது. இன்று அவளே பிரச்சனையாய் தெரிகிறாள். காதலிப்பதென்பது வற்புறுத்தி திணிக்கப்பட்ட உண்ர்வாகவே இப்போதெல்லாம் இருக்கிறது. மூன்று வருடம் முன் அவள் எனக்காக வேலை மாற்றி அமெரிக்கா வந்த போது இருந்த அதிகபட்ச இதய துடிப்புகள் சுத்தமாக மறைந்து விட்டது. கொஞ்சம் சோர்வும், சோகமும்,கோபமும்,மோதல்களுமே இருக்கின்றன. கனவு வாழ்க்கை வாழ காதலித்து, இன்று காதலே ஒர் கனவாய் ஆன வாழ்க்கையாகி கொண்டிருக்கிறது.

இவளை திருமணம் செய்து கொள்ள கேட்டதிலிருந்து அப்பா, அம்மா பேச மறுப்பதே வலி அதிகம் கொடுத்தது. அவளுடன் பழக ஆரம்பிக்கையில் ரொம்ப யோசிக்கவில்லை. வயசைதான் குறை சொல்ல முடியும். ஈசல் விளக்கை பார்த்தது போல் இருக்க வேண்டியதை காந்தங்களின் ஈர்ப்பாய் நினைத்திருந்தேன். அம்மா பூச்சி மருந்து குடித்தால் இதயம் நின்று விடுவது போல் இருக்கும் என்று ஆராயும் நிலையில் அப்போது இல்லை. வெறும் அட்டை கத்தி யுத்தம்தான் பெற்றோருடன் இருக்குமென்று நினைத்தது, இன்று உறவுகளை கிழித்து போடும் கொலைவாள் யுத்தத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.

வளர்க்கும் போது அம்மா, அப்பா எதிர்பார்ப்பையும் கூட வளர்த்து கொள்கிறார்கள். அவர்கள் நிழலில் இருக்கையில் வளர்ப்பு எந்த திசை நோக்கி போக வேண்டுமென வலிக்காமல் வெட்டி விடுகிறார்கள், அவர்கள் நிழல் தாண்டி பயணிக்கும் நேரம் வளரும் திசை அவர்கள் எதிர்பார்ப்பை மீறி செல்கிறது. அதை அவர்கள் விரும்புவதில்லை.அவர்கள் அழுகையை தாங்கும் சக்தி இல்லாமல் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

அவளால் அவள் வீட்டை எனக்காக எப்படி இவ்வளவு சுலபமாக உதற முடிந்தது. வளர்த்தவர்கள் மீது பாசம் இவ்வளவுதானா? இத்தனை வருடம் காத்த பெற்றோரை எனக்காக விட்டு விட்டவளுக்கு ஐந்து வருடமே பழகிய என்னை விட்டு விட வலிக்கவா போகிறது? இந்த திருமணம் நடந்தால் என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியுமென தெரியவில்லை. இன்று அவளுடன் பேச வேண்டும். அந்த சாண்டா பார்பரா வேலையை ஒத்துக் கொண்டு இடம் மாறிட வேண்டும். இந்த ஊர் வேண்டாம். எனக்கும் இவளுக்கும் உள்ள இந்த உறவிலிருந்தத விடுவித்து கொள்ள வேண்டும். அப்பா அம்மாவை குற்ற உணர்வில்லாமல் பார்க்கும் மனநிலைக்கு திரும்ப செல்ல வேண்டும். ஆண்டவா எனக்கு அவளிடம் மனம் விட்டு பேசும் வலிமையை கொடு.

நிகழ்காலம்
---------------
அவன் காரை சாலை ஒரம் நிறுத்தி விட்டு கடலின் அலைகளை பார்த்து நின்று கொண்டான்.நான் காரில் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.இவனை காபி ஷாப்பில் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. பழகிய முகம் ஒன்று சிரிக்கையில் ஒவென்று அழ தோன்றியது. இவனை காகிதம் போல் கிழித்து எறிந்த நாட்கள் அப்போது நியாபகம் வரவில்லை.

இன்றைக்கு இவன் ஆறுதலாய் பேசினான். நான்தான் கொஞ்சம் அதிகம் பேசி விட்டேன்.
களைப்பின் உச்சத்தில்தான் இந்த பயணத்துக்கு இவன் வந்தான். ஒய்வுக்கு வந்தவனை கல்லுடன் கடலில் தள்ளியது போல் ஆக்கி விட்டேன். இவனுக்கும் இளைப்பாறுதல் அவசியம். இன்று நாள் முடிந்தால் என்ன? இன்னமும் நிலவும், கடலும் இருக்கிறதே. திரும்பி போக இன்னும் 300 மைல் தொலைவும் உண்டு. ஒரு பேச்சு துணையாய் ஆவது அவனுக்கு இருக்க முயற்சிக்க வேண்டும்.

யாரிடமாவது கொட்டி விட வேண்டுமென இரண்டு வாரமாய் தேக்கி வைத்த அனைத்தையும் இன்று பேசிவிட்டேன். சிநேகமாய் பார்க்க, பேச ஆளில்லாமல் தவித்த தவிப்பு கொடுமையாக இருந்தது. கண்ணாடியை பார்த்துக் கூட பேசிக் கொள்ள முடியவில்லை.

இவன் காட்டிய கடல் நன்றாய் இருக்கிறது. நிலவொளியில் கரிய நிற அலைகள் பாறைகளில் வலுவாய் மோதிக் கொண்டே இருக்கின்றன. குளிர் காற்று உடலெங்கும் நடுங்க வைக்கிறது. வீட்டிலிருக்கும் போது இருந்த மயான அமைதி இங்கு இல்லை. இவனது அருகாமையின் அமைதி ஒய்வை தருகிறது. வார்த்தைகள் தீர்ந்து போய் பேசாமலிருத்தலும் மனதுக்கு கொஞ்சம் பிடிமானமாக இருக்கிறது.மலை விளிம்பின் தலை சுற்றல் சுகமாய் இருந்தது.

என் சுயத்தை அவனிடம் இழந்து என்ன தேடினேன். நான் நானாக இருக்குமிடம் எனக்கு முக்கியமென்பதை மறந்து போனேன். தன் ஆழங்களை மறந்து விட்டு கரிய அலையாய் கரையோடு கட்டப்பட்டு பாறையை விடாமல் மோதி எதையோ தேடுதல் விட்டு, ஆழ்கடலாய் என் சூட்சுமங்களோடு காத்திருப்பேன், எவனாவது என்னை தேடி அது வரை வந்தால் பார்க்கலாம்.

Saturday, September 23, 2006

வாத்துக்காரன் கதை

நாங்கள் கூட்டாய் வாழ்ந்தோம்
வாத்தொன்று மைதாஸை
போல் எங்களிடமும் இருந்தது
ஓற்றை ஓற்றையாய்
தங்க முட்டை
நிதமும் உண்டு
தீனியும் நிறைய
செலவும் ஆனது

எவன் தீனி கொடுப்பது
எவனுக்கு தங்க முட்டையென
சச்சரவும் வந்தது
வாத்தின் இருப்பை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
வாத்தின் தீனியை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
முட்டையை மட்டும்
எவனும் நிராகரிக்கவில்லை
அது மட்டும்
அடிப்படை உரிமையாம்

வாத்தென்னெவோ எதையும்
கவனிக்காமல் முட்டை கொடுத்தது
தீனிக்கேற்றது போல் சிறிதும்
பெரிதுமாய் முட்டை தினமுண்டு

அறிவு தனக்கு அதிகம்
வளர்ந்தாய் அதிகம்
சொல்லிக் கொண்டிருந்தவன்
அறுத்து விட முடிவெடுத்தான்
மொத்தமாய் எடுத்து
ஒற்றை நாளில் பங்கு
பிரிக்க ஏற்பாடும் செய்கிறான்

மைதாஸூக்கு பெயர் பேராசைக்காரன்
இவனுக்கு பெயர் அறிவுசீவியாம்

// வளர்ந்து வரும் தாய்பூமியை தொடர்ந்து குறை கூறி, இதன் குறைகளை நிறைகளாக்க மாற்ற என்ன செய்ய வேண்டுமென எண்ணாமல், நாட்டை உடைக்க சொல்லி பேசி அறிவுஜீவியாக மாற நினைபோரை நினைத்து எழுதியது//

Friday, September 22, 2006

காலூன்ற இடம்

காலூன்றும் முன்
காலூன்ற இடமே
அவசியமாய் இருந்தது
கண்ணுக்கு தெரியாமல்
கைகள் நீட்டப்பட்டன
காலூன்றும் வரைக்கும்

முகமில்லா உதவிகளின்
மூலம் அறிய
நேரம் இல்லை
ஏனேன்றால் நான்
பார்க்க முடிந்தது
என்னை மட்டுந்தான்
காலூன்றல் என்
உயிர் தவிப்பு

உதவும் கைகள்
வலதாகவும் இடதாகவும்
என் வசதிக்கேற்ப
நகர்ந்திருக்காலாம் என்ற
கோபம் கொட்டினேன்
நின்ற பின்னால்

குறை கேட்டு
அடுத்தென்ன
செய்ய பதில்
கேள்வி கேட்க
முகம் சுழித்தேன் நான்
இது எனக்கு
உடன்பாடு இல்லை
எனக்கென்ன அதை
தேட தலையெழுத்தா?

இன்னும் சிலர்
கீழ் இருந்து
கால் ஊன்ற
கை கேட்க
அருகில் நின்றவன்
கையோடு முதுகையும்
தராத போது
நான் மட்டும் கையை
எப்படி தர முடியும்?
எனக்கு எப்போதும்
நியாயம் முக்கியம்
நியாயத்தை நான்
நிர்ணயிக்கும் போது

---------------------------------------------------
அரசின் பல சலுகைகளை அனுபவித்து அதன் அருமையான
கல்வி முறையில் பயன்பெற்று மெத்தப்படித்து
மேல் வரும் போது இந்த நாடென்ன செய்தது எனக்கு என்று கேட்போரை
காணும் நேரம் தோன்றியது இது.

Thursday, September 21, 2006

வழி

அழகாய் அடுக்கி வைத்த
வார்த்தைகளில் கோலமிட்டு
நிஜங்களை நிராகரிக்கும்
மாயவித்தை முன்னகர்த்தி
ஏறி மிதிக்கப்பட்டாலும்
வாங்கி வந்த
வரமென பார்த்து
சுயம் மறக்கும்
போதாத வாழ்க்கைதான்
வாழ்வின் தேடலென
கொடுக்கும் எதுவும்
தேவையில்லை இங்கு
ஒற்றை வார்த்தையில்
உலகலசும் தத்துவமுண்டு
வலியாய் வர்ணணையற்று
தனித்து இருக்கும்
ஏன் என்ற நெம்புகோல்
கொண்டு சுயம்
புரட்ட வழியுண்டு

சினிமா பார்க்க போனவன்

சண்முகத்துக்கு பேய்கள்னா பயம். ராத்திரி தனியா இருந்தா பேன் இல்லாம, லைட் இல்லாம தூங்கமாட்டான். இன்னைய தேதிக்கு அவனுக்கு தெரிஞ்சு அவன் பேயை நேரா பார்த்தது இல்லை. சண்முகத்தோட அப்பா, அம்மால்லாம் தலைகீழாய் நின்று எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்கள். ஆனாலும் அவனுக்கு அந்த பயம் போகவில்லை. இரண்டு தாயத்து மட்டும் அவங்களுக்கு தெரிஞ்ச சாமிக்கிட்ட வேண்டி கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் சண்முகத்து அப்பாவை போலந்தில வேலைக்கு கூப்பிட்டார்கள். அவனுக்கு இந்தியாவிட்டு வெளிநாடு போக இஷ்டமே இல்லை. அவங்க அம்மா,அப்பாட்ட பிடிவாதமா தான் தனியா இருந்து பார்த்துக் கொள்வேன் என சொல்லி விட்டான். சரி வேற வழி இல்லை என்று அவர்களும் போலந்துக்கு பறந்து விட்டார்கள். இவன் தனியாளாய் உள்ளுரில் இருந்தான்

ஒரு நாள் போரடிக்குதேனு சாயந்தரமா சினிமாவுக்கு கிளம்பினான். இவனுக்கு பிடிச்ச ஒரு படமும் ஒரு தியேட்டர்ல ஒடிக்கிட்டு இருந்தது.சரினு அதுக்கு போனான். தியேட்டர்ல கூட்டம் அதிகம் இல்லை. டாம் குருஸ்க்கே இந்த கதியானு இவனுக்கு இருந்தது

மொத்தம் ஐஞ்சு ஆளுங்க தியேட்டர்ல. ஓரே ஓரு பொண்ணும் இருந்தது. அந்த பொண்ணு வெள்ளை கலர் ட்ரஸ் போட்டிருந்தது. முழி எல்லாம் பெரிசா வேற இருந்தது. தனியா பொண்ணிருக்கவும் இவன் பயந்துகிட்டு இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்துகிட்டான். படம் படு திரிலிங்கா ஆரம்பிச்சுது. ரத்தமும் சப்தமுமா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு அவனுக்கு பக்கதில்ல முச்சு சப்தம் கேட்டது. திரும்பி பார்த்தா அந்த பொண்ணு இவன் கிட்ட வந்தாள். எப்ப இங்க வந்தாளேன இவனுக்கு தெரியலை. காற்று போல் நகர்ந்திருந்தாள். அவள் மூச்சு சப்தம் பெரிதாய் ஆகி கொண்டு இருந்தது.

"எனக்கு இந்த மாதிரி படம்னா கொஞ்சம் பயங்க. அதான் இங்க வந்திட்டேன். தியேட்டரிலியே நீங்க கொஞ்சம் பாக்க டீசெண்டா இருந்திங்க. அதான் இங்க வந்திட்டேன்." - அந்த பெண்

"என்னங்க நீங்க கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் இப்படி பக்கதில வந்து உட்காந்திட்டிங்க"-சண்முகம்

"ஏன் இப்படி எரிஞ்சு விழறிங்க. கொஞ்சம் துணைக்குதான் பக்கதில இருங்களேன்.நான் என்ன கடிச்சா திங்க போறேன். பயமா இருக்கவும் வந்தேன். உங்களுக்கும் ஒரு கம்பெனியா நினைச்சுங்களேன்"- அந்த பெண். குனிந்து அவன் கழுத்தருகில் கிட்ட வந்து காதுக்குள் பேசினாள்.

அவளிடம் ஒரு அதித வசீகரம் இருந்தது போல சண்முகத்திற்கு தோன்றியது.மறுக்க முடியவில்லை. வாசனை அவன் நாசியோடு மூளைக்குள் பரவியது. பெண் வாசனையே அலாதிதான் என நினைத்துக் கொண்டான்.

"சரிங்க" -சண்முகம். சொல்லி விட்டு படத்தில் லயித்து போனான்.

சற்று நேரம் போனது. ஏதோ ஒரு காட்சிக்கு பயப்படுவது போல் அவள் அவன் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்

"இந்த படத்தில வரதெல்லாம் நெஜமாங்க. இப்படில்லாமா இருப்பாங்க. வெள்ளைகாரன் கற்பனை தனிதான் போங்க"-அவள். ஒரு மாதிரியான இளஞ்சூடு கலந்த மூச்சோடு அவள் குரல் அவனை தொட்டது.

"இல்லாமலாங்க எடுப்பாங்க. நிஜந்தாங்க. எனக்கு நல்லா தெரியும். நம்ம ஊர்ல வேற பெயர்ல இருக்கும் "- சண்முகம்.

"இல்லிங்க. பேய் பிசாசெல்லாம் கூட நம்பிடலாம். இந்த மாதிரி குப்பையை நம்ப முடியாது.
நம்மூரு சினிமால இதெல்லாம் இல்லவே இல்ல பாருங்க. இந்த மாதிரி எதுவும் நடந்திருந்தா நம்ம ஊரிலேயும்தான் படமா வந்திருக்கும். இத பாக்கறத்துக்கு அப்படியே வெளியே போகலாம். விடியற வரைக்கும் நான் கம்பெனியா இருக்கேன். என்ன சொல்றீங்க?"- அவள்.

சண்முகத்தை எதோ ஓன்று மறுத்து பேசவே விடவேயில்லை. இந்தப் படம் வேறு அவனுக்கு பார்த்து முடிக்க வேண்டும். இவனை ஒத்த பசங்கள் எல்லாம் பார்த்து விட்டார்கள். இவன் மட்டுமே மீதி. ஆனாலும் அவளின் கவர்ச்சியால் யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டான்

சண்முகமும் அவளும் ஆட்டோ பிடித்து அடுத்த சில நேரத்தில் அவளுடைய வீட்டிற்கு வந்தனர். ஆட்டோவில் அவள் இவன் மடியில் உட்காராத குறையாய் ஒட்டிக் கொண்டாள்.அவனுக்கு ஆசை அதிகமானது. அவள் அழகாய் சிரித்து வந்தாள். ஊரின் ஒதுக்கு புறமாய் அந்த வீடு இருந்தது. பக்கதில் வீடே இல்லை. எப்படி இந்த காலத்தில் இப்படி ஒரு வீடு என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டுக்குள் வந்ததும் குடிக்க எதுவும் வேண்டுமாவென அவள் கேட்டாள். சண்முகத்திற்கு அது வரை அடக்கி வைத்திருந்த ஆசையை அதற்கு மேல் நிறுத்த முடியாமல் அவளை இழுத்து அணைத்து கழுத்தில் கடித்தான். தாகம் தீர சற்று நேரமானது.அவள் துடித்து அவன் கையில் அடங்கினாள்.

அடுத்த ஷோ போய் திரும்ப போய் பாதியில் விட்டு வந்த இன்டர்வியு வித் வேம்பயர் பார்த்து முடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். அம்மா அப்பாவிடம் பேசும் போது வேம்பயருக்கு தமிழில் என்ன என்று கேட்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். யாரும் கேட்டால் சொல்ல முடியாமல் இருப்பது சங்கடமாக இருந்தது. எல்லோரும் வேறு இவனை போன்றவர்களை வெள்ளைக்காரன் கற்பனை என சொல்வது வேறு அவனுக்கு பிடிக்கவில்லை.

Tuesday, September 19, 2006

இரண்டிலோன்றின் பெயர் போதை

சோகத்திலும் சந்தோஷத்திலும்
அவற்றின் அவசியமிருக்கும்
சுயம் மறந்த
பிரபஞ்ச தேடல்
இரண்டிலும் நிரம்பியிருக்கும்

காணாமல் இருந்தால்
மனம் ஏங்கும்
பிடி நழுவும்
தேடல் வரும்
தரிசனம் கிடைக்கையில்
இரண்டிலும் வார்த்தையில்
அடங்கா நெகிழ்ச்சி வரும்
சுவைத்தபின் கை நடுங்கும்
மனம் பதறும்
உடல் உதறும்
இரண்டிலுமே இறுதிதேவை
சுவர்க்கமே

காசிருப்பின் தனிச்சேவையுண்டு
செய்முறை புத்தகம்
சிலவும் உண்டு
மூலபொருள் கையில் கிடைக்க
இடைமனிதன் இரண்டிலுமுண்டு

மொத்தமாய் போகும் போது
கூட இருப்பின வலியில்லை
அளவோடு இருக்கும் வரை
யாருக்கும் சிரமமில்லை
அவனவன் அனுபவம்
அவனவனுக்கு
ஏன் செய்கிறாய்
எனக் கேட்டால்
மூட்டை நிரம்பும்
விளக்கம் முதுகிலுண்டு
இரண்டிலோன்றின் பெயர்
போதை

Monday, September 18, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை vol 2

vol 1இங்கு

அந்த நேரத்தில் அவனை பார்த்த சொப்ன ப்ரியாவுக்கு இது ஏன் இங்கு இருக்கிறதென்ற மனநிலை இருந்தது. சண்முகத்திற்கு படைவீடு அம்மனிடம் சொப்னாவை காட்டு என்று புலம்பி வேண்டிக் கொண்டது நடந்து விட்டதால் ஆடு வெட்டி பொங்கல் வைத்து தான் சாப்பிடுவதாய் முடிவு செய்தான்.

சண்முகம் இது போல் பல வேண்டுதல்கள் வைத்துள்ளான். எல்லாவற்றையும் நிறைவேற்றினால் ஆடு இனமே உலகில் அழிந்து விடும் அபாயமும் உண்டு. அம்மன் அது தெரியாமல் பாவம்.

"ஹாய் "- சண்முகம். அசடு எல்லாப்புறமும் சுடராய் அவன் முகத்தில் இருந்ததது. அவன் கண்ணாடியில் இந்த மாதிரி முகம் பார்த்தால் ரொமான்டிக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வான்.

"ஹாய்"-சொப்னபிரியா. எரிச்சல் குத்துவிளக்கு போல் முகத்தில் துலங்கியது. உடம்பின் மேலே எதுவும் பூச்சி உட்கார்ந்தால் அதை விரட்டும் போது இப்படிதான் அவள் முகமிருக்கும்.

சண்முகத்துக்கு குத்துவிளக்கு வெளிச்சமெல்லாம் பத்தாது. அவனுக்கு ஹோலாஜனாக இருந்தாலே ஒரு மாதிரி மங்கலாக புரிந்து கொள்வான். அவனுக்கு அவள் திரும்ப பேசியதே பத்து நாள் புரோக்ராம் பூச்சியை(bug) ஒரு நிமிடத்தில் தீர்த்த சந்தோஷம் கொடுத்தது.

"தூக்கம் வரலிங்களா?"-சண்முகம்

"இல்லிங்களே. கொஞ்சமா சாப்பிட்டது சேரலை. அசிடிட்டி ஆயிடுச்சு. அதான் சீரியல். நீங்க என்ன இப்படி?"-சொப்னாபிரியா

சண்முகத்தால் சினிமேக்ஸ் குடும்ப படத்தை பற்றி சொல்ல முடியாமல் நாக்கு தட்டியது. கொஞ்சமாய் முழித்து அப்புறமாய் வீட்டிலிருந்த காதலுக்கு மரியாதை டிவிடியை சொல்லாம் என முடிவு செய்தான்

"பழைய தமிழ் படமொன்னு இருக்குது. வேட்டரையனோடது. இளையராஜா மியுசிக். பாட்டை மட்டும ஒட்டி பாக்கலாமுனு வந்தேன்"-சண்முகம்

அப்படியா என அவள் கேட்க இளையராஜாவின் இசை பற்றி இவனுக்கு தெரிந்த எல்லாவற்றையும் அள்ளி இரைத்தான். அவளும் ஆர்வம் காட்ட பேச்சு வளர்ந்தது. விஜய் சாலினியை சின்சியராய் லப் செய்து பாட இரண்டு பேரும் உருகி உருகி கேட்டார்கள். பேச்சு அப்படியே அஜித் சாலினியில் ஆரம்பித்து சூர்யா ஜோதிகா காதல் வரை வந்ததது. குமுதம் ,விகடன், தமிழ் சினிமா டாட் காம் படிப்பதால் குறைவற்ற அறிவு இவனுக்கு இருந்தது. அவளும் மற தமிழச்சியாய் சினிமாவை பிரித்து மேய்ந்தாள்.

ஒத்த அலை வரிசை கண்டு இவனுக்கு மகிழ்ச்சியாயிற்று. மேய்ச்சல் முடிகையில் விடிந்து விட்டது. இந்த மாச கோட்டா இரண்டாயிரம் டாலர் கரைக்க வேட்டரையன் எழுந்து விடிகாலை நான்கு மணிக்கு தொலை பேசி தேடிய போது இவர்கள் தமிழ் சினியமுதம் பருகி கலைந்திருந்தார்கள்.

வேட்டரையன் விழிப்பால் இவர்கள் தூங்கப் போனார்கள். அவள் ஹஸ்கி வாய்சில் குட்நைட் சொல்ல இவனுக்கு நிலவில் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல் நடந்து போய் படுக்கையில் படுத்த போது எதேதோ எண்ணங்கள் வந்து பாட்டு ஹம்மிங்காய் உடன் நின்றது.

மறுநாள் எட்டு மணிக்கு எழுந்த போது சொப்ன பிரியாவின் அறை வாசலில் காப்பி சண்முகத்தோடு காத்துக் கொண்டிருந்தது. மடி கணிணியோடு அலையும் மென்பொருளாளன் போல் காலையில் அவள் குளிக்க செல்லும் முன் அயர்ன் ஸ்டேண்டோடு அவள் பின்னே அலைந்து அவள் துணியை பிடுங்கி அவள் வேண்டாம் வேண்டாமென சொல்லியும் தேய்த்து கொடுத்தான்.

யுனிவர்சல் ஸ்டுடியோவில் பகலெலாம் கழிந்தது. அவளுக்கும் இவனுக்கும் நான்கு முதல் ஐந்து இன்ச் இடைவெளியியே இருக்க படாது பாடு பட்டான். இவள் இல்லாமல் நானில்லை என பாட்டு ஹம்மிங் செய்ய அவள் திரும்பி சிரித்தாள். இவனுடைய மொத்த நாளும் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டது. உலகத்தின் ஆடுகளில் மிச்சமிருக்கும் இன்னோன்றும் படை வீடு அம்மனுக்கு நேர்ந்து விடப் பட்டது

அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் வேட்டரையன் தொலை பேசியோடு பெங்களுர் இருக்கும் திசை நோக்கி பிரார்த்திக்க செல்ல இவனும் இவளும் தனியே விடப்பட்டார்கள்.

நேற்றைக்கு சினிமா மேயப்பட்டதால் இன்று பாலகுமாரனும், சுஜாதாவும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆங்காங்கே ஊறுகாய் போல் பாக்கெட் சைஸ் நாவல் எழுதிய எழுத்தாளர்களும். அசதியாய் இருந்ததால் கொஞ்ச நேரத்தில் சொப்னப்பிரியா தூங்கி விட பேகன் மயிலுக்கு போர்வை போர்த்தியது போல் அவளுக்கு கம்போர்ட்டர் போர்த்தி விட்டு தூங்க போனான்.

போன இடத்தில் பெங்களுர் கிளியிடம் பேசி முடித்து விட்டு மாடு மெல்வது போல் பேசியதை மென்று கொண்டு வேட்டரையன் இருந்தான்.

"என்னடா பேசி தள்ளிட்டியா?"- சண்முகம்

"மச்சி சொன்னாலாம் புரியாது. வந்தாதான்டா தெரியும் இந்த சீக்கு. "-வேட்டரையன்

"எனக்கும் புரிய ஆரம்பிச்சி இருக்குடா. சொப்னாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. செம்புல பெயல் நீர் போல எங்கள் நெஞ்சமும் கலக்க ஆரம்பிச்சு இருக்குனு நினைக்கிறேன்"- சண்முகம்

"அப்படி போடு. அதான் காலைல இருந்து அதிதி உபச்சாரமா? சொப்னா ரொம்ப நல்ல பொண்ணுடா. பிரிலியண்ட். எல்லா சப்ஜக்ட்டும் தெரியும். இந்த வயசிலியே சைட் இன்சார்ஜ் அவ. எவ்வளவு கஷ்ட படுற குடும்பம் தெரியுமா அவளுது. செருப்பு தைச்சிதான் அவங்கப்பா பொண்ணை படிக்க வைச்சாரு. இவ வேலைக்கு போய்தான் குடும்பத்தை தூக்கி நிறுத்தினா" - வேட்டரையன்

அத்தோடு சண்முகம் பேச்சை நிறுத்தி தூங்க போய்விட்டான். காலையில் வேட்டரையனும், கம்போர்ட்டர் கொடுக்கப்பட்ட மயிலும் எழுந்து குளித்து முழுகி டிஸ்ணி லேண்ட் கிளம்பிய போது பேகனான சண்முகம் படுக்கையை விட்டு எழவில்லை. கேட்டால் தலைவலி பிளப்பதாய் சொல்லி விட்டான். அதற்கப்புறம் இரவு அவள் ஊருக்கு கிளம்பும் போது அலுவலக வேலையென கிளம்பி போய் இன்டர்நெட்டில் வழக்கம் போல் தமிழ் மேட்ரிமோனியலில் முழுகி விட்டான். அதுதான் அவனுக்கு வசதியாய் இருந்தது.

(முற்றும்)

Sunday, September 17, 2006

வளர்க நாங்கள்

அவர் சொன்னது
சொந்தமாய் சிந்தி
சுயபுத்தியுடன் இரு
அடிமையாகாதே
அடிமையாக்காதே என்று
அடிமையானோம்
அவர் பேச்சுக்கு

அவர் சிந்தனையை
வெறும் பேச்சாய்
திரித்ததில் இருந்து
கருத்து நிலையில்
கனலாய் இல்லாமல்
வெற்று உணர்ச்சிகளில்
வேக ஆரம்பித்தோம்

அவர் விட்ட இடத்தின்
கோடுகளை பற்றி
தொங்கி கொண்டு
அடுத்த இரண்டடிக்கு
துப்பில்லாமல் நாங்கள்

மினுமினுக்கும் வெள்ளைவேட்டி
வானுயர அட்டை பலகையோடு
கவைக்குதவா பேச்சு எடுத்து
கஞ்சிக்கு காய்ந்தவனிடம்
பேசுகையில் இடையிடையே
எடுத்துவிட அவரையும்
எடுத்து வைத்தோம்
எங்கள் சிலரின்
சட்டைப்பையில் மேற்கோளாய்

ஆராயும் அறிவின்
முதல் நிலையாய்
சிலை வைத்தோம்
பக்தி கொண்டோம்
பரவசமானோம் துதிப்பாடும்
கோஷங்கள் எழுப்பினோம்
இதை எவனும்
ஏனேன்று கேள்வி
கேட்டால் கல்லாலும்
சொல்லாலும் அடித்தோம்
கேள்வி கேட்டால்
வளர்ந்திடுமா பகுத்தறிவு
அவர் ஆவி இறங்கி
சன்னதம் சொல்லவும்
மொட்டைகள் அடிப்பதுமே பாக்கி

அப்பனும் அம்மையும்
ஆக்கிய பெயரழைத்தலில்
கிழிந்திடும் சுயமரியாதை
இது எங்கள் கண்டுபிடிப்பு
ஆகவே கொடுத்தோம்
அவருக்குமொரு பட்டப்பெயர்

மற்றபடி எப்போதும போல
வாழ்க பகுத்தறிவு
வளர்க நாங்கள்

Thursday, September 14, 2006

எது நிஜம்

நிலத்தில் நாம்
நிற்பதால் இறக்கைகள்
கொடுத்தோம் கடவுளுக்கு
அளக்க இயலாமல்
விரிந்து கிடந்ததால்
வானத்தில் வீடு கட்டினோம்
வசதியாய் கடவுளுக்கு
அதற்கப்புறம்
அசரீரியும் கட்டளைகளும்
அங்கிருந்தே வழங்கப்படுகின்றன

பொன்னும் மணியும்
தின்னும் சோறும்
கலவியின் சுகமும்
தேடி தீர்த்தோம் நிதமும்
தேடல்கள் நமக்கானதால்
இருக்கையில் வணங்கினால்
இம்மையில் கொடுப்பவரே
கடவுளானார்

வேண்டினால்தான் கொடுப்பவனென்றால்
தேவைகளுண்டு கடவுளுக்கு
தேவைகள் தீர்ந்த
கடவுள் தேடி
இனியாவது
வேண்டுதல் கேட்டவனை
விட்டு விடுவோம்
நீண்டதொரு கற்பனையை
நிஜமாய் நினைத்தல் சாத்தியமே
அது எல்லாரிடமும்
இருக்கும் பொழுதில்

Wednesday, September 13, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை

சண்முகம் சாப்பிட்டு விட்டு மற்றும் சாப்பிடும் போது வேர்த்து விட்டு கிளையன்டுக்கு பணி புரிபவன். அவனை சில சமயம் சாப்பிடுவேர் எஞ்சினியர் என்றும் சொல்லுவார்கள். டிவியின் எல்லா புரோக்கராம்களையும் தலைகீழாக மனப்பாடம் செய்து விடிய விடிய பார்ப்பதால் புரோக்ராமர் என்ற பெயரும் உண்டு.

இந்த வேலை இப்போதெல்லாம் செய்ய அலுப்பாக உள்ளதால் அதிக நேரம் பேசும் வேலைக்கு போக ஆசைப்பட்டான். தமிழனாய் பிறந்து இதைக்கூட செய்ய ஆசைப் படவில்லையென்றால் என்ன ஆவது? அதனால் பிசினேஸ் அனாலிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

குறுக்குப்பட்டியில் அப்பா மகன் அமெரிக்காவில் அமெரிக்கனாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்க வேலையிலிருக்க இங்கே இவன் சீட்டை தேய்த்துக் கொண்டு பத்து முறை காப்பி (டீ பிடிக்காது) இடைவேளை எடுத்து வேலை அளவுக்கு குறைவாக செய்து சன் டிவீ பார்த்து தமிழ் பட டிவிடிக்காக நடையாய் நடந்து தமிழ் நண்பர்களுடன் அளஅளாவி அப்பாவுக்கு போட்டியாக கடமையாற்றிக் கொண்டிருந்தான்.

சண்முகமும், பெரு வேட்டரையனும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் செர்மன் ஒக்ஸ் என்னும் புண்ணிய பூமியில் இருந்தார்கள். வேட்டரையனுக்கு பெண் தோழி உண்டு. சண்முகத்துக்கு பெண் தோழி வேண்டுமென்ற ஆசை உண்டு. பொதுவாக வேட்டரையனின் புரோக்ரமாக இருந்தால் வெட்டி ஒட்டிக் இவன் பெயரை எழுதிக் கொள்வான். வேட்டரையனின் தோழியை எல்லாம் வெட்டி ஒட்டி இவன் பெயரை ஒட்டிக் கொள்ள முடியாதே. அந்த தோழியின் ஒன்று விட்ட சித்தி மகளின் தோழி நியுயார்க்கிலிருந்து செர்மன் ஓக்ஸ் வர ஆசைப்பட்டதால் வரும் பெண்ணுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வேலை இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது. மாதம் இரண்டாயிரம் போன் பில் கட்டி பெங்களுரிலிருக்கும் அந்த பெண்ணுக்கு பெருவேட்டரையன் கொத்தடிமையாக இருந்தான் என சண்முகம் இரக்கப்படுவான்.

சண்முகத்தின் குடும்ப பாசப்பிணைப்பு ஒரு ஐந்து ரூபாய் போன் கார்டில் ஆறுமாதம் பேசுமளவுக்கு இருக்கும். பெரும்பாலும் அவனுக்கும் ஊருக்குமிருக்கும் தகவல் தொடர்பு மணிரத்தினம் படத்தின் டயலாக் போல இருக்கும். பொண்ணு பாத்தாச்சா என்று இவன் கேட்க இல்லை என்று அவர் ஊரிலிருந்து சொல்லுவார். அடுத்த நொடி இவனோ இல்லை அவரோ போன் வைத்து விடுவார்கள். பெருவேட்டரையனுக்கு ஒரு வருடம் முன்னால் அவன் அறைத்தோழனாக வந்த நாள் முதல் இதுதான் நடந்துக் கொண்டிருந்தது.

சொப்ன பிரியா என்ற நாமம் கொண்ட அப்பெண்ணும் நியுயார்கிலிருந்து வந்து பார்க்க ஏதுவாய் இருந்தாள். அவளை பார்த்த கணத்தில் சண்முகத்திற்கு அவளை பிடித்து விட்டது. சண்முகத்திற்கு ஒரு வருடமாக எல்லாப் பெண்களையும் பார்த்தவுடன் பிடித்திருந்தது. அதற்கு முன் பெண்கள் பெயரை கேட்டாலே அவனுக்கு அந்த பெண்ணை பிடித்து விடும். இப்போதெல்லாம் மெச்சூர் ஆகி விட்டான்.

அவளை பார்த்த நிமிடம் முதல் சண்முகம் சிரித்த முகமாய் இருக்க முயல அவனுக்கு கான்ஸ்டிபேசனா என அவள் கேட்க நேர்ந்தது. அவள் கேட்ட முதல் கேள்வியே இவ்வாறிருக்க சண்முகத்து தலைக்குள் பட்டாம் பூச்சிகள் முட்டைப் போட்டது போலிருந்தது.

இரவு உணவு சாப்பிட்டு முடிக்கும் வரையில் இவனது சம்பாசணைகள் ஆமாம் , இல்லை , அது எனக்கும் பிடிக்கும் , சே சே சுத்தமாக பிடிக்காது என்ற ரீதியில் பெருவேட்டரையனுக்கும், சொப்ன பிரியாவுக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எதற்கு என்ன பதில் சொல்கிறோமென்றே அவனுக்கு புரியவில்லை. அலுவலகத்தில் நடந்த ஸ்டேடஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட மாதிரி அவனுக்கு உணர்விருந்தது. அவர்களும் இவனுடைய பதிலை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஆங்கில இசை, இலக்கியம், சினிமா பற்றி பேசியதாக வேட்டரையன் உறங்கும் நேரத்தில் கூறினான்.

இவனுக்கு தெரிந்த உலக சினிமா ஜாக்கிசான் மற்றும் ஆர்னால்ட் நடித்தாகவே இருந்தது. அவர்கள் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை. இவனுக்கு தெரிந்த ஆங்கில புத்தகங்கள் பி எல் தெரஜா மற்றும் பாலகுருசாமி எழுதியதாகவே இருந்தது. இசையில் கமல்ஹாசன் மற்றும் எஸ்.பி.பியை தெரியும். இந்த பெயர்களே அவர்கள் உரையாடலில் வரவில்லை. மனதை தேற்றி படுத்தால் சொப்னமெங்கும் சொப்ன ப்ரியாவே இருந்தாள்.

மனசு சரியில்லாமல் கொஞ்சம் இரவு நேர சினி மேக்ஸ் சானல் குடும்ப படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் வெளியே வந்தான். சொப்ன பிரியாவும் சீரியல் டப்பாவிலிருந்து சீரியலை பௌலில் கொட்டி அதை வெறும் வாயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பாவம் இலையையும் தழையையும் டயட் என்ற பெயரில் இரவு உணவுக்கு சாப்பிட்டது பத்தவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டான். சண்முகத்தை கண்டவுடன் பேந்த பேந்த முழித்தாள். கிளையன்ட் சைட்டில் க்ராஷ் ஆன புரோக்ராம் மாதிரி இமேஜ் ஆகி விட்டதே என அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

(தொடரலாம்)

Monday, September 11, 2006

தேவை

அங்கு ஒரு பிணம்
இருந்தது
நாங்களெல்லாம் கூடி
அது கொலையா
படுகொலையா
களையெடுப்பா
தற்கொலையா
யுத்ததின் எச்சங்களாவென
விவாதம் கொண்டோம்
விவாதத்துக்கு தொந்தரவாய்
கண்ணீரும் கம்பலையுமாய்
அடிவயிற்றின் எரிச்சலோடு
சப்தம் கிளப்பி சிலர்
குடும்பமாம் அழுகையாம்
வேடிக்கை மனிதர்களென
அங்கதம் பேசி
விவாதம் தொடர்கையில்
நடு நடுவில்
அங்காங்கே புதுப்பிணங்கள்
பிறந்துக் கொண்டிருந்தன
அவை புது விவாதங்களுக்கு
கொண்டு சென்றன
வர வர
பிண நாற்றத்தில்
எதை விவாதிக்கிறோமென
தெரியவில்லை
தீர்வுகளின் தேவைகள் மறந்து
போனதால்
விவாதங்களே தேவை ஆனது
அதனால்..

Sunday, September 10, 2006

கைனடிக் எனர்ஜி

வேகமும் கனமும் ஒரு திசையில் தள்ள இயங்கு ஆற்றல்(kinetic energy) உருவாகிறது. பௌதிக ரீதியாக எழுதினால் இதனை E=1/2 mv2 என சொல்ல்லாம். m கனத்தையும், v வேகத்தையும் குறிக்கும். உருவான இயங்கு ஆற்றல் எதிர் வேலையினால் (negative work) சமன் செய்யப் படுகிறது. இந்த சூத்திரம் எல்லா அறிவியல் தளத்திற்கும் அடிப்படையாகும்.

நமது மனோபாவத்திற்குமே இந்த சூத்திரம் பயன் படுத்தலாம். சோகமா, சந்தோஷமோ, வெறுப்போ, கோபமோ திசைகளாயிருக்க நிகழ்வுகளின் கனம் மற்றும், வேகத்தின் காரணமாக நம் உணர்வுகள் நகர்கின்றன. தொடர்ந்து இயங்கும் பிற நிகழ்வுகள் நமக்கு எதிர் வேலையாக செயல்பட்டு நம்முடைய உணர்வுகளை கட்டுப் படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளின் வேகத்தையும் , கனத்தையும் கணித வடிவில் ்மாற்றுவது எதிர்காலத்தில் நிகழ சாத்தியமே. மனிதன் கற்றுக் கொள்ளுதலை இந்த சூத்திரம் தற்சமயம் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் தனி மனிதன் சார்ந்து இந்த சூத்திரம் சற்று மாறுபடலாம். ஆனால் அடிப்படை மாறாது. குழந்தை பிறக்கையில் அதன் மரபணு பரிசோதிக்கப்பட்டு அதற்கான சூத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்குள் பொருத்தப்படலாம்.

இது நடக்கும் பட்சத்தில் மற்றவரது சூத்திரங்கள் திருடினால் கடவுளை தூக்கி அந்த பக்கம் உட்கார சொல்லி விட்டு குறி சொல்லி பிழைக்கலாம். வருமானம் வ்ரும். நிகழ்வுகளை அளக்க முடிவதால் அதை கட்டுப்படுத்துவதற்கான எதிர் நிகழ்வுகளை சரியாக உருவாக்க முடியும். அரசியலில் தலைவர்கள் உணர்ச்சி வசப்படும் வேளையில் தொண்டர்கள் தலைவரின் உணர்ச்சிகேற்ப துல்லியமாய் எதிர் நிகழ்வுகளை நடத்தி தலைவரை மகிழ்விக்கலாம். தீக்குளிக்க வேண்டிய இடத்தில் கிடைக்கும் கேனையர்களை குளிக்க செய்து தலைவரை மகிழ்விக்க செய்யலாம். தலைவர் பஸ் கொளுத்துவது மட்டும் போதுமென்று நினைக்கையில் வீணாய் எவனையும் கொளுத்திவிட்டு நிவாரணமாய் கட்சி நிதியை கரைக்க வேண்டாம்.

Saturday, September 9, 2006

பள்ளி

இன்று வீட்டின் அருகில் உள்ள விமானங்கள் வைத்திருக்கும் மீயுசியம் போனோம். அத்தை ஆசிரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள். அவருக்கு இது போன்ற ஒரு மீயுசியம் நம்மூரில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. அவரது மாணவர்கள் இதையெல்லாம் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்களென சொல்லிக் கொண்டே வந்தார்



எனக்கு ஸ்பைடர்மேன் படத்தில் பீட்டர் பார்க்கர் சக மாணவர்களோடு போன டூர் சம்பந்தமேயில்லாமல் நியாபகம் வந்தது. ஏதாவது ஒரு விமானம் கடித்து வைக்க எனக்கும் பறக்கும் சக்தி வந்தாலென ஒரு ஆசை வந்தது.



நான்அத்தையிருந்த பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எல்லாருக்கும் எல்லோரையும் தெரியும் சிறிய ஊர் அது. கூரையும், ஓடும் வேய்ந்த பள்ளி. மழை பெய்தால் விடுமுறை. எட்டாவது வகுப்புக்கு பெஞ்சு உண்டு. அதற்கு முந்திய வகுப்புகளுக்கு தரைதான். ஆனால் குறையாகவே எதுவும் தெரிந்ததில்லை. பேச்சு போட்டி, திருக்குறள் போட்டி, ஆண்டு
விழாவென கலகலப்பாய் இருக்கும்.


அருமையான ஆசிரியர்களால் ஆன பள்ளி அது. பிரியமான மனிதர்கள். இன்னும் நியாபகம் வைத்து விசாரிக்கிறார்கள். எங்கள் பள்ளி மாணவர் ஒருவரை சான்ரமோனில் சந்தித்த போது அவரும் இதையே கூறினார். அவர் எனக்கு சீனியர். இந்த பள்ளிக்கூடம் வரும் முன் வேறு ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த பள்ளிக்கூடம் பெரிய அளவிலான ஒரு ஒட்டு வீட்டிலிருந்தது. திண்ணையில் முதலிரண்டு வகுப்புகள். கீழ் திண்ணையில் முதல் வகுப்பு. மேல் திண்ணையில் இரண்டாம் வகுப்பு. மூன்றாவதுக்கு மேல் வீட்டின் உள்ளே செல்லலாம். வீட்டின் பின்புறம் விளையாட்டு மைதானம். வீட்டின் நடுவே பெரிய முற்றம். முற்றத்தை சுற்றி வகுப்புகள் நடக்குமென நியாபகம்.


அங்கு படிக்கையில் வித்தியாசமான ஆசிரியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சினிமா ரசிகர் அவர். அவ்வப்போது பள்ளியின் பின்புறமுள்ள மரத்தடிக்கு கூட்டி சென்று ஏதேதோ ஆங்கில பட கதையெல்லாம் சொல்லுவார். கேட்கவே விறு விறுப்பாயிருக்கும்.

ஆண்டைக்கு சந்தேகம்

குறள் வழி சமுகம்தான்
ஆண்டைக்கு மிக விருப்பம்
ஆனாலும் ஆண்டைக்கு
எப்போதுமே ஒரு சந்தேகமுன்டு
அதனால் ஒருநாள்
புரியாத பாசையில் பூசை
கொடுப்பவரிடம் கேட்டார்
ஐயன் சாதியென்ன
உம்மதா எங்களுதானு
ஆண்டையின் சந்தேகத்தில் கூட
ஐயன் சட்டையில்லா சாதியில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
குறளுக்கும் உண்டோ தீட்டு
ஆண்டைக்குதான் எங்கேயும்
சமூகநீதி வேணுமே

Friday, September 8, 2006

பொதுவானவை

கலவியும் கடவுளும்
பொது ஆராயச்சிக்கல்ல
அளவுக்கோல்கள் வேறு
ஆர்வங்கள் வேறு
அனுபவமும் வேறு
அதற்கான பூசைகளும் வேறு
பேசி தீர்க்க ஓன்றுமில்லை
பேசாமலிருந்தால்
அவை மறைவதுமில்லை
வெளிப்படுத்தும் இடங்கள்
தெருவாய் இல்லாதவரை
பிரச்சனையுமில்லை
அடுத்தவருடையதை அலசிபோட்டால்
நம் வீட்டுகதவிடுக்கும்
கண்கள் வரும்
இரண்டிலுமே தேவை
எல்லாருக்கும் உச்சம்

தீட்டு

காறி துப்பிக் கொடுத்தாலும்
காசில் இல்லாத தீட்டு
கழுவி கொடுத்தாலும்
காபி டம்ளரில் உண்டு

Thursday, September 7, 2006

மரம்

காய்க்கும் பருவத்தில்
பூக்கள் நிறைய
கொட்டுவதால் காய்ப்பு
குறைந்த மரத்தின்
கீழே
அது அழகான காட்சியென
படமெடுக்கும் சிலரும்
கொட்டிய பூக்களை
அள்ளுவது யாரென
சிலரும்
மரத்தை எட்டி
உதைத்து நியாயம்
கேட்டு சிலரும்
கொட்டியதற்கு காரணம்
அவனென இவனும்
இவனென அவனும்
இதற்க்கு கைதட்டும்
சிலரும்
வேருக்கு உரம் தேவை
யாருக்கிங்கு அக்கறை
மரத்தை மொட்டையாக்கி
பட்டு போக செய்யாமல்
நகர மாட்டான்கள் போலிருக்கு
அடுத்து வரும்
பருவத்தில் பசிக்கையில்
தெரியும் இவன்களுக்கு

Monday, September 4, 2006

அவள்

பெங்களுரிலிருந்து திரும்பி வெளியில் பூட்டியிருந்த கதவை திறந்த கணேசனுக்கு குழப்பமாய் இருந்தது. யாரோ ஒரு பெண் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பின் பார்த்திராத ஒரு முகம். இவனை திரும்பி பார்த்து சகஜமாக சிரித்தாள்.திருப்பி சிரிக்க வேண்டியதாயிற்று.

"வாங்க மாமா நீங்க நாளைக்குதான் வருவீங்கனு சண்முகம் மாமா சொன்னாங்க. மாமா இன்னிக்கே வந்தீட்டிங்க. அவங்க டூட்டிக்காக நேத்தைக்கு தஞ்சாவூர் போயிருக்காங்க. மதியம் சாப்பாடுக்கு வந்திடுவாங்க"- அந்த பெண்

கணேசனுக்கு தலைசூடு அதிகமானது. அவனுக்கும், சண்முகத்துக்கும் வீட்டு வாடகை மற்றும் செலவு கணக்கு தவிர எந்த சொந்தமும் கிடையாது. இவளோ ஓரே வரியில் இரண்டு மாமா போடுகிறாள். பூட்டிய வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கிறாள், இவனது பொருள் எதுவும் ஹாலில் இல்லை, சண்முகத்தின் ரூம் பூட்டியிருந்தது. சண்முகம் வந்தவுடன் கேட்டுக் கொள்ளலாமென விட்டு விட்டான். அது ஒரு பெட்ரூம் வீடு. சண்முகம் வாடகை கொஞ்சம் கூட பகிர்ந்து கொண்டதால் அவனுக்கு ரூமை எடுத்துக் கொண்டான். கணேசன் ஹாலிலேயே ்வாசம்.

கணேசனுக்கு கம்பியுட்டர் சென்டரில் வாத்தியாராக வேலை. வெளியில் வேலை தேடிக் கொண்டிருந்தான். அறிவு சற்று அளவோடு சுடர் விடுவதால் வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. அதிகம் அவனும் அதற்கு அலட்டிக் கொள்வதில்லை.

"காப்பி சாப்பிடறிங்களா மாமா?"-அந்த பெண்.

"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் பாத்துக்கறேன். நான் சண்முகத்து சொந்தக்காரங்க யாரையும் பாத்தில்ல" - கணேசன்

"நானுந்தான் யாரையும் பாத்ததில்ல. நீங்க அவரு கூட இருக்கறவங்க நீங்களும் பாத்ததில்லியா?"- கொஞ்சம் ஆச்சரியமாக அந்த பெண்

கணேசனுக்கு குழப்பம் கூடி இருப்பது மட்டுமே தெளிவாய் தெரிந்தது. காதலித்து கீதலித்து எந்த எழவையாவது கூட்டி வந்து விட்டானாவென ஒரு எண்ணம் வந்தது. சண்முகம் இல்லாமல் அறிமுகமில்லாத அவளுடன் அறையிலிருப்பதும் சங்கடமாயிருந்தது. அத்தோடு உரையாடலை முடித்துக் கொண்டான். தொங்கிக் கொண்டிருந்த தூக்கத்தை கழட்டி எறிந்துவிட்டு குளித்து உடை மாற்றி வெளியே வந்தால் கையில் காபியோடு நின்றிருந்தாள்.குடித்து முடிக்கையில் மூன்று இட்லியும்,சட்னியும் கொஞ்சம் சிரிப்புமாக நின்று கொண்டிருந்தாள்.

"ரொம்ப தேங்ஸ். காபியும் இட்லியும் நல்லாயிருந்துச்சு. நான் சென்டர் வரைக்கும் போறேன். அவன் வந்தானா போன் பண்ண சொல்லுங்க"- கணேசன்

"மாமா போகையில கதவை வெளிய பூட்டிட்டு போங்க. அவங்க அப்படித்தான் இருக்கனுமினு சொன்னாங்க. மதியம் சாப்பாடுக்கு வந்தீடுங்க"- அவள்.

"கதவைலாம் பூட்டல. நீங்க இருங்க. மதியம் நான் வல்லிங்க. சென்டர்ல வேலையிருக்கு. கொஞ்சம் மறக்காம அவன் வந்தா போன் பண்ண சொன்னீங்கனா போதும்"-கணேசன்

அவள் முகம் சற்று பயந்தால் போல் ஆனது.

"நான் சொல்லறேன். கதவை பூட்டிட்டு போங்களேன். அவங்களுக்கு கோபமாயிடும்"- அவள்.

கணேசனுக்கு என்ன எதுவேன்று புரியவில்லை. வெளியே பூட்டி விட்டு சென்டருக்கு வந்து விட்டான். பூட்டிய கதவு நிறைய கேள்விகளை திறந்துவிட்டிருந்தது. தேவையில்லாத விஷயமென விட முடியவில்லை. மதியம் வரை இதே ஓட்டந்தான். மதியம் சண்முகம் ஆபிஸ் வந்தான். களைப்பாய் சந்தோஷமாயிருந்தான்.

"என்ன கணேசு எப்படி போச்சு பெங்களுர். வேலை எதுவும் தேறுமா? ஒரு வாரமா டேரா போட்டியே?"-சண்முகம்

"இந்த தடவை ஒன்னு தேறுமினு நினைக்கிறேன். அது ்யாரு வீட்ல? ஏன்ட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல"-கணேசன்

"உனக்கு புடிச்சிருக்கா? சொல்லு"- சண்முகம் சொல்லி கண்ணை சிமிட்டினான்.

"என்னடா பேசறே?"-கணேசன்.

"அது பார்ட்டி கணேசு. சேலம் போனேன்ல, போற வழியில லிப்ட் கேட்டுட்டு இருந்துச்சு, கூட்டிட்டு போய் ரெண்டு நாள் ஜாலியா இருந்தேன். கிளம்பையில சாப்பாடு மட்டும் மூனு வேளை போட்டு வைச்சிகிறியா மாமானுச்சு. பெரிய வீடு செட்டாகறத்துக்கு முன்னாடி சின்ன வீடு செட்டாகும் போலருக்கேனு நினச்சி கூட்டியாந்தாச்சி. ஆள் வேலையில கில்லாடி. ஒரு தடவ போய் பாரு தெரியும். என்னோட பார்த்திருக்கியே ஆறுமுகம், அவன் கூட ட்ரை பண்ணிட்டான். மொதல்ல மாட்டேனுதான் சொன்னா. அப்புறம் நான் வைச்சுக்க மாட்டேன்னேன் பாரு. அவ்ளோதான் அள்ளு விட்டுச்சு அவளுக்கு. மூடிக்கிட்டு சரினுட்டா. கிருஷ்ணன் இன்னைக்கு வரேன்னான். நீ வேணும்னா சொல்லு நான் அவனை நாளைக்கு வரச் சொல்லறேன்."- சண்முகம்

கணேசனுக்கு வாந்தி வருவது போல அடி வயிறை புரட்டியது. கதையில் படிக்கையில், பேசிக்கொள்கையில் வராத ஒரு அறுவெறுப்பு அங்கு நின்றது. சண்முகத்தின் மீதா, அந்த பெண்ணின் மீதாவென அவனுக்கு தெரியவில்லை.
சண்முகத்திடம் ஏதோ சொல்ல வேண்டுமென இருந்தது. வார்த்தைகள் காணாமல் போயிருந்தது. சற்று மவுனமாக இருந்தான்

"என்னடா எதுவும் நோய் இருக்குமினு ்பாக்கறியா? அதெல்லாம் இல்லை. ஆறுமுகம் டாக்டர்தானே செக்கப் பண்ணிட்டுதான் வந்தான். நல்லா இருக்காளாம்"-சண்முகம்

கணேசனுக்கு இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லையென பட்டது.

"சண்முகம் நான் வீட்டை ஒரு வாரத்தில காலிப் பண்ணிக்கிறேன். அது வரைக்கும் ்வீட்டுக்கு யாரையும் வரச் சொல்லாதே. இது உன்னோட விஷயம் ரைட்டா தப்பானு நான் சொல்ல விரும்பல. உனக்கும் நல்லது கெட்டது தெரியும். இப்ப நீ கெளம்பு"-கணேசன்.

சண்முகம் கோபமாய் முறைத்து விட்டு கிளம்பி விட்டான். அதற்கப்புறம் கணேசனுக்கு சண்முகத்தின் முகத்திலிருந்த களைப்பான சந்தோஷம், ஆறுமுகத்தின் ஆர்வம் , கிருஷ்ணனின் ஆசை போன்றவை அடிக்கடி நியாகம் வந்துக் கொண்டிருந்தது. இந்த நியாபகங்கள் அவளின் புது மனிதன் பார்த்த படபடப்பையும், அங்கீகாரம் தேடும் அவளின் குறுஞ்சிரிப்பையும் பனி போல போர்த்தியிருந்தன. இவன் வேலைத் தேடி வெளியூர் செல்வதும், அவள் வேலையை நிறுத்த ஊர் மாறியதும் முரணாய் இருந்தாலும் என்றாவது நடக்குமென்ற நம்பிக்கையே இருவருக்கும் பொதுவாயிருந்ததை நினைத்துக் கொள்வான்.

இது நடந்து மூன்று மாதம் கழித்து கணேசன் திருச்சி சென்டருக்கு வேலை மாற்றிக் கொண்டான். நகர்ந்து கொண்டே இருக்கும் ஏதோ ஒருநாளில் அவளை மீண்டும் பார்த்த போது திருச்சி ஜங்சன் பைக் ஸ்டான்ட் வெளியே நின்று கொண்டு கஸ்டமர் தேடிக் கொண்டிருந்தாள். கணேசனை பார்த்து அதே சிரிப்பு.

மூனு வேளை சாப்பாடு போட்டு வைச்சிகிறியா மாமா என்ற கேள்வியும் கேட்டாள்.

வரிகளால் மட்டும் கட்டப்படுவதில்லை

கவிதை வரிகளால்
மட்டும் கட்டப்படுவதில்லை
கடிகார முட்களால்
நேற்றைக்கும் நாளைக்கும்
நகர்த்தப்படும்
கவிதையின் பக்கங்கள்
இதமாய் இளகியதாய்
ரசிப்பதாய் ரசிக்கப்படுவதாய்
இருப்பதோடு
வலிகளாய் வருத்தங்களாய்
எதிர்பார்ப்புகளாய் ஏமாற்றங்களாய்
கோபமாய் மாற்றம்
கொள்வதும் உண்டு
பக்கங்களெங்கும் பரவும்
முற்றுப்புள்ளி இல்லாத
இந்த கவிதை அவளால்
மட்டுமே எனக்கு
சாத்தியமானது

Saturday, September 2, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு கேட்கப்படும் கேள்வி இடத்தை குறித்து பொருள் மாறும்.

நசுக்கப்பட்ட, நசுக்கப்பட்டு கொண்டிருக்கும் சக மனிதன் தோழா கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா நாங்களும் மேலே வருகிறோம் என்று கேட்கலாம். பதிலுக்கு நாலு படி மேல வந்திருக்கவுங்க, கீழே பத்து பேர் இருக்கானேனு கொஞ்சம் கையை நீட்டி இரண்டு இரண்டு பேரா தூக்கி விடலாம். நல்ல வளமுள்ள சமுதாயத்துக்கு இது உதவும்.

சவுத் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில சாப்பாடுக் கடையில போய் லிப்ட் கொஞ்சம் கிடைக்குமானு சொன்னிங்கனா என்ன லிப்ட் வேணும் கேட்டு குடிக்க கோக் ஒன்னு தருவாங்க. கோக் நிறுவனம் நாட்டுக்கு நல்லதா கெட்டதா? இல்லாட்டி கோக் குடிச்சா உடல் ்நலத்திற்கு நல்லதா கெட்டதானு விவாதம் பண்ணிக்கிட்டு லிப்டை உள்ளே விட்டுக்கலாம். நல்ல அசைவம் சாப்பிட்டு கோக்கை உள்ளுக்கு விட்டா சுகம்தானே.

ஓரு மருத்துவரிடம் போய் அம்மணி ஓன்னு ஐயா எனக்கு கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு விசாரிச்சு மேஸ்டாபெக்ஸி செஞ்சுதுனு வைங்க, அம்மணிக்கு இரசிகர் மன்றம் தமிழ் நாட்ல அதிகமாகலாம். இலக்கிய காலம் தொட்டு இன்னைய காலம் வரைக்கும் கிட்டதட்ட தமிழர்கள் ஓற்றுமையா ஓரே மாதிரி இரசிக்கிற விஷயங்கள்ல இது உண்டு. பண்ணிவங்க நடிகையா இருந்தா அரசு பதில்கள்ல அதை பத்திய விவரம் வரும்

கார்பரேட் கலாச்சாரத்தில கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு கேட்டா அதோட பொருள் வேற. சின்ன சின்ன பொறுப்புகளிலிருந்து ஜூனியர் குடும்ப உறுப்பினர்கள் மேல பெரிய பதவிக்கு வரும் போது, சீனியர்களிடம் கேட்பது வழக்கம். இது இயற்கையாக நடக்கிறதுதான். இதை நாம அம்பானி குரூப், டாடா, பல மாநிலங்களின் ஆளும் கட்சிகள், எதிர் கட்சிகள் ,கூட்டணி கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் போன்ற நிறுவனங்களில் பாக்கலாம். குடும்பத்தின் சொத்துக்களை சிதறாம பாதுகாக்க அடித்தளத்திலேருந்து வாரிசுகளை வளர்ப்பாங்க, அதனால அவங்களுக்கும் நிறுவனத்தோட கஷ்ட நஷ்டங்களும் பிரச்சனைகளோட நெளிவு சுளிவுகளும் தெரியும். எடுத்தவுடன் தலைக்கு கீரிடம் வந்தா அதை சமாளிக்க கூடிய பக்குவமிருக்காது, இந்த மாதிரியா வேர்களிலிருந்து வளர்ந்தா நிறுவனத்திற்கும் நன்று, நிறுவனத்திலிருந்து பயன் பெறுவோர்க்கும் நன்று.

விமானம் ரன்வேல கிளம்பையில லிப்ட் கொஞ்சம் கிடைக்குமானு பைலட் கோ பைலட்டுட்ட கேட்க வாய்ப்பிருக்கு. லிப்ட்தான் விமானத்தை பறக்க ்வைக்குது. விமானத்தின் எடையை சம்ப்படுத்தி விமானத்தை வானில் செலுத்த இதுவே அடிப்படை. அடுத்த ்முறை பறக்கையில் நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்குனு பாடி லிப்ட்டுக்கு நன்றி சொல்லலாம்

வெளிநாட்டு படம் பார்க்கும் நண்பர்களிடம் லிப்ட் கிடைக்குமானு கேட்டிங்கனா ஒரு டிவிடியோ, இல்லையென்றால் வீடியோ கேசட்டோ கொடுப்பாங்க. டச்சு நாட்டு திகில் படம். நடுராத்திரி போர்வையை போர்த்தி விளக்கனைத்து உன்னிப்பாக பார்த்தால் பயம் அல்லது தூக்கம் இரண்டில் ஒன்று வர வாய்ப்புண்டு.

எலிவேட்டர் நிறுவனத்திடம் சென்று கொஞ்சம் லிப்ட் கிடைக்குமாவென கேட்டால் இரவோடி இரவாக விற்பனை பிரதிநிதி அனுப்பி கொஞ்சமென்ன முழு லிப்டே தருகிறோமென சொல்வார்கள். பீகாரில் ஏழைப் பங்காளன் வீட்டில் லிப்ட் இருந்ததாம். கேட்கவே மகிழ்ச்சியாய் இருந்தது. லிப்ட் வைத்திருப்பவனே ஏழைப் பங்காளேன்றால் மாநிலம் எவ்வளவு செழிப்பாய் இருக்க வேண்டும்.

கையை காட்டி நடுராத்திரி ஓரு வயசு பொண்ணா, வயசை தாண்டின பொண்ணோ ரோட்ல லிப்ட் கிடைக்குமானு கேட்கையில அங்க சில பேருக்கு கொஞ்சம் சூடு தணிவிக்கப் படலாம் , இல்லாட்டி சில பேருக்கு வரக்கூடாத வியாதிய வர வைச்சுக்க வேண்டிய நேரமா இருக்கலாம். இது ரெண்டும் இல்லாம யாருக்கோ போக வேண்டிய இடத்துக்கு வேகமாக போக வேண்டிய அவசியமிருக்கலாம்.

கொஞ்சும் கிளி ஓன்று லிப்டுலிப் கொஞ்சம் கிடைக்குமாவென் அவசரத்திலும் மற்றும் சுற்றி சப்தமாய் இருக்கும் வேளையிலும் கேட்க யாருக்கோ அது லிப்ட் கொஞ்சம் கிடைக்குமாவென காதில் விழுந்து கேனையன் ஆகவும் வாய்ப்புண்டு.

தேன்கூட்டில் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமாவென கேட்கையில் கதைகளும், கவிதைகளும் மற்றும் கட்டுரைகளும் கிடைக்கிறது.

நிழல்

தொடர்ந்து நடந்துக்
கொண்டிருந்த
வெட்கையான விடியலுக்கும்
உறக்கத்திற்கும் நடுவே
பார்க்க நேர்ந்தது
பேசினோம் பழகினோம்
பிடித்துமிருந்தது
ஓரு புறப்படும்
தருணத்தில்
கூட வருகிறேன்
கூட்டிச் செல்வாயா
கேள்வி வந்ததது
இதுவரை நாங்களிருந்த
சிநேகத்தின் நிழலில்
அந்த தருணத்தின்
ஜனனம்
வெட்கைக்கு நிழல்
குளிர்ச்சி
புதிதாய் போகுமிடத்திற்கும்
நிழலை கூட்டிச்சென்றோம்

Friday, September 1, 2006

அழகாய்தான் இருக்கிறாள்

எரியும் கண்களோடு
தூக்கம் தவறிய
ஓரிரவில்
ரௌத்திரம் பழகிக்
கொண்டிருந்த அவளும்
மௌனமாய் ஒற்றை
தலைவலியில் நானும்
சுட சுட
பேசுகையில் அவள்
அழகாய்தான் இருக்கிறாள்
தலை முடியை மட்டும்
இன்னும் தூக்கிக்
கட்டலாம்.

இருக்கிறது

ஐந்து நொடிக்காக
ஐந்து மணி காத்திருக்கையில்
புரியாமலிருந்த உணர்வு
இன்று
ஐந்து நிமிடம்
அரை மணியாக
மாற அலுப்பாயானது
ஊடலாய் இருந்தவை
இரைச்சலாய் தோன்றியது
அன்று அசைப்போட
இரையாய்
பேசி பேசி சேர்த்து வைத்த
நிமிடங்கள்
இன்று கரைந்து போயின
மிச்சமாய் இருப்பது
சில கவலைகளும்
கொஞ்சம் சலிப்புகளும்தானா
யோசித்து சாத்தியிருந்த
கதவை திறக்கையில்
வெறுமையாயிருந்தால்
படபடப்பாகிறது
பார்த்த பின்தான்
இளைப்பாறுகிறது மனசு