Thursday, November 2, 2006

இலவசம்

இலவசமாய் கிடைத்தால்
இனிப்பாய்தான் இருக்கிறது
பனி போல் கரைந்தாலும்
பாவனையாய் சுகமுன்டு

மூன்று நாள் மழையில்
மூழ்கி போன வீட்டுக்குள்
ஓரு வேளை உணவுக்கும்
ஓட்டாண்டியாய் ஆக
வரிசையில் நின்று
வக்கனையாய் அரைபடி அரிசியோடு
வேட்டி சேலை வாங்கையில்
வாயெல்லாம் பல்தான் வருகிறது

இலவசமாய் கொடுத்தேன் என்றும்
இறைவன் நானே என்றும்
சுவரோட்டியில் சிரிக்கிறார்
சுந்தரமாய் தலைவர்
கையெடுத்து கும்பிட்டு
அடுத்த வருட மழைக்கு
அடியெடுத்து நாங்கள்

கர்ணணுக்கு பிறப்பில் உண்டு
கவச குண்டலம் உடலோடு ஒட்டி
எங்களுக்கும் பிறப்பில் உண்டு
வழிந்தோடும் தெருக்களும்
வாய்க்கரிசி இலவசமும்
வாழ்வோடு ஒட்டி

தண்ணீருக்குள் தலை முங்கி
மூச்சு தடுமாறும் வேளையில்
முடி பிடித்து அழுத்துபவன்
சிறிதேனும் வெளி இழுத்தாலும்
தயை கொண்டு
தானம் செய்தவனாகிறான்
இங்கு சலவை செய்த
சட்டை இல்லையானாலும்
மூளைகள் நிறைய உண்டு

No comments: