Wednesday, August 30, 2006

இது இப்படிதான்

அது சோழத் தேசத்தின் தாசித் தெரு. தாசித் தெருவுக்கான பசியின் வலியில் சிலரும்,அது தீர்ந்த உச்சத்தில் சிலரும் உலவிக் கொண்டிருந்தனர். அலங்காரமான அர்த்தமற்ற சிரிப்பு சப்தங்கள் எங்குமிருந்தன. பல்லக்குகளும்,சிறு குதிரை வண்டிகளும் அங்காங்கே. சாதிக் குதிரைகள் லாயங்களிலும், பல்லக்குகள் வீட்டின் திண்ணைகளிலும் ஓய்வெடுக்க அதன் கூட வந்த வேலையாட்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள். சுடலையும் ,மூக்கனும் அதில் உண்டு. அவர்கள் பல்லக்கு தூக்கிகள்.சுடலை அண்மையில் வேலைக்கு வந்தவன்.மூக்கன் பல வருடமாக இதே ்வேலையில் இருக்கிறான்

"சுடலை வெய்யில் இன்னைக்கு ்கொஞ்சம் கடுமைதான்?"-மூக்கன்

"என்னைக்குதான் இது குறைவு.போத்திக்கு வரவர காலையிலியே இது தேவைப்படுது.ஆண்டவனை பார்த்தவுடன் அடுத்து இங்கு அம்மன் தரிசனந்தான்"-சுடலை

"இது யாருக்குதான் தேவையில்லை.சோழ ராஜனுக்கே தூக்கிட்டு இருக்கனும்னு நினைக்கற இரண்டு விஷயம் குறியும் அவன் கட்டுற கோபுரமுந்தான். வாழ்க்கையே கைப்பிடி யோனியிலும், இரண்டு கலசங்களிலும் முடிஞ்சி போய்டுது. ராஜா எவ்வழியோ, தேசமும் அவ்வழிதான். அது கிடக்கு. உங்கண்ணன் உன்னைய பத்தி பெருமையா சொன்னான். என் தம்பி பெரிய சாதிக்காரன் மாதிரி பேசறான்,கேட்டுகிட்டே இருந்தேனு. அப்படி என்னடா மூனு தைக்குள்ள கத்துக்கிட்ட? எங்க போன? என்ன பண்ணின?"-மூக்கன்

"வடக்க சாளுக்கிய ராஜா கட்டின கோவில் ஒன்னுல மர வேலைக்கு போயிருந்தேன். அப்ப ஔவைனு ஒரு பொண்ணோன்னு கொஞ்ச நாள் தங்கியிருந்துச்சு. சிறு வயசு.அப்படியே கருகருனு நம்ப முத்துமாரியம்மன் மாதிரி களையான முகம்.பேச்சுனா பேச்சு அப்படி ஒரு பேச்சு.பாட்டெல்லாம் பாடினா நாள் முழுதும் கேட்கலாம்.ராஜா அதனோட அறிவை பார்த்திட்டு விருந்தாளியா கூட்டி வந்திருந்தாரு. இந்த பொண்ணு அவரோட அரண்மனைல தங்காம எங்க கூட கோவில் ்வேலை பாக்கற இடத்தில்தான் இருந்துச்சு. இரவு நேரத்தில எங்க கூட கள்ளு குடிச்சிட்டு கதைகளாம் சொல்லும். சன்னதம் வந்த மாதிரி ஆவேசமா அந்த பொண்ணு பேசும் போது நம்மால கண்ணை நகர்த்த முடியாது. ஆகா என்ன வாழ்க்கை தெரியுமா அது. இருட்டில் இருந்தவனுக்கு வெளிச்சத்தை காட்டின மாரியாயி அந்த பொண்ணு. கோவில் முடிஞ்சு கருவறையில சாமி வைக்கயில கிளம்பிடிச்சு. அந்த பொண்ணு சொன்னத ஊருல சொல்லிக்கிட்டு இருந்தேன். அதான் அண்ணனுக்கு ்பெருமையா இருந்துச்சு"- சுடலை

"அது என்ன பேரு ஔவைனு. நம்ப சாதியா? இல்ல போத்தி சாதியா?"-மூக்கன்

"அதெல்லாம் கேட்கவே தோனலை.அந்த பொண்ணு ரெண்டே சாதிதான் இங்கனு சொல்லும். கொடுக்கறவன், வாங்கறவன். அவ்வளவுதான். காற்று மாதிரி வந்திட்டு அப்படியே போய்டிச்சு."-சுடலை

"இப்படி உளறிட்டு இருக்காதே. சாதியை பத்தி தப்பா பேசினா, போத்திக்கு பிடிக்காது."-மூக்கன்

"சரி சரி.பெருந்தனக்காரர் அறுப்பு நேரத்தில போத்திய பார்க்க வந்திருக்காரு. அதுவும் தாசி வீட்ல.அதிசயமா இருக்கு.அறுப்பு முடிஞ்சதும் தானே கோவிலுக்கு வரி வரும் "-சுடலை

"எல்லாம் உங்கண்ணாலதான் அவன் ஊர்ல இரண்டு மரக்கா நெல்லு கேட்டு பெருந்தனக்காரட்ட வம்பு பண்ணியிருக்கான் போல. நாடு சண்டைல
இருக்குது அது மட்டும் இல்லாம காவிரி கரை மூச்சூடும் ராசா கோவில் கட்டறாரு அதனால வரி கூட போய்டுத்து. நமக்கு குடும்பத்துக்கு மூனு மரக்கா கூலி இருந்தது, ஓரு மரக்கா ஆயிடுத்து. ஊர்ல அவன் பேச்சை கேட்டு நம்ப சாதியே வேலைக்கு போகாம முறுக்கிட்டு இருக்காம். இதெல்லாம் நல்லதில்லை"- மூக்கன்

"அண்ணன் சொல்லறது நியாயமாதான் படுது. அதுதான் ஊரே அவரு சொல்லுக்கு கட்டுப்பட்டு நிக்குது. ஒரு மரக்கா வச்சி எத்தனை பேர் சாப்பிடறது?"-சுடலை

"உன்னையும்,உங்கண்ண்னையும் அந்த மாரியாத்தாதான் திருத்தனும். போத்தி இருக்கையில இனி வாயே திறக்காதே"-மூக்கன்

பிறகு நெடுநேரம் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. மட்டு மரியாதை தெரியாதவனோடு பேசி ஆவதென்ன என மூக்கனுக்கு வருத்தமிருந்தது.

போத்தி வெளியே வந்தார். பெருந்தனக்காரரும் கூட இருந்தார். போத்தி கொஞ்சம் சிந்தனையிலிருந்தார். பெருந்தனக்காரர் சற்றுக் களைத்து வாயெல்லாம் பல்லாக இருந்தார். உள்ளுக்கு விருந்து இன்னைக்கு பெருந்தனக்காரருக்கு மட்டுந்தானென மூக்கன் நினைத்துக் கொண்டான். போத்தி எதையோ பெருந்தனக்காரரிடம் சொல்ல அவர் முகத்தில் பற்கள் இன்னமும் கூட தெரிந்தது. இருவரும் சுடலையை கைக் காட்டி ஏதோ பேசினர். மூக்கனுக்கு கவலையாயிற்று. போத்தி பல்லக்கில் ஏறி அமர்ந்தார்.சுடலையும், மூக்கனும் ஓடிப்போய் பல்லக்கை தூக்கினர். பெருந்தனக்காரர் உள்ளே போய் விட்டார். இன்னும் விருந்து ்பாக்கி இருந்தது போலும்.

வீடு வந்ததும் போத்தி பல்லக்கை விட்டு இறங்கினார்.

"சுடலை "- போத்தி கூப்பிட்டார்

சுடலை நெடுஞ்சாண் கடையாக காலில் விழுந்தான்.

"தெய்வமே சொல்லுங்க"- சுடலை

"தென்னாடுடைய சிவனே என் கனவிலே வந்து உங்க அண்ணனை பார்க்கனும்னு வர சொல்லியிருக்கான். நீ ஊருக்கு போய் உங்க குடியில எல்லாரையும் இங்கு கூட்டிட்டு வா"- போத்தி

"தெய்வமே நீங்க சொன்னா சரி. அந்த சிவன் கூப்பிட்டதா சொல்லி கூட்டிட்டு வரேன். தெய்வம் அனுமதி தாங்க"-சுடலை

"போய்ட்டு வா சுடலை. உன்னை மாதிரி சின்ன சாதிகாரவுங்களை தெய்வம் பாக்கனும்னு சொன்னதெல்லாம் அந்த பரமேஸ்வரனின் அருள். எல்லாம் நல்லப்படியா நடக்கும்"-போத்தி

சுடலையால் நம்பவே முடியவில்லை. மாடனையும்,வீரனையும் கும்பிடும் நம் குடிக்கு இப்படி ஒரு வரமாவென ஆச்சரியமா இருந்தது அவனுக்கு. அண்ணன் நந்தன் பற்றி போத்தியின் கனவில் ஆண்டவனே சொன்னதால் அவன் எவ்வளவு பாக்கியசாலியென மகிழ்ச்சியாய் இருந்தது.

சற்று நாளில் சுடலை, அவன் அண்ணன் நந்தன் மற்றும் அவன் குடியை சேர்ந்த நூறு பேரும் சிவலோக பதவி அடைந்தனர். சுடலையை யாரும் நியாபகம் வைத்திருக்கவில்லை.

Tuesday, August 29, 2006

ஆகாசம்

பாட்டன் பூட்டன் காலத்துல
வரப்பு தெரியா வயலில
ஆனைக்கட்டி போரடிச்சி
ஆகாசம் வரைக்கும் அடுக்கினோம்
நெல்லுக்கட்டு
பொறந்தது
பாட்டனுக்கு பத்து பூட்டனுக்கு ஐஞ்சு
பங்காளிங்க ஆச்சு
நூறு பேரு
விதைச்சதும் மிச்சமில்ல
விளைஞ்சதும் பத்தல
ஈரத்துண்டே ஆனது நிச்சயம்
அரைப்படி நெல்லுச்சோத்துக்கும்
ஐயாமாரை பார்த்திருக்க
இன்னைக்கும் இருக்குதிந்த
ஆகாசம்

Sunday, August 27, 2006

எல்லாரும் அய்யனாருதான்

எங்க குடியில
எல்லாருமே
அய்யனாருதான்
என்னைக்கும் கூரை
ஆகாசந்தான்
இன்னிக்கும் இருக்குது
நாளைக்கும் இருக்குமாம்
வாழ வழிக்கேட்டப்ப
ஐயாமார்கள் வாய்க்கரிசி
இலவசமின்னாங்க
ஆத்தா காவிரில
வெள்ளமினாலும்
தண்ணியில்லைனாலும்
எங்க குடியில
தாலியறுப்பு நிச்சயம்
ஓப்பாரி முடிஞ்சதும்
ஓட்டு போட போகனும்
நூறு ரூபாய் கொடுத்த
மகராசனுக்கு

சிருஷ்டி

ஹரிக்கேன் வந்து போன நியு ஆர்லியன்ஸின் அமைதியாய் தளமிருந்தது. நாப்பத்தி ஐந்து பேர் கொண்ட தளத்தில் அயற்ச்சி வேறு வேறு விகிதங்களில் நிறைந்திருந்தது.அது ஒரு உயிர் பொறியியல் ஆராய்ச்சி தளம். அதிக பட்ச எதிர்ப்பு சக்தியுள்ள ,நீட்டிக்கப்பட்ட ஆயுள் உள்ள செல்களை செயற்கையாய் தயாரிக்கும் வேலை அவர்களுடையது.சண்முகம் அதன் தலைமை விஞ்ஞானி. தளத்தின் இறுதியில் அவனது அறை. பல அடுக்கு கட்டத்தின் இருபதாவது தளம். உயிரியல் நிகழ்வுகளை கணித ரீதியாக ஆராய்வது அவனது வாழ்க்கை,பொழுது போக்கு,மற்றும் இத்யாதி,இத்யாதி. இந்த முறை விளிம்புக்கு வந்து விட்டதாக நினைத்தான்.நேற்று வரை சோதனை முடிவுகள் எல்லாம் சாதகமாகவே இருந்தது.இன்று காலையில் மேகலா பயந்து பயந்து அவனது கதவின் அறையை திறக்கும் வரை உலகத்தை கையில் பிடித்த நிலையில் இருந்தான்.ஏழு வருடங்களில் இவ்வளவு திருப்தியான முடிவுகள் அவனது.கைக்கு வந்ததில்லை.ஆனால் இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டது.

இன்டர்காமில் மேகலாவை அழைத்தான் எல்லாவற்றையும் ரத்து செய்தான். தளத்திலிருந்த எல்லோருக்கும் விடுப்பு கொடுத்தான்.அடுத்த அரை மணியில் அறையை விட்டு வெளியே வந்தான்.மொத்த தளமும் காலியாய் இருந்தது. எல்லாவற்றையும் காலியாக பார்த்தால் நிறைவாக இருந்தது. மெல்லக் கண்ணை மூடி யோசித்தான், செல்களின் சூத்திரங்கள் எண்ணமெங்கும் ஓடின. எது அனாமலி என தெரியவில்லை. கொஞ்சம் ஜானி வாக்கர் சாப்பிடலாம் என முடிவு செய்து கண்களை திறந்தான். எ-பார்ம், பி-பார்ம், ஸி-பார்மாய் ஹெலிகல் வடிவங்கள் அறை முழுதும் சின்னதும் பெரிதுமாய் இருந்தது. காற்றில் பிம்பங்களாய் அவை மிதந்து கொண்டிருந்தன. கண்களை திறந்திருக்கிறோமா, மூடியிருக்கிறோமா என அவனுக்கு குழப்பமாயிருந்தது.

"குழம்பாதே"- சப்தம் வந்தது

சண்முகம் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் ப்ராக்டிகல் ஜோக்குகளுக்கான மனநிலையில் இல்லை.கோபம் வந்தது.

"யார் அது? இந்த விளையாட்டை நிறுத்துங்கள். உங்கள் இருக்கையை காலி செய்து விட்டு இப்போதே வெளியேறுங்கள். இதுதான் உங்களுக்கு கடைசி நாள்"-சண்முகம்

"சண்முகம் ரிலாக்ஸ். நான் இங்குதான் இருக்கிறேன். நான் முப்பரிமாண தோற்றமாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்"

கொஞ்ச நேரத்தில் சண்முகத்தின் எதிரில் இன்னோரு சண்முகம் நின்றுக் கொண்டிருந்தான்

சண்முகத்துக்கு கண்களை நம்ப முடியவில்லை.ஹெலிகல்கள் காணமல் போயிருந்தன.நிசப்தமான அந்த அறையில் இரண்டு சண்முகங்களும் எதிர் எதிரே.

"யார் நீ "- சண்முகம். குரல் நடுங்கியது.

"சண்முகம் உன்னை கண்ணாடியில் பார்க்கையிலும் இவ்வளவு பதறுவாயா என்ன? உனக்கு பிடிக்குமே என ஹெலிகலாய் இருந்தேன். கோபப் பட்டாய். அதை குறைக்க உன்னை போல் ஆனேன். பயப்படுகிறாய். எதுவும் தேவையில்லை.என்னை நீ முன்பே அறிவாய். நானாக மாறத்தான் முயற்சி செய்கிறாய். நான்தான் சிருஷ்டி. நான் வேறு உருவம் மாற்றிக் கொள்கிறேன்"- பிம்பம் அசைந்தது.

சண்முகம் ஓடிப் போய் அவனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.கண்களை இருக்க மூடி காதுகளை பொத்திக் கொண்டான். இருட்டாய் இருந்தது.தலைக்குள் யாரோ இடிப்பது போலிருந்தது. பொத்திய காதுக்குள் முனுமுனுப்பு கேட்டது.

"சண்முகம் நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன். கண்களை மூடித் தெரியும் இருட்டிலும் , கண்களை திறக்கையில் இருக்கும் வெளிச்சத்திலும் நான் உண்டு."-சிருஷ்டி பேசியது.

சண்முகம் மேஜையின் விளிம்புகளை இருக்க ்பிடித்துக் கொண்டான். மூச்சினை சீராக்க ஆரம்பித்தான். உடலின் நடுக்கம் நிற்கவில்லை.

"நீ கடவுளா? இப்போது எங்கே இருக்கிறாய்? "- சண்முகம். தலைக்குள் இருக்கும் அந்த குரலை அவனுக்கு தவிர்க்க முடியவில்லை. உரையாடல் அவனுக்கு கட்டாயமாயிற்று.

"தெரியவில்லை. கடவுளாகவும் இருக்கலாம். அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இந்த அறையின் வெறுமையிலும்,அமைதியிலும் இருக்கிறேன்"

"உன்னால் எவ்வாறு உருவம் மாற முடிகிறது. மூடிய அறைக்குள் வர முடிகிறது.மாய வித்தைகளோ?"

"நான் பாழ் வெளியேங்கும் இயங்குபவன். இடம்,நேரம் இதையெல்லாம் கடந்தவன். அடிப்படையில் எல்லாம் கணிதம்தான் சண்முகம். இன்னமும் உங்களால் நினைக்கவே படாத கணித சூத்திரங்கள் உண்டு. வரிக்குதிரைக்கு கருப்பு வெள்ளைதான் தெரியுமென்பதால், மற்ற வண்ணங்கள் இல்லாமலா போய் ்விட்டது. காட்சி எண்பது ஓளியின் கூட்டு. பலூனை கட்டி வித்தை காட்டுபனின் நுட்பத்தில் என்னால் ஓளியை வளைக்க முடியும். இது என்னை மாயக்காரனக்கிறதா?"

சண்முகம் அமைதியாய் இருந்தான். சிறு வயதில் அப்பாவிடம் முதலில் ராமயணம் கதை கேட்ட மனநிலையிலிருந்தான்.

"புதிய உயிர் சிருஷ்டி உன் கணித சூத்திரங்களுக்கு ்மிக அருகில் உள்ளது. வெளியெங்கும் பரவி இருந்த நான் இது வரை கட்டேயில்லாமல் சுற்றி விட்ட பம்பரம் போலிருந்தேன். குரோமசோம்கள் இணையும் நேரத்தில் அதன் முதல் துடிப்பு கொடுப்பதோடு முடிவேன் நான். யாரோ என்னில் இந்த வேலையை புதைத்து போய் விட்டார்கள். நிறுத்தவும் முடியாது. மாற்றவும் முடியாது. புரியவும் புரியாது. உன்னால் என்னை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். என் இயக்கம் எனக்கு பிடிப்பட்டது. இப்போது நான் இயங்கும் ஓரு கணித சூத்திரமாக என்னை உணர்கிறேன். எனக்கு சுய புரிதலுக்கு உதவியமைக்கு நன்றி."

"எனக்கு முன்பே டோலி உண்டு. கொரியாவில் கூட புதிய உயிர் படைக்கும் முயற்சிகள் நடந்ததே. ஏழு வருட என் உழைப்பு இன்று தோல்வி அல்லவா?"

"எல்லோரும் முயல்வார்கள். எல்லா சோதனைகளையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.ஆனால் முதல் துடிப்பு ்நான்தான் கொடுக்கலாயிற்று. நீதான் உடைத்துக் காட்டினாய். உன் முயற்சி தோல்வி அல்ல சண்முகம்.உன்னால் முதல் துடிப்பு கொடுக்க முடிந்திருக்கும். உன் சூத்திரத்தின் அனாமலி என் புரிதல்தான். நானும் கணிதம் வரைபவன்தான்,இனி மாற்றங்களும் சாத்தியமல்லவா?"- சிருஷ்டி சிரித்தது.

சண்முகம் மறுநாள் வேலையை ராஜினாமா செய்து விட்டான். இப்போது அவன் ஆராய்சிகள் செய்வதில்லை

Saturday, August 26, 2006

சமூக நீதியும் ஆண்டையும்

ஊரிலே பெரிய வயல்
ஆண்டையோடது.
மேடைகளை கண்டால்
ஆண்டைக்கு மிக விருப்பம்
அன்னைக்கு
சட்டதிட்டங்களோடு ஆண்டை
சமூக நீதி பேசினார்
புள்ளிவிவரங்கள் எப்போதும்
நாக்கு நுனியில்
சோடாக் குடிக்கும்
இடைவெளியில்
ஆண்டைக்கு கோபம்
மனசுக்குள்
கோவணத்துக்கு
காசில்லாதனெல்லாம்
பள்ளிக்கூடம்
போனால் எவன்டா
வயலுக்கு அறுப்பு
அறுக்கறதென
ஆண்டை இருக்கும் வரை
சமுகநீதிக்கு கவலையில்லை

----

கட்டிலில் கிடக்கும்
அம்மாவுக்கு அள்ள
முனியம்மா வேண்டாம்
சூத்திர நாற்றம்
வேறாள் வேலைக்கு வேணுமென
சொன்னவரிடம்
காப்பி குடிக்கும்
ஆண்டை கேட்டார்
குளிச்சு கிளிச்சு
சுத்தமாதானே இருக்கோம்
கவுச்சியும் இல்லை
உங்க சாமிதானே எனக்கும்
எனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்
கேட்டதால் வேலைக்கு
ஆள் கேட்டவர் சொன்னார்
என்ன செய்யறது
எல்லாம் கர்மாதான்
நீர் சத்சூத்ராளாய்யா
சூத்ரனில கொஞ்சம் உசத்தி
ஆனா சூத்ரன்தானே
ஆண்டைக்கு ்வாலிருந்தால்
அன்னைக்கு ஆட்டியிருப்பார்
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி
முனியம்மா கூட்டம்
இன்னும் அவருக்கு கீழ்தான்

பிழைப்பு

எரிக்க இடம்
இல்லாமல்
இன்னோரு சுடுகாடு
போனோம்
காடு கட்டும்
ஊழலில் காசு
திருடியவன்
இறந்தவன் பிணத்துக்கு
பதில் பிணம்
கேட்டுக் கொண்டிருந்தான்
இங்கு எல்லாருக்கும் எதிரி
உண்டு
மனுசத்தின் ஆணி வேர்கள்
கடைசி நுனிவரை அறுப்பு
சில பேர் பிழைப்பு நடக்க
பிணங்கள் வேண்டுமே
ஓநாய் பிழைப்பப்பா இது

முடிவு

முடிவு
-----
எப்போது நாள் முடிகிறது
களைத்து வேலைகள்
முடிக்கையிலா
உறக்கத்தின் தொடக்கத்திலா
கலவியின இறுதியிலா
கடிகாரத்தின் முட்களிளா
எனக்கு
யோசனைகள் மரத்து போகும்
இப்போதுதானென தோனுகிறது

Wednesday, August 23, 2006

சாமி

திருச்சி ஜங்சனில் இருந்து பைபாஸ் வழியாக போனால் சமயபுரம் பக்கத்தில் எங்கள் பரம்பரை கோவில் உண்டு.மெயின் ரோட்டிலிருந்து முள்ளு காட்டுக்குள் ஜந்து நிமிஷ நடையில் கோபுரம்,மண்டபம் இல்லாத கோவில். ஓரு பெரிய கற்பாறை.அதில் கருப்பு எண்ணை பூசி இருந்தார்கள். வீராச்சாமி எனப் பெயர். பக்கத்தில் நாலு வீரன் சிலை. அதை சுற்றி பெருமாள் கோவில் போல சிவப்பு கோடு வரி வரியாய் போட்ட வெள்ளைச் சுவர். கோவிலை சுற்றி ஆள் நடமாட்டமே இருக்காது. பக்கத்தில் கோவிலுக்கான சுனை.கோவிலுக்கு தலப்புராணமெல்லாம இருக்கிறதா என கேட்டால், சொன்னா நம்பவா போறனு ஒரு வரிதான் அப்பா சொல்லுவார்.எங்கள் பங்காளிகள் மட்டும்தான் கோவிலுக்கு வருவார்கள்.பங்காளிகளுக்குள் பூப்போட்டு பார்த்து பூசாரி வேலை பார்ப்பது வழக்கம்.ஐந்து வருடமாய் அப்பாத்தான் பூசாரி. அதிலே அவருக்கும் ரொம்ப பெருமை.

அப்பாவுக்கு வைரல் ஜூரம் வந்து போய் ஒரு வாரந்தாம் ஆகிறது. தளர்ந்து போய் விட்டார்.பரமசிவம் சித்தப்பா கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்யனுமாம்,போன மாசமே சொல்லி ்விட்டார்.நானும் அம்மாவும் போறதாய்தான் ஏற்பாடு. இதற்க்காக ஆபிஸ் லீவு போட்டு சென்னையிலிருந்து வந்தேன். காலை ஜந்து மணிக்கு கார் வந்து நிற்கிறது. நேற்று இரவிலிருந்து அம்மாவுக்கும் ஜூரம்.அம்மாவால் நகர முடியவில்லை. நான் தனியாக போய் பூசை வைச்சிட்டு வரேனென்றால் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை.

கார் கிளம்பும் போது ஐந்தரை மணி. வீணாய் அவருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். வழக்கம் போல திருச்சியின் வேர்வையோடு மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

கோவில் பக்கத்தில் மெயின் ரோட்டில் கார் நிற்க்கும் போது ஆறறை மணி ஆகிவிட்டது. சித்தப்பா ஏழறைக்கு வருவார். ஒரு மணி நேரத்தில் கோவிலை கூட்டி கழுவி விட்டு திருநீறும், சந்தனமும் பூச வேண்டும்.அவசரமாய் கோவிலுக்கு நடந்தால் எதிர்புறம் ஒரு பெரியவர் வந்தார். உழைத்து இறுகி கருத்த தேகம் தோளில் ஒரு நைந்து போன சிவப்புத்துண்டு. சட்டை இன்றி வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அப்பாவுக்கு அவரை பார்த்ததும் சந்தோஷமானது. அவரும் அப்பாவை கண்டதும் சிரித்தார்.

"அட ராசு நீயே வந்துட்டியா? சரசும்,சின்னாளும் வருவாங்க, கூட மாட ஓத்தாசையா இருக்குமுனுதான் காலேலருந்து இங்கன உட்காந்திருந்தேன்"-பெரியவர் சொல்லி என் தோளில் கைப் போட்டார்.ஆலன் ஷாலியில் போன வாரம்தான் வாங்கினேன். என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

அப்பாவுக்கு ஊரேல்லாம் சிநேகிதம். ஊருக்குள்ள வந்திட்டா நண்டு,நத்தையினு எல்லாரையும் பாத்திட்டு அரட்டை போட்டுதான் போவார்.

"சரசுக்கும் நேத்திலேருந்து சரியில்லை. சண்முகம் தனியா வரேன்னான்.நாத்திகம் பேசறவன் வந்து பூசைக் கொடுத்தா பரமசிவத்துக்கு பிடிக்காதுல்ல. அதான் நானே வந்திட்டேன்."-அப்பா

"தம்பி சாமி கும்பிட மாட்டியளோ? நல்லது. நானும் அப்படிதான் இருந்தேன்" - அவர் முகம் மாறி போனது.

"சரி வாங்க நேரமாகுதுல. போய் வேலையை பாப்போம்"-அப்பா

"நீர் உட்காருமையா.நானும் தம்பியும் தண்ணி எடுத்து வந்து கழுவறோம். சும்மா காலை ஆட்டாம அந்த சந்தனத்தை தோச்சு வையி"- பெரியவர்.

கோவில் போனதும் அப்பா வீரன் சிலை பக்கம் உட்கார நானும் அவரும் சுனையிலிருந்து தண்ணீர் பிடித்து பாறையை கழுவி ஊரிலிருந்து கொண்டு வந்த எண்ணையை தடவினோம். வீரன் சிலையெல்லாம் கூட்டி விட்டு மாலை போட்டு சந்தனமும் திருநீரும் பூசினோம். அப்பாவுக்கு அசதி போல வீரன் சிலைகிட்ட படுத்து குறட்டையோடு தூங்கி விட்டார்.

நாங்கள் வேலை முடித்து வீராச்சாமி பாறை பக்கம் உட்கார்ந்தோம்.சித்தப்பா வரும் வரை அப்பா தூங்கட்டும் என ்விட்டு விட்டோம்.

"உங்களுக்கு இந்த கோவில் கதை தெரியுமா?" -நான்

"ஒரு காலத்தில தெரியும். இப்போ முழுசா நியாபகம் இல்லை. வயசாயிடுச்சுல்ல. உங்கப்பாவுக்காகதான் இப்போல்லாம் கோவில் பக்கமெல்லாம் வாரேன். அப்பா பூசாரி ஆகறத்துக்கு முன்னேல்லாம் எப்பயாவதுதான் வருவேன். உன் வயசில எனக்கும் கடவுள் நம்பிக்கை , கோவில் நம்பிக்கை கிடையாதுதான். யாரு சொன்னாலும் கேட்க மாட்டேனுட்டுதான் இருந்தேன். அப்புறம் எல்லாம் மாறி போச்சு"- பெரியவர்.

"ஏங்க?" - நான்

"அதெல்லாம் ராசாமார்கள் காலம்.வீராச்சாமி நீ பேசறது சரியில்லேனு சொல்லி இந்த பாறையில கட்டி யானையே விட்டானுங்க.யானை நெஞ்சில மிதிச்சு மூச்சு நிக்கறப்பவும் சாமியில்லேனுதான் சொன்னேன்" - பெரியவர்

Tuesday, August 22, 2006

பசி

என் பேரு சத்தியவாணிங்க. எங்கூரு தெக்கு பக்கமுங்க. இப்ப படிக்கறத்துக்காக சென்னை பட்டினத்துல்ல. எங்களுது ரொம்ப சின்ன ஊரு. ஊரு முழுக்க சொந்தக்காரங்கதான். மொத்தமா என்னுனிங்கனா கோடி வீட்டு சண்முகத்தோட சேத்து இருபத்தி ஐஞ்சு குடும்பந்தான். யாரு வீட்ல விருந்துனாலும் குடும்பமா ஊரே வந்திடுவாங்க.சும்மா ஜே ஜேனு களை கட்டும்.

சென்னைக்கு வந்த புதுசுல நல்லா இருந்துச்சு.அப்போல்லாம் ஹாஸ்டல்லதான் இருந்தேன். அப்புறம் ரண்டே வாரத்தில போர் அடிக்க ஆரம்பிச்சுது. ஹாஸ்டல் சாப்பாடு உடம்புக்கு சேரலை. அம்மா கையால சாப்பிட்டு இந்த ஊர் சாப்பாடு சுத்தம் போங்க. அப்பாதான் பாத்திட்டு ரொம்ப இளைச்சி போய்ட்டடா ராசாத்தினு சொல்லிட்டு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் ஊருலெருந்து கொண்டு வந்து ஐஸ் பாக்ஸில வச்சு சமைச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாள் ஒரு ரூம் மேட் இருந்தா. ஒரு நாள் எங்க ஊர் சாப்பாட்ட பாத்திட்டு லபோதிபோன்னா அத்தோட ரூம் மேட் ஓவர்.அப்பாவும் தனியா இருந்துக்கோடா சொல்லிட்டார்.

கொஞ்ச நாளா எங்க காலேஜ் பிஸிக்ஸ் லெக்சரர் தொந்தரவு தாங்க முடியல்லை. அவரை எனக்கு பிடிக்காதுனு இல்லை.நல்லா கலரா சினிமா நடிகர் மாதிரிதான் இருப்பாரு. ஆனா லெக்சரர் ஆச்சேனு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அவருக்கும் ஏற்கனவே ஒரு ஸ்டுடன்டுக்கும் தொடர்பு இருந்துச்சு க்ளாஸ்ல சொன்னாங்க.எனக்கு அது ஒன்னும் பெருசா படலே. வயசு அப்படி இப்படிதானே இருக்கும்.

ஒரு நாள் தனியா லேபில இருக்கும் போது கையே பிடிச்சிட்டாரு. எனக்கு பக்னு ஆயிடுத்து. நான் கல்யாணம் பன்னினா உன்னை மட்டும்தான் பண்ணுவேனு சொன்னார். உறுதியா இருந்துச்சு அவர் கை. எனக்கு ஆசையா இருந்துச்சு காட்டிக்கல.யாருகிட்டயும் நம்ம பத்தி சொல்லாதீங்க.ரகசியமாவே இருக்கட்டுமுனு சொல்லிட்டேன்.ரொம்ப ரகசியமாவே இருந்தோம்.

எங்க ஊருல பண்டிகை வந்துச்சு. எங்க வீட்லதான் விருந்து. இவர் இல்லாமல் விருந்து எனக்கு மனசே இல்ல. அப்பாகிட்ட போன் பண்ணி சொன்னேன்.மொதல்ல ஆ ஊனு சப்தம் போட்டாரு.நான் பிடிவாதமா இருக்கவும் வேற வழியில்லாம ஒத்துகிட்டாரு.ஊருலேருந்து காரை எடுத்திக்கிட்டு அண்ணணை கூட்டிட்டு வாரேன்டாரு.நானும் இவரை அப்பாவும்,அண்ணணும் வரத்துக்கு முன்னால வர சொன்னேன். கொஞ்ச நேரம் தனியா இருக்காலாம் வாங்கனு கூப்பிட்டதாலே அவரும் ஆசையா வந்தாரு.

எங்க ஊரு காப்பி ஒன்னு போட்டுக் கொடுத்தேன்.மனுசன் மயங்கிட்டாரு.நான் ப்ளாஸ்டிக் ஷிட்,கத்தி எல்லாம் எடுத்து வச்சிட்டு இப்போ உட்காந்திருக்கேன்.அண்ணனும் அப்பாவும் வந்ததும் விருந்துக்கு கறி அறுக்க வேண்டியதுதான் பாக்கி. இவரென்ன சினிமா நடிகர் மாதிரி இருக்காரே ருசியாதான் இருப்பாரு.

Monday, August 21, 2006

நாட்டு நடப்பு (தேசியம்)

ஊர் ஆலமரத்தடியில இருந்த சண்முகத்துக்கு எதையுமே பிடிக்கவில்லை. அம்மாவும்,அப்பாவும் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பது எரிச்சலாக இருந்தது. சோறு சமைச்சி போட்டுட்டு, துணி துவைச்சி கொடுத்திட்டு,செலவுக்கு காசு கொடுத்திட்டு வாயை மூடிக்கிட்டு இருக்க தெரியல்லை அவங்களுக்கு என நட்பு வட்டாரத்திடம்(அல்லக்கைகள்) சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அல்லக்கைகளுக்கும் சண்முகம் வருத்தமாய் இருப்பது பிடிக்கவில்லை.தெருமுனை கழைக்கூத்தாடி போனதிலிருந்து சண்முகம்தான் அவர்களை சந்தோஷமாய் வைத்துக் கொண்டிருந்தான். அப்பப்ப அல்லக்கைகளுக்கு டீ வேறு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் டீயும் வாங்கி தருவதில்லை.

"சினங்கொண்ட சிங்கமே.எங்கள் தங்க தலைவா,நீங்க வருத்தப்படலாமா? குடும்பம் அப்பா,அம்மாலாம் சும்மா.துடைச்சி எறி தலை."-அல்லக்கை ஓன்னு.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"குடும்பத்தில இருந்து என்னத்த கண்டோம். பொழுதனைக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. இதை மடிச்சு வை.அத்த க்ளின் பண்ணுனு. நல்லா படி. கேட்டு கேட்டு காதே புளிச்சு போச்சு. வீட்ல என்ன பண்ணறாங்க ்வெட்டியா? சுத்தம் பண்றதுதான் நம்ப வேலையா? எத்தனை வேலைகள் நமக்கு வெளில இருக்கு"-சண்முகத்துக்கு சினிமாவில் வரும் ஹிரோக்கள் போல கண்ணெல்லாம் சிவந்து உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

சண்முகத்துக்கு இவன் ஏன் எப்போதும் இதையே சொல்லறானு கொஞ்சம் டவுட் வர ஆரம்பித்தது. ஆனாலும் அவன் சொல்லறதை கேட்க சுகமாயிருப்பதால் இப்போதைக்கு இதை விட்டுடலாமுனு முடிவு பண்ணிக்கிட்டான்.

"குடும்பமே ஒரு போலி. அப்பா,அம்மா நமக்கு ஏமாத்தி போதனை பண்ணிட்டாங்க. அவங்க அடக்கு முறையை நான் ஒழிக்கனும். எதுக்கேட்டாலும் ஒன்னுக்கொதாவாத ஜடியா கொடுக்கறாங்க.
மூனு வருஷமா பைனல் இயர் பேப்பர் கிளியர் பண்ணலேனு சொன்னா,ட்யுஷன் போனு சொல்லறாங்க. இதுக்குதான் இவங்க இருக்காங்களானு நான் கேட்கறேன். படிக்க வைச்சா போதுமா, பரிட்சைல பாஸ் பண்ண அவங்கதான் ஏதாவது பண்ணனும். அப்புறம் ஒரு வேலை வாங்கி தரனும். அதேல்லாம் ஏன் பண்ணலேனு கேட்கறேன்? அக்கறையே இல்லாத கும்பல். இதெல்லாம் பண்ண பத்து லட்சம் காசு கொடுங்கனு சொன்னா கைல காசு இல்லடா. படிப்புக்கே வட்டிக்கு பணம் வாங்கிதான்டா தாரேனு சொல்லறாங்க. கடன் வாங்கறதெல்லாம் ஒரு பொழப்பா? எனக்கு அவங்க கூட இருக்கறதுக்கே அருவருப்பா இருக்கு. இந்த லட்சணத்தில இவங்க வாங்கின கடனை பின்னாடி நான்தான அடைக்க உதவி பண்ணனுமாம். கிண்டலை பாத்தியா? இந்த கும்பலை நான் என்ன பண்ணறேன் பார்"-சண்முகம் மூச்சிறைக்க பேசி முடித்தான்.

தொடர்ந்து 2 நிமிஷம் பேசினா கை தட்றதா முடிவு பண்ணியிருந்த அல்லக்கைகள் உடனே கைதட்டி விசில் அடிக்க ஆரம்பிச்சார்கள்

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"தலைவா, புதிசுபுதிசா உனக்கு சிந்தனைகள் கொட்டுது. நீ குடும்பத்துக்கு வை ஒரு வேட்டு"- அல்லக்கை ஒன்னு.

வடிவேலு ்வாத்தியார் எலிமெண்ட்ரி பள்ளிக்கூடத்தில வேலை பாக்கறவரு. அவர்தான் சண்முகத்துக்கும், அவனோட புரட்சிக்கூட்டதுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவரு. வெயிலுக்கு மரத்தடில ஒதுங்கனவர் இந்த வீர உரைகளை கேட்டுட்டார்.

"தம்பி சண்முகம் கோவப்படாதப்பா. அவங்க அம்மா,அப்பாதானெ கொஞ்சம் கொணமாத்தான் பேசேன்"-வடிவேல் வாத்தியார்.

"நீங்க பெரிசா பேச வந்திட்டிங்களே. நீங்களும் இதுல பங்கு வச்சிருக்கிங்க. அப்போ அல்ஜிப்ரா ஒழுங்கா சொல்லிக் கொடுத்திருந்தா இந்த கஷ்டம் வந்திருக்காதில்ல"-சண்முகம் நக்கலாக கேட்டான்.

அல்லக்கைகள் வாத்தியாரை கை காட்டி சிரித்தனர். எப்படி சண்முகம் வாத்தியாரை ஒத்த கேள்வில மடக்கிட்டானு சந்தோஷமாயினர்.

வாத்தியாருக்கு ஒரு நிமிஷம் குழப்பமாயிருந்தது.

"சண்முகம் ஒன்னும் குடிக்கலாமில்லையே. என்னையே அடையாளம் தெரியலையா. நான்தாம்பா வடிவேலு. உன்னோட ரண்டாம் கிளாஸ் வாத்தியாரு.நான் எப்படிப்பா அல்ஜிப்ரா ்சொல்லி தருவேன்?"-வடிவேல்

"என்னை குடிக்காரனு சொல்லறிங்களா? இந்த சமுதாயம் ஒரு புரட்சிக் கூட்டத்தை எப்படி பாக்குது பாருங்க"-சண்முகம் தோழர்களை பார்த்துக் கேட்டான்

்வாத்தியார் பயந்து போய் வீட்டுக்கு கிளம்ப சண்முகமும் அவனது புரட்சிக் கூட்டமும் வட்டமாக உட்கார்ந்து அம்மா அப்பாவோடு வாத்தியாரையும் திட்ட ஆரம்பித்தார்கள்.

பின் குறிப்பு;

"என்ன நீங்க சண்முகத்துக்காக இவ்வளவு செய்யறிங்களே. அவன் உங்களை திட்டிட்டு ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான்"-வடிவேல்

"ஆயிரம் திட்னாலும் மகன் வாத்தியரய்யா. அவனுக்கும் நல்ல வாழ்க்கை அமையனுமில்ல"-சண்முகத்தின் அப்பா

"கொஞ்சம் கண்டிக்கலாமே?"-வடிவேல்

"சொன்னேன். என்னை போடா பைத்தியக்காரானு சொல்லிட்டாங்க"-அப்பா

Tuesday, August 15, 2006

எங்குமிருப்பது

கோவிலில் கூட்டம் அலை மோதியது. பிரகாரமெல்லாம் சுத்தி விட்டு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணலாமென உட்காருமிடத்தில் அது கிடந்தது.மூர்த்தி உட்கார்ந்த இடத்தில் உறுத்தவே அதை பார்த்தான்.பிரகாரமெங்கும் எல்லாரும் ஆண்டவனிடம் சுறுசுறுப்பாய் குறைகளை கொட்டிக் கொண்டிருந்தார்கள்.யாரும் இவனை பார்த்த மாதிரி தெரியவில்லை.பக்கத்தில் சத்யாவை பார்த்தான், அவள் தூரத்தில் உட்கார்ந்திருக்கும யாராருடைய புடவையையோ ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆண்டவா யாரும் இதை பாக்க கூடாது"-கண்ணை மூடி ஆண்டவனை வேண்டிக் கொண்டு அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான்.

"என்னங்க சாமி கும்பிட்டதெல்லாம் போதும்.அங்க எதுதாப்ல இருக்கவுங்களை பாருங்க.அவங்க கட்டிருக்க பொடவைதான் போனவாரம் கோலங்கள்ல வந்தது. அதான் ஆடி வந்திருச்சே. எனக்கு ஓன்னு எடுத்துதான் கொடுங்களேன்."

"சரி சரி அதெல்லாம் பாத்துக்கெல்லாம் கெளம்பு இப்போ"-பயம் மனசிலிருந்து அவசரமாய் காலுக்கு வந்தது.

கோவில் தாண்டுவதற்குள் நாக்கு வரண்டு வேர்த்து இருந்தது.

"என்னங்க ஓங்களுக்கு பிரஷர் செக் பண்ணும் போலருக்கே. இப்படி ஆகுதே.குடிக்காதிங்க சொன்னா கேக்கறிங்களா"-சத்யாவுக்கு கவலை

"சும்மா இருடி. பிரஷருமில்லை. வெங்காயமுமில்லை.சட்டை பையில பாரு.வெளியில எடுக்காதே."

"ஏதுங்க இது. இத ஏங்க நீங்க எடுத்து வந்திங்க. யாரும் பாத்தா என்னா ஆகறது."- சத்யாவுக்கு கோவம் வந்தது.

"அட ஏண்டி கத்தற. சத்தமா பேசாத.சும்மா இருடி. நான் என்னா கழட்டிட்டா வந்தேன். வழியில கிடந்தது எடுத்து வந்தேன். சாமியா பாத்து கொடுத்ததுனு நினைச்சுக்கோ"

"அடிக்காதிங்கப்பா, அடிக்காதிங்கப்பா. எங்கேனு தெரியலப்பா"-அலறல் கேட்டது. மூர்த்தி திரும்பி பார்த்தான். கோயில் வாசலில் யாரோ ஒருவர் தன் குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார்.

சத்யாவுக்கு அதை பார்த்து வயிற்றை இழுத்து ஏதோ பிடித்தது.

"பாவங்க அந்த பொன்னு"-சத்யா

"கொடுத்திடலாமா அவங்ககிட்ட"-மூர்த்திக்கு மனம் இளகியது.

"அதெல்லாம் வேணாம் வாங்க. அந்த பாப்பா எத்த தொலச்சிதோ. நாம போய் உங்களுதானு கேட்டு ஆமாம் சொல்லிட்டா என்ன பண்ணுவிங்க. அவங்க சொல்லறது சரியா,தப்பானு நமக்கு எப்படி தெரியும் ஆண்டவனா பாத்து கொடுத்திருக்கான். அத்தையேன் வேண்டாம்னு சொல்லுவானே. பொழைக்க தெரியாத ஆளா நீங்க இருந்தெல்லாம் போதும். வாங்க போலாம்."

பைக்கை ஸ்டாட் செய்யும் வரையில் மூர்த்திக்கு அந்த குழந்தையின் நியாபகம் இருந்தது.

சத்யா மூர்த்தியின் தோளை இருக்க பிடித்துக் கொண்டாள்.மூர்த்தியும் ஆக்ஸிலேட்டரை அதிகரித்தான். அந்த கோவிலை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக வேண்டுமென பட்டது. அது பையில் உறுத்தியது.ஆக்ஸிலேட்டரை இன்னும் அழுத்தினான்.

எந்த நொடியில் பைக் நழுவியதுனு மூர்த்திக்கு தெரியவில்லை. வண்டி நழுவுவது தெரிந்தது.சத்யாவின் அலறல் கேட்டது.தலையில் ஏதோ மோதியது.

சண்முகம் அந்த பெட்டிக்கடையில் கவலையாய் இருந்தான்.மாசம் முடிய இன்னும் பத்து நாள் இருக்கு. விஜிலன்ஸ் ரெய்டுனு ஆபிஸ்ல ஓரே அமர்களமா இருக்க கையில காசு வரவு கொஞ்சம் கம்மியா ஆயிடுச்சு. கட்டிக்கிட்டு இருக்ற வீட்டுக்கு மணல் ்விலை ஏறி ்போனதால செலவு எகிறுது. பட்ஜெட்ட ஏத்தியாகனுமுனு காண்ட்ராக்டர் அடிச்சு சொல்லிட்டாரு.

அப்போதுதான் அந்த வழுக்கி ்விழும் அந்த பைக்கை பார்த்தான். அவசரத்துக்கு பொறந்தவனுங்கனு நினைத்துக் கொண்டான். விழுந்தவன் பையிலிருந்து ஏதோ தெரித்து திருப்பத்திலிருந்த குப்பைத் தொட்டியில் விழுந்தது. கடைக்காரனும் இன்னும் கடையிலிருந்ந இரண்டு பேரும் அவசரமாய் விழுந்தவர்களை பார்த்து ஓடினார்கள். இவனும் பதற்றமாய் ஓடினான். கணவன் மனைவி கோவிலில் இருந்து வந்திருப்பார்கள் போல.அர்ச்சனை சாமான்கள் எங்கு பார்த்தாலும்.விழுந்தவனுக்கு அடி பலமாய் இல்லை. அவன் மனைவிக்குதான் கொஞ்சம் தலை உடைந்திருப்பது போல இருந்தது. ஆனால் அவளுக்கும் நினைவு இருந்தது.இவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.இன்னும் கொஞ்சம் அங்கு கூட்டம் கூடியது.

மெல்ல குப்பை தொட்டி பக்கம் வந்தான். அது ஓரு பழைய பேப்பர் கீழே ்கிடந்தது. கர்சீப்பை கீழே போட்டு அதை எடுத்துக் கொண்டான்.ஆண்டவா நன்றி,ஓரு கதவை மூடி இன்னோரு கதவை திறந்திட்டனு மனசுக்குள்ள சாமி கும்பிட்டான்.

கட்டட ்வேலை சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது.சரவணன் கோபமாக இருந்தான். காலையில் கோவிலுக்கு போன ்நேரத்தை நொந்துக் கொண்டான்.அதை ஆசையாக ்வாங்கி மகளுக்கு கொடுத்திருந்தான்.காணாமல் போய்விட்டது.

"ஐயா"-ட்ரைவர் ஆதிகேசவன் குரல் ்கேட்டது.

"என்ன கேசவா?"-சரவணன்

"நீங்க வர சொன்னிங்களாமே?"-கேசவன்

"ஆமாம். உள்ள போனா எலக்டிரிசியன் ஜோசப்பு இருப்பான்,அவனை கூட்டிட்டு நம்ப மலர் எலக்ட்ரிக்கல்ஸ் போய்ட்டு இந்த வீட்டு அக்கவுண்ட்ல இந்த லிஸ்ட்ல இருக்க சாமான வாங்கி கொண்டு போய் நம்ப மாப்ள ்வீட்ல போட்டு கொடுத்திட்டு வந்திருங்க.அவன் ்கூடவே இரு கேசவா. கொஞ்சம் அசந்தா வேற எடத்துக்கு வேலைக்கு ஓடி போய்டுவான்.இவனலாம் நம்ப முடியாது.அப்படியே வெளிய இருக்க மண்ணுல ஓரு அரை லோடு எடுத்திட்டு போய் நம்ப மணியண்ணன் சைட்ல கொடுத்திட்டு அவர்ட்ட காசு ்வாங்கிட்டு வந்திடு.சரியா?" -சரவணன்.

"சரிங்கய்யா. பாப்பா எதையோ தொலைச்சிடுச்சாமே. அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."-கேசவன்

"பொறந்த நாளுனு ஆசையா வாங்கினேன். எவனோ களவானி பய கெளப்பிட்டு போய்ட்டான். எப்படிதான் ஓரு சின்ன புள்ளைக்கிட்ட இருந்து எடுத்திட்டு போக மனசு வருதோ? ஆண்டவன் இவங்களை சும்மா விடமாட்டான். சரி சரி சீக்கிரம் கிளம்பு அந்தாளு சண்முகம் வந்தா தொந்தரவு."-சரவணன்.

Wednesday, August 9, 2006

பயம்

சத்தியவாணி பூச்சி மருந்தைக் குடிச்சி செத்து போச்சு. சண்முகத்துக்கு சத்தியவாணி பக்கத்து வூடு.சண்முகத்தை எப்போதும் குரங்குனுதான் கூப்பிடுவா.அதனால அவனுக்கு அவளை கண்டாலே பிடிக்காது

ரண்டு நாள் முன்னாடிதான் கோடி வீட்டு கார்த்தி அவ தாவணி புடிச்சி இழுத்துட்டு தொடக்கூடாத எடத்த தொட்டுப்புட்டான்.அந்த கார்த்தி கலாட்டா செய்யயில சண்முகமும் கூட இருந்தான். நா போய் சாவ போறேனு மிரட்டிடு சத்தியவாணி ஓடினா.அன்னைக்கு அம்மா கையால விழுந்த வெளக்குமாத்து அடி சண்முகத்துக்கு தழும்பாய் இருந்துச்சு.அடி தாங்காம வூட்டை வுட்டு ஓடி போய், பக்கத்தூருல அவனோட மாமா ஊட்ல ஓக்காந்துக்கிட்டான்.சண்முகத்தோட அப்பா அன்னைக்கு நைட்டு அவனை தேடி மாமா வூட்டுக்கு சைக்கள்ல வந்து ரண்டு அடி வுட்டு போனாரு.

சனி,ஞாயிறு தாண்டி திங்ககெழம மாமா வூட்லெருந்து நேரா பள்ளிக்கூடம் போனாதான் அவனுக்கு தெரிஞ்சது. சத்தியவாணி ஞாயித்துகெழம நைட்டு செத்து போயிட்டானு. கார்த்தி பயலெயும் காணோம்.வூட்டு பக்கம் போனா ஓரே எழவு சத்தம்,ஓப்பாரி.

சண்முகத்துக்கு வயத்தை கலக்கிடிச்சு.அடாடா வூட்டுக்கு இப்ப போனா மாட்டிடுவோமுனு ஊர் கடைசில இருக்க மாந்தோப்புக்கு போய்ட்டான்.

பசிக்கு ரண்டு பழத்த அடிச்சி தின்னுட்டு,சட்டையை கழட்டி மரத்தடில போட்டு படுத்தான்.திடிருனு அவனுக்கு சலக்கு சலக்குனு கொலுசு சத்தம் கேட்டுச்சு. அலறி அடிச்சு சுத்துக்கும் பாத்தான்.யாருமில்லை.நெஞ்சு வலி அதிகமா இருந்துச்சு.கையை வேற வலிச்சுது.
யாரது? யாரதுனு கத்திக்கிட்டே தோப்புக்குள்ள ஓடுனான். கண் வேற அவனுக்கு மங்கிச்சு. அப்ப தூரத்துல அந்த ரோஸுக்கலர் தாவணி தெரிஞ்சுது. சண்முகத்துக்கு அழுகையா வந்திச்சு. சத்தியவாணி என்ன உட்டுடுனு கத்திக்கிட்டே ஓடினான். கால வேற ஏதோ இழுக்க அப்படியே கீழ விழுந்தான்.

அன்னைக்கு சாயங்காலம் சண்முகத்து வூட்லியும் எழவு இருந்திச்சி. சாமி எறங்கி செத்து போன சண்முகத்தையும், சினிமாக்கு போக காசு கொடுக்காத அம்மாக்காக பூச்சி மருந்து குடிச்ச சத்தியவாணி பத்தியும் எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. மாந்தோப்புக்கு சுள்ளி பொறுக்க போன லட்சுமி சண்முகம் சாமி வந்து மாந்தோப்புக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தத கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தா.

Monday, August 7, 2006

எதிர்மறை நியாயங்கள்

வாசலில் ஓரு வயதானவர் ஓருவரும், நடுத்தர வயது பெண்மணி ஓருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் கிரில் கேட்டில் கையை வைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தார்கள்.

"யாருங்க வேணும்?"

"என் பேர் கணேசுங்க. இங்க சண்முகமுனு ஓருத்தர் குடியிருக்காருங்களா? நான் அவர் பிரண்டுதாங்க."

"வாங்க வாங்க. நீங்க வருவிங்க சொல்லியிருந்தாரு.இப்பதான் டூட்டி முடிஞ்சு வந்தாரு.நீங்களும் அகரமுங்களா?"

"ஆமாங்க."

"நாங்களும் அகரம்தான். இவங்க எங்க அப்பா. "

"வணக்கமுங்க." -நான்

அந்த வயதானவர் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அவங்களுக்கு காது கேட்காது. விடுங்க."

"எங்க வூட்டுகாரரும் மாடில இருக்கவர் கூடதான் வேல பாக்குறார். நீங்களும் அவங்க கூடதான் இருக்கிங்களா?"

"இல்லிங்க.நான் ரயில்வேஸில வேலை பாக்கறேன்."

"அப்படியா? சரி நீங்க போங்க.போறவங்களை புடிச்சி ஏதாச்சும் கேட்டுட்டே இருக்கேன்."

மாடி ஏறி போனேன். ஓரு பத்துக்கு பதினொன்னு ரூம்.அதில் ஓரு சுருட்டிய பாய் ஓன்னு, கொஞ்சமாய் மடிக்கப்பட்ட துணிகள.ரூமை ஓட்டி ஓரு ஏழுக்கு பத்து சமயலறை சன்னல் இல்லாமல. சண்முகம் கதவை திறந்து வைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தான்.

"சண்முகம் என்னடா பண்ணிட்டு இருக்க?"

"வாடா. இன்னிக்கு நைட் ஷிப்டும் போறேன்.அதான் இப்பவே சமையல முடிச்சிடலாமுனு.உள்ளுக்கு பொகையா இருக்கும். மொட்டை மாடில சேர் ஓன்னு கெடக்கும் பாரு அதில உட்காரு."

சண்முகம்,நான்,ராசு மூன்று பேரும் அகரத்தில் ஓன்னா ஐஞ்சாம் வகுப்பு வரை படிச்சோம்.அப்புறம் எங்கப்பாவும், ராசுவோட அப்பாவும் டவுனுக்கு வந்து வட்டிக் கடை வைக்க நாங்க டவுனுக்கு வந்திட்டோம்.சண்முகம் மட்டும் ஊரோட இருந்திட்டான்.நான் டிப்ளமோ படிச்சிட்டு ரயில்வேஸுக்கு வந்திட்டேன்.ராசு அப்பா தவறின பிறகு ராசு எங்கப்பாவோட சேந்து வட்டிக்கடைக்கு வந்திட்டான்.சண்முகம் ஐடிஐ வெல்டருக்கு முடிச்சிட்டு அவங்க அப்பா அண்ணணோட விவசாயம் பாத்திட்டு இருந்தான். அப்புறம் எங்கப்பாதான் ரயில்வேஸ் சப்காண்ட்ராக்டர் ஓருத்தர் ஷாப்பில வேலை வாங்கி கொடுத்தார். கொஞ்ச நாள் கழிச்சு அவனோட அக்கா மகளை அவனுக்கு கல்யாணம் கட்டிட்டாங்க.ஊர்லெருந்து வேலைக்கு வந்திட்டிருந்தவன் திடிருனு தனியா வீடெடுத்து தங்கவும் பிரச்சனை ஆகிடுத்து.அவங்கப்பா எங்கப்பாவை பஞ்சாயத்துக்கு கூப்பிட அவர் என்னை இங்க அனுப்பி வைச்சார்.

சமைச்சிட்டு வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தான். ஓரு அலுமினிய சட்டியில் தண்ணி மோந்து முகம் கழுவினான்.

பக்கத்தில் மொட்டை மாடிக் கட்டையில் உட்கார்ந்தான்.

"என்ன கணேசு கீழ சிபிஐ என்குயரி முடிஞ்சுதா?"

"ஏண்டா கேட்கற. என் தலபுராணத்தையை கேட்டுதான் மாடிப்படி ஏற விட்டாங்க."

"நம்ம வூட்ல ரண்டு வயசுக்கு வந்த பொண்ணிருந்தா,நமக்கும் அப்படிதான். சரி வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?"

"நல்லாருக்காங்க. நீ ஏண்டா இப்படி கஷ்டபடுற? ஊர்லெருந்து வந்திட்டு இருந்தெனா,சமையலெல்லாம் படுத்தாதுல.வாடகை கெடையாது. அங்கென பாவம் இப்போ வளர் தனியா கெடக்கு. அப்பா அம்மாலாம் தனியா இருக்காங்க."

"ஊர்ல கம்ளெய்ண்ட் பண்ணாங்களா? சரி இங்கென நின்னு ரொம்ப அரட்டை அடிக்க வேண்டாம். பக்கத்தில போய் ஓரு டீ சாப்பிட்டுடெ பேசலாம்."

மொட்டை மாடியில் கொடியில் இருந்த சட்டையை உதறி மாட்டிக் கொண்டான்.டீக்கடைக்கு போகும் வரையில் அவன் ஓன்னும் பேசவேயில்லை.அப்புறம் கொஞ்சமாய் யோசித்த ்பின் பேச ஆரம்பித்தான்

"கணேசு வெல்டிங் பண்ணிருக்கியா?"

"ஏண்டா கேட்கற? நீ கடையில பண்ணி பாத்துருக்கேன். அவ்வளவுதான்."

"விடாம நீ ஓரு நாலு மணி நேரம் வெல்ட் அடிச்சாலே கண்ணு எரியும். ஓன்னும் புரியாது. படுத்தா தூக்கம் வராது. கண்ணை மூடினாலும் வெளிச்சம் சனியன் மாதிரி வந்து நிக்கும். தெரியுமா?"

என்ன சொல்லனும்னே எனக்கு தெரியவில்லை. பொதுவா ம் என்றேன்.

"பன்னென்டு வருஷமா வெல்ட் அடிக்கிறேன். ஓரு நாளைக்கு பத்து பன்னென்டு மணி நேரம் வேலை.சமயத்தில கண்ணு ரண்டையும் புடுங்கி போட்டுலாமா தோனும் தெரியுமா?"

நான் மவுனமாக இருந்தேன். அப்போதைக்கு அதுதான் முடிந்தது.

"என் பசங்க இந்த கஷ்டம் படக்கூடாதுடா. நல்ல பள்ளிக்கூடம் போகனும்.நல்லா படிக்கனும். பேரிய வேலைக்கு போகனும்.அகரத்தில இதெல்லாம் இல்லடா. கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும் ஆசையா புள்ளைக்கு ஓன்னும் வாங்க முடியல. மாச சம்பளம் வந்தா அப்பாட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. அன்னைக்கு பையன் திருவிழால ஓரு கிலுகிலுப்பை கேட்கறான். வாங்க முடியல. இவனுக்கு வாங்கினா அண்ணண் பசங்களுக்கும் வாங்கனும்,முப்பது ரூபா ஆகும், சும்மா வானு அப்பா சொல்றாரு. இவனை மட்டும் அகரத்திலேருந்து கான்வண்ட் அனுப்பக்கூடாது,பெரியவன் புள்ளைங்க ஏங்கிடும்கறாரு. நான் படிச்ச படிப்புக்கு இவ்வளவுதாண்டா சம்பாதிக்க முடியும்.மூனு பசங்களை கான்வெண்ட் போடுறதுக்கு வருமானமில்லை. அண்ணன் மாசம் அப்பாட்ட எவ்வளவு தாராரு, அப்பாட்ட எவ்வளவு காசு இருக்குனு கேட்டா ஏண்டா என்னியவே கணக்கு ்கேட்கறியானு அவருக்கு கோவம் வந்து கன்னா பின்னானு திட்டறாரு.அதான் வந்திட்டேன்.ஓன்னைய பதினெட்டு வருஷம் வளத்ததுக்கு இதான் பலனாங்றாரு. நான் என்ன பேங்க் டெப்பாஸிட்டா மெச்சூர் ஆனதும் அவருக்கு வருமானம் ்கொடுக்கறதுக்கு. அ்ப்படியே ்பாத்தாலும் பன்னென்டு வருஷம் அவருக்கு சம்பாரிச்சு கொடுத்திருக்கேன். எனக்கு ஓன்னும் வேணானுமிட்டு வந்திட்டேன்.ராசுட்ட கொஞ்சம் பணம் வாங்கியிருக்கேன் வட்டி வேண்டாம், அசல் மட்டும் முடிஞ்சப்ப கொடுனுட்டான்.ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கேன்.வந்தா கம்பேனி முதலாளி கேஸ் கனெக்ஷன் ்வாங்கி தாரேன்னாரு. வளருதான் என்கிட்ட ்கோவிச்சிட்டு வர மாட்டேன்டு இருக்கு. அக்காட்ட சொல்லிருக்கேன், அக்கா நான் பாத்து கூட்டிடு வரேனுச்சு. பாப்போம் என்னாகுதுனு."

அவன் சொல்லி முடிக்கும் வரையில் 'ஙே'னு பாத்திட்டு இருந்தேன். எனக்கு இவன் ்சொன்னதும் நியாயமா இருந்துச்சு. நேத்திக்கு இவங்கப்பா எங்கப்பாட்ட புலம்பினதும் நியாயமா இருந்துச்சு.

டீ சாப்டுட்டு நான் அப்படியே நான் கிளம்பிட்டேன்.அவன்ட்ட போய் என்னனு சொல்ல அவன்தான் தெளிவா இருக்கானே.

Friday, August 4, 2006

பயணம்

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று உறுப்பினர்களும் மிக அவசரத்தில் இருந்தனர்.

"மேஜர் நாம் டைட்டனின் ஆர்பிட்டை விட்டு வெளியே வரும் நேரத்தை குறைக்க வேண்டும். மின்காந்த புயல் நம்மை இன்னும் இரண்டு மணி நேரத்தில் நெருங்கிவிடும். ஓடத்தின் இன்ஜின்களை அதன் முழு வேகத்துக்கு முடுக்குங்கள். பூமியுடன் ஏற்கனவே நாம் தொடர்பை இழந்து விட்டோம். "

"கேப்டன் மின் காந்த புயல் வடக்கில் இருந்து வருகிறது.ஆனால் வேறோரு விசை நம்மை நம் பயண பாதைக்கு நேர் எதிராக கிழக்கு நோக்கி இழுக்கிறது. இஞ்சினை முழு வேகத்திற்க்கு முடுக்கியும் பயனில்லை. கீழ் தளத்திலிருந்து சார்ஜண்ட் இஞ்சின் அதன உச்சக்கட்ட உபயோகத்தில் உள்ளதென கூறுகிறார். இப்போது என்ன செய்யலாம்? "

"சார்ஜண்ட் இஞ்சின் குளிர்பான்களை முழுதுமாக திறவுங்கள். மேஜர் இஞ்சினின் வேகம் மட்டுபடுத்தி கிழக்கு நோக்கி திருப்புங்கள். மின்காந்த புயல் வருவதற்கு முன் நாம் இங்கிருந்து அகல வேண்டும்."

"கேப்டன் பயணபாதையை விட்டு விலகுவதை பூமியில் உள்ள தளம் விரும்பாது.கிழக்கில் என்னவிருக்கும் என யாருக்கும் தெரியாது. அதில் எனக்கு விருப்பமில்லை. தொடர்ந்து இஞ்சினை உச்ச வேகத்தில் வைத்து மேற்க்கு நோக்கி முயற்ச்சிக்கலாமே?"

"காந்த புயல் வீரியம் மிக்கது. நம் ஓடத்தின் கம்பியுட்டர் அதை கண்டு கதறுகிறது. கிழக்கு குறித்து எந்த எச்சரிக்கையும் அது தரவில்லை,இன்னும் சிறிது நேரம் நாம் விவாதித்து கொண்டிருந்தால் நமக்கு மூன்று மலர் வளையங்களே பூமியில் மிஞ்சும்.பாதுகாப்பான தூரம் சென்ற உடன் பூமியை தொடர்பு கொண்டு பாதையை வரையலாம். இப்போது ஓடத்தை திருப்புங்கள்."
ஓடம் கிழக்கு நோக்கி திரும்ப ஆரம்பித்தது. கிழக்கிலிருந்து வரும் அந்த ஈர்ப்பு விசையை கொண்டு டைடனின் ஆர்பிட்டிலிருந்து ஓடம் விலக ஆரம்பித்தது.

மேஜர் ஆதவன்,கேப்டன் ஈஸ்வரி,சார்ஜன்ட் தினேஷ் மூவரும் சனி கிரகத்துக்கான துணைக்கோளான டைடனுக்கு பயணம் தொடங்கி ஓரு வருடம் ஆகிறது. வெற்றிகரமான கள ஆய்வுக்கு பிறகு இன்று பூமி திரும்பும் முதல் நாள். ஓரு மணி நேரத்தில் ஓடம் பாதுகாப்பான தொலைவு சென்றுருந்தது.

"கேப்டன் நாம் பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறோம். ஆனால் பூமியுடன் தொடர்பு கொள்ளமுடியவிலையே. கிழக்கின் இழுவிசையும் அதிகரிக்கிறது."-ஆதவன்.

"கிழக்கில் என்ன இருக்கிறது. எது நம்மை இழுக்கிறதுவென பார்க்கவேண்டும்.சார்ஜன்ட் கம்பியுடரை எலக்டரானிக் தொலைநோக்கியை கிழக்கில் திருப்ப சொல்லுங்கள்"-ஈஸ்வரி

"கேப்டன் அதற்க்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.தாங்கள் இருவரும் கீழ் தளம் வாருங்கள். இந்த அதிசயத்தை பாருங்கள்"-தினேஷ்.

"மேஜர் நீங்களும் வாருங்கள், ஓடத்தை கம்பியுட்டரின் கட்டுப்பாட்டில் விட்டு வாருங்கள். "

கீழ் தளம்.மூவரும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் நின்றிருந்தனர். கரிய வான்வெளியில் பிரகாசமான ஓரு வெள்ளை நிற சுழல் ஓன்று இருந்தது.அது இவர்களை நோக்கி வருவது போல இருந்தது.

"தினேஷ் அது எவ்வளவு தொலைவில் உள்ளது"-ஈஸ்வரி

"பத்தாயிரம் ஓளி வருடத்திற்க்கு அப்பால் உள்ளது. அது மிக வேகமாய் நகருகிறது."-தினேஷ்

"இதனை நம் கம்பியுட்டர் பதிவு செய்கிறதல்லவா.ஆகா அற்புதமாய் இருக்கிறது."-ஆதவன்.

"அதன் பிரகாசம் அதிகமாகிறதே. கேப்டன் நமக்கும்,அதற்க்குமுள்ள இடைவெளி குறைகிறது.
இப்போது எட்டாயிரம் ஓளி வருடமே இடைவெளி உள்ளது. நிமிடத்திற்க்கு ஆயிரம் ஓளி வருடமென்பது நம்ப முடியா வேகம்"-தினேஷ்

"மேஜர் நம்ப முடியாத விஷயங்கள் இங்கு நடக்கின்றன. கம்பியுட்டரை பாருங்கள், நகருவது அந்த சுழல் அல்ல. அது நாம். இந்த ஓடம் இத்தனை வேகத்திற்கு எப்படி எரிந்து போகாமல் உள்ளதென தெரியவில்லை. இந்த ஜீ-போர்ஸை நம் உடம்பு எப்படி தாங்குகிறதென்பதும் தெரியவில்லை. இனி நாம் செய்ய எதுமிருக்காதென நினைக்கிறேன்"-ஈஸ்வரி.

மூவரும் கண்ணிமைக்க முடியாமல் அந்த பிரமாண்டத்தை பார்த்துக் கொண்ருந்தனர். அந்த ஓளி சுழல் அவர்களுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவர்கள் உடல் லேசாக ஆரம்பித்தது.நினைவு குறைய ஆரம்பித்தது. எங்கும் வெள்ளை நிற ஓளி இருந்தது,உடலுக்கு உள்ளேயும்,வெளியேயும் அது பரவுவது அவர்களுக்கு தெரிந்தது.பனி சூரியனில் உருகுவது போல அவர்களது உடல் உருக ஆரம்பித்தது. ஆனால் வலியில்லா ஓரு நிலையில் இருந்தார்கள்.
நினைவு சுத்தமாக போனது.

ஆதவன் கண் விழித்தான். அந்த வெண்ணிற சுழல் காணாமல் போயிருந்தது. அகண்ட வெளியின் கரு நிறம் எங்குமிருந்தது. கம்பியுட்டர் சீராக இயங்கி கொண்டிருந்தது. அதற்க்கு உயிருட்டும் போட்டா செல்கள் செத்துக் கொண்டிருந்தன.என்ன மாயமோவென அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான் தினேஷை காணவில்லை. ஈஸ்வரி மட்டும் அரை நினைவில் முனகி கொண்டு இருந்தாள். மெல்ல நகர்ந்து அவளின் அருகே சென்றான்.

"கேப்டன் மெல்ல கண் திறங்கள்.இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம். "

"எங்கே இருக்கிறோம்?"

"ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓடம் குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளது.தினேஷைதான் காணவில்லை. "

"நமக்கு சிறிது ஓய்வும் உணவும் தேவை. தினேஷ் முதல் தளம்தான் சென்றிருப்பார்.நாம் அனைவரும் அந்த சுழலில் உருகுவதை கண்ணால் பார்த்தேன்.எப்போது இது போல் முழுதானோமென தெரியவில்லை. "

"ஆதவன் வெளியே பாருங்கள். பூமியை போல் ஓரு கிரகம் தெரிகிறது. அதே நீல நிறமாய் நாம் அதனிடமிருந்து மிக அருகிலிருக்கிறோம்."

"கேப்டன் அது என்னவென்று தெரியவில்லை. இது பூமியாக இருந்திருந்தால் நம் ஓடத்தின் கம்யுட்டர் பூமியின் சாட்டிலைட்டுகளும் தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. இன்னமும் நமக்கு எந்த தொடர்பும் இல்லையே. "

"இது பூமிதான் இங்கு பாருங்கள்.கம்பியுட்டரின் அளவுக்குறியிடுகளும்,எஞ்சி இருக்கும் போட்டோ செல்களும் சூரியனை தெளிவாக காட்டுகிறன. "

"கேப்டன் போட்டோ செல்கள் மிக குறைவான அளவே உள்ளன. நாம் அவசரகால ஊர்தியைதான் பயன்படுத்த வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் கம்பியுட்டர் சாக போகிறது.அதன் பின் இந்த ஓடம் மிக பெரிய சவப்பெட்டியாகதான் பயன்படும். நான் தினேஷை தேடி வருகிறேன்.நீங்கள் அவசர ஊர்தியை தயார் செய்யுங்கள். "

ஈஸவரி அவசர ஊர்திக்கு விரைய, ஆதவன் தினேஷை தேடி முதல் தளம் சென்றான்.அங்கு அவனை காணவில்லை. கம்பியுட்டரும் அவனையும்,ஈஸ்வரியையும் தவிர யாருமில்லை என்று சொல்ல குழப்பமாய் கீழே வந்தான்.

"கேப்டன் தினேஷை காணவில்லை.கம்பியுட்டர் அவர் ஓடத்தில் இல்லை என்கிறது. "

"தேட நேரமில்லை மேஜர்.இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓடத்தின் போட்டோ செல்கள் தீர போகிறன. உடனே வாருங்கள்"

ஆதவன் விரைவாய் வந்து கலத்தில் ஏறிக்கொண்டான்.

கேப்டன் ஊர்தியை எங்கு செல்ல பணிந்துள்ளிர்கள்.?

இந்து மகா சமுத்திரத்திலுள்ள நமது தளத்திற்க்கு செல்லுமாறு பணித்துள்ளேன். எல்லா தகவல் தொடர்பு சானல்களும் திறந்து வைத்துள்ளேன்.நீங்கள் தயாரா

நான் தயார். நீங்கள் கலத்தை செலுத்தலாம்.

அவசர ஊர்தி ஓடத்தை விட்டு வெளியேறியது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கலத்தில் அவர்கள் கண்ணை மூடி தினேஷிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அவசர ஊர்தியின் இஞ்சின்கள் அணைய கதவை திறந்து பார்த்தனர். தண்ணீருக்கு பதில் தரையில் இருந்தனர். அவர்களால் நம்ப முடியவில்லை. ஊர்தியின் குறியிட்டு கருவி அவ்விடத்தை இந்து மகா சமுத்திரவெனவே காட்டியது.

கேப்டன் என்னவிது கடல் காணாமல் போகிவிட்டது.

ஆமாம் ஆதவன்.இது பெருங்காடாக இருக்கிறதே.

வானம் தெளிவாக.காற்று சுகமாக இருக்கிறதே.

தொடர்பு கருவிகள் ஓன்று கூட பணி புரியவில்லை.

சாட்டிலைட்டுகள் எங்கே போயின

ஆதவன் இந்த ஊர்தியின் கணக்குபடி சாட்டிலைட்டுகளே இல்லை.

மக்களை தேடி நடக்க வேண்டியதுதான்.

நீங்கள் அந்த பயணத்திற்க்கு எடுத்து வையுங்கள். நான் அங்கு தெரியும் ஆப்பிள் மரத்திலிருந்து கொஞ்சம் பழங்களை எடுத்து வருகிறேன்.

ஈஸ்வரி போன இடத்தில் ஓரும் பேசும் பாம்பை பார்த்தாள்.

பின் ஆதவனும், ஈஸ்வரியும்,ஆப்பிள் பழத்துடன் ஓரு நெடும்பயணம் தொடங்கினர்.

Thursday, August 3, 2006

அவளும் நானும் மற்றும் ஓரு கேள்வியும்

இரவு அடித்த ஓல்டு மாங்க் இன்னும் கிறுகிறுவென்று இருந்தது. இன்னோரு கட்டிங் விட்டு கிங்ஸ் அடித்தால் பரவாயில்லையாக இருக்குமென தோனியது.

"ஆரத்தி எடுத்துக்கங்கோ"-குரல் கேட்டு கண்ணை திறந்தால் குருக்கள் ஆரத்தியை காட்டிக் கொண்டு நின்றிருந்தார். தொட்டு கண்ணில் ஓற்றிக் கொண்டு சன்னதி விட்டு வெளியே வந்தேன்

"டேய் தூங்காதேடா. இந்த கருமத்துக்குதான் வராதேனு சொன்னேன்"-சண்முகம் கோபமாக கூறினான்.

"குளிச்சியாடா" - அரவிந்தன்

"பாத்ரூம்குள்ள போய்ட்டுதான் வந்தான்"- சண்முகம்

யாரும் என் பதிலை எதிர் பார்த்ததாய் தெரியவில்லை. எனக்கும் பதில் சொல்ல முடியவில்லை. தலைவலி பின்னி எடுத்தது. ஒரு கட்டிங் விட்டே ஆக வேண்டும்

அது கல்லுரியின் கடைசி வருடம். காம்பஸ் இன்டர்வியுவில் சண்முகத்துக்கு வேலை கிடைத்திருந்தது. கோவில் போய் விட்டு சினிமா போகலாமென பேசிக்கொண்டதால் நானும் கிளம்பி விட்டேன். சண்முகத்தோடு வெளியே வந்தால் எல்லா செலவும் அவனதே. சாப்பாடு, சினிமாக்கு ஆசை. அதனால் கோவிலுக்கும் வர வேண்டியதாயிற்று. சண்முகத்திற்கு தோழர்,தோழியர் வட்டம் சற்று பெரிது. எனக்கு வட்டமே கிடையாது. ஓரு புள்ளி மட்டுமே இருந்தது. அதுக்குள்ள ஓல்டு மாங்க் மற்றும் ஓசி தம் பக்தர்கள் கொஞ்சம் இருந்தார்கள். அவர்கள் அன்னியில் சண்முகம் மட்டும் அந்த புள்ளிக்குள் வேறு வழியில்லாமல் இருந்தான்.

அன்று கோவிலுக்கு சண்முகத்தின் நட்பு வட்டம் முழுதும் வந்து இருந்தார்கள். பஸ்டான்ட் பக்கத்திலுள்ள ஓரு கடையில் சாப்பாடு. இரண்டு கடை தள்ளி ஓரு ஓய்ன் ஷாப் இருந்தது.சண்முகத்திடம் காசு கேட்க முடியாது. திட்டுவான்.

"சண்முகம் ஓரு நெய் ரோஸட் சொல்லிடு. நான் ஓரு தம் போட்டு வரேன்"-நான்

"வெறும் ரோஸ்ட் சாப்பிடமாட்டியோ?"

"சும்மா சொல்லுடா.ஏன் கரையிற?"

"சரி . சரி வந்து தொலை."

தம்மை பத்து வைச்சி இழுத்தால் தலை வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. அப்போது அவள் என்னை பார்த்து வந்தாள்.அவள் பெயர் ரம்யா.என் வகுப்புதான். இந்த நான்கு வருடங்களில் நாங்கள் அதிக பட்சம் நான்கைந்து வார்த்தைகள் பேசி இருப்போம்.என் யோசனை எக்ஸ்பிரஸ் வேகம் எடுப்பதற்க்குள் மிக அருகில் வந்துவிட்டாள். வாயில் இருந்த புகையை எந்த பக்கம் ஊதுவது என நான் முடிவெடுப்பதற்க்குள் ஹாய் என்றாள்.

"என்ன ரம்யா,சாப்பிடலயா?"- அவசரமாக கேட்டதில் புகை அவள் முகத்தில் பட்டது.அவள் முகம் சுருங்கியது.

எனக்கு என்னவோ போல் ஆனது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதுமென இருந்தது.

"நான் இப்பதான் ஆர்டர் பண்ணிணேன்.வர கொஞ்ச நேரமாகுமாம்.அதான் காத்தோட்டமா இருக்குமேனு வெளில வந்தேன்"-ரம்யா

"சாரி ரம்யா.புகை மேல பட்டிடுச்சு"-வேறு வழியில்லாமல் சிகரட்டை கீழே போட்டேன்.காலையில்தான் ரூம் மேட் சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு எடுத்து வந்திருந்தேன். ஓன்று போய் விட்டது.மனசுக்கு கஷ்டமாக இருந்தது. இவளை என்ன பண்ணலாமென யோசிக்கையில் திரும்ப ஓயின் ஷாப் கண்ணில் பட்டது.

"ரம்யா ஓரு இருபது ருபாய் சில்லறையாய் கொடேன்.வீட்டுக்கு ஓரு போன் பண்ணனும்.நூறு ரூபாய்க்கு கடையில் சில்லறை இல்லை. தியேட்டர்ல மாத்தி தாரேன்"- கேட்டு பார்த்தேன்.

"இந்தா வைச்சுக்கோ"-யோசிக்காமல் கொடுத்தாள். மனசாட்சி உறுத்த ஆபத்துக்கு பாவமில்லையென வாங்கி கொண்டேன்.

"நீ உள்ள போ ரம்யா. நான் போன் பண்ணிட்டு வந்திதிடரேன். சண்முகத்திட்ட சொல்லி என்னோட ஆர்டர் கேன்சல் பண்ண சொல்லிடு."

அவள் கடைக்குள் திரும்ப காத்திருந்து அவசரமாக போய் ஓரு கட்டிங் விட்டு வெளியே வந்தால் நல்ல வேளையாக யாரும் கடைக்கு வெளியே இல்லை. சரி தோசையிருந்தால் இரண்டு வாய் போடலாமென சாப்பாடு கடைக்குள் நுழைந்தால் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பினால் ரம்யா.

"எல்லாரும் பஸ்டான்ட் போயாச்சு. நான்தான் நீ போன் பண்ணிட்டு வருவேனு வெய்ட் பண்ணினேன்.வா போகலாம்."

எனக்கு அவளை பார்த்ததும் வாய் வழியா இதயம் வந்திடும் போல இருந்தது.

சண்முகம் சிவனாக மாறி என்னை எரித்து விடுவது போல் பஸ்ஸ்டான்டில் நின்றிருந்தான். பஸ் காலியாக இருந்தது. எல்லாரும் முன் வழியாக ஏற நான் அவனுக்கு பயந்து கடைசி சீட்டில் முலையில் உட்கார்ந்து கொண்டேன். முன்னால் உட்கார்ந்தவர்கள் எல்லாம் சிரிப்பும் பாட்டுமாக வந்தார்கள்.

"முன்னால வாடா"-அரவிந்தன்

"அவன் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கிமினு அங்க இருக்கான். இருந்திட்டு போறான் விடு"-சண்முகம்.

நான் வழக்கம் போல எதுவும் சொல்லவில்லை. நேற்றைய களைப்பும்,இன்றைய மப்பும் கலக்க எனக்கு அவர்கள் பேசுவது கொஞ்சம் மந்தமாய்தான் கேட்டது.

"எனக்கும் கொஞ்சம் காத்து வேணும்"-ரம்யா.

சொன்னதோடு மட்டுமில்லாமல் எழுந்து என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.கொஞ்ச நேரம் கழித்து அவள் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். மிக மெதுவாக பேசினாள்.மிருதுவாக பேசினாள். என்னை பார்த்து ஏதோ வேறு கேட்டாள். பஸ் ஓடும் சத்தம், பசியோடு வேறு காதை அடைக்க அவள் உதடு அசைவது மட்டும்தான் எனக்கு தெரிந்தது , பேசுவது புரியவில்லை.என்னால் ஓரு மாதிரி மையமாக தலை ஆட்டதான் முடிந்தது.அவ்வபோது அவளுக்கு கண் வேறு கலங்கியது.யாரும் பார்க்காத போது கண்ணை துடைத்துக் கொண்டாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.பேசினால் நாக்கு குளருமோவென பயம் வேறு.அடுத்த அரை மணி நேரம் ஓரு யுகமாய் இருந்தது. அவளை பார்க்கவும் பாவமாய் இருந்தது.என்ன கஷ்டமோவென இரக்கமாகவும் இருந்தது.

பஸ் விட்டு இறங்கவும் தலை சுத்தலும்,மன பாரமும் அதிகரித்து இருந்தது.ரம்யா பக்கத்திலியே இருந்தாள்.தியேட்டர் போய் படம் பார்த்து ஹாஸ்டல் போகும் வரை அவள் என்னை விட்டு நகரவில்லை,ஆனால் நல்ல வேளையாக எதுவும் பேசவில்லை. சண்முகம் மட்டும் என்னை அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.நானும் அவன் திட்டுக்கு பயந்து அவன பக்கம் போகவேயில்லை.

அதற்கப்புறம் இரண்டே மாதம்தான். கல்லுரி முடிய ஆளுக்கு ஓரு பக்கம் போயிவிட்டோம்.
கல்லுரியில் இருந்த மீதி நாட்கள் எல்லாம் பார்த்தால் சிரிப்பாள். நானும் ஓரு தூரத்தில் இருந்து சிரித்து விட்டு ஓட்டி விட்டேன்.அன்றைக்கு என்ன சொன்னாளோ அது ஓரு கேள்வியாகவே இருந்தது.

மூன்று வருடங்கள் கழித்து ரம்யாவை ப்ராங்பர்ட்டில் ஓரு கான்பரன்ஸில் பார்த்தேன். அதே சிரிப்பு. பழைய தோழர்களை பற்றி அக்கப்போர் பேசி முடிக்கையில் மீண்டும் அதே கேள்வி விக்ரமாதித்தனின் வேதாளமாய் வந்தது.அவளிடம் கேட்கலாமா? வேண்டாமா?

Tuesday, August 1, 2006

உறவுகள்

கடலை வருடி வரும் காற்று மாலை வெயிலின் இளம் சூட்டோடு இருக்க மெல்ல கடல் கால் தொட கை கோர்த்து நின்றிருந்தார்கள்.

இருபது நாளாச்சு உன்னை பாத்து. இருக்கவே முடியலடா கண்ணம்மா - அவன்

என்னாலயும் தான். வேற சிந்தனையுமே இல்லாம போயிடுச்சு.-அவள்

ஆமாம் ஏன் இன்னைக்கு லேட்?

கிளம்பும் போது அம்மா வந்துட்டாங்க, கண்ண்ன் வேற நொய் நொய்னு.

அடாடா.அப்புறம் என்ன பண்ணின. வர வர கண்ணன் தொந்தரவு தாங்க முடியல.

என்ன பண்றது அவ்வளவுதான் அறிவு.

கவிதையாய் மனசுடா உனக்கு. உன்ன போய் படுத்திக்கிட்டு

கவிதை ஆனதே உன்னாலதானே. கவலை படாதே. இன்னும் பத்து நாள்தான்.

சினிமா போலாமா?

ச்சீ போடா.அங்க போனா கைய வச்சிட்டு இருக்க மாட்டேங்கற.

என் சுடிதார் சொர்க்கமே, அங்கங்க கை பட்டா நீ குறைஞ்சிட மாட்ட.

மானங்கெட்டவனே. உருப்படாம பேசு. போகாட்டி விடவா போற. போலாம் வா.

ஆட்டோ பிடிக்கனும். வண்டியை ரிப்பேருக்கு விட்டுருக்கேன்

வரும் போது ஆட்டோல பயங்கரமா சார்ஜ் பண்ணிட்டான் தெரியுமா. பிராடு பசங்க
சான்ஸ் கிடைச்சா வாய்க்கு வந்த ரேட் கேட்கறாங்க தெரியுமா. ஏமாத்தறதுனா வெல்லக்கட்டி சாப்பிடற மாதிரி. நான் உன்ன பாக்க வர டென்ஷன்ல ஓன்னும் சொல்ல்ல.யாரும் உண்மையாவே இருக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க அவசரத்தை யுஸ் பண்ணி ஏமாத்ததான் பாக்கறாங்க.

அதனாலதான் இத கலியுகம் சொல்லறாங்க.கவலை படாதே கண்ணம்மா. வண்டி ஓட்ட சொல்லி தாரேன்.ஸ்குட்டி மாதிரி ஓரு வண்டி வாங்கிக்கோ. இந்த அவஸத்தையில்லாம் இருக்காது.

ஸ்குட்டியை சாக்கா வச்சி நீ ரொம்ப கனவு காணாதே. ட்ராபிக்ல வண்டி ஓட்டாதேனு விட்ல கன்டிசனா சொல்லிட்டாங்க. ஆட்டோதான் எனக்கும் பழகி போயிடுத்து.

மெல்ல கடல் மண்ணில் கால் புதைய நடக்க ஆரம்பித்தார்கள்.

அவள் போன் சினுங்கியது.

அடாடா வீட்லருந்து போன். ஓரு நாள் பிரியா இருக்க முடியல.

ஏங்க நொய் நொய் பண்ணாதிங்க. எனக்கு போன் பண்ணாதிங்க ஆபிஸ் மீட்டிங் இருக்குனு சொன்னேன்ல. நான் வர லேட்டாகும். நீங்க இந்தியால இருக்க போற இன்னும் பத்து நாள் வெக்கேஷன்ல குழந்தைகளோட வீட்ல இருங்க. சினிமாலாம் விசிடி வாங்கி பாத்துக்கலாம். அம்மா எனக்கு சாப்பாடு வைக்க வேண்டாம் சொல்லுங்க. ஈவினிங் லேட்டா தங்கறதால ஆபிஸ்லியே சாப்பாடு உண்டு. இப்ப போன வைங்க.நான் வீட்டுக்கு கிளம்பையில கால் பண்ணறேன்.-போனை வைத்தாள்.

யாரு? கண்ணனா-அவன்

ம்-அவள்.