Thursday, November 29, 2012

சந்தை

ஒரு பொருள் அது புற வடிவம் கொண்டிருந்தாலும், அக வடிவமான சிந்தனை வடிவம் கொண்டிருந்தாலும் தான்  உற்பத்தி செய்ய பட்ட இடத்தில் இருந்து நகர்ந்து அதன் பயனர்களை சேரும் இடம் என்ன? உற்பத்தியாளரும் , பயனரும் சந்திக்கும் இடத்தினை சந்தை என்று சொல்லலாமா? அக பொருள் , புற பொருள் இரண்டையும்  பயனர், உற்பத்தியாளரிடம் இருந்து துண்டிக்க பட்டு உற்பத்தி பொருளை அனுபவிக்க (அக ரீதியாகவோ ,புற ரீதியாகவோ)   முடியும். டால்ஸ்டோய்சின் இலக்கியத்தினை வாசித்து பயன் அடையும் பொழுது  டால்ஸ்டாய்சின் பெண்களை குறித்த கருத்துகளை  சேர்ந்து சுமக்க வேண்டியதில்லை. டால்ஸ்டோய்சினை சந்தித்தோ, அறிந்தோ இருக்க வேண்டியதில்லை. அதே போல இன்று மின்சாரம் பயன் படுத்தும் பொழுது எடிசனின் எல்லா பிழைகளையும் சுமக்க வேண்டியதில்லை. 

இங்கு மூன்று புள்ளிகள்  உண்டு .

1. பொருளின் உற்பத்தி ( அகம் ,புறம் )
2. பயனர் (நுகர்வோர்?),
3. உற்பத்தி பொருளும், பயனரும் சந்திக்கும் இடம் ( சந்தை?)

உற்பத்தி பொருளும் , பயனரும் சந்திக்கும் இடத்தில் , இந்த உற்பத்தி பொருள் கையாளபடுவது முழுக்க முழுக்க பயனரை சார்ந்து உள்ளது. பயனர் தனது அக திறனால் உற்பத்தி பொருளினை கச்சா பொருளாக்கி அதனை மேம்படுத்தலாம் (நாராயண குரு, காந்தி ) , அல்லது உற்பத்தி பொருளின் மேல் அதிகார விளிம்புகளை (வைதீக பேரொளிகள், பல கம்யூனிச சர்வாதிகாரிகள்)  சுமத்தி அதை ஆயுதமாக்கலாம், அல்லது உற்பத்தி பொருளினை பயன் செய்ய தெரியாமல் போகலாம் , அல்லது வேறு வித முடிவுகளும் நேரலாம்.

இதை புற வடிவு பொருளுக்கும் சொல்லலாம் , அக வடிவ பொருளுக்கும் சொல்லலாம். கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட எக்ஸ் ரே , கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட ஆயுதங்கள் என இரு வேறு பொருள்கள், ஒரே கச்சா பொருளில் இருந்து சாத்தியம்.

அக பொருளின் சந்தை வடிவம் பலவாக இருக்க வாய்ப்பு உண்டு. சொல்ல தக்க சில வடிவங்கள். 

1. தனிப்பட்ட குரு -சிஷ்ய வாய்ப்பு  (மத்துரு தயிர்)
2. கல்வி நிலையங்கள் 
3. ஆய்வு மையங்கள் 

இன்னும் பல வடிவங்களும் இருக்கலாம்   

இந்த விதத்தில் பார்க்கும் பொழுது உற்பத்தியாளர், பயனர் என்பது நிலையான இடங்கள் அல்ல. சந்தையில் பங்கு பெரும் பொழுது வகிக்கும் பாத்திரமே. இன்றுஉற்பத்தியாளர் நேற்றோ , நாளையோ ஒரு பயனர் என்ற அளவில் சந்தையை சந்தித்தே ஆக வேண்டும். இன்றைய பயனர் நாளையோ ,நேற்றோ உற்பத்தியாளர் வடிவம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.  
  
உற்பத்தி பொருள்கள் பல ஒன்று சேர்ந்து புதிய உற்பத்தி பொருள் வடிவம் கொள்ளலாம். இதை புற வடிவில் ,அக வடிவில் இரு நிலைகளிலும் காணலாம்.  பயனர் உற்பத்தியாளராய் மாறும் சாத்தியங்கள் அதிகாரிக்கும் பொழுது, உற்பத்தி பொருள் கச்சா பொருளாய் மாறும் சாத்தியம் அதிகரிக்கும் பொழுது பயனரும்,உற்பத்தியாளரும் சந்திக்கும் புள்ளிகள் (சந்தை) அதிகரிக்கும்.சந்திப்பின் விதிகளை சந்திப்பவர்கள் கூட்டாக நெறி செய்து கொள்ளும் பொழுது 
சந்திக்கும் புள்ளிகள் நேர் பட இயங்க இயலும். 

Wednesday, November 21, 2012

ஒரு கதை

கதவடைத்து ஆண்டு பல ஆகி விட்டது.
இது ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம்
யாருக்கும் யாரையும் பிடிப்பதில்லை.
சொத்து பிரித்தால் ஓராணாவுக்கு மேல் யாருக்கும்
தேற போவதில்லை.
எனவே யாரும் எங்கும் போகபோவதில்லை.

பக்கத்து வீட்டு பங்காளி செங்கல் செங்கல்லாய்
வீட்டினை சரித்து மாற்ற சொன்னான்.
அவனை பொறுத்த வரை செங்கல் தான் உண்மை
வீடென்பது ஒரு பொய்.
வீடு செங்கல்லின் மீது சிமெண்ட் திணித்த மாயை

ஒப்பு கொண்டு துடிக்கின்றான் ஒன்று விட்ட தம்பி
வீட்டின் நிழலும் கூரையும் , அணைப்பும்
அனுபவிக்கும் ஒரு தருணத்தில்
செங்கல்களின் அடிமை தனம் குறித்து சொன்னான்
பின்னர் வடித்த சோறும் வறுத்த கறியும் தின்று தூங்கினான்
அவனுக்கு மதிய தூக்கம் மிக முக்கியம்
எழுந்த பின் ஒரு எழுபது பக்க உரை உண்டு.
செங்கல்லின் விடுதலை அவனுக்கு மிக பிடிக்கும்
வறுத்த கறியும் மிக பிடிக்கும். 

பங்காளி அவ்வப்போது இல்லத்தின் உறுதி  சோதிக்க
கடப்பாறைகளை அனுப்புவான்.
அவன் தொழிலே கடப்பாரை செய்வது ஆனது
நல்ல வருமானம். நல்ல தொழில்.
மிக்க மகிழ்வு அவனுக்கு.
அவனது ஒட்டின் கூரை அவனுக்கும் சரிய ஆரம்பித்தது .
அவனுக்கு நேரமில்லை சரி செய்ய
ஒட்டிலிலிருது உத்தரம் நோக்கி கறையான் வந்தது
கொல்லாமை என் கடமை
எனவே கறையான் என் நண்பன் என்றான்.

மச்சு வீடு கட்டி மாடி மேலே ஏசி போட்ட
நண்பரே கடப்பாரை தொழில் முதல் போட்டார்.
இரண்டு வீடும் இடிந்து போனால்
வட்டியும் வருமானமும் அவருக்கே.
கொண்டை மேல் இருக்கும் கொம்பினை
சொறிந்து ரத்த சூடு நாக்கினை நீட்டி எச்சில் கூட்டி
இன்பமாய் அவர் உண்டு

ஏதோ சேர்ந்து பிழைக்க சொல்லி ஒரு
பெருசு சொன்னதாய் ஒரு கதை உண்டு
எதுவும் செய்யாமல் பழமொழி சொல்லி
இருக்கும் கிழவி சொன்னது.
அப்பாவும் பங்காளியும் அந்த கோமாளி
கிழவனை அடிக்கவும் உதைக்கவும்
கிழவன்  சொன்ன சொல் திவசமும் செய்ய பட்டது
அப்பா அவ்வப்போது வாழ்க கிழம்  என்பார்.
கிழவன் படத்துக்கு மாலை போடுவார்
தனியே இருக்கும் பொழுது கிழ பைத்தியம் எனபார்.

கண்ணாடியில் பார்த்தேன்.
நாங்கள் புத்திசாலி போல என்றால்
அந்த கிழம் கோமாளி போலதான் இருந்தார்.



 

 
 
  




Wednesday, July 18, 2012

தமிழ் திருவிழாவும் , ஆசிரியர் பதிலும் -ii

நான் ஆசிரியராக நினைக்கும் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதமும் , அதற்கு ஆசிரியர் எழுதிய பதிலும்.

இந்த கடிதம் அதன் தொடர்ச்சியும், இறுதியும். இது ஆசிரியரின் கருத்து நிலையை மாற்ற வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு எழுத பட்டது அல்ல. ஒரு மாற்று கருத்து என்ற அளவில் சொல்ல படுகின்றது. உலகம் கருப்பு , வெள்ளை அன்று என்பதும் ஆசிரியர் சொன்னதே.

ஆசிரியருக்கு,


  வணக்கம். தங்கள் பதில் கண்டேன். நன்றி. தமிழின் மசாலா பண்பாடு , மேடை பேச்சு மேல்தான் வளர்ந்தேன். தங்களது  "யூத்"  கட்டுரையில் எழுதப்பட்ட  "யூத்"  என்னும் அளவில்தான் அறிவு முதிர்ச்சி இருந்தது. அந்த தவறுகள் முதலில் உள்ளத்தில் ஒரு போதாமையை கொடுத்தன. நிறைவு இல்லை. அந்த போலித்தமான பூச்சு வேலைகள் கொடுத்த மனச்சோர்வினை தங்களது சங்க சித்திரங்கள், விஷ்ணுபுரம் போன்றவை கடக்க  உதவின. அன்பு மனைவி இந்த புத்தகங்களை அறிமுக படுத்தி  இந்த பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தாள். இந்த வாசிப்பு ஒரு மன நிறைவினை கொடுத்தது. தொடர்ந்து உங்களை வாசித்து வருகின்றேன்.  நான் பழகி வந்த  மசாலா பண்பாட்டினை முடிந்த அளவில் தாண்டவே முயன்று வருகின்றேன்.

   இப்போது இந்திய பண்பாடு , மரபு முதலியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்டு. என் பழம் மரபின் மேல் ஒரு அதிகார அரசியல் படர்ந்து உள்ளது. அதை ஒதுக்கி இலக்கியத்தையும், இசையையும் காணுதல் தற்போதைய முயற்சி. நான் கடிதம் எழுதுவது பெட்னாவினை குறித்த தங்கள் கருத்தினை மாற்றி அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அல்ல.உங்களது கருத்து  உங்களது அனுபவதின் மீது , நம்பிக்கையின் மீது நீங்கள் உருவாக்கியது. நான் சொல்ல விழைவது ஒரு மறுபக்கம் உண்டென்பதினை மட்டுமே.




பெட்னாவில் சினிமா நிகழ்வுகள் இல்லை என சொல்ல மாட்டேன். இருந்தது. அது வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. எனவே அது இருக்கும். ஆனால் கீழ் கண்ட நிகழ்வுகளும் இருந்தன என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.


http://www.youtube.com/watch?v=vssynAcaLT0 ---- காவிய தலைவிகள் நாட்டியம்


http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk&feature=relmfu-- கண்ணதாசன் பாடலுக்கு நடனம்


http://www.youtube.com/watch?v=lmXGB4YYn4I&feature=related-- நீயூ ஜெர்சி தமிழ் சங்க நடனம்


http://www.youtube.com/watch?v=h1xyhDk1lAA-- சிலம்பாட்டம்


http://www.youtube.com/watch?v=icq_ahXTROk&feature=related- தமிழிசை (இதை நான் தவற விட்டு விட்டேன். இதில் நிறைய குழந்தைகள் பங்கு கொண்டன. நிகழ்ச்சி நிரல் பார்த்து  தெரிந்து கொண்டேன்)


http://www.youtube.com/watch?v=BQGqQ_Lw_HM&feature=related- வீணை இசை (இதை நான் பார்க்க வில்லை )


இன்னும் ஒரு அருமையான நாட்டிய நிகழ்வு இருந்தது. அதை பார்த்தேன். அதன் ஒளி காட்சி கிடைக்கவில்லை. இந்த நாட்டிய நிகழ்வுகள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் உச்ச வெளிப்பாடு அல்ல.
ஒரு தொடக்க நிலை அனுபவங்களே. ஆனால் இவை புலம் பெயர் குழந்தைகளின் வெளிப்பாடு. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க மண்ணில் வேறுபட்ட இடங்களில் வாழும் தமிழ் பிள்ளைகள் தங்களை முன்வைக்க அமைக்க பட்ட தளத்தில் நிகழ்த்தும் வெளிப்பாடு.இங்கு நாம் காண வேண்டுவது மரபு கலை வடிவங்களில் மன மகிழ்வை , கலை வடிவின் நுணுக்கத்தினை அல்ல. தமிழ் நாட்டில் வாழும் பெற்றோருக்கு இல்லாத ஒரு சிரமம் இங்கு புலம் பெயர் தமிழனுக்கு உண்டு. தமிழ் வெளிப்பாட்டு தளங்கள் எங்கள் குழந்தைகளுக்கோ, எங்களுக்கோ எளிதானது கிடையாது. அவர்கள் ஒரு சாதாரண உரையாடலை தமிழில் நிகழ்த்துவது அதிசயமாக உள்ள இடத்தில் மரபு கலை வடிவங்களில் தமிழ் காண விழைவது மிக கடினமான ஒரு காரியம்.


இதை தவிர குழந்தைகளுக்கான தமிழன் தமிழச்சி நிகழ்வு, இலக்கிய வினாடி வினா நன்றாக இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். அதன் ஒளி காட்சியும் கிடைக்கவில்லை. நான் குடும்பதோடு செல்லவில்லை. என் நோக்கம் எஸ்.ராவோடு நேரதினை செலவிடுவது. நான் பால்ட்டிமோரிலும் தங்கவில்லை. எனவே மூன்று நாட்களும் தினசரி ஒரு வழி 60 மைல் கார் ஓட்டம் , எஸ்.ராவுக்கு அருகில் இருக்க முயற்சிப்பது என நேரம் செலவாகியது.


நான் மிக மதிக்கும் சில குடும்பங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன . நான் இந்திய இசை  மரபின் தொடர்ச்சியாக மதிக்கும்  , தமிழ் கல்வி செயல்பாட்டில் பெரும் நேரம் செலவிடும் எனக்கு தெரிந்த குடும்பங்கள் தன்முனைப்போடு பங்கு பெற்றன. இங்கு உணவு கூடத்திலும் ,அரங்கிலும் ,அரங்குக்கு வெளியிலும் நான் பலரது உழைப்பையும் கண்டேன். இவர்களது செயல் எனக்கு பிடித்த விதத்தில் , எனக்கு பிடித்த தளங்களில் மட்டும் இருக்க வேண்டுமென நான் கோர இயலாது. ஆனால் எனக்கு விருப்பமான தளங்களிலும் கூட  உண்டு என்பதை கண்டேன். முன்பே சொன்னது போல இது ஒரு மன மகிழ் நிகழ்வு. தமிழ் நாட்டில் உள்ள உங்களுக்கு பெரும் கூட்ட சூழலில் பல தமிழ் குடும்பங்கள் ஒன்றாய் காண வேண்டும் என்பது ஒரு சிறு ஆசை போல இருக்கலாம் , ஆனால் அது புலம் பெயர் சூழலில் கொடுக்கும் மன நெகிழ்வு சொல்ல இயலாது. திரை கடலோடி திரவியம் தேட வந்து எங்கள் அம்மா ,அப்பா ,உடன் பிறப்புகள் விட்டு தள்ளி வாழ்கிறோம். இந்த வாழ்வு எங்கள் தேர்வே,யாரும் கட்டாயாய படுத்தவில்லை. இந்த தேர்வின் காரணமாய்   நிறைய திருமணங்கள் தவறவிட்டிருக்கின்றேன்.  மொட்டை அடித்தல் , காது குத்துதல் போன்ற சிறு நிகழ்வுகள் தவற விட்டிருக்கின்றேன். இங்கு மொத்தமாய் இத்தனை தமிழ் குடும்பங்கள் காண்கையில் கங்கையின் சங்கமதில் நீங்கள் சொன்ன மன நெகிழ்வே உண்டாயிற்று. கங்கையின் அசுத்தமோ. காசியின் நெரிசலோ முக்கியமில்லை. மனம் ஒரு விஸ்வரூப காட்சியை உருவாக்கி தருகின்றது. அது போலவே இங்கிருந்தது.


இங்குள்ள சில அரசியல்,அதன் வாதங்கள் , சினிமா வேகம் எனக்கு உடன்பாடில்லாமல்  இருக்கலாம் .ஆனால் அவை மட்டுமே அங்கே இல்லை.பிறவும் இருந்தன.  ஆனால் அவை இல்லாத ஒரு தமிழ் இடத்தினை தேடி காணுதல் புலம் பெயர் சூழலில் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. நிச்சயம் என் பெண் இழிவாக காணாத ஒரு தகப்பனாக இருப்பேன் என நம்புகின்றேன். நீங்கள் எனது ஆசிரியர், உங்கள் வார்தைகள்   சரஸ்வதி வடிவம். இது போல என்னை குறித்து சொல்லும் பொழுது சிறிது உறுத்துகின்றது .


ஏதோ ஒரு வகை அரசியலும் , அரசியல்பால் உண்டாகும் குறைபாடுகளும் எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா மக்கள் திருவிழாவிலும் உண்டு. வேறு வேறு வடிவங்களில், ஆனால் அதை காட்டி திருவிழாக்களை நிராகரிக்க வேண்டுமா?


அன்புடன்
நிர்மல்

Friday, July 13, 2012

தமிழ் விழாவும், ஆசிரியருக்கு எழுதிய பதிலும்

நான் ஆசிரியராக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள் பெட்னா நடத்திய தமிழ் திருவிழா குறித்து எழுதியது மன வருத்தம் தந்தது.  இது நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதம்.


ஆசிரியருக்கு,

வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ் சுழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள் ,வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைகைக்கு ஏற்றது போல அதை வெளி படுத்தவும் செய்கிறனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைபையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.



இது ஒரு தமிழ் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரை தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு

தெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னை போல் மொழி பேசும் ஒருவனை , என்னை போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகதினை கண்போமா எனபது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு கானினும் தமிழ் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லா பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகதின் அனைத்து தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்கு தோன்றியது.



தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினை குறித்து எஸ்ரா பேசினார். அவருக்கு பின்னர் சுதந்திர போராட்ட அனுபவங்கள் குறித்து நல்ல கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்க்கு பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்து பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்கு கடிதம் எழுதியவர் இதை குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்கு படவில்லை.



ஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றி காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்து பேசினார், இலக்கிய வினாடி வினா நட்ந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.



இந்த நிகழ்வு நன்றாக நடக்க எனக்கு தெரிந்த வகையில் சில தன்னார்வ  நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாக படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்த தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.



உதாரனத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கதிலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை அவர் கொளுத்தும் 104 வெய்லில் காருக்கும் உணவு கூடதுக்கும் சுமந்தலைந்தார். அவர்

உழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசதில் அவர்கள் உள்ளம் இருந்ததை கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.



அமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லா தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலது உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்கு திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அனைவருக்குமான பொதுவான ஒரு நிகழ்வு.



நிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு  விழாவில் கலந்து கொண்ட பார்வையாளன் என்ற அளவில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டென காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவ்ளுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரை காணும் தருணங்களில் ஒன்று.



அன்புடன்

நிர்மல்

Tuesday, July 10, 2012

தக்ஷிணாமூர்த்தி தருணங்கள்

இரு ஆண்டுகள் முன்பு ஜெயமோகனை சந்தித்தேன்.  அவருடன் உரையாட போதுமான நேரம் இல்லை. மிக குறைவான நேரமே அவருடன் இருக்க முடிந்தது.  அது மறக்க முடியாத துவக்கம். ஆசிரிய பார்வையின் அவசியதினை அறிமுகம் செய்தது.


இந்த வருடம் இரண்டு ஆளுமைகளை சந்தித்தேன். சான்ப்ரான்சிஸ்கோ ராஜனுக்கும், பெட்னா தமிழ் திருவிழாவுக்கும் , கார்திகேயனுக்கும், திருமூர்திக்கும், பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி பல.

தமிழின் எழுத்து ஆளுமைகளான நாஞ்சில் நாடன், எஸ்,ராமக்ருஷ்ணன் இருவரையும் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. இவை எனக்கு  ஒரு தக்ஷிணாமூர்த்தி தரிசன தருணங்கள். புதிய பார்வைகள், புதிய கேள்விகள் , புதிய மொழி அனுபவங்கள் இவர்களால் வாய்த்தது. வணக்கதுக்கு உரிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 


இந்த தருணங்களின் தொடர்ச்சியாய் சில புதிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது.  அமெரிக்காவில் தமிழ் கல்வி ஒட்டிய செயல்பாடுகளும், தமிழக அரசியல் செயல்பாடும், பெரும் விழா கொண்டாட்ட மகிழ்வும், அதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் நண்பர்களின் தன்னார்வ  உழைப்பும் ஒரு பாடமாய் இருந்தது.

Wednesday, June 27, 2012

எல்லாம்

அமெரிக்காவில் கோடை காலங்கள் நீண்ட பகலையும், குறைந்த இரவையும் கொடுக்கும். இரவு சூரியன் மறைய ஒன்பது மணி கூட ஆகும். இது போன்ற ஒரு நாளில் இரவு உணவு முடித்து  ஒரு நடை நடந்து வரலாம் என கிளம்பினேன். பள்ளி கூடங்கள் எல்லாம் முடிந்து போனதால் என்ன செய்வது என தெரியாமல் ஆட்டம் இடும் எனது ஐந்து வயது வாரிசு முந்தி கொண்டு செருப்பணிந்து காத்து நின்றது. நானும் அவளும் நடந்து போக ஆரம்பிதோம். ஆரஞ்சு நிற சூரியன் மனதுக்கு இதம். நடைபாதையை ஒட்டிய குளம் போன்ற மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறைந்து  காற்று தொட்டு வீசியது. மகள் காற்றில் சிறகு விழும் பாவனையில் குதித்து நடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நிறைவான அனுபவம் தந்தது.

  "கொஞ்சம் நில்லுங்கள் " யாரோ அழைத்தது போல் குரல் வர திரும்பினேன்.

 ஒரு வயதான பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். வயது எழுவதுக்கு மேல் இருக்கலாம். வெள்ளை வேஷ்டி ,சட்டை போட்டு ஆறடிக்கு மேல் உயரமாக இருந்தார்.  கை கால்கள் தளர்ந்து முகம் சற்று சுருக்கமாக இருந்தது. நல்ல குறுஞ்சிரிப்பு ஒன்று முகத்தில் இருந்தது. யாரென தெரியவில்லை. யாருடைய தந்தையோ, யாருடையா மாமனாரோ   எனக்கு சட்டென தோன்றவில்லை.

"ஹையா தாத்தா" மகள் கண்கள் விரிய எம்பினாள்.   சட்டென முகம் மலர்ந்தாள்.

"யாரடி தாத்தா" கிழவர் முகம் சுளித்தார்.
 
"வணக்கம் யார் நீங்கள் ? உங்களை எனக்கு தெரியுமா?" குழப்பமாய் கேட்டேன்.

"என்ன சொல்கிறாய் ?" பெரியவர் சலித்து கொண்டார்.

"கால கோளாறு. அதுதான் குழப்பம்" - மகள் மீண்டும் காற்றில் கால்களை துளாவி கைகளை இலையுதிர் கால இலையென ஆக   முயன்றாள்.

மகளை பார்த்தேன் , இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தாள், ஒரு 20 வயது வடிவில் இருந்தாள். பயம் உடலெங்கும் வந்தது , படபடப்பானது, வலது கை வலித்தது, தலைக்கு ரத்த ஓட்டம் அதிகமானது, பைத்தியம் பிடித்ததா எனக்கு என தெரியவில்லை. ஐயோ என அலறினேன். சுற்றி நடை பயிலும் யாரும் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

"என் கண்ணே" என மகளை அள்ளி தூக்க போனேன். அழுகை ததும்பி வந்தது.
என்ன ஆனது என் மகளுக்கு என பயம் ஆட்டியது.

மகள் இன்னும் வளர்ந்திருந்தாள்,  அந்த கிழவர் இன்னும் இளமையானார். அவர் முகம் மிக குழப்பதில் இருந்தது. வானத்தில் இருந்து பனி பொழிய ஆரம்பித்தது.

"சங்கரா  இது நீ இல்லை"  என்றார் அந்த மனிதர்.

"நான் சங்கரன் இல்லையே" என்றேன். என் கால்கள் பூமிக்குள் புதைய ஆரம்பித்தன. அவை வெடித்து வேராக மாறுவது போல் இருந்தது.உடம்பின் எலும்புகள் வெடித்து வெளி வந்தன, அவை மரத்தின் கிளை போல மாறுதல்
கொண்டன. நான் உடைந்து ஆழ ஆரம்பிதேன். என் மகள் , மனைவி, பெற்றோர் ,வீடு, வேலை என எல்லாம் என்னை வீட்டு போக போவது உள்ளுக்குள் உலுக்கி எடுத்தது. என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. எங்கோ தொலைந்து போனது போல இருந்தது.  

"என்ன செய்கிறாய் இவனை" என கண்ணீரோடு   என் மகளிடம் அந்த மனிதர் கேட்டார்
    
அவள் சிரித்தாள். கை கால்கள் சுழன்றன. அவள் காற்றில் தன்னை கரைத்து மீண்டு வந்து வந்தாள், மேலும் சிரித்தாள்.

உற்று மகளை பார்த்தேன். என் அம்மா போல இருந்தாள். அவள் கண்ணில் கனிவு வழிந்தது. இரு  பற்கள் வெடித்து உதட்டின் வெளியே வந்திருந்தது.

" அஞ்சாதே" என்றாள். அவள் உதடுகள் பிரியவில்லை. ஆனால் என்னோடு பேசினாள்.

"அம்மா" என்றேன்.

கையில் வேல் எடுத்து என்னுள் கிழித்தாள். நான் ஒரு மரமானேன்.


   
         
     

   

சோமன் சரித்திரம்

சோமன் காலையிலிருந்தே ஒரு வித குதுகலத்திலிருந்தார். உண்மை, உழைப்பு, உயர்வு என உவன்னாவை விதவிதமாக உபயோகித்து பெரிய புரட்சி கட்டுரை ஒரு முழத்துக்கு எழுதியிருந்தார். அவரது எழுத்து திறமையிலும், பேச்சிலும் அவருக்கு தனி சிலாகிப்பு உண்டு. சீர்காழி கோவிந்தராசனை ஒத்த கணீர் குரலில் அவர் முழக்கமிடுகையில் ஊரே அசரும்.



இன வேங்கை சோமன் என அவரது அல்லக்கை வட்டராம் அவருக்கு பட்டம் அளித்து இருந்தது. இப்போதெல்லாம் அவரை யாராவது சோமன் என அழைத்தால் அவருக்கு ஒரு அவமரியாதையாகவே பட ஆரம்பித்ததுள்ளது. வேங்கையார் என்று அவரை அழைத்தலே அவருக்கு பிடித்திருந்தது.



அல்லக்கை வட்டாரம் அவரிடம் காரியம் சாதிக்க நினைக்கையில் எல்லாம் தென்னாட்டு வேங்கை, தமிழ்நாட்டு சிறுத்தை என வாயில் வந்த வார்த்தையெல்லாம் போட்டு பேசும் போது அவருக்கு முடியெல்லாம் சிலிர்க்கும்.




"பகுத்தறிவு வாழ்க. வேங்கையார் புகழ் ஒங்குக" - சப்தம் வெளியில் கேட்டது.



காலையில் கட்டுரை எழுதிவிட்டு சனிஸ்வரனுக்கு பூஜை செய்யும் வேளையில் கூட்டம் வந்தது வேங்கையாருக்கு எரிச்சலாய் வந்தது. ஆனாலும் வேறு வழியின்றி வெளியில் வந்தார். அடுத்த சனி பெயர்ச்சி வரும் வரையில் பிரதி சனி நெய் விளக்கு போடுமாறு ஆஸ்தான ஆருடர் கூறி சென்றதில் இருந்து விடாபிடியாய் கடைபிடித்து வருகின்றார்.



துவக்கத்தில் வேங்கையார் கடவுள் சிலையை உடைக்கவெல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார். முப்பந்தி ஐந்தாம் வயதில அவரது இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளைக்கு உடம்பு தொடர்ந்து சரியில்லாமல் போய் கொண்டிருக்கையில் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆருடரை சந்தித்தார். சும்மாவேனும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம் ஒன்றின் பெயரை சொல்லி மூன்றாவது கல்யாணம் கட்டினால்தான் குடும்பத்தில் நிம்மதி வருமென சொல்லி விட்டார். அதை கேட்டு அவருடைய இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையின் உடம்பினுள் இருக்கும் நோய் கிருமிகள் அதிர்ச்சியில் செத்து விட பையன் தெளிவாக ஆரம்பித்தான்.



தோஷ நிவர்த்திகாக வேறு வழியின்றி வேங்கையார் தன்னுடைய சாதியில் தனக்கு தொடுப்பாக இருந்த ஒரு பெண்மணியின் தங்கையை கல்யாணம் செய்து கொண்டார். பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு இது இடையூறாக இருக்குமென்பதற்காக இந்த திருமண விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக வைத்து விட்டார்.



புரட்சி வேங்கை வாசலுக்கு வந்த போது அங்கிருந்த அல்லக்கைகள் எல்லாம் இன்னமும் மகிழ்சியாகி பகுத்தறிவு வாழ்க பகுத்தறிவு வேங்கை வாழ்கவென விடாமல் சப்தம் கிளப்பின. வேங்கையார் கண்கள் உன்னிபாக எவனேனும் சப்தம் போடாமல் இருக்கின்றதா என ஆராய்ந்தது. மூன்றாவது வரிசையில் நின்ற மாவட்ட செயலாளர் ஒருவன் சப்தம் போடாமல் இருப்பதை மனதில் குறித்துக் கொண்டார்.




" என்ன எல்லோரும் நலமா? உங்களையெல்லாம் பார்க்கையில் உள்ளம் பூரிக்கின்றது. " - சிம்மக் குரலில் பேசினார்.


கூட்டம் அதற்கும் கைதட்டியது. ஆய் போனீர்களா என அவர் கேட்டால் கூட கை தட்ட பழக்க படுத்தப்பட்ட அந்த கூட்டம் பகுத்தறிவு கடவுள் வாழ்க என கூவியது.


கூட்டத்தின் மையபகுதியிலிருந்து வாயெல்லாம் பல்லாக நற்றுணை நாரயணசாமி முன்வந்து பொன்னாடையை போர்த்தினார். நற்றுணை என்ற ஊரை சார்ந்தவர். ரோடு போடும் குத்தகை விஷயமாய் மாதா மாதம் வருவார்.

( தொடரும் )


Tuesday, June 26, 2012

தமிழ் வழி நாத்தீகம்

 நாத்திகவாதம் எதிர்மறை மனநிலை மட்டும் உடையதா என்பதில் எனக்கு தொடர் கேள்விகள் உண்டு. நாத்தீகம் என்பது பல்பொருள் கொண்டது எனவே எனக்கு படுகின்றது. பொது வெளியில் கடவுள் மறுப்பு எனும் தளம் கொண்டு முன் வைக்க படுகின்றது. ஆனால் கடவுள் இருக்கலாம் ஆனால் நிறுவனமாக பட்ட மத அமைப்பு வேண்டாம் என்பதே நாத்தீக கொள்கை கொண்டவரின் உள் தேடல் என எனக்கு தெரிந்த தமிழ் நண்பர் வட்டாரத்தில் கண்டிருக்கின்றேன். ஆனால் அதை நண்பர்கள்  வார்த்தையில் சொல்லும் பொழுது கடவுள் மறுப்பு என முடிப்பர். இந்த இரு வார்த்தை முடிவுக்கு  காரணம்  லௌகீக வாழ்வில் விரிவான உரையாடலும் , உரையாடல் சார்ந்த தொடர் சிந்திப்பும் பெரும்பாலும்  இல்லை என நினைக்கின்றேன்.  பெரும்பாலான கருத்துகள் பொது நம்பிக்கை தளத்தில் நேர்ந்து விட பட்டுள்ளன. பொது நம்பிக்கை தனி மனிதர் அகங்காரம் சார்ந்தது. அதை  கையாளுவது அனைவருக்கும்  சுலபம் அல்ல. 

 நாத்தீகவாதம்  நகர கூடிய ஒரு தேர். பிருமாண்டமாய் அது  கட்ட பட்டு கிடக்கின்றது. அதை இழுத்து நகர்த்தும் பொறுப்பு உள்ளவர் முடங்கி போதலில் தேரும் பழுதானதாய் படுகின்றது. நாத்தீக வாதம்  நிறுவன உடைப்பு வாதம் எனும் பொருளில் முன் வைக்க பட்டு நகருதல் வேண்டும் என்று சில நேரம் படும். அந்த நேரத்தில்  கையில் உளியை வைத்து கொண்டு உருட்டி விளையாடி கொண்டு இருக்கின்றோமா என தோன்றும். உளியில் செயல் சிலையாய் பூத்தலில் உண்டு.

நிறுவனமாய் கூட்டபட்டு ,அதிகாரமும், மூலதனமும் தேங்கி அலையும் அமைப்புகளின் இயங்கு தன்மையை உடைத்து நெறி செய்யும் அமைப்பினையே நாத்தீகம் எனலாம். அது வெற்று கடவுள் மறுப்பன்று. கடவுளோடு அதற்கு பேச ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை தனி மனித உரிமை என பூரண  நாத்தீகம் உணரும். அது மறுப்பது நிறுவன அமைப்பின் செயல்தளத்தினையே.

நாத்தீகம் கடவுள் மறுப்பாய் குறைத்து நிற்கையில் அது உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை என உருவம் வரலாம் . ஆனால் அது உண்மையன்று. நாத்தீகம் அற வடிவினை, கருணையை ,அழகை  நிறுவன  அமைப்பின் வெளியே தேடுகின்றது ,இந்த தேடல் கவிதையை , கவித்துவதினை  கொடுக்க கூடியதே என  நான் நினைக்கின்றேன்.  

எல்லாவகை மன எழுச்சியிலும் தர்க்க முழுமை உடையவர் நடை முறை சாத்தியம் அல்ல எனவே படுகின்றது. அவ்வாறு உள்ளவர் பூரணம் ஆனவர் ஆவார். நாத்தீகம் கோரும் தர்க்கம் மன எழுச்சியின்  மறுப்புக்கு அல்ல, மன விரிவுக்கு என்பதே என் எண்ணம்.   

மரபு என்றால் என்னவாக இருக்கலாம்?

மரபு இரு வகையில் பொருள் கொள்ள கூடியது என்பது என் எண்ணம். ஒன்று நமக்கு முன் வாழ்ந்த கோடானு கோடி மனிதர்களின் அறிவு வடிவம், மற்றொன்று பொருளாதார,அதிகார  சிந்தனை ஒட்டி எழுந்த  அடக்கு முறை கொள்ளும் அரசியல் வடிவம் என புரிதல் உண்டு. ஜெயமோகனை  வாசிக்கும் முன் அரசியல் மட்டுமே கொண்டது மரபு என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அது மாறி விட்டது.

அரசியல் வடிவம் கொண்ட மரபினை எண்ணி 2006 ஆண்டு எழுதியது. இது ஒரு மன எழுச்சி கொண்டு எழுதிய கவிதைதான்.  

மரபு 
----------------------------
இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை

ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்

Monday, June 25, 2012

நிறுவனம் vs அநிறுவனம்

நிறுவனம் vs  அநிறுவனம் எனும் தரப்பினை ஒட்டி எழும் மோதலாய் பார்க்கலாம்.

நிறுவனமற்ற அமைப்பு எனபதை அநிறுவனம் என சொல்லலாம். அநிறுவன அமைப்பானது பன்மயமானது, பன்மைய விரிவுகள் ஒட்டியும் , ஒட்டாமலும் இயங்கும் தன்மை உடையது. மனித லௌகீகத்தின் மேல்
உண்டாகி வளர்ந்து வந்தது. நிறுவப்பட்டது அல்ல.தனி மனித , குடும்ப மற்றும் சமூக உள் உணர்வால் உண்டாகி இருந்தது. பொருட்கூறுகளின் அடுக்குகளோடு தொடர்புடையது. மாறும் மானுட அறகோட்பாட்டின் மேல் நிற்பது.


இந்த அநிறுவன அமைப்பினை மாற்ற  இரு நிறுவன அமைப்புகள் இயங்க முன் வருகின்றன. ஒன்று அநிறுவன அமைப்பு இயங்கிய அதே சூழலில் உருவானது, தொன்மையானது . அநிறுவன அமைபோடு நெடுங்காலம் உரையாடல் கொண்டிருந்தது. கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது. கொண்டும் , கொடுத்தும் இயங்கியது. ஆனால் இந்த நிறுவனத்தின் கோட்பாடுகள் அநிறுவன உறுப்பினர் கல்வி, மருத்துவம், சமூக ஒருங்கிணைப்பு போன்றவை மீது வளர்ச்சி பார்வை கொண்டிருக்க வில்லை, வளர்ச்சி பார்வை கொள்ளும் திறனும் அதற்கு அறவே இல்லை. ஒரு ஒட்டுண்ணி வடிவம் மட்டுமே கொண்டிருந்தது.அதன் கோட்பாடு சம நிலை சமுதாயம் எனபதை எழுத்து வடிவில் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது.

 இரண்டாம் நிறுவனமும் தொன்மையானது , வார்க்கபட்ட நிறுவன வடிவம் உண்டு.  அதற்கு   இலக்கு உண்டு, அளவீடு உண்டு, நிர்ணயிக்க பட்ட செயல்பாடு உண்டு, உறுப்பினர் பெருக்குதல் அதனுடைய
நிறுவன கோட்பாட்டினில் ஒன்று. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
 இரண்டாம்  நிறுவனம் கல்வி , மருத்துவம் முதலிய சமூக அடிப்படை தேவைகளோடு  அநிறுவன உறுபினர்களை அணுகுகின்றது. அவர்கள் உறுபினராகும் காலத்து இந்த பயன்பாடு பொருள்கள் குறைத்த பொருள் செலவில் கிடைக்கும் எனும் வழி முறை சொல்ல படுகின்றது. இந்த நிறுவனம் அதன் கோட்பாட்டினில் சமநிலை சமுதாயம் என்பதை எழுத்து வடிவில் அங்கீகரிக்கின்றது, நடைமுறை என்பது வேறு விஷயம்.


நுகர்வோருக்கு மூன்று  வழி முறை உண்டு. தங்களது அநிறுவன கோட்பாட்டில் நின்று நிலைப்பது. நிறுவனம் ஒன்றினை சார்ந்த ஒரு நிலைப்பாடு கொண்டு தனது அநிறுவன கோட்பாட்டினை வாழ்வாக கொள்வது. நிறுவன வடிவுக்கு முற்றிலும் மாற்றி கொள்வது.நுகர்வாளருக்கு
அதற்கான சுதந்திரம் இருந்தால் சரி.

இதில் இரண்டாவது நிறுவன அமைப்பு தனது பிரசார வடிவில் ஒன்றாய் அது தொகுத்த அறிவு வடிவதினை பொதுவில் வைக்கின்றது. அநிறுவன உறுபினர் அதனை பயன்படுதி தனது உள் பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது முதலாவது நிறுவனம் தடுமாறி போகின்றது. அதன் மங்கிய திறன்
கல்வியை சமூக செயல்பாடென இல்லாமல் தனி மனித செயல்பாடாய்
பார்ப்பது. ஆவனங்கள் தொகுப்பது, பெரும் கல்வி சாலைகள் அமைப்பது போன்றவை அதன் உள்ளே செயல்பாடாய் இருந்தது இல்லை. வரலாறு அநிறுவன உறுபினர்களோடு மேம்பட்ட உரையாடல் காண வழி செய்த கதவுகளை முதல் நிறுவனம் சேர்ந்தவர்கள் பல நேரங்களில் மூடி இருக்கின்றார்கள். அந்த தொலைந்த வாய்ப்புகள் குறித்தும் அறிவும் ,தெளிவும் இல்லை. முன்னோக்கு பார்வை குறைவான முதல் நிறுவனம்
கால வெளியை திருப்பி எங்கோ பின் கொண்டு சென்று அநிறுவன உறுப்பினர்களை ஒரு சொர்க்க பூமி இருந்தது என நம்ப சொல்கின்றது.
முன்னோக்கி செல்லவே எல்லோருக்கும் விருப்பம்.


 



   
            

Thursday, June 14, 2012

உருவ வழிபாடு எப்படி உண்டாகி இருக்கலாம்?

வழிபாடு என்பது என்ன? அது ஒரு கோரிக்கை. கீழிருந்து மேல் செல்வது. அது வெறும் கோரிக்கையாக மட்டும் இருக்க முடியுமா? அதில் ஒரு மரியாதை , அங்கீகாரம் இருக்கின்றது. அந்த அங்கீகாரம் தான் என்ற உணர்வினை கீழாகவும், தன்னை விட உயர்ந்த ஒன்றிடம் அகங்காரம் அற்று நிற்பதிலும் உள்ளது.

ஆதியில் மனிதனின் மிக பெரிய தேடலாக  உணவும் , இன பெருக்கமும் , குடும்ப உணர்வும் இருந்திருக்க முடியும். அதை பரிணாம சூழலில் விலங்குகளிடமும் காண்கிறோம். ஆனால் மனிதனுக்கு குடும்பம் தொடர்ச்சியானது, அது மனித விருதிக்கு  மட்டும் அல்ல. உணவு பசிக்காணது மட்டும் அல்ல. அதை விட மேலானது. இந்த சூழலில் உணவையும், குடும்பதையும் ஒட்டி ஒருவான லௌகீகமே , நுகர்வே மனிதனுக்கு வழிபாட்டை உண்டாக்க சாத்தியம்  அதிகம். பயம் என்பதை விட நுகர்வின் தேடல் மிக முக்கிய பங்கு கொண்டிருக்கும். தேடல் என்பது உள்ளம் , உடல் இரண்டின் உச்சம் வரைக்கும் மட்டுமே செல்ல முடியும் , அதை மீறிய தேடல் வரும் பொழுது கை பற்றல் தேவை படுகின்றது. அந்த கை பற்றல் தான் என்ற மனித சாத்தியதுக்கு மீறியதாக இருக்கிறது. அது கடவுளானது. மொழியும், சிந்தனையும் உருவாகி வளரும் காலத்தில் தொடர்பு மொழியாக குறியீடுகள் இருந்தன. அந்த குறியீடுகளே உருவ வழிபாடாகின.

வம்சம் விருதி செய்யும் பெண் தாய் தெய்வமானாள்.  அது ஒரு குறியீடு. வம்சம் விருத்தி அன்றைய வாழ்வில் மிக முக்கியம். வெள்ளாண்மையிலும்,வேட்டையிலும் ஆட்கள் தேவை. அது குடி தழைக்க அவசியம். ஜெயமோகன்  முன்பு எழுதிய ஒரு இயற்கை விவசாயம் பற்றிய கட்டுரையில் ஒரு மூத்த விவசாயி மண்ணின் மனத்தை( ஸ்பைரில்லம்)   வைத்து அது விதைக்கு தயாரவதை சொல்லி இருந்தார். ஆதியில் இது போன்ற உணவு உண்டாகும் நுட்பம் தெரிந்த மூத்தோர் ஒரு குடியின் பெரும் வரமாக இருந்திருப்பா். அவர்களது அந்த அறிவு இயற்கையின் நுட்பங்களை குறியீடாகியது. அதன் தொடர்ச்சியாக குல மூப்பரும் குறியீடானர். இதனுடே பரிணாம ரீதியில் மனிதனுக்கு அதிகாரம் நோக்கிய பார்வை உண்டு. கூட்டத்தின் தலைவனாதல் ஒரு ஆதி வேட்கையே. இந்த தேடலும், நோய் ,விபத்து போன்ற நிழவுகள் உருவாக்கும் கையறு நிலையும் பயத்தை குறியீடாக்க முயன்றிருக்கும் என நினைக்கிறேன்.      
 
மொழி வளம் பெரும் காலத்து , சிந்தனை வளரும் காலத்து குறியீடுகள் குல வழி ஆயிருக்கலாம். குஷ்புக்கு கோவில் கட்டியதும் ஆதி மன நிலையில் ஒன்றாக இருந்திருக்களோமோ என ஐயம் வருகின்றது.   அதிகாரம் மற்றும் ஆன்மீக தேடல் வலிமை கொண்ட பொழுது இந்த குறியீடுகள் கடினமாயின, விரிவாயின , ஆலயங்களுக்குள் சென்றன என நினைகிறேன். ஆன்மீக தேடல் குறைந்து அதிகார தேடல் மிகுந்தது, புதிய தலைமுறைகளில் பெரும் பாலோர்  குறியீடுகளை கவனித்தல் குறைந்தது, அவர்கள் குறியீடுகளை தொழ மட்டும் செய்தனர். புதிய பொருளியல் சமூகங்கள் வந்தன, அவை தங்கள் தேவைக்கு ஏற்ப குறியீடுகளை மாற்றின. தற்போது ஆயுத பூஜைக்கு டேப்லட் வைத்து வழி படுவது  அதில் ஒன்றுதான்.    
 
தான் , எனது என்ற உணர்வு  மனித  பரிணாமத்தில் உண்டாகும் , உண்டாகிய விளைவுகள் அதிகம்.  கூட்டு  சிந்தனை செய்யும் ஜெயமோகனின் பனி மனிதன் கதையில் வரும்   யதிக்கள் வழிபாடு செய்வதில்லை. அவர்கள் இயற்கையை மீறுவதில்லை. அவர்களே இயற்கையின் ஒரு உறுப்பென தங்களை உணர்கிறார்கள். அந்த இடத்தில அவர்களுக்கு குறியீடுகள் தேவை இல்லாமல் ஆகிறது.   

Wednesday, May 30, 2012

அங்கீகாரதின் அவசியம்

எதற்காக ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரதின் அவசியம் என்ன? எந்த நோக்கில் அந்த அங்கீகாரம் முக்கியம் பெறுகின்றது என கேள்விகள் எழுப்பி பார்க்க வேண்டி இருக்கின்றது. ஒரு கல்வி சார்ந்த அறிவு அமைப்பு பிறந்து தன் செயலூக்கம் மூலம் தன்னை பொது தளத்தில் முன் வைத்து , விவாத படுத்தி, தான் வளர்ந்து அதன் வளர்ச்சியில் மொத்த சமூகத்தினை உள்ளடக்கி அந்த சமூகத்தின் உற்பத்தி கூறுகளை தனது கல்வி சார் கருவிகளால் தொடர்ந்து மறு ஆக்கம் செய்து நகர்ந்து சென்று இருக்கின்றது. அந்த கல்வி அமைப்பு தன் நிறுவன வடிவதினை பிரதி செய்து பலவாகுகின்றது. தன் கருவிகளின் பலனை உற்பத்தி கூறுகளில் காணும் நேரம் அதனை ஆவணபடுத்தி அளவிடுகின்றது. அந்த அளவுகளை விரிவாக்கும் தளத்தில் தன் செயல் கூறுகளை மறு வடிவம் செய்கின்றது. விரிவு காணும் பொழுது தன் அமைப்பினை துறை சார்ந்து பிரித்து கொள்கின்றது. இந்த பிரித்து விரிதல் தொடர் செயல் ஆகும்பொழுது இந்த வகை கல்வி அமைப்பு அதிக அளவு சமூக பங்கெடுபினை கோருகின்றது. புதிய உற்பத்தி கூறுகள் கல்வியிடம் இருந்து முளைத்தது போல , புதிய உற்பத்தி கூறுகள் தங்களுக்கு வேண்டிய கல்வியையும் ஒரு உற்பத்தி பொருளாக்குகின்றனர். இந்த உற்பத்தி சாதனங்கள் அதற்கான முதலீட்டினை சார்ந்து உள்ளன. கல்விக்கான முதலீடு பெருகுவது கல்வி செயல் பாட்டார்களினை விட குறையும் பொழுது முதலீட்டு சார்ந்த ஒரு போட்டி உண்டாகுகின்றது. ஆவனபடுத்தபட்ட அளவீடு கருவிகள் முதலீட்டினை உற்பத்தி பெருக்கும் அமைபுக்கே செலுத்தும் செயல் ஏற்படுகின்றது. ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்த வகை  கல்வி சார் அமைப்பின் ஒரு செயல்பாட்டாளர். அவரது கல்வி அமைப்பு ஒரு மாபெரும் மானுட மாற்றதினை உண்டு செய்து உள்ளது, அதுவே அவரது அங்கீகாரம். அந்த மாபெரும் மாற்றம் எந்த வகை அற செயல் பாட்டினை மானுட மனதில் உண்டு செய்தது என்பது வேறு ஒரு தளம் சார்ந்த கேள்வி.

இதன் மாற்றான கல்வி அமைப்பு ஒன்று இருந்து இருக்கின்றது. அது பிறந்தது. வளர்ந்தது. பின்னர் சுவீகாரம் செய்ய பட்டது. இந்த வகை கல்வி அமைப்பு உற்பத்தி கூறுகளை பாதிக்காத தளத்தில் செயல் ஊக்கம் கொண்டிருந்தது. எனவே கல்வி, விவாதம் போன்றவற்றை நிகழ்த்திய தளம் பெருமளவு சமூக பங்கெடுப்பு தேவை இல்லாத இடமாக இருந்தது.  உற்பத்தி கூறுகளுக்கு வெளியே உள்ள அமைப்பு கல்வியை ஒரு விசேட பொருளாக மாற்றி, கல்வி நூல்களை ஒரு குறியீடாக மாற்றி விட்டது. போதிய ஆவண படுத்தலும், அளவீடு செய்தலும் இல்லாத காரணத்தினால் ஒரு தேக்க நிலையை ஒரு கட்டத்தில் அடைந்தது. பெரும் நிறுவன படுத்த பட்ட கல்வி அமைப்புகள் உண்டாகி நிரூபணம் சார்ந்த விவாத முறைகள் வரவில்லை. இந்த வகை கல்வி அளவீடுக்கு அப்பாற்பட்டது ஆகி, சமூக மன நிலையாய் இல்லாமல் , தனி மனித அனுபவமாகி விட்டது. ஒரு சமூக உறுப்பினன் தன் சுய தேடலால் மட்டுமே இந்த வகை கல்வி அமைப்பின் உள்ளே செல்ல முடியும். சமூக கூட்டு பங்கு தேவை இல்லை. இந்த கல்வி  அமைப்பு மூலதனம் திரட்டும் உற்பத்தி கூறுகள் குறையும் காலத்து மங்கி போகின்றது.
இரண்டாம் வகை கல்வி கூறு தனது உற்பத்தி சார்ந்த இடங்களில் நீண்ட கால செயல்பாட்டின் காரணம் கொண்டு ஒரு அறிவு தொகுப்பினை உண்டாக்கியது. ஆவண படுத்தும் கல்வி அமைப்பு அந்த தளத்தில் பெருமளவு இல்லாததால் அவ்வகை அறிவு தொகுப்பும் அதிக அளவில் இழக்கப்பட்டது.     

இந்த இரண்டு அமைப்புமே சாமான்ய தளம் , விசேட தளம் என இரண்டு அடுக்கு உடையது. ஆனால் முதல் கல்வி அமைப்பு புறம் சார்ந்தது, அது வலு காண்பது அதிக அளவு சமூக பங்கெடுபின் மூலமே. அது அவ்வகை சமூக பங்கேடுபினை கொண்டு வரும் கருவிகளை தொடர்ந்து உண்டு செய்து கொள்கிறது.  இரண்டாம் அமைப்பு புற கூறுகள் மாற்றாதது , அதன் விசேட தளம் மெல்ல இறுகி போன ஒரு அமைப்பாக மாறி போனது, அதன் குறியீடு வகை கல்வி சமூகத்தின்  பல இடங்களில் குறியீடாகவே தங்கி விட்டது. இந்த இரண்டாம் வகை கல்வி சார் ஒரு கருத்து முதல் வகை கல்வி அமைப்பின் பிரதிநிதியின் அங்கீகாரம் காண்பது மிக கடினம்.

இந்த இரண்டாம் வகை கல்வி அமைப்பு தன்னை நிறுவன படுத்தி கொள்வதன் மூலமும், மதம் சார்ந்த வடிவத்தில் இருந்து நகர்ந்து தத்துவ, நவீன கல்வி தளத்தில் நகர்த்தி பல வகை உரையாடல்களை உண்டு செய்வதன் மூலமே தன்னை  வலு செய்து கொள்ளலாம். தன்னை மிக பூடகமாக கருதி , மத அடையாளதில் கரைந்து  பெரும்பாலருக்கு புரியாத ஒரு தளத்தில் இருப்பதே  தன் பெருமை என நினைத்தால் அதன் வளர்ச்சி மிக கடினமே.                        
   
நாம் பெருபாலும் நிற்பது முதல் வகை கல்வி அமைப்பில்தான் அதனால் தான்  ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும் என நினைக்கிறோம் என படுகின்றது           

அறிவியல் ஒரு ஆழ்மன அக செயல்பாடா?

பண்பாடு , மானுட கூட்டு மனது  எனும் சமூக கூறுகள்  நிகழும்  அரசியல்  ,  பொருளாதார அமைப்புகள் கொண்ட புற அமைப்பானது   தகவல்கள், தரவுகள் என  தொகுக்க பட்ட கல்வி அமைப்பின் மீதே  அமைந்துள்ளது.  எது சமூகம் , எவர் சிந்திக்க  முடியும், எது கருத்து  என்பதும் ,ஒருவரது ஆழ்மனது இயங்கும் விசை, திசை  முதலியவை  அவரது  புற காரணிகளால் அமையும் சமூக இருபிடத்தாலும், சாத்தியதாலுமே  நிகழ்கிறது.   ஆழ்  மனது  சூனியத்தில்  இருந்து  கருத்தினை உருவாக்குவது இல்லை. கருத்தின்பால் வரும்  செயல் சூனியத்தில் நிகழ்வதில்லை.  
மனிதனின் இயல்பான  "ஏன்"  எனும்  வழி திறக்கும், திறந்த கதவுகள் அதிகம். இது ஒரு ஆதி கேள்வி. இது மனிதனை ஐந்தறிவு உயிரிடம் இருந்து வேறு படுத்துவது. ஆனால் இப்படி ஒரு கேள்வி எழும் உயரம் மானுட  புற காரணிகள் கொண்டே அமையும்.  ஏன் எனும் கேள்வி எழுப்பும் எவரும், கேள்வி எழுப்படும் எதுவும் தகவலாகவோ , தரவாகவோ உரு மாறி நிற்பதில்லை. எனவே ஏன் எனும் தருணமே எல்லாவற்றுக்கும் சிறப்பு  என சொல்லி விட முடியாது. ஒரு தொடர் செயல் பாட்டின் வழியே மட்டுமே அது தரவாக, தகவலாக மாற்ற படுகின்றது.  செயல்  பற்றி இல்லாமல் துவக்கதினை மட்டும் சொல்வது மொத்த செயல் பாட்டையும்  குறியீடு மொழியில் மாற்றுவது 
போல் உள்ளது.
இது ஒரு தொடர் கதை.

ஐரோப்பா வழி கல்வி முன் வைக்க பட காரணம்

ஐரோப்பா மட்டும் முன் வர காரணம் அதன் மானுட இணைப்பு சக்தியே. அந்த இணைப்பு  காலனி ஆதிக்கம் வழி நடந்தது. அந்த இணைப்புக்கு தொழிற்புரட்சி நவீன அறிவியல் தொழில்நுட்பம்  முதலியவை கருவிகள்.  ஐரோப்பா இந்த கருவிகளை கையாளும் விதத்தினையும், இந்த கருவிகள் வழி மேலும் புதிய அறிவியல் , தொழிநுட்ப  வளர்ச்சியை  உண்டாக்கும்  விதத்தினை  கண்டு  கொண்டது. அது அதன் சிறப்பு.   
 
மானுடத்தின் புற கருவிகள் கொண்ட சார்பு மிக பெரியது. அவை  மானுட  கூட்டு  சமூகத்தினை மிக பெரிய சலனத்திற்கு ஆட்படுத்தி உள்ளன. இந்த புற கருவிகளே மானுட அறத்தினை காலம் தோறும் வலிமை கொள்ள செய்கிறன. அரசியல்  கோட்பாடுகளை  உருவாக்குகின்றன. இந்த புற கருவிகள்  "ஏன்" எனும் மானுட மனதினை  மேம்படுத்தும்  சாத்தியத்தின் வெளிப்பாடுகள் . வெளிப்பாடுகளை உருவாக்குவதை  மட்டும் ஐரோப்பா செய்ய வில்லை , அதனை பயன்பாடு பொருளாய் நடை முறை படுத்தி மானுட இணைப்பினை  முன் வைத்தது.
 
என்று சக்கரம் தேவை பட்டதோ , என்று நெருப்பின் உருவாக்கம் செயற்கையாக  சாத்திய பட்டதோ அன்றே புற கருவிகள் உருவாகி விட்டன. இன்று இணையம் ,  அதி வேக  விமானங்கள்  என பல வடிவங்களில் அந்த கருவிகள் மானுட இணைப்பினை வலு செய்கிறன.  புதிய அரசியல், பொருளாதார  கோட்பாடுகளினை மானுட இணைப்பு   தளங்களில்  உருவாக்குகின்றன.   குடிமை உணர்வினை உண்டு செய்கிறது.  
 
புற கருவிகள்  மானுட   விழிப்புணர்வினை   உண்டாக்குகின்றன.  உன்னை போலவே உணர்ச்சியும் , உரிமையும் உடையவன் உன் சக மானுடன் என்பதை உணர செய்கின்றன. தகவல் பரிமாற்றமும், தகவல் சேகரிப்பும், பகிர்தலும் புதிய உச்சத்தினை தேடி செல்கிறது. மானுட இருள் மனதை 
பதற செய்யும் அளவிற்கு , அதன் ரகசிய அறைகளை தட்டி தகவலாய் மாற்றுகின்றது. 
 
எல்லா வகை தகவல் சேகரித்து பகிரப்படும் அளவுக்கு   அதனை உள்வாங்கி அறிவாய் மாற்றும் திறம்  இன்னும் மானுட அமைப்புக்கு கூடவில்லை. இந்த வேகம் நிச்சயம் ஒரு பரிணாம  வளர்ச்சியை தூண்டும் என நினைகின்றேன்.  ஐரோப்பா கல்வி /அறிவியல் அமைப்பு இந்த வகை சாத்தியங்களின் ஆரம்பம். 
 
இந்த தகவல் தொகுப்போ, சேகரிப்போ அதன் வாடிக்கையாளர் தகுதி பார்த்தோ ,தரம் பார்த்தோ தன்னை விஷேட படுத்தி கொண்டோ வருவதில்லை. அது தொகுத்து கொள்ள காரணம் அது ஒரு தகவல் என்பதால் மட்டுமே. அது எல்லாருக்கும் சாத்தியம் படும் இடத்தில்தான்  உள்ளது.    
 
இந்த கல்வி அமைப்பு தகவல்களை , தரவுகளை புனித படுத்துவதில்லை. கருவறைக்கு கொண்டு செல்வதில்லை. அதை குறித்த விலக்கம் இல்லாமல் போகின்றது. விவாதம் சாத்தியமாகின்றது.  போட்டு நசுக்கினாலும் மனம் பதட்டம் அடைய வேண்டாம்.
 
இந்த வகை கல்வி அமைப்பில் தகவல்களினால் , தரவுகளினால்  கிடைக்கும்  மெய்ஞான  அனுபவங்கள் இந்த கல்வி அமைப்பின் வெளியே செல்கிறது. அவை  தனியே  தளம்  கொள்கிறன.  இந்த தனி மனித அனுபவங்கள்  கல்வி  தளத்தில் விவாத படுத்தபடுதல் அமையாது. கருத்துகள்  முடங்குதல் அமையும்.  ஒரு தனி மனிதனின் தனி அனுபவம் அவனுக்கே உரித்தானது, ஒரு புத்தகம் , கவிதை, ஓவியம், சிற்பம், கலவி,  தியானம்   உண்டாக்கும்  அனுபவம்  அந்த  மனத்தால்  மட்டுமே  உணர கூடியது. ஓப்பிடு இல்லாதது. அதை வார்த்தை கொண்டு வார்க்கலாம். அதை மற்றொரு மனது அதே தளத்தில், அதே அளவில்  உணர கூடுமோ என்பதை நிரூபிக்க இயலாது.   அதை அளவீட போதுமான தகவலோ , தரவுகளோ கிடையாது. 
 
எனவே தகவல்கள் தரவுகள் கொண்ட கல்வி அமைப்பு , மெய்ஞானம் என கருத படும் அமைப்பின் வெளியே இருப்பது அவசியம். அந்த மெய்ஞான தளத்தில் இருந்து  ஒரு புதிய தகவல் உண்டாக்க படும் போது  அது மெய்ஞான தளத்தில் தேங்குதல் அமையாமல் ,  அவை மீண்டும்   தகவலாக,தரவுகளாக தொகுக்க பட்டு கல்வி அமைப்புக்குள் கொண்டு செல்ல படுகின்றது  அதை ஐரோப்பா புரிந்து கொண்டது.  
 
சீனத்தின் கண்டுபிடிப்பு அங்கிகாரம் மறுக்க படவில்லை. ஆனால் அந்த கண்டுபிடிப்பின் சாத்தியத்தினை விரிவு செய்து நடைமுறை படுத்தி  பெருமளவு பங்கேற்பாளர்களை உள்ளே கொண்டு வந்து வலுவான கல்வி அமைப்பாய்  மாற்றி மானுட  இணைப்பினை செய்தது   ஐரோப்பா.     
 

வணக்கத்துக்கு உரியவர்களும், வணங்க படுவர்களும்

இந்த சமூகத்தில் வணக்கத்துக்குரியவர்கள் உண்டு, வணங்கபடுவர்கள் உண்டு. முதல் நிலை சிறந்தது, ஒருவரை அவரது கருத்து நிலைபாட்டின் படி பார்ப்பது. ஆசிரிய வடிவம் போல் இருப்பதுவணக்கத்துக்குரிய நிலைப்பாடு. அந்த இடத்தில் ஆசிரியரோடு  கல்வி உண்டு, விவாதம் உண்டு. அங்கு கற்று கொடுக்க படுவது சிந்தனையின்  எழுத்துக்கள்.  அந்த எழுத்துகளை தொகுத்து வார்த்தைகளை, வாக்கியங்களை அமைப்பது   நம் செயல். ஆசிரியரே மொத்த சிந்தனை அமைப்பையும் வார்த்து முளைக்குள் திணிப்பது இல்லை. சிந்திக்கும் தவம் நமக்குரியது. ஏதேனும் ஒரு காரணத்தால்  நம் செயல் வழி வரும்  சிந்தனை உடைவதால் நாம் உடைவதில்லை. புதிய சிந்தனை பழைய இடத்தினை நிரப்புகின்றது. முதல் சிந்தனையோடையின்  வழி இரண்டாம் கட்டம் நகர்கின்றோம்.
ஆசிரியரும் தனது சிந்தனை கல்வியை  மாற்றும் செயல் உள்ளவரே. புதிய  பாடங்கள்  உருவாக்கவும் , முன் வைக்கவும், தான்  முதலில்  சொன்னவற்றினை  மறு  பரிசீலனை  செய்யவும்  அவருக்கு உரிமை உண்டு. இந்த செயல்பாடு அவரை  வலிமை  செய்கிறது.  இதனால் கற்று கொடுத்த ஆசிரியர் காலாவதி ஆவதில்லை. அவர் இருகிறார். அவர் வணக்கத்துக்கு உரியவரே. 

மற்றொரு நிலைப்பாடு வணங்கபடுவது. இது ஒரு குறியீடாக மாற்றும் நிலைபாடு.  கேள்விகளை,விவாதங்களை அகற்றும் நிலைபாடு. இது  கோருவது  பக்தியை மட்டுமே. பிரார்த்தனைகள் மட்டுமே சாத்தியம். பிரார்த்தனை கல்வி அல்ல. பிரார்த்தனைகள் வரங்கள் மட்டுமே தர இயலும்.  பிரார்த்திக்கும் ஒன்றினை  கேள்வி கேட்ட இயலாது. பிரார்த்தனை சில நேரம் காதலாய்,கோபமாய் கூட வடிவம் கொள்வதாய் தோன்றும். அந்த வடிவங்கள் வெறும் பாவனையே. பிரார்த்திக்கும் ஒன்றினை தாண்டி செல்ல இயலாது. அதற்கு நம்பிக்கை இடம் கொடுக்காது.          
ஒரு கட்டத்தில் நாம் வணகுவது நமது அகங்கார செயல்பாட்டின் ஒரு வெளிப்பாடாய் மட்டுமே முடியும். நாம் வணங்கும் வடிவம் கேள்விக்கு உள்ளாகும் பொழுது உண்மையில் உடைவது நமது சொந்த அகங்காரமே. எந்த கேள்வியும் இல்லாமல் பக்தி வடிவில் தொகுக்கபட்ட நம்பிக்கை உடைகையில்    உடைவது நாமே. அதை கையாள்வது சுலபம் அல்ல. வணங்குவதை முன் வைத்து உரையாட முடியாது  அவ்வகை உரையாடல்  தனிப்பட்ட தாக்குதலாய் மனம் உணர நிறைய வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க  இரு வழி  உண்டு.
முதல் வழி நம்பிக்கையின்  மீதான  பொது  உரையாடலை தவிர்ப்பது. நம்பிகையாளராய்   இருக்கையில் அந்த நம்பிகைக்குள்  மட்டும் உள்ளவரோடு  உரையாடலாம்.
இரண்டாம் வழி வணங்கபடும் கருத்துகளை வணக்கத்துக்கு உரியதாய் மாற்றுவது.

மானுட தர்மம்

மானுட தர்மம்
-----------------------------------------------------------------------
மானுட  தர்மம்  என்பது மானுடன்  செய்யும் தொழில் அல்ல. மானுட தர்மம் என்பது மானுடனின் தேர்வு செய்யும் உரிமையே. பிரபஞ்சத்தில் ஒரு ஜீவாத்மா தன்னை ஒரு ஜீவாத்மா என உணரும் இடம் அந்த தேர்வின் பொழுதே.   அந்த இடத்தில இருந்து ஜீவாத்மா  பரமாத்மா இணைப்பு துவங்குகிறது என வைத்து கொள்ளலாம்.

இந்த தேர்வு செய்யும் உரிமை, அதன் முக்கியம்  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்  உணரபடவில்லை.  இப்போது அந்த கால கட்டத்தினை தாண்டி செல்கின்றோம்.      



 "நாம் எதைச் செய்தாலும் தாழ்வாக மட்டும் அல்ல, உயர்வாகவும் நினைக்காமல் அது சமுதாயத்திற்காக செய்யப்பட வேண்டும் "  எனும்   சமுதாயம் எனக்கு தெரிந்து அமைந்ததே  இல்லை.அது ஒரு காந்திய கனவு. முற்காலத்தில் ஒரு கணியன் அதே போல ஒரு  கனவு கொண்டிருந்தார்.
 
என்று குடும்பம் உருவானதோ அன்றில் இருந்தே  தேவைக்கு மேல் சாப்பிட்டு, கலவிக்கு விரும்பி,சொத்து  சேர்த்து ,  அதிகாரம் உண்டாக்கிதான் சமூகம்  லௌகீக வாழ்வு வாழ்ந்துதான் வருகின்றது.  என்று லௌகிக வாழ்வு சாத்திய பட்டதோ அன்றில் இருந்து உயர்வு தாழ்வு உண்டு.
  
இங்கு நான் முன் வைப்பது பொருளாதார சம நிலை சமுதாயம் அல்ல. நான் முன் வைப்பது சம நீதி , சம  வாய்ப்பு சமுதாயம் . வேலை என்பது சமுதாய சேவை அல்ல.  வேலை என்பது உருவானதே பொருளாதார கூறோடுதான். சில வேலைகள் கடினமான உடல் உழைப்பினை,
 மிக சிரமமான வேலை சுழலை, குறைந்த கூலியை, அதிக வேலை நேரம்  கொண்டவையாக இருக்கும் . சில வேலைகள் இவை போல் இருக்காது. சில வேலைகள் இவைகளுக்கு நடுவில் இருக்கும். ஒருவர்  இந்த  மூன்று  வகை  பட்ட  வேலைகளில் ஒன்றினை தனது விருப்பின் பேரில் தேர்ந்து எடுக்கும் பொது அதில் சிக்கல் இல்லை. அந்த வேலை அவர்களுக்கு நேர்ந்து விட படும்போதுதான் சிக்கல்.  அவர்களது குல தர்மமாக இருக்கும் போதுதான் சிக்கல்.
 
ஒரு சமூக உறுப்பினன்   தனது விருப்பத்துக்கு ஏற்ப தனது வேலையை தேர்வு செய்யவும், தேர்வுக்கு உண்டான தகுதியை தேடவும் வழி செய்யும் சமுதாயமே சம நீதி சம வாய்ப்பு சமூதாயம்.   சமூக உறுப்பினன்   முயற்சி வெற்றி ஆகலாம் , தோல்வி ஆகலாம். அது முக்கியம் இல்லை. ஆனால் அவ்வகை முயற்சி சாத்திய படல்   வேண்டும். இதைதான் தேர்வு செய்யும் உரிமை மானுட அறம் என்று சொல்லி இருந்தேன்.


 அறிவெனும் குறியீடு 
------------------  
 அறிவை தொழலாம். அறிவின்  முடிவின்மையை வணங்கலாம்.   அந்த முடிவின்மையை   சரஸ்வதி  என  குறியீடாக நினைக்கலாம்.
 அறிவின் தேடல் ஒரு தொடர் ஓட்டம்.அந்த ஓட்டத்தினை குறியீடாக்க கூடாது என்றே எண்ணுகிறேன். அறிவின் ஓட்டத்தில் வரும் ஆசான்கள், ஆவணங்கள்  அனைத்தும் குறியீடாக்கி வணங்கபட்டால்  எஞ்சி நிற்பது எது?.
அறிவின் சாரமாய் வரும் கருத்துகள் தொகுக்கபட்டு , விவாதிக்கபட்டு , உடைக்கபட்டு  முன்  நகர்தலே  மானுட வளர்ச்சி மையம். மானுட  அறம் என நாம் நினைப்பது இந்த அறிவின் வளர்ச்சியினால்தான் கட்டபடுகின்றது.