Saturday, July 29, 2006

சுகம்

தூங்கா இரவுகள்
அழுகையின் சப்தமோடு
அயர்வாய் உடம்பு
ஆனாலும்
சுகமாய்தான்
இருக்கு
என் மகளோடு



அண்மையில் பிறந்த என் மகளை நினைத்து எழுதியது. அவள் பிறந்த நாள் தொட்டு பகலில் அலுவலகம் செல்வதால் அவளோடு நேரம் செலவு செய்ய இயலவில்லை. இரவு நேரங்களில் கண் விழித்து என்னால் ஆன உதவிகளை என் மனைவிக்கும்,மகளுக்கும் செய்கிறேன். அப்போது தோன்றியது இது. இவ்வளவு விளக்கம் வேண்டாம் என நினைத்தேன். ஆனால் தேவைப்படுகிறது.

Friday, July 28, 2006

சந்தோஷம்

சிதறும் நீர்
துளியின் ஈரமாய்
மனசெல்லாம் சந்தோஷம்
என் செல்ல மகள்
சிரிக்கையிலே.

Saturday, July 22, 2006

சமூக நீதி

சாதி ஓழித்து
சமுகம்
காக்க கூட்டம்
கட்டி பேசியதில்
தன் சாதி விட்டு
பிற சாதி
ஓழிப்பதே
சமுக நீதிவென
தீர்ப்பானது

Friday, July 21, 2006

அக்கறை

தொலைக்காட்சி
செய்திகளில்
குண்டு வெடிப்பில்
யாரோ ஓருவன்
இறப்பின் நுனியில்
எங்கோ எவருக்கோ
எவர் மேலோ
கோபம்
பாவம் இறப்பவன்
இவனே
இவன் இறத்தல்
நலமா
இருத்தல்
நலமாவென
மேல்புல் விவாதம்
முடிவதற்குள்
நமக்கு
அடுத்த செய்தி
அடுத்த விவாதம்

Saturday, July 1, 2006

வலிக்கிறது

--
--சிறுகதை
--
கொஞ்ச நாள் முன்பு

மக்கா வெட்டனும்டா அப்பதான் தெளிவாங்க.-இது நான்.

இடம்- என் அலுவலக கேப்படிரியா

வெட்னா எப்படி சரியாகும்.அடிதடி அதிகம் தான் ஆகும்-அலுவலக தோழன்.

அப்படி இல்லடா. ஓரு பயம் வேணுமல்ல.இந்த மாதிரி ஓரு சான்ஸ் வரும் போது போட்டுடனும்.

உனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.

அட போடா.

இத விடு. என்னைக்கு ஊருக்கு போற.அதான் விசா,டிக்கெட்லாம் வந்துடுத்தே,எல்லாரிட்டயும் சொல்லிட்டு வல்லியா.

ஆமாம் மக்கா, போகனும், போறதினால வேல கூட போய்டுத்து. அடுத்த வார கடைசிதான் போவேனு நினைக்கிறேன். காரை கொண்டு போய் ஊர்ல போட்டு போறேன். இங்க இருந்தா ஆறு மாசம் ஓட்டாம வண்டி வீணா போயிடும்

தற்சமயம்

எரியும் கார் சீட்டின் லெதர் நாறுகிறது. கழுத்து வலிக்கிறது. திருப்ப முடியவில்லை. தூரத்தில் ஊருக்கு 30 கிலோ மீட்டர் போர்டு தெரிந்தது ,அது பக்கத்தில் பஸ் ஓன்று எரிவது தெரிகிறது. காருக்குள் நெருப்பு அனலடிக்கிறது. இனி அம்மா,அப்பாவை பார்க்க மாட்டேன் என தோனியது.கார் கண்ணாடி மூக்கில் குத்தி இருப்பதை பார்க்க முடிந்தது, ஆனால் அதை நகர்த்த முடியவில்லை. கை இருக்குமிடத்தில் இரத்தமே மட்டும் இருந்தது. கை எங்கேயோ காருக்குள் தான் விழுந்தது.

மக்கா வெட்னும்டா இவனுங்களை.-- வெளியில் பேச்சு சத்தம்.

இந்த பசங்களுக்கு நாம யாருனு தெரியுனும். நம்மலோடத எப்படிடா இவனுங்க கைய வைக்கலாம்.

போதும்டா.பெட்ரோல் வேஸ்ட் பண்ணாதே. மொனைல இன்னோரு கார் திரும்புது. அத புடி. கழட்டி பார்த்து ஆளை கொழுத்து. நம்ப ஆள்னா விட்டுடு.

அந்த கடைக்குள்ள இரண்டு பேர் பதுங்கறானுங்க வேற.அவனையும் பிடி.

யார் யாரோ ஓடும் சத்தம் கேட்டது.

காலில் நெருப்பு பிடித்துக் கொண்டது.கண் ஏனோ மங்கலாகுகிறது. என்னனு தெரியல்லை. சம்பந்தமே இல்லாமல் எனக்கு கேப்படிரியா பேச்சு நியாபகம் வந்தது.கழுத்தை ரொம்ப வலிக்கிறது.

நண்பன்

இருட்டாய் இருக்கையில்
நிழலாய் தெரிகிறான்
சுருக்கென வலிக்கும்
நெஞ்சுக்குள் அவனாடு
சில கேள்விகளும் இருந்தன.
ஏனடா நீ இறந்து போனாய்

---
மறந்து போனதாய்
நினைக்கையில்
நள்ளிரவின் திரைசிலை
அசைவுகளில்
அவன் பேச்சு கேட்கிறது.
ஏதோ சொல்கிறான்.
ஏன் செய்தேன்
என சொல்கிறானோ

----