Tuesday, December 11, 2007

ஏதோ ஒரு மாதத்தில் எழுதிய டைரி குறிப்புகள்

ஏதோ ஒரு மாதத்தின் மூன்றாம் நாள் எழுதியது
-----------------------------------------------------------
வெற்றுக் காகிதம் ஒன்று அந்த அறையின் மூலையில் கிடந்தது. அதீத வெறுமையோடு இருந்த அந்த வரவேற்பறையில் ஏதாவது எழுதிய காகிதம் ஒன்று இருந்தாலாவது கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமென நான் நினைத்தேன்.


படுக்கையறை கதவு காற்றில் அசைய உள்ளுக்குள் சத்தியவாணி தெரிந்தாள். படுக்கையோடு இருந்தாள். கண்கள் வெறித்திருக்க பேசாமல் இருந்தாள். படுக்கை அறைக்குள் நிறைந்த குளிர் வரவேற்பறைக்கும் கொஞ்சம் வழிந்து கொண்டிருந்தது.



கொஞ்ச நாளாய் சத்தியவாணிக்கும் எனக்கும் சேருவதில்லை. ஏதேனும் பிரச்சனை வெடித்துக் கொண்டே இருந்தது. அலுவலகத்தில் புதிதாய் வந்த பார்க்கவியுடன் பழக்கம் ஆன பிறகுதான் இந்த பிரச்சனையே. வீட்டுக்குள் நுழைந்தாலே தலை இடிபடும் அளவுக்கும் குரல் கேட்க ஆரம்பித்து விட்டது.



எனக்கும் பார்கவியுடன் சாதாரண நட்பாகதான் பழக்கம் ஆரம்பித்தது. சிறிது சிறிதாய் வளர்ந்து அவள் கணவன் இல்லாததை பயன்படுத்தி நேற்று மதியம் அவள் வீட்டுக்கு சென்று வந்த பின் எங்கள் உறவு வேறு நிலைக்கு வந்து விட்டது. யாருக்கும் தெரியாத ரகசியமாய் வைத்திருத்தல் பிரம்ம பிரயத்தனமாய் இருந்தது.


எனக்கு பார்கவியை விட்டு இனி இருக்கவே முடியாதென முடிவு செய்து விட்டேன். எனக்கு ஆனால் சத்தியவாணியும் முக்கியம். என் வாழ்க்கையில் சத்தியவாணி இல்லாமலும் இருக்க முடியாது. அவளுக்கு என்றைக்கும் உன்னுடனே இருப்பேன் என சத்தியம் செய்திருந்தேன். அதை மீறுவதில் விருப்பமில்லை.



ஏதோ ஒரு மாதத்தின் ஐந்தாம் நாள் எழுதியது
-----------------------------------------------------------

இன்று பார்கவி என் வீட்டுக்கு வந்தாள். வெறுமையாய் இருந்த வரவேற்பறை அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

"ஒரு டேபிள் , சேர் ,சோபா கூட இல்லாமல் வச்சிருக்கிங்க"- பார்கவி

"சத்தியவாணிக்கு இதுதான் பிடிச்சிருக்கு என்ன பண்ணறது?"- நான்

"ஒ அப்படியா?"- பார்கவி.

அடுத்து எங்களுக்குள் நடந்த உரையாடல் என் குறிப்புகளில் எழுதும் அளவுக்கு இல்லை. பார்கவி பேசுவது அவ்வளவு சுவையில்லை. சத்தியவாணி பேச்சில் அசத்திடுவாள்.

எல்லாம் முடிந்து படுக்கையில் அசந்திருக்கும் போது பார்கவி அந்த கேள்வியை கேட்டாள்.

"சத்தியவாணி எங்கே?"- பார்கவி.

சத்தியவாணியை பார்கவி சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்த ப்ளாஸ்டிக் பேகை வைத்து அவள் முகத்தை மூடினேன். கொஞ்சம் முரண்டினாள்.

அப்புறம் சொன்னேன்.

"இனி நீதான் சத்தியவாணி"- நான்.

புதிதாய் வாங்கி வந்திருந்த ஐஸ் பெட்டியை தயார் செய்ய எழுந்தேன். பழசெல்லாம் வேறு தூசு படிய இருக்கின்றது.

Wednesday, May 30, 2007

பண்ணை மன நிலை

தமிழக மக்களால் வாக்களிப்பட்டு தேர்ந்தெடுத்த முதல்வராய் இருப்பதால் மொத்த தமிழகத்தின் பிரதிநிதியாய் அவர் தன்னை முன் நிறுத்தி உள்ளார். அவரது சொல்லும் செயலும் தமிழக கலாச்சாரம் எனும் கட்டப்பட்டும் பிம்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருத்தல் நலம். மக்களாட்சி அமைப்பின் நான்காம் தூணாண பத்திரிக்கை அமைப்பை சார்ந்தவரை அடா புடா என்றழைத்து அதை பற்றிய குற்ற உணர்வோ மனசாட்சி உறுத்தலோ இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. கலாச்சார காவலர்களாய் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் புனித உருவங்களும் இது போன்ற செயல்களை கண்டு மவுனம் சாதிப்பது அவர்களது கலாச்சாரம் குறித்த அக்கறையை காட்டுகின்றது. அரசியலமைப்பை மதிப்பேன் என உறுதி எடுத்து கொண்டு ஆளும் நிலைக்கு வருவோர் அதனை பற்றிய அடிப்படை அறிவை கூட இழந்து நிற்பதும் அதற்கு வலுவாக ஜால்ரா தட்டும் நிலையில் மக்கள் மந்தையும் இருப்பது வேதனை தருகின்றது.

பரந்த சிந்தனையும், பகுத்தறிவு முன்னிறுத்தும் ஆளுமையும் கொண்ட அரசியல் வளராமல் வியாபார சிந்தனையுள்ள தனிநபர் புகழ் வளர்க்கும் குருட்டு பக்தி உள்ள ஜமீன் ரீதியான அரசியலே தொடர்ச்சியாக முன்னிறுத்தப்படுகின்றது. சின்ன ஜமீன் சிறு வயதிலேயே அடையாளம் காணப்பட்டு பண்ணை ஆட்களால் கவனிக்கப்படுகின்றார். பண்ணை ஆள் என்றைக்கும் ஜமீன் ஆக இயலாது. பண்ணையில் வலுவான நிலையில் குரல் உயர்த்தும் நிலையில் ஜமீன் குடும்பமே உள்ளது. பண்ணையாள் மனநிலையில் ஜமீன் வாரிசுகளை விமர்சிப்பதே பண்ணைக்கு செய்யும் துரோகமாக தோன்றும். பண்ணை என்றைக்கும் பொது சொத்தல்ல. பண்ணை என்றைக்கும் ஜமீன் குடும்பத்திற்கே. வர்ணாசிரம தன்மையுள்ள பிறப்பால் தகுதி நிர்ணயிக்கும் அமைப்பே உள்ளது. அடிமை தன்மை மூளையின் அடுக்குகளில் ஊரியுள்ள நிலையில் இதனையெல்லாம் சொன்னால் பிரச்சனை ஆகி விடும்.

கே.எஸ். ரவிக்குமார் , ஆர்.வி.உதயகுமார் படங்களில் காட்டப்படும் புனிதமான ஜமீன்களும், காலையில் வாசலில் நின்று துண்டை அக்கத்தில் வைத்து வாயெல்லாம் பல்லாக வணக்கம் சொல்லும் பண்ணை ஆட்களுமே நினைவுக்கு வருகின்றார்கள். அந்த திரைப்படங்களில் பண்ணையார் விமர்சனத்துக்கும் கேள்விகளும் அப்பாற்பட்டவர்.

போற்றி பாடடி பெண்ணே மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கக்கத்தில் பை வைத்துக் கொண்டு பண்ணையாருக்கு ஆலோசனை சொல்லும் நிலையில் கொஞ்சம் கும்பல் உண்டு. அந்த கும்பல் அதிக பட்ச இடம் அதுதான். பண்ணையாள் பண்ணைக்காக வால் இருந்தால் ஆட்டும் நிலையில் சித்தரிக்கப்படுவார். இந்த மனநிலை உள்ளவர்கள் பகுத்தறிவு குறித்து பேசும் போது வேடிக்கையாக இருக்கின்றது. இவர்கள் செயலும் வர்ணாசிரமும் வேறல்ல.

Monday, May 7, 2007

மேய்ச்சல்-8

அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதை மேம்படுத்த முயல்வது மக்களாட்சியின் முக்கிய அம்சமாகும். அரசியலமைப்பு என்பது நிர்வாக ரீதியாக குடிகளை காப்பாதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி குடிகளை விட பெரிதாவது கிடையாது. அதனை அடிப்போம், நொறுக்குவோம் என கூறுதல் விடலை பருவத்தில் அப்பா அம்மாவின் விதிகளை மீறுகின்றோம் என பெருமை பேசிக் கொண்டு வெண் சுருட்டு ஊதி உடம்பை கெடுத்துக் கொள்ளுவதுதான்.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர். அவர் இதுதான் கடைசி என்றெல்லாம் கெடுவெல்லாம் சொல்லி போகவில்லை. அவர் மாதிரி அரசியலமைப்பை பற்றி பேசும் போது கூறியது இது

"Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realise that our people have yet to learn it. Democracy in India is only a top-dressing on an Indian soil, which is essentially undemocratic."( நன்றி; ஆசியன் ஏஜ்


அரசியலமைப்பை சார்ந்த முதிர்ச்சியான அணுகுமுறை டீக்கடையில் கேட்டவுடன் டீ ஆற்றி தருவது போல் உடனடியாக வருவது கிடையாது. வளர்க்கப்பட வேண்டிய குணமே. எதிர்கால தலைமுறைகள் பாடப்புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமில்லாது அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவும் போதிக்க வேண்டும்.

தனிதனியே சிந்திக்க தெரிந்து கூட்டமாய் வாழும் சமூகத்தை உருவாக்குவதை விட ஒரே பொருள் சிந்திக்கும் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் உருவாக்குதல் எளிது. அதற்கு ஒன்றுபட்ட சமூதாயம் என மேல் பூச்சும் பூசிவிடலாம். வீணாய் பன்முனை சமுதாயம் சேர்ந்திருந்து கண்பட்டு போனால் என்ன செய்வது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பார்த்தால் தீர விசாரிப்பவன் சொல்வது பொய்யாகிறது. என்கவுண்டர் எனும் காவல்துறை கொலைகள் நாடெங்கும் உண்டு. எண்கவுண்டர் ஒரு கதாநாயக தன்மை கொண்ட குணமாகவே கருதப்படுகின்றது. அரசியலமைப்பை சுண்ணாம்பாய் வெற்றிலையில் மடித்து தின்ன இது போன்ற மனநிலை உதவும். சட்டம் சார்ந்த நியாயங்களின் மீது சாமான்யனுக்கு எப்படி நம்பிக்கை வரும், பயந்தான் வரும். அரசியலமைப்பும் அதை சார்ந்த நிர்வாகமும் சாமான்யனுக்கானதாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிக வலிமை உடையவர் மேலோர் என்ற பாசிச தத்துவமே வளரும்.

மதுரைக்கும், சென்னைக்குமான பங்காளி சண்டையில் களப்பலி இரண்டு (கோபி மற்றும் வினோத்) (தகவல் உதவி:தினகரன்). குடும்பத்தின் மேலாளர் ஏதாவது சிக்கன் குனியா இல்லவே இல்லை என சத்திய முழக்கம் செய்தது போல் ஏதேனும் ஒரு முழக்கம் செய்து விட்டு பொன் விழா, ஒராண்டு விழா, மூவாண்டு விழா என ஏதாவது ஒரு் விழா கொண்டாட போய்விடுவார். தொலைக்காட்சிக்கும் அதில்தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாகும். சண்டை காட்சிகள் இரண்டரை நிமிடந்தான் இன்பம். அடுத்து அலுப்பாகிவிடும். பெட்ரோல் குண்டுகள் வீசி பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதலாம். இது போன்ற தகவல்கள் அச்சமூட்டுகின்றது. காவல்துறை பல்குத்தி கொண்டு இருந்தது போல. பல் இடுக்குகள் சுத்தமாயிற்றா இல்லையா என முதல் தகவலறிக்கையில் தெரிந்ததா இல்லையா?

Sunday, April 29, 2007

ப்ரஸ்டீஜ்-திரைவிமர்சனம்

ஆங்கில படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன. அவ்வப்போது லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொலைக்காட்சியில்(தொடர்சியான மறு ஒளிபரப்பு) பார்ப்பதோடு சரி. முழு அளவில் போக்கிரி ஆரம்பித்த சகல தமிழ் திரைப்படங்களோடு வாழ்க்கை.

மதியின் ப்ரஸ்டீஜ் குறித்த விமர்சனம் படித்த போது இந்த படம் பார்க்காமல் விட்டது நியாபகம் வந்தது. இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்டோபர் நோலன் தரமான இயக்குனர். அருமையான திரைக்கதையோடு படம் நகர்கின்றது.

இரண்டு தொழில் முறை மேஜிக் வித்தைகாரர்களை குறித்த கதை. எடிசன், டெஸ்லா போன்ற மின்சார கண்டுபிடிப்பாளர்களும், எடிசனின் குரூரமான வியாபார தந்திரங்களும், டெஸ்லாவின் சிரமங்களும் பாத்திரங்களாக வருகின்றார்கள்.

லண்டனை மையமாக கொண்ட கதையில் தொழிலே வாழ்க்கையாகும் போது அதற்குன்டான விலைகளும், விளைவுகளும் படமெங்கும் வருகின்றது.

இரண்டு தனிமனித குறிப்புகள் படத்தின் பெரும்பகுதியில் வாசிக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குறிப்பில் இன்னோரு மனிதனின் குறிப்பை ்வாசித்த அனுபவங்களை சொல்லியிருக்கின்றான். அதை அந்த இன்னோரு மனிதன் ்வாசிக்கின்றான். நல்ல உத்தி.

கதையின் மேஜிக்கின் மூன்றடுக்குகளாய் கதையில் காட்டப்படும் ப்ளட்ஜ், டர்ன், ப்ரஸ்டீஜ் என நகர்கின்றது. எல்லா திரைப்படங்களுமே இதே மாயவித்தை காட்டிதான் பார்ப்பவர்களை கட்டி போட முயல்கிறார்கள். எனக்கு கிரிஸ்டோபர் நோலனின் மாயவித்தை பிடித்திருந்தது.

ஹு ஜேக்மேன் மற்றும் கிரிஸ்டியன் பேல் கதையின் மைய மாந்தர்களாய் நடித்திருந்தார்கள். ஸ்கார்லட் ஜோகான்சன் முக்கிய பாத்திரத்தில் வருகின்றார். மைக்கேல் கெய்னும் கதையில் உண்டு.

Tuesday, April 24, 2007

தகவலறியும் சட்டமும் அரசு அதிகாரிகளும்

தகவலறியும் சட்டத்தினால் சாமான்யர்களுக்கு பயனிருக்குமா என்ற கேள்வி வருகின்றது. தகவலறியும் சட்டம் பயன்படுத்த அமைப்பு ரீதியான முறையே சரியாக இருக்கும். அமைப்பும் வலுவானதாக இருக்க வேண்டும். தனி மனிதனாக அரசு அதிகாரிகளோடு மோதும் போது அதற்கான பிரச்சனைகள் உண்டு.

யூனியன், தொழிளாளர் நலம் எல்லாம் பேசும் போது வாய் கிழியும் அரசு அதிகாரிகள் கை நிறைய காசு வாங்குவதும், அதிகார கொம்பின் உச்சாணியிலிருந்து மிரட்டுவதும் அன்றாடம் பார்க்க கூடியதே. மிரட்டுதல் எளிது. எல்லோருக்கும் பலவீனம் உண்டு. கண்டுபிடிப்பது குதிரை கொம்பு கிடையாது. மத்திய தர வர்க்கத்திற்கு வேலை, குடும்பம் இரண்டுந்தான் பொதுவாக முக்கியமானதாக இருக்கும். தகவலறியும் உரிமையை தனிமனிதன் பயன்படுத்தும் போது இந்த இரண்டை குறித்த அச்சத்தை சுலபமாக அரசு அதிகாரிகள் அவரிடத்து கொண்டு வர இயலும். பாதுகாப்பு கேட்டு தனிமனிதன் ஒரு இழவும் செய்ய இயலாது. காவல் துறை நண்பன் கதையெல்லாம் எழுத்தளவில்தான்.

ரேஷன் கார்ட் விநியோகத்தில் நடக்கும் அலுவலக முறைகேடுகளை குறித்து தகவல் அறியும் சட்டம் வழி அனுகிய ஒருவரின் கதையை தகவல் அறியும் சட்டம் குறித்த மத்திய அரசின் வலைப்பதிவில் படித்தேன். சப்பை கட்டான காரணங்களும் இழுத்தடிப்புந்தான் அங்கு பதிலாக இருந்தது. கிராம புற அதிகாரிகள் அதிக தொடர்பில்லாமல் இருப்பவர்கள். அங்கேயே இந்த கதையென்றால், நகர் புறங்களை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கின்றது.

மணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து

மணி சங்கர் ஐயர் பற்றி பெரிய கருத்தெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை.
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையை படித்தேன். அவரது உரையியின் உள்ளடக்கத்தில் முற்றிலும் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அவரது கருத்துகள் சில கவனத்தில் கொள்ளக் கூடியவையே.

உரையின் முழுவதினை காண இங்கு செல்லுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மனித வள வளர்ச்சியும் தனிதனியே இயங்குவதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனித வள மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென அவர் குறிப்பிடவில்லை.

இன்னமும் 700 மில்லியன் இந்திய மக்களை ்பொருளாதார சீர்திருத்தங்கள் தொடமால் பொருளாதார பின்னடைவில் இருப்பாதாக என அவர் கூறியிருக்கின்றார். 50 மில்லியன் மக்களே இந்த புதிய பொருளாதார கொள்கையால் பலனடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். என் ஐயம் என்னவெனில் இப்போது இருக்கும் 700 மில்லியன் 750 மில்லியனாக இருந்திருந்து எல்லோரும் பொருளாதார ்பின்னடைவில் இருப்பதைதான் அவர் விரும்புகிறாரா என்ன? எந்த ஒரு திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியே வட்ட வடிவில் விரியும். இன்று வட்டத்திற்குள் 50 மில்லியனாக இருப்பவர்கள் எல்லாம் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனோடனு பிறந்தவர்கள் எனற வகையிலேயே மணிசங்கர் பேசுவதாக தெரிகின்றது. இந்த 50 மில்லியனில் நடுத்தர, கீழ்தட்டு வர்க்கத்தில் இருந்தவர்களும் நிறைய உண்டு என்பது அவருக்கு தெரியாதா என்ன? வரும் ஆண்டுகளில் சீர்படுத்தபட்ட ்பொருளாதார திட்டங்களை தொடர்ந்து பேணுவதன் மூலம் 50 மில்லியனை 100 மில்லியனாகவும் மாற்றலாம்.

சிங்குர், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் வந்த பிரச்சனை புத்ததேவ் பட்டார்சார்யாவின் நிர்வாக கோளாறே தவிர திட்டத்தின் குறை அல்ல. மணி சங்கர் தமிழ்நாட்டில் சீராக நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை மறந்து விடுகின்றார். நிர்வாக கோளாறு திட்டத்தின் குறையாக முன் வைக்கப்படுகின்றது. ஊழலும், முரட்டுதனமான நிர்வாகமும் கடவுள் வழிபாடு, ஐமின் வழிபாட்டில் ஊறி போன இந்திய கலாச்சாரத்தின் எச்சமே. மக்கள் ஆட்சி , மக்கள் உரிமை என்ற கருத்தியல்களை கொண்ட கலாச்சார மாற்றமே இதற்கு மாற்று. இடைவிடாது நந்திகிராம் முன் நிறுத்தி எதிர் மறை பிராச்சாரம் கட்டவிழ்த்து தமிழகத்தில் சிறப்பான முறையில் நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ்பின் நகர்த்துவது ஒரு வகை பிரச்சார தந்திரமே.

கோடிக் கணக்கில் திட்டங்களை போட்டு ்வறுமை அகற்ற ்நினைப்பதை விட திட்டங்கள் வழியே செல்வத்தை ்பெருக்க நினைப்பதே முக்கியமானதாகும். மான்யங்களும், உதவிகளும் படிக்கட்டுகளாக அமைந்து கீழ்தட்டு மக்களை உயர்த்த வேண்டுமே தவிர இரக்க வழி பிச்சையாக கருதப்படும் மேல்தட்டு எண்ணங்கள் தகர்க்க பட வேண்டும். ஏழை இருக்கின்றான், வறுமை இருக்கின்றது என மூலையில் உட்கார்ந்து புலம்பி ஆவது என்ன? எப்படி செல்வத்தை அவ்விடத்திற்கு கொண்டு செல்வது , அதறகான வழிகள் என்ன? என யோசிக்க தெரிய வேண்டும்.

7000 கோடி செலவில் ஒலிம்பிக் இந்தியாவில் நடப்பதை அமைச்சர் தவிர்த்து இருக்கின்றார். இது பாரட்ட பட வேண்டியதே. இந்த பணத்தை வைத்து ஒலிம்பிக் திருவிழா நடத்தி கிழிப்பதை விட இதை கொண்டு உருப்படியாக ஏதனும் செய்யலாம் என்பதை அவர் சொல்லியிருக்கின்றார். தேசிய பற்றும், பெருமையும் மனித வள குறீயிட்டில் இந்தியா மேல் வளர்வதில் உள்ளதே தவிர 7000 கோடி பணத்தில் ஒலிம்பிக் நடத்துவதில் இல்லை.

பணம் சேர்க்க நினைப்பதும், தொழில் முனைவதும், தொழிலில் வளர்வதும் குற்றமே என்ற மனப்பாங்கேதான் இது போன்ற பேச்சுகளில் தென்படுகின்றது. தொழில்களுக்கான முறையான விதிகளை உருவாக்குவது, அதை ஒழுங்காக பேணுவது, திறந்த , எளிய சட்ட அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி நடைமுறை படுத்தும் போது இது போன்ற மனப்பான்மை குறையும்.

Monday, April 23, 2007

சாமந்தி-i

"வேலை கிடைக்குமா?"- சாமந்தி கவலையுடன் இருந்தான்

"கவலை பட்டா மட்டும் கிடைக்கவா போகுது" - ஆறுதல் சொல்ல ஆசைபட்டான் கோதுமன்

" கேயான்களோடு வேலைக்கு போட்டி போடறது ரொம்ப சிரமம்டா. என்னதான் நாம மூளையில் சிப் வைச்சிகிட்டாலும், புராஸஸிங் சக்தி அவன்களுக்கு இயல்பா கூட போயிடுது" - சாமந்தி

கோதுமன் நல்ல வேலையில் இருந்தான். உணவும், உடை, உறைவிடம் மூன்றும் சம்பளமாக உண்டு. கோதுமன் வேலை செய்வது காய்கறி உற்பத்தி செய்யும் தொழிலில், கதிரியக்க பாதுகாப்புக்கு உட்பட்ட சிறப்பு வயல்களில் அவனுக்கு காய்கறி முற்றியதும் அறுக்கும் வேலை. எந்திரங்கள் பூரணமாக தடை செய்யப்பட்ட பகுதி அது.

கோதுமன்தான் அவனது மேலாளருக்கு இரண்டு வார உண்மை காய்கறி உணவை தருவதாக கூறி சாமந்திக்கு ்வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்ப செய்தான். மாத்திரை உணவு மட்டுமே சாத்தியமான சூழ்நிலையில் காய்கறி உணவு அரசின் சுழற்சி முறையில் குடிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. வருடத்திற்கு இரண்டு ்வாரங்கள் மட்டுமே காய்கறி உணவு கிடைக்கும்.

சாமந்தி கோதுமனோடு அரசின் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவன். சிறுவயதில் வயல்களை பற்றிய பாடங்களை சரியாக கற்காமல் கணிணியோடு பொழுதை ஒட்டி விட்டடான். பூமி-i மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு கணிணி துறை அறிவினை கொண்டு வேலை செய்து, வேலை ்தேடுவதால் அந்த ்துறை தேக்க நிலைக்கு வந்து விட்டிருந்தது. கேயான்கள் வந்ததும் கணிணியின் தேவையும் குறைய ஆரம்பித்து விட்டது.

அது பே.பி(பேரழிவிற்கு பின்) 200 வது வருடம். உலகம் பேரழிவை சந்தித்த பின் இரண்டு நூற்றாண்டுகள் ஆகி ்விட்டிருந்தன. உலக அழிவிற்கு முன் இருந்த மத ரீதியான வருட கணிப்புகள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டு இருந்தது. ஒரு சிலர் இன்னமும் அதை உபயோக படுத்தி கொண்டிருந்தாலும் பெரும்பாலோனார் அதை பயன்படுத்துவதில்லை.

பூமி-i ன் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பூமி-ii உடன் செய்த ஒப்பந்த அடிப்படையில் இந்த கால அளவே உபயோகப்படுத்த படுகின்றது.

பேரழிவு பூமியை இரண்டாக பிளந்து இரு துண்டுகளாக மாற்றி விட்டது. வானில் இருந்த வந்த கல் மோதி ஏற்பட்ட பாதிப்பில் சுனாமி , நில நடுக்கம் என பல வகை உப பாதிப்புகள் உண்டாகின. அதிக பட்ச கதிரியக்கம், சுற்றும் அச்சில் ஏற்பட்ட மாறுதல் காரணமாய் பூமியில் பரிணாமம் துரிதப்படுத்தப்பட்டு மனிதரிலிருந்து கேயான்கள் உருவாகி இருந்தார்கள்.

கேயான்கள் காமம், பசி, சோர்வு போன்ற உணர்வின்றி இருந்தார்கள். கேயான்களால் தங்களை பிரதி எடுத்துக் கொள்ள முடியும். பிரதி எடுக்கையில் அசல் அழிந்து விடும். உருவம் கிட்டதட்ட மனிதர்களை ஒத்து இருந்தது. கேயான்களின் மூளை திறன் மனிதர்களோடு பல மடங்கு ஆகிவிட்டு இருந்தது.

"காய்கறி வயல்களில் கேயான்களுக்கு என்ன வேலை? அவர்களுக்கு பசி கிடையாதே" - கோதுமனுக்கு வருத்தமாய் இருந்தது

" அரசுதான் எல்லோருக்கும் ஒதுக்காமல் வேலை தரும் நிறுவனமாய் தன்னை சொல்லிக் கொண்டு மனிதர் தலையை உருட்டுகின்றது. வர வர அரசு நிறுவனத்தில் கேயான்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது"- சாமந்தி

" சோர்வில்லாமல் வேலை செய்வதால் அரசு அவர்களை ஊக்குவிக்கின்றது. மனித இனத்தையே மனித இனம் கேள்வியாக்குகிறது. நீ வேண்டுமானால் பார் இன்னமும் சில நூற்றாண்டுகளில் கேயான்கள் ஆட்சிபீடம் ஏறி விடுவார்கள்" - கோதுமன்

" அப்படியும் ஆகலாம். உன் மேலாளரிடம் எனக்கு வேலை தருமாறு நீ வலயுறுத்த முடியாதா? "- சாமந்திக்கு இந்த வேலையும் கிடைக்காமல் ்போய் விடுமோ என்ற பயம் வந்து ்விட்டது.

" சொல்லிப் பார்கிறேன். உன் இரண்டு வார காய்கறி உணவையும் அவருக்கு தருவதாக போய் சொல்கிறேன். நீ அரசு பாதுக்காப்பு இடத்துக்கு போ. நான் இரவு வந்து சேர்கின்றேன்." - கோதுமன் ஆழ்ந்த யோசனையுடன் அலுவலகம் உள்ளே சென்றான்.

சாமந்தி கொஞ்ச நேரம் அந்த அறையிலேயே உட்கார்ந்திருந்தான். வேலையில்லாமல் இனபெருக்க உரிமம் கிடைக்காது. சில மாதங்களாக அவனுக்கு அதற்கான ஆசை அதிகமாகி விட்டிருந்தது. நேர்முக தேர்வில் ஆய்வாளார் கேட்ட எல்லா வினாக்களுக்கும், செய்முறை தேர்வுகளையும் நன்றாக செய்திருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்த கேயானை கண்டவுடன் நம்பிக்கை போய் விட்டிருந்தது.

என்ன செய்வது என்ற கேள்வியுடன் பாதுகாப்பு இல்லம் நோக்கி கிளம்பினான்
(தொடரும்)

Friday, April 20, 2007

பாவம் ஜெகன்நாதன்

ஜெகன்நாதன் எந்த சாதியோ
சாத்திய அறைக்குள்
அடிமை பட்டம் பூட்டப்பட்ட
ஜெகன்நாதன் என்ன சாதியோ
எங்கள் நிழல் அவனுக்கு தீட்டாம்
சாத்திய கதவுக்கு சொந்தகாரர்கள்
சாசனம் எழுதினார்கள்
சாசன கதவுக்கு வெளியே நாங்களும்
உள்ளே ஜெகன்நாதனும்

வாசிக்க தெரியாதவனா ஜெகன்நாதன்
செவிட்டு பயலாய் இருக்கின்றானா
சாசனமும் மறுக்கவில்லை
எங்கள் அழைப்பும் அவன் கேட்கவில்லை

ஊர் கூடி பேசி பார்த்தோம்
நாட்டாமைகள் சிலர்
எங்களுக்கும் பாத்தியதை உண்டென்றார்கள்
அதை கேட்டு அவனை பார்க்க போக
நிழல் பட்ட தீட்டெடுக்க இரண்டு நாள் பூசை

நாட்டாமைகளும் சிறையிருக்கும் ஜெகன்நாதனும்
சேர்ந்திருக்க வாழ்த்தி விட்டு
வேறு சாமி பார்த்துக் கொண்டோம்

நன்றி; ndtv.com

ஊர்

ரயிலோசை சடசடக்க
எழ வேண்டியிருக்கும்
புழுக்கம் நிறைந்த இரவின்
மிச்சம் கண்ணிலும் என்னிலும்
கட்டில் ஒட்டும் மேசை
காலில் தட்டாமல் எழ முடிவதில்லை

மெதுவாய் நகர்ந்து திண்ணைக்கு வர
ஆசைக்கு வைத்த வேப்பமர காற்று
ஆள் தழுவ
பக்கத்தில் துணைக்கு
பழைய புத்தமொன்றும் காப்பி தண்ணியும்
மதிய சமையலுக்கு
காய்தேடி வீராசாமி கடைக்கு நடை
எத்தனை வருடம் ஆனாலும்
இன்னும் பிடித்திருக்கிறது
எதையோ சுமந்து இறக்கி வைக்கும் நினைப்புண்டு

ஊருக்கு வரும் தினங்களுக்கான
ஊஞ்சல் உள்ளுக்குள் ஆடிக் கொண்டே இருக்கின்றது

மது

மது மனிதரிடத்து எப்போது சேர்ந்ததென தெரியவில்லை. புராணங்கள் தொடங்கி நவீன காலம் வரை எல்லா காலங்களிலும் உண்டு. கொண்டாட்ட காலங்கள், சோக சுமைகள் என்று மனித உணர்வின் முரண்பட்ட இரு நிலைகளிலும் சுலபமாய் பொருந்த கூடியது.

நான் வளர்ந்த மத்திய தர குடும்ப சூழ்நிலையில் அச்சமும், அருவருப்புமான குணங்களை கொண்டதாகதான் எனக்கு மது போதிக்கப்பட்டது . பெண்கள் மீது வன்முறை செலுத்துபவரும், குடித்து விட்டு தெருவில் உருளுபவரும் மட்டுமே பார்க்க முடிந்ததில் வேறு வடிவங்கள் கண்ணில் படவில்லை. இவற்றை தாண்டி மதுவை காண முடிந்தது திரைப்படங்களில்தான். பொதுவாக வில்லன்கள் குகையில்தான் மதுவிருக்கும். கதாநாயகன் சோகமடையும் போதும் மது அவனுக்கு தேவைப்படும். இயல்பான ஒரு விஷயமாகவே மது இருந்ததில்லை. இந்த சித்தரிப்பில் குப்பை கொட்டியதில் இதற்கு மேல் ்யோசிக்க முடிவதில்லை.


மது அருந்தாமல் இருப்பது புனித தன்மை உடையதாகவும், அருந்துவது குற்ற உணர்ச்சியை தூண்டுவதாகவும் கற்பிக்கப்பட்டது. புனிதம் தேவைப்படாத காரணத்தினால் மதுவுடன் சிநேகம் ஆரம்பித்து நீடித்தது. நுரைக்கும் பியரும், கொறிக்கும் கடலையும், காது மூளை நகரும் இசையும் பிடித்திருந்தது. கண்மண் தெரியாத போதை காரணமாய் தொலைத்த அனுபவங்கள் காண கிடைத்தன. அதன் வழியே நிலை மறக்க அருந்துதல் மது ரசிக்க தேவை இல்லை என முடிவானது.


நாள் போக்கில் போதையின் ரசிப்பிலிருந்து மனசு மதுவின் ருசிக்கு நகர்ந்தது. வேறு வேறு வகைகளுக்கு இடையேயான ஒப்பீடு அவசியமாய் பட்டது. மதுவுக்குள் முடங்கி போகமால் மதுவை பார்க்கும் நிலையில் இருக்கையில் அடிமையாகி வாழ்க்கை தொலைக்க வேணடியதில்லை.


உள்ளம் அடக்கி வார்த்தைகளில் கருமிதனம் காட்டும் தோழர் வட்டம் கூட புட்டியின் உடைப்பு இசையில் உடைய ஆரம்பித்து புட்டிகளின் எண்ணிக்கையோடு ்வார்த்தைகளை அதிகரிப்பதையும் கண்டிருக்கின்றேன். நான் , அவன், இவன், அவள் என்ற உள்மனக்கூடு கட்டிய திரைகள் அவிழ்ந்து தருணங்களின் ரசிப்பினை கூட்டுவதாய் உரையாடல்கள் நகரும். இத்தனை வார்த்தைகளை இது வரை இவன் பயன்படுத்தியேதே இல்லை என்ற அளவுக்கு பேசிக் களிக்கும் சுதந்திரம் மதுவினால் சிலருக்கு வாய்திருக்கின்றது.

அடித்தட்டு வாழ்க்கை நிலையிலும், மேல் தட்டு வாழ்க்கையிலும் மதுவருந்தல் இயல்பான ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை நிலையில்தான் புனிதம் கெடுக்கும் ஒரு அம்சமாய் மதுவருந்தல் உள்ளது. மது சிலருக்கு ஒவ்வாமல் போகலாம், சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம், அதனால் எல்லோருக்கும் அதே உணர்வு இருக்க வேண்டுமா என்ன?

க்ளாஸின் பனிக்கட்டிகளின் ஊடே இடம் தேடி ஒடும் விஸ்கியின் ஒட்டம் கவிதையாகதான் இருக்கின்றது திரவ இயக்கவியல் தெரிந்த நண்பனுக்கு அது பாடமாக இருந்தது. எதனிடமிருந்தோ ்விலகி ஒடும் கருவியாய் இல்லாமல் இயல்பான இளைப்பாறும் வேளையில் துணையாய் இருப்பதும் மதுவுக்கு சாத்தியமே.

இந்திய அணியில் அதிரடி மாற்றம்

உலக கோப்பையில் ரன் மற்றும் விக்கெட் எதுவும் எடுக்காத காரணத்தினால் இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக இந்திய அணி இனி வரும் போட்டிகளில் அபாரமாக விளையாட வாய்புள்ளதாக இந்திய கிரிக்கெட் போர்ட் எதிர்பார்க்கின்றது. ;-)

விளம்பரங்களில் விக்கெட்டுகளையும், ரன்களையும் அடித்து குவித்து
அணிக்கு தூணாய் நின்று மானம் காத்த சிங்கங்களான சேவாக், தோனி, சாகிர் கான் போன்றவர்கள் தங்களது வீரத்தை காட்ட பங்களாதேஷ் செல்கிறார்கள்.

அணியில் அரசியல் குழப்பம் இருப்பதால் உதவி கேப்டன் அறிவிக்கபடவில்லை. அரசியலும் ஊழலும் இல்லாமல் கிரிக்கெட் இருந்தால் பாரத கலாசார கேடாக போய் விடும் அபாயத்திலிருந்து அணி காப்பாற்ற பட்டதை கண்டால் மகிழ்வாக உள்ளது.


சுமாராக நெடுநாளாக விளையாண்டு கொண்டு ஏனென தெரியாமல் அணிக்குள் அவ்வப்போது நுழையும் தினேஷ் மாங்கியாவும், அதிரடி ஆட்டக்காரர் என தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் கவுதம் காம்பிரும் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுழல் பந்து, வேகப்பந்து, சுவிங் ஆகும் பந்து தவிர மற்ற பந்துகளை அடித்து துவைக்க போவதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உறுதியுடன் இறுப்பது மன ஊக்கத்தை அளிக்கின்றது.

Thursday, April 19, 2007

வேண்டும்

வறுமை ஒழிப்பென
வாயெல்லாம் பேச்சு உண்டு
இசங்கள் பல கொண்டு
முழம் போட்டு விற்பனையுமுண்டு
முழக்கங்கள் உள்ளே கரைந்து
போன பின்னும்
முழக்கங்கள் முடிவதில்லை
எதிர்த்து கேள்வி கேட்டால்
எதிரி முத்திரையும் உண்டு

தேசமென மருகும் போலிதனமும்
பணத்தினை வெறுப்பதாய் சொல்லும்
பகல் வேசமும் உண்டு
வாழ்க்கைக்கு முன்னேற
இரக்கத்தை தவிர வேறு எதுவும் தேவை
தின்னாமல் திருடாமல்
திட்டங்கள் தீட்டலும்
இசத்தின் கசங்கலில் சுருங்காமல்
இருப்பு கொள்ளும் இயங்கு தன்மை வேண்டும்

இதெல்லாம் இல்லாமல்
பேசிக் கிழித்தே வாழ்க்கை
பண்ண பார்த்தால்
எல்லோருக்கும் பணங்காய்க்க
ஏதாவது மரந்தான் முளைக்க வேண்டும்

Wednesday, April 18, 2007

மரபணு மாற்றமும் மக்களாட்சியும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT பருத்தியின் வர்த்தகமும் அது கிளப்பிய எதிர்மறை தாக்கங்களும் பல பத்திரிக்கைகளில் தகவல்களாக வந்திருந்தன. பருத்தியை போல் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அரிசி போன்றவற்றிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பயிரிட்ட இடங்களோ மற்றும் சோதனை முடிவுகளோ உயிர் தொழில்நுட்ப துறையினால் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் க்ரீன்பீஸ் நிறுவனம் கடந்த வருடம் இது தொடர்பாக தகவல்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வர தகவல் உரிமை அறியும் சட்டம் ்வாயிலாக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மத்திய தகவல் கமிஷன் மரபணு பரிசோதனை பயிர்கள் பயிரிடப்பட்ட இடங்களையும், அவற்றினால் உண்டான ஒவ்வாமை மற்றும் அதன் நச்சுத்தன்மை குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டம் 4.1(d)யின் அடிப்படையில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மக்களாட்சியில் நல்ல சட்டங்களும் அதன் முறையான நெறியாண்மையும் இருக்கையில் வர்த்தக நலனும், பொது மக்கள் நலனும் சமநிலைப்படுத்த படலாம் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்சி. அரசு வர்த்தக நிறுவனங்களின் பின்னால் நின்று முக்கிய தகவல்களை மக்களுக்கு மறுக்கும் போது சட்டத்தினை பயன்படுத்தி அதனை சரி செய்யலாம் என்பது மக்களாட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்று. மக்களாட்சி இல்லாத இடங்களில் இதற்கான விவாதமோ, சாத்தியமோ கற்பனைக்கு அப்பாற்பட்டது.

Monday, April 16, 2007

மதுரையில் ஒரு காப்பிக்கடை

கட்டியகாரனின் வடக்கு மாசி வீதி சுவராஸ்யமான பதிவு. மதுரையின் நுணுக்கங்கள் அழகாய் விவரிக்கப்படும்.

அவரது காபிக் கடை அனுபவத்தை பாருங்கள்


இப்படி ஈ ஓட்டும் கடையில் கணக்கு மட்டும் கம்ப்யூட்டர் பாணியில் இருக்கும். அதாவது முதலாளியிடம் காசைக் கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் மாஸ்டர் காப்பி போட்டுத் தருவார். இத்தனைக்கும் மாஸ்டரும் முதலாளியும் அருகருகில் இருப்பார்கள். காப்பியென்றால் சிவப்பு டோக்கன். டீ என்றால் பச்சை டோக்கன். இரண்டும் ஒரே விலை. சிவப்பு டோக்கனை வாங்கிவிட்டு டீ கேட்டால் ஸ்ட்ரிக்டாக மறுத்துவிடுவார் மாஸ்டர். டோக்கனை மாற்ற முதலாளியிடம் சிபாரிசு வேண்டுமானால் செய்வார். “நம்ம பையந்தான். தெரியாம காப்பிக்குப் பதிலா டீ டோக்கனை வாங்கீட்டான். டோக்கனை மாத்திக் குடுங்க“ என்பார் முதலாளியிடம். அவர்கள் பேசுவதைப் பார்த்தால் நாளைக்கே கவர்மெண்ட் ஆடிட்டர் வந்து, ஏன் டோக்கன் மாறியது என்று இவர்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்பதைப் போல இருக்கும்.

Sunday, April 15, 2007

ஆண்டைகள் உலகம்

கட்டம் கட்டி முன் பக்கம்
பதிவுகள் வர நட்சத்திர வாரம் மூலம் உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி.

வாசித்து கருத்துகளை பகிர்ந்த தோழமைக்கும் நன்றி.

நம் நாட்டின் நில அமைப்பு முறை சாதியத்தின் மேல் நிறுவப்பட்டது. நில உடமையாளர் சமுகத்தின் ஊடே நான் வளர்ந்த போது அவர்களின் சாதிய இறுக்கங்களும், ஆக்கிரமிப்பு தனமும் அந்த கட்டுகளை மீற வேண்டிய நிர்பந்தம் மற்றும் சிந்தனையின் அவசியத்தை உணர்த்தியது. ஆண்டைகள் என்று மிராசுகளை அழைப்பார்கள்.

இந்த கவிதைகள் அந்த வட்டத்தினை பற்றியது. இவை ஒரு மீள் பதிவே
----------------------------------------------------------------


ஊரிலே பெரிய வயல்
ஆண்டையோடது.
மேடைகளை கண்டால்
ஆண்டைக்கு மிக விருப்பம்
அன்னைக்கு
சட்டதிட்டங்களோடு ஆண்டை
சமூக நீதி பேசினார்
புள்ளிவிவரங்கள் எப்போதும்
நாக்கு நுனியில்
சோடாக் குடிக்கும்
இடைவெளியில்
ஆண்டைக்கு கோபம்
மனசுக்குள்
கோவணத்துக்கு
காசில்லாதனெல்லாம்
பள்ளிக்கூடம்
போனால் எவன்டா
வயலுக்கு அறுப்பு
அறுக்கறதென
ஆண்டை இருக்கும் வரை
சமுகநீதிக்கு கவலையில்லை

----

கட்டிலில் கிடக்கும்
அம்மாவுக்கு அள்ள
முனியம்மா வேண்டாம்
சூத்திர நாற்றம்
வேறாள் வேலைக்கு வேணுமென
சொன்னவரிடம்
காப்பி குடிக்கும்
ஆண்டை கேட்டார்
குளிச்சு கிளிச்சு
சுத்தமாதானே இருக்கோம்
கவுச்சியும் இல்லை
உங்க சாமிதானே எனக்கும்
எனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்
கேட்டதால் வேலைக்கு
ஆள் கேட்டவர் சொன்னார்
என்ன செய்யறது
எல்லாம் கர்மாதான்
நீர் சத்சூத்ராளாய்யா
சூத்ரனில கொஞ்சம் உசத்தி
ஆனா சூத்ரன்தானே
ஆண்டைக்கு ்வாலிருந்தால்
அன்னைக்கு ஆட்டியிருப்பார்
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி
முனியம்மா கூட்டம்
இன்னும் அவருக்கு கீழ்தான்

-----------

குறள் வழி சமுகம்தான்
ஆண்டைக்கு மிக விருப்பம்
ஆனாலும் ஆண்டைக்கு
எப்போதுமே ஒரு சந்தேகமுன்டு
அதனால் ஒருநாள்
புரியாத பாசையில் பூசை
கொடுப்பவரிடம் கேட்டார்
ஐயன் சாதியென்ன
உம்மதா எங்களுதானு
ஆண்டையின் சந்தேகத்தில் கூட
ஐயன் சட்டையில்லா சாதியில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
குறளுக்கும் உண்டோ தீட்டு
ஆண்டைக்குதான் எங்கேயும்
சமூகநீதி வேணுமே

அடுத்து என்ன?

அலுவலகத்திலும், பிற இடங்களிலும் அதிகமாய் பிரச்சனைகள் போதோ அல்லது பொறுப்புகள் கை மாற்றி விடும் போதோ பார்க்கும் ஒரு பழக்கம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு. வாசித்து முடித்து தொடர்ச்சியான நகர்வாக இருக்காமால் நிறைய சமயங்களில் ஒரு தேக்க நிலையை காணலாம்.

கலந்தாலோசனை கூட்டங்களில் இரைச்சல் அதிகமாகி முன்னால் நடந்த சம்பவங்களின் குறைகள் மட்டும் பேசப்பட்டு ஏற்பட்ட இழப்பிற்கு யாரையாவது திட்டிக் கொண்டே கூட்டமே முடிந்து விடும். புதிய ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் அதற்கு மேல் மாற்று பாதைகளும் பற்றி அதிகம் விவாதிக்கப்படாது.

வேலைக்கு சேர்ந்த பொழுதில் இது போன்ற குழப்பம் ஏற்பட்ட ஒரு புரோஜக்ட்டில் புதிய தலைமை நிர்வாகி "IT IS WHAT IT IS. ALL THIS BLAME GAME CAN NOT CHANGE OUR SCREW UPS. " என்று பொரிந்து தள்ளினார். அதற்கு பிறகு அணியின் போக்கு மாறி விட்டது. பழங்கதைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தன. இந்த it is what it is வழி சிந்தனை பிடித்திருந்தது. ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கண்டு மலைக்காமல் , அஞ்சாமல், இருப்பதை தீர்த்து ஆக வேண்டியதை செய்து வாடிக்கையாளருக்கு தரமான சேவையை வழங்குவதே முக்கியம்.

பழசை அள்ளி போட்டு கழுவி சுத்தம் செய்து அடுத்த வேலைக்கு நகர நினைப்பது தவறல்ல. ஆனால் பழமையினை கிளறி கூறு போடல் மேல் கொண்டு ஆக வேண்டிய காரண காரியங்களை பாதிக்கும் இடத்தில் கிளறி கொண்டே இருப்பதில் ஆவது என்ன? புதிய சிந்தனை, ஆர்வம், அதனை நடைமுறைபடுத்து்ம் மானகை திறன் போன்றவை கொண்டிருத்தலே நலம்.

ஒப்பாரி வைத்தலும், கட்டியலுதலும் வாழ்வை தூக்கி செல்லாது. அவை சமயத்தின் வெளிப்பாடாய் இருக்கலாமே தவிர, இரும்பு சங்கிலியாய் வாழ்வாதாரங்களை கட்டி விடுவதாய் இருக்க கூடாது.

நடந்து முடிந்து போன சம்பவங்கள் முடிந்தவையே. நீங்களோ, நானோ இல்லை வேறு யாரோ அதை மாற்றி விட முடியாது. குட்டையில் ஊறுதல் போல் அதில் ஊறி கிடத்தல் சுகமே, இங்கும் அங்கும் விரல் நீட்டி குற்றம் சுமத்தி இருத்தல் சுய இரக்கத்தையும், சிரங்கினை சொறியும் கோபத்தையும் கொடுக்கும், ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலிருக்காது. it is what it is. அதற்கு அடுத்து என்ன செய்வது?

Friday, April 13, 2007

வண்ண விளக்கு
பட்டை நாடா
சுற்றும் விசிறி
ஆர்வத்தை இழுக்கவில்லை முன்பு
ஆசையாய் பார்ப்பதிலும்
விரல் சுட்டி காட்டியதிலும்
வார்த்தைகள் வடிப்பதிலும்
கவிதை தெரிகிறது இன்று
ஒரடிக்கு கொஞ்சம் உயரமாய்
நிற்பதற்கும் உடகாருவதற்கும்
இடையே இருந்தாள் என் ஆசிரியை
அடுத்த வாரம் அவள் வயசு
ஒன்பது மாதம்

வங்கி , கடன் , அரசியல்வாதி

ICICI வங்கி அரசியல்வாதிகள், காவல்துறை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வக்கில்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறதாக செய்தி வந்துள்ளது. இதை குறித்து வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதை கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் வங்கிக்குள் நுழைந்து வங்கியின் கணிணி, சாளரங்கள் மற்றும் இதர பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். எதையுமே மிரட்டி அடித்து நொறுக்கி சாதிக்க நினைப்பர்கள் மக்கள் பிரதிநிதியானால் மக்களாட்சியின் கதி என்ன? எல்லோரும் எல்லா நேரமும் நியுட்டனின் மூன்றாம் விதியை காரணம் காட்டி வன்முறையில் இறங்கி அதனை நியாப்படுத்தி பேசினால் எதற்கு அரசு, சட்டம், ஒழுங்கு எல்லாம். இந்திய குடியரசு கட்சி நியுட்டனின் மூனறாம் விதியை மட்டும் சட்டமாக்கி விட்டு மற்றதை தூக்கி எறிய சொல்கிறதா?

அரசியலமைப்பின் முக்கிய உறுப்பினர்களை வங்கி ஒதுக்குகின்றது என வருத்தப்படுவதா இல்லை கடன் இல்லை என்றதற்கே வங்கியை ்நொறுக்குபவர்கள் நம்பி கடன் கொடுத்து கடன் திருப்பி கேட்டால் என்ன செய்திருப்பார்களோ. பாவம் வங்கிகள் என நினைப்பதா?

நன்றி; பிஸினெஸ் ஸ்டான்டர்ட்

திருச்சி - பாரத மிகுமின் நிறுவனம்

பாரத மிகு மின் நிறுவனம் திருச்சியில் உள்ள தனது கிளையில் 1000 கோடி ரூபாய் புதிய முதலீடு செய்து அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த உள்ளது.
திருச்சியின் வளர்ச்சியில் பாரத மின் மிகு நிறுவனத்தின் பங்கு குறிப்பிடதக்ககது. தொத்து வேலை(welding) மற்றும் நிர்மித(fabrication) பணிகளில் சிறப்பு மையமாக திருச்சியை வளர்ப்பதற்கு இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. புதிய வேலை வாய்புகளும் இதனால் உருவாகலாம். மார்ச் 31, 2007 வரையிலான பொருளாதார ஆண்டில் அதன் வரிக்கு முந்திய லாபம் சென்றைய ஆண்டை விட 103 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தாமோதர் பள்ளதாக்கு கார்பரேஷனின் மின்சார விரிவாக்க திட்டத்திற்காக உத்தரவை பாரத மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க மின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பையும், தொழில் மேம்பாட்டையும் கொண்டு வருகின்றது.

திருவரம்பூர் சாலைகளை விரிவுப்படுத்தவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். பேருந்து ்நிலையத்தை ஒட்டி உள்ள கடைகள் பாதிக்கப்படலாம். ஆனால் சாலை வசதி மேம்பட்டு நெரிசல் தவிர்க்கப்படும்.

அப்பாவிடம் பேசும் போது மிகுமின் நிறுவனம் ்நிறுவப்பட்ட போது திருச்சி மக்களிடம் இதன் வருகை ்விலைவாசியை அதிகரிக்க செய்து திருச்சியினை பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது எனறு சொன்னார்கள். அந்த பயம் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது.

Thursday, April 12, 2007

புள்ளிவிவரம் கொஞ்சம் மாறியிருக்கும்

மற்றுமொரு தற்கொலை. எதாவது ஒரு புள்ளி விவரத்தில் கொஞ்சம் அசைவிருக்கும். மகாராட்டிர முதல்வருக்கு இரண்டு கொட்டாவிகளுக்கு இடையே செய்தி சொல்லப்பட்டு மறக்க பட்டிருக்கும். இறந்தவரும் இந்திய பிரஜையே. அவருக்கும் அரசியலமைப்பின் பாதுகாப்பும், அரசின் கவனமும் இருந்திருக்க வேண்டும். முன்பு அவருக்கும் வாழ்வின் மீதான பிடிமானங்கள் எல்லோரையும் போல இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் பருத்தி விதைக்கையில் பருத்தி முற்றிய உடன் கடன் தீரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கும். ஏதோ ஒரு நொடியில் புள்ளியில் அந்த நம்பிக்கை காணாமல் போய் விட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தை விட புதிதாய் வராது என்ற முடிவுக்கு வந்திருக்க கூடும். குடும்ப தலைவரின் மறைவு குடும்பங்களில் உருவாக்கும் கையறு நிலை கொடுமையானது. கணவனுக்கு துணையாய் இருந்தே பழகி போன பெண் தன் குடும்பத்தை தானே இழுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதன் நடைமுறை சிரமங்கள் வார்த்தைகளில் சொல்ல இயலாது. GDP , பண வீக்கம் போன்ற பல புள்ளி விவரங்கள் நடுவே தற்கொலை புள்ளி விவரமும் இடை விடாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு ஒட்டு குறைந்து போனது முதல்வருக்கு பிரச்சனை இல்லை. இறந்து போனவனும் தன்னைதான் பிரதிநிதியாக நினைத்தான் என்ற உணர்வும் இருப்பதாய் தோன்றவில்லை. நிவாரண நிதி அறிவிப்புகளில் மட்டும் உண்டு. சென்ற வருட செய்திகளில் நிவாரண நிதி வழங்குவதில் ஊழல் காரணமாய் கால தாமதம் ஆகி அதனால் தற்கொலையும் நடந்த செய்தி வந்தது. பிணந்தின்னி கழுகுக்கிற்கு சுடுகாட்டு சாப்பாடு மாறுபட்டதாய் தெரிவதில்லை.

விதர்பாவின் அழுத்தமான மன இறுக்கம் வாய்ந்த சூழ்நிலையில் மாநில அரசு மன ஆலோசனை குழுக்களை அமைத்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கலாம். மகாராட்டிரா காட்டன் போர்ட் விதர்பாவிலாவது ஊழல் செய்வதை கட்டுப்படுத்தி இருக்கலாம். விவசாயத்தின் முதலுக்கு மேல் வருமானம் வரும் வழிகளை உடனிருந்து கண்டறிந்து அதனை செய்ய முற்பட்டு இருக்கலாம். (அப்புறம் எந்த எழவுக்கு விவசாய அறிவியல், பொருளாதார நிபுணர்களை அரசு வைத்திருக்கின்றது என தெரியவில்லை). பாசன வசதிகளுக்காக வழங்கப்படும் காசில் ஊழல் இல்லாமல் கொடுத்திருக்கலாம். வேறு புதிய தொழில்கள் நிறுவ ஆலோசனை வழங்கி உதவியிருக்கலாம். பிச்சைகாரனுக்கு பிச்சை வழங்கிய தோரணையில் விதர்பாவின் மான்ய தொகையை பத்திரிக்கைகளுக்கு செய்தியாக கொடுத்து விட்டு வேடம் போடாமலும் இருந்திருக்கலாம்.

Tuesday, April 10, 2007

கருப்பு பணம்

கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம்.

வரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் ்சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.

மக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.

சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து ்கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.

மதமென்னும் ்நிறுவனங்கள்

நிறுவனங்கள் லாபத்தை குறி வைத்து இயங்குகின்றன. அதில் முதலீடு உண்டு. விளம்பரங்கள் மற்றும் உத்திகள் மூலம் பொருளை சகலருக்கு அறிமுகம் செய்ய தனி அணிகள் உண்டு. அவர்களின் செயல்பாடுகள் அளக்கப்பட்டு அதற்பகேற்ப ஊக்க தொகை உண்டு.

எதிர் நிறுவனத்தின் பொருளை விடாது சாடுதலும் ஒரு வகை விற்பனை தந்திரமே. நுகர்வோரை பொருளுக்கு அடிமையாக்கி விடுதல் விற்பனை செயலின் உச்ச கட்டம். இந்த இடத்தில் நுகர்வோருக்கு மாற்று பொருள் பற்றிய எதிர்மறை சிந்தனை பூரணமாக ஊட்டப்பட்டிருக்கும். நுகர்வோர் தன்னையும், பொருளின் மீதான தனது சிந்தனையும் தனித்து பார்க்கும் சிந்தனையை முற்றிலும் மறுத்திறுப்பார். இரண்டும் ஒன்றே என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கும்.

நுகர்வோர் அவர் பயன்படுத்தும் பொருளுக்கு இணையான பொருள்களை சந்தையில் ஒப்பீடு செய்யவோ அல்லது உபயோகப்படுத்தபடும் பொருளின்றி மாற்று இருக்கலாம் என்ற நிலையையோ நினைக்கும் இடம் தவறானது என்ற போதனையும் நிறுவனங்களால் உண்டாக்கப்படுகின்றது. நுகர்வை பற்றிய ்பொது அறிவையும், கட்டுடைக்கும் சிந்தனையும் கொண்டெழும் சமூதாயவாதிகள் பின்னாளில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாகி மாற்றப்படுதலும் உண்டு. நுகர்வோர் நலனை கருத்தில் கொள்வதாய்தான் இன்று வரை எல்லா நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. ஆனால் நுகர்வோரின் நலமே நிறுவன பொருளில்தான் என்ற மிரட்டலையும் உள்ளடக்குகின்றன.

நிறுவனங்களை தாண்டிய பெருவெளி உண்டு. கால் வைத்து நிற்க தைரியம் வேண்டும். எதிலும் பற்றாது எது வரினும் ஊழ் என்று எண்ணாத மனநிலை அங்கு தேவை. அங்கு போதனைகளும், பிரார்த்தனைகளும் கிடையாது. தேவைகளும், தேவையை நிறைவேற்றும் வழிகளும் யாராலும் வரமாய் வராது. பெருவெளி ஒரு போதும் நிறுவனமாகாது. எல்லோரும் ஒரே போல் அங்கு இயங்க இயலாது. மாறுபட்ட இயங்கங்களே பெருவெளியின் அச்சாணி. இம்மையும் , மறுமையும் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவை சார்ந்த அச்சங்களும் அங்கே சுமையாவதில்லை.

நிறுவனம் கொடுத்த பொருளாய் தம்மை நினைப்போர் சகமனிதன் நோக்குகையில் முதலில் தெரிவது சகமனிதனிடத்து உள்ள பொருளே. ஆனால் பெருவெளியில் சகமனிதன் நிறுவனத்தின் பகுதியாய் அறியப்படுவதில்லை, அவன் தனக்கே உள்ள குறை நிறைகளோடு அறியப்படுகின்றான். பார்வை வித்தியாசம் புதிய மானுடம் படைக்க உதவும்.

Monday, April 9, 2007

கதாநாயகர்களை தேடி

ஸ்பைடர் மேன்/சூப்பர் மேன்/வொன்டர் வுமன் ஒத்த கதாநாயகர்களை தேடுதல் கலாச்சாரத்தின் பெரும் பகுதியாக இருக்கின்றது. விளையாட்டு, அரசியல், நிறுவனங்கள் என பார்க்கும், உணரும் எல்லா இடங்களிலும் இந்த இரண்டின் பங்கும் உண்டு.

எம்.ஜி.ராமச்சந்திரன் அரசியல் சித்து விளையாடலில் அசைக்க முடியாதவராக இருந்தருக்கு திரைப்படங்களில் அவர் கொண்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதாநாயகர்களை காட்டியதே காரணம். தாயை கண்டு இரங்கல், தங்கை கண்ணீர் துடைத்தல், பொருளாதாரத்தில் பின் தங்கியவரை தோள் தழுவுவதல் என அவரால் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அசரீரி போல் மக்கள் மனத்திற்கு சென்று சேர்ந்தன. கற்பனைக்கும், கற்பனை தாண்டிய உண்மை வாழ்விற்கும் இடையேயான வித்தியாசம் நழுவிவிட்டது. அவர் காலமான போது எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த குடும்பம் அவருக்கு பதினாறாம் நாள் காரியம் செய்து ஒப்பாரி வைத்து அழுதது. தனிமனித கவர்சியின் உச்சகட்டம் இது. இன்றைய அரசியலில் மன்னராட்சி முடிந்தும் மன்னராட்சி/நில ஜமீன்களின் தன்மையுடைய வேறு வகை கதாநாயகர்கள் முன்னிறுத்தப்படுகின்றார்கள். சராசரி மனிதனுக்கு அப்பால் பூச்சாண்டிகளை ஒத்த ஆளுமை உள்ள தலைமையே இப்போது காணமுடிகின்றது. தலைவர்களின் சுயநலம், ஊழல் போன்றவை கதாநாயக தன்மையின் பின்னால் ஒளிந்து கொள்கின்றது.

அடைமொழி வைத்து மட்டுமே தலைவர்களை விளிப்பதும் போற்றி பாடலின் ஒரு அங்கமே. அன்னை, கர்மவீரர்,அறிஞர், தந்தை,மகாத்மா, கலைஞர், புரட்சி தலைவி என அடைமொழி என்று எல்லா நிலையிலும் உண்டு. இவர்கள் வரலாற்று புத்தகத்துக்குள் இவ்வாறே பதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான தேர்வெழுதுவதற்காக செய்யும் மனப்பாட வாசிப்பு நாளைடவில் அடைமொழி இல்லாத தலைவர்களை ஏற்றுக் கொள்ளுதல் இயலாமல் செய்து விடுகின்றது. காற்றில் துலாவியாவது அடைமொழி கொண்டு வந்து ஒட்டிக் கொள்ள வைக்கச் சொல்கின்றது.

அடைமொழிக்கப்பால் உள்ள உண்மைகள் சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும் கதாநாயகதன்மை சித்தரிப்பு மூளைக்குள் சலவை செய்யப்பட்டுள்ளதால் அதனை சுலபமாக ஒதுக்கி விடுகின்றோம். தனித்தன்மை கொண்டு ஆளுமை உள்ள எதிர்கால சமுதாயம் வர வரலாற்று பாடப்புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும்.

விளையாட்டிலும் இந்த தன்மை உண்டு. பதினோரு நபர்கள் விளையாடும் மட்டை பந்து விளையாட்டில் ஒரே கடவுளாக டெண்டுல்கர் சித்தரிக்கப்படுகின்றார். அவர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பவர்களையும் பார்த்திருக்கின்றேன். கூட்டு ஆட்டம், அணித்திறன் என்ற அளவில் ஆட்டம் ரசிக்கப்படாமல் , வளர்க்கப்படாமல் தனிதனி கதாநாயகர்களின் பின்னே ஒளிந்துள்ளது. கங்குலி இதற்கு மற்றுமொரு உதாரணம்.

பகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை. ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது, கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது. உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை. பகுத்தறிவுள்ள சமுதாயத்தில் கதாநாயக தன்மை கொண்ட ஆளுமைகள் தேடி அலைதல் தேவையற்ற ஒன்று. நல்ல நிர்வாகிகளும், நிர்வாக ்கோட்பாடுகளுமே தேவை. இது ஒரு தூரத்து கனவே. ஆனால் என்றாவது ஒருநாள் சாத்தியப்படும்.

விளையாட்டாய் எடுத்துக்கொண்டால்

மாமு விளையாட்டுக்கு எடுத்துக்கோனு ஏதேனும் நடந்தா நட்பு வட்டங்கள் சொல்லும். உண்மையில் விளையாடும் இருக்கும் மனோபாவத்தில் எடுத்துக் கொண்டால் பேரன்பற்ற பெருங்கோபத்தில்தான் முடியும்.

மனிதனின் குழு இயக்கம் விலங்கினமாய் திரிந்த காலத்திலிருந்து வந்தது.தனி மனிதன் தன்னை ஒத்த அல்லது தன்னை விட கொஞ்சம் மேலான தன்மை உடையவர்களோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான். விளையாட்டை பற்றிய அறிவை பகிரவும் அந்த விளையாட்டு குழுவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுதலும் அவசியமாகிறது. குழுவை தேர்ந்தெடுத்தல் நகரம், மதம், நாடு என்ற பல வளையங்களுக்குள் அமைகின்றது.

விளையாட்டில் விளையாடுவதோ, அணி ஆதரவு நிலையிலோ அட்ரினலின் உச்சம் ஏற ஆர்பரித்து நிற்கும் போது அதை விட பேரின்பம் தேட இயலாது. காமத்தின் பரவசம் ஒத்த நிலை அது. காமம் இருவருக்குள் தனியறைக்குள் இயங்குவது(பொதுவாக). விளையாட்டு அனுபவம் பலரிருக்க நபர்கள் அதிகரிக்க மிகுந்த அளவாக மாறக்கூடியது. பிறந்த உறவா , பகிர்ந்த உறவா, இல்லை பழகிய உறவா? எதுவும் இல்லை. ஆனாலும் மனம் வெற்றியில் மகிழ்ந்து, தோல்வியில் துவண்டு போகின்றது.

நிம்பஸ் ஒளிபரப்பை தூர்தர்ஷனுடன் பகிர மறுக்கையில் பாதி இந்தியா வாடி வதங்குகிறது. கோடிகள் புரள ஒளிப்பரப்பு உரிமைகள் பேரம் பேசப் படுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொன்றும் இரு நாட்டுக்கிடையே யுத்தம் போல்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ரோம நகரத்தில் கிளாடியேட்டர்கள் ரத்தம் சிந்துகையில் குதுகலித்த பார்வையாளார்களின் மனநிலை விக்கெட்டுகளின் வீழ்ச்சியிலும், மட்டையில் பட்டு விழும் நான்கிலும், ஆறிலும் கிடைக்கின்றது.அண்மையில் உலக கோப்பை தோல்வியும் சிலரின் இதய துடிப்பை நிறுத்தவும் செய்திருக்கின்றது.

தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கடவுள் சாக்கர் வடிவில் உலவுகின்றார். இன்னோரு மதமாகவே சாக்கர் உள்ளது. தன் அணியின் தோல்விக்கு காரணமானதால் சுட்டுக் கொள்ளப்பட்ட கொலம்பிய கால்பந்தாட்ட வீரரை மறக்க இயலுமா? அமெரிக்காவில் புட்பால் காலங்கள் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களாகவே உள்ளன. நுரைக்கும் பியர் பாட்டில்கள், கார்களில் பறக்கும் அணிகளின் கொடிகள், ஆர்பரிக்கும் கூட்டம் என்று கோலகலமாகவே உள்ளது.

அமெரிக்காவின் புட்பால் அணிகள் நகரங்களை மையமாக கொண்டவை. கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த போது சான்பிராஸிஸ்கோ, ஒகலாந்து இரு நகரங்களும் இரு புட்பால் அணிகளை கொண்டிருந்தன. நண்பர் ஒருவர் ஒக்லாந்து எனும் நகர அணியை ஆதரிப்பவராய் இருந்தார். அவரது தலை தொப்பியில் ஒக்லாந்து அணியின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு முறை விளையாட்டு பொழுதினில் சான்பிரான்ஸிஸ்கோவின் பார் ஒன்றிற்கு செல்கையில் எங்களுக்கு அந்த தொப்பியை நீக்குதல் எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நல்லதென அறிவுறுத்தப்பட்டு நண்பர் தொப்பியை நீக்க வேண்டியதாயிற்று. அவர்களிடம் ்விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பூசைதான் விழுந்திருக்கும்.

இதற்கு அப்புறமும் யாராவது 'it is just a game' என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கின்றது.

Wednesday, April 4, 2007

டெண்டுல்கர் பொன்மொழியும் புள்ளிவிவரமும்

பொன்மொழி
எல்லோரும் அணியின் தோல்வி குறித்தே பேசுகின்றோர்கள் ஆனால் யாராவது எங்களை குறித்து யோசித்தார்களா?
-டெண்டுல்கர்

சில புள்ளி விவரங்கள்((செப்டம்பர் 2005க்கு பிறகு)

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டிகளில்

ஆட்டங்கள் : 11
ஒட்டங்கள் : 155
சராசரி : 14.09
ஐம்பது/நூறு : 0/0


பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில்

ஆட்டங்கள் : 18
ஒட்டங்கள் : 434
சராசரி : 27.13
ஐம்பது/நூறு : 2/1


தகவலுக்கு நன்றி ; cricinfo.com

Tuesday, April 3, 2007

சில்லறை வணிகம் - பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் தற்போதைய நிலமை.







படத்திற்கு நன்றி http://www.ficci.com/


நுகர்வோருக்கும் இழப்பு. உற்பத்தியாளருக்கும் இழப்பு. வெற்று இரக்கமும், பச்சாதாபமும் தாண்டி இருவருக்கும் வேறு தேவைகளும் உண்டு.

சில்லறை வணிகம்- வருவாய் பகிர்வு

5000 முதல் 20000 சதுர அடி வரை இடம் வைத்திருக்கும் கடைகளோடு வருவாய் பகிர்வளவில் ஒப்பந்தம் செய்து வியாபாரத்தில் இறங்க தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. எத்தனை சதவீதம் லாப பகிர்வு இருக்குமென தெரியவில்லை.

சிறு நகரங்களிலும் தங்களுடைய இருப்பை விரிவுப்படுத்தும் ஒரு வழியாக ரிலையன்ஸ் இந்த வழியை அறிவித்துள்ளது. இந்த வியாபார பகிர்வுக்கு ஒத்துக்கொள்ளும் சிறுவணிகரது கடைகளை மேம்படுத்தவும், புதிய பொருள்களை அறிமுகப்படுத்தவும் ரிலையன்ஸ் ்முன் வந்துள்ளது.

இந்த முறை வரும் போது உள்ளூர் சந்தைக்கு ரிலையன்ஸின் பெரிய வரத்துவாரி அறிமுகப்படுத்த படுதல் மூலம் பொருள்களின் தரம் உயர்ந்து வி்லை குறையலாம். அதே நேரம் உள்ளூர் மொத்த விற்பனையாளருக்கான தேவை குறைந்து அவர்களது வியாபாரம் பாதிக்கப்படும்.

Monday, April 2, 2007

சிறப்பு பொருளாதார மண்டலம்
















நாட்டின் மொத்த நில பரப்பு
29,73,190 சதுர கிலோமீட்டர்

விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நில அளவு

15,34,166 சதுர கிலோமீட்டர்

இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட 234 சி.பொ.மண்டலங்களால்
பயன்படுத்தப்படும் நில அளவு

350 சதுர கிலோமீட்டர்

கருத்தளவில் அனுமதியளிக்கப்பட்டு இன்னமும் நிலம் கையகப்படுத்த
படாத சி.பொ. மண்டலங்களுக்கு பயன்படுத்த போகும் நில அளவு

1400 சதுர கிலோமீட்டர்


இது வரை அனுமதிக்கப்பட்ட 234 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முழு அளவில் செயல் படும் போது அவற்றின் மொத்த மதிப்பு 3,00,000 கோடியாக இருக்கும். அதனால் 4 மில்லியன் வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில அளவினை ஒப்பிடுகையில் சிறப்பு பொருளாதாரத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட/படுத்த போகும் விவசாய நிலப்பரப்பில் 0.1 விழுக்காடே. அரசு இந்த விவசாய நிலத்தில் இருந்திருக்கும் வேலைவாய்ப்பை பற்றியோ, அல்லது விளைபயிர் பற்றியோ புள்ளி விபரம் அளிக்கவில்லை.

பச்சை புடவை, மஞ்சள் புடவை , அட்ச கிருத்திகை, பிள்ளையார் பால் குடித்தல் என வதந்தி கிளப்புவது போல மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை பற்றிய புரளிகளுக்கும், எதிர் மறை பிரச்சாரங்களுக்கும் விடையளிக்கும் விதமாய் அரசு இநத தகவல்களை அளித்துள்ளது

Tuesday, March 27, 2007

சில்லறை வணிகம்-DSCL முதலீடு

சில்லறை வணிகத்தில் நுழையும் பெருமுதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பெருக்க இடைதரகு அமைப்புகளை களைதல் முக்கியம். டாடா, ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் மொத்த குத்தகை விவசாய முறைக்கு விவசாயத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிக்கும், நுகர்வோர்க்கும் நாற்பது சதவீதம் வரை கூடுதல் பலன் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெருமுதலீட்டாளர்கள் மொத்த குத்தகை விவசாயத்திற்கு நகரும் போது அதற்கான துவக்க செலவீடும், உழைப்பும் மிக கடினமான ஒன்றாகும். நுகர்வோரின் தேவையையும், அதற்கேற்ற பொருள்களின் கையிருப்பையையும் காப்பதற்கு பெரிய அளவிலான விவசாய தொடர்புகளும் வரத்துவாரியும் உருவாக்குவது எல்லாருக்கும் சுலபமல்ல.

ஸ்ரீராம் கன்சாலிடெட்டட் நிறுவனம் இப்போது இது போன்ற பின்புல கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெருவணிகருக்கும், விவசாயிக்கும் இடையே தொழில் புரிய திட்டமிட்டுள்ளனர். பல நிலை இடைதரகர் அகன்று ஒரு இடைதரகருக்கு வந்து ்நிற்பது போன்றதே. சோதனை முறையில் இவர்கள் பிக் பஜார் (pantaloon retail) மற்றும் ஸ்பென்சர் ரிடெய்லுடன்(RPG Group) ஒருங்கிணைந்து செயலாற்றுகிறார்கள். இந்த ஒப்பந்தில் ஸ்ரீராம் நிறுவனம் விவசாய மொத்த குத்தகையையும், போக்குவரத்து, தானிய சேமிப்பு முதலியவற்றை பார்த்துக்கொள்ளும். விற்பனையை இதர பிற வணிகர் பார்த்துக் கொள்வார். எனக்கு இந்த அமைப்புகள் காலப்போக்கில் நேரடி வணிகத்தில் இறங்கும் என்றே தோன்றுகின்றது. டாடா, ஜடிசி, ரிலையன்ஸ் நேரடி கொள்முதலுடன், பின்புல கட்டமைப்பையும் பார்த்துக் கொள்வதால் அவர்களுக்கு விலையை இன்னும் குறைத்து தர இயலலாம்.

ஸ்ரீராம் நிறுவனத்தார் ஹரியாலி கிசான் பசார் அமைப்பை வடக்கே விவசாய மாநிலங்களில் நிறுவி உள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தொழில் முறை ஆலோசனைகள், உரம், பெட்ரோல், ்டீசல், கடன், கொள்முதல் என எல்லா வகை தேவைகளையும் இந்த ஹரியாலி அமைப்பு மேற்கொள்கின்றது. விவசாயம் தொழில்முறை அமைப்பாக மாற்றப்படுதலின் அறிகுறிகள் தெரிகின்றன. இந்த ஹரியாலி அமைப்பில் கால்நடை மருத்துவர்களையும் உள் கொண்ர்வதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

Thursday, March 15, 2007

பணமும் தொழிலும்

பணம் என்பது அங்கிகரிக்கப்பட்ட சமூக சூழ்நிலையில் அது குடும்பத்தின் ஆணி வேராகிறது. குடும்பத்தின் வளர்ச்சி பணத்தினை அடிப்படையாக கொண்டே அளவிட படுகின்றது. சில இடங்களில் குடும்பத்தை நிராகரிப்பவர் கூட பணத்தை நிராகரிப்பதில்லை. பண்டமாற்று முறையில் நடைபெற்ற பொருளாதாரம் பணத்திற்கு நகர்ந்த நாள் தொட்டு ஆண்டி முதல் அரசன் வரை இயக்கம் பணத்தின் வாயிலாகவே.

பல குடும்பங்களின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் வளர்ச்சியாக அறியப்படுகின்றது. தத்துவ ரீதியாக ஆயிரகணக்கான சித்தாந்தங்கள் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு பணத்தினை யாரும் நிராகரிக்கப் போவதில்லை. பொருளீட்டும் வழிகளில் ஒன்று சுயமாய் தொழில் தொடங்குதல், இன்னோன்று அங்கனம் தொழில் தொடங்குவோருக்கு பணி புரிந்து பொருள் ஈட்டுதல். செய்யும் தொழிலின் வருவாய்க்கேற்ப்ப தொழிலின் கூலி பொதுவாய் அமைகின்றது. எல்லா தொழிலுக்கும் ஒரே கூலி சாத்தியமில்லை, அது நடைமுறைக்கு ஓவ்வாது.

கூட்டு சமூதாயத்தில் வரிப்பணம் வசூலிக்கப்பட்டு அது சமூதாயத்தின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. அதை நிர்வகிக்க அரசு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. உலக அறிவு, தொழிலறிவு வளர்க்க எண்ணி அரசால் இலவச கல்வி நமது நாட்டில் எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது.
கல்வி வேலையை உருவாக்கவும், வேலை புரியவும் தகுதியை தருகின்றது.
கல்விதான் தகுதியா? கல்வி இல்லாமல் ஆனவர்கள் இல்லையா போன்ற கேளவிகள் இந்த இடத்தில் எழுவதை தவிர்க்க இயலாது. இது போன்ற தனித்து விளங்குபவர்களின் மொத்த விழுக்காடு பொது சமூதாயத்தில் மிக குறைவே. அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்பும் முன் அடிப்படை தகுதியான கல்விக்காக அரசு செய்யும் முயற்சிகளை எண்ணி பார்க்க வேண்டும்.

தனி மனிதன் தகுதியை வளர்த்துக் கொள்ள உதவிய சமூகம் தகுதிக்குறிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இரு வழிகளில் சமூகம் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். கூட்டுசமூதாயம் தானே பொதுப்பணம் முதலீடு செய்து வேலைக்கான அமைப்பை உருவாக்குதல் ஒன்று. இந்த முறையில் பொதுப்பணம் பற்றிய அறிவு எல்லோருக்கும் வருதல் வேண்டும். பேருந்துக்கு தீ வைத்து, பக்கத்து ்வீட்டு சுவற்றில் உச்சா போய் விட்டு, தெரு ்விளக்கில் கல் வீசி கலாட்டா பண்ணும் மனித வளர்ச்சி உள்ள நிலையில் இது போன்ற பொதுப்பணம் கொண்டு வேலைவாய்ப்பை உருவாக்குதல் எத்தனை சுத்தமாக இயங்க இயலும்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மற்றொரு முறை தொழில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை சமூகம் உருவாக்கி சமூக உறுப்பினர்களை முதலீடு செய்ய வைத்தல். பக்கத்து வீட்டு ்சுவற்றில் உச்சா போகும் அறிவுள்ளவன் கூட சொந்த வீட்டை துடைத்துதான் வைப்பான். குடும்பம் , சொத்து போன்ற அமைப்புகளை இயல்பாக ஏற்றுக் கொண்ட மனித அமைப்பில் தான் முதலீடு செய்து ்செய்து துவங்கும் தொழிலில் தனிக் கவனம் செலுத்தப்படும். முதலீடு ்விரையம் செய்யப்படாது. தனி மனித முதலீடு சமூகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்க கூட்டுச சமூகம் விதிமுறைகளை உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். முதலிட்டுக்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குதலும், முதலீட்டுக்கான விதிமுறைகளை மட்டுறுத்தலும் கூட்டு சமூகத்தின் நிர்வாக அமைப்பின் கடமையாக இருத்தல் வேண்டும்.

சமூக அமைப்பில் அதிகாரத்தினை உச்சிக்கு கொண்டு செல்லாமல் பரவலாக்கபடுதல் முக்கியம். தற்போது நடைபெறும் நந்திகிராம பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்க மாநில அரசு சிறப்பு பொருளாதார திட்டத்தினை பற்றிய அறிவினையும், அதனால் வரும் பலன்களையும் மட்டும் அறிவிக்கும் அமைப்பாக இருந்து, தனியார் அமைப்பு நேரடியாக கிராமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி கிராம அமைப்புடன் ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று நினைக்கின்றேன். மாவட்டத்திற்கோ, அல்லது ஊராட்சி அமைப்பிற்கோ தங்கள் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொழில் அமைப்பினை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் திணிப்பு தவிர்க்கப்படும். அமெரிக்காவில் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை காணலாம். இந்தியாவின் மாவட்டத்தினை ஒத்த கவுண்டி எனப்படும் அமைப்பே உள்ளூர் தொழில் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றது. பல்வேறு சலுகைகளும், ஊக்கங்களும் தொழில் தொடங்குவோறு வழங்குவதாய் கூறி தொழில் முனைவோருக்கு கவுண்டி அழைப்பு விடுப்பதை கண்டிருக்கின்றேன். மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பு கவுண்டி அளவில் உண்டு.

வேலைவாய்ப்பு உருவாக்கம் சமூகத்திற்கு முக்கியமானதாகும். அதில் உருவாகும் தேக்க நிலை சமூக அமைதியை குலைக்க கூடிய தன்மை உடையது. தொழில்மயமாக்கப்படல் கெடுதலான பக்க ்விளைவுகளை கொண்டிருந்தாலும் சமூக இயங்குதன்மைக்கு அது முக்கியமானதாகும்.
கடுமையாக தொழில் உருவாக்கத்தை எதிர்ப்பவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு என்ன செய்வது என்று சொல்வது இல்லை. அப்பன் செய்த தொழில் செய்தே வாழ்ந்தால் போதாதா எனறு கேட்டால் எனக்கு போதாது என்றே தோன்றுகின்றது.

Tuesday, March 6, 2007

தோழிக்கு மடல்

உறுப்பு சில பாகுபாடு
உன்னை பொருட்காட்சி ஆக்கிடாது
வல்லினமோ மெல்லினமோ
பெண்ணவளே உன் முடிவே
இடையினமாய் அழகுபிம்ப
இருப்பு மட்டும் நீயில்லை
தவறில்லை பெண்ணே
தனித்தியங்கும் வல்லமை கொள்
கதவு விளிம்பு காட்சியாகி
நாணத்தின் கோனலிலே நிலம் கீறும்
தளை அறுப்பாய்
ஆண்டாண்டு காலமாய்
உன்மேல் அடுக்கி வைத்த பிம்பமது
ஆடிபோல் நொறுக்கி விடு
நம்பிக்கையும், சிந்தனையும்
சீர்படுத்தும் வல்லமையும் நிதம் தேடி
பிரபஞ்சம் பறக்கும் பருந்தென மாறு

Monday, March 5, 2007

தீட்டு

உதிரத்தின் வாயிலாக தீட்டு
மாதவிலக்கிலும, மனிதன் பிறப்பிலும்
மையம் கொண்டாடுது இந்த தீட்டு
அதிகார போதையில் ஆழ்ந்திருக்க
அடிப்பட்டவனுக்கு கொடுத்தது தீட்டு

அவனுக்கு இவன் தீட்டு
இவனுக்கு எவனோ தீட்டு
ஆக எங்கும் உண்டு இந்த தீட்டு
ஆகாசம் தாண்டி புது வேஷம்
போடுமடா தீட்டு

புணர்வின் ஆசைக்கும்
உடலின் சூட்டுக்கும் ஏதடா தீட்டு
இச்சையின் வியர்வையில்
கரைஞ்சே போகும் அந்த தீட்டு

கல்லா பெட்டியிலே
நல்லா தூங்கும்
அந்த காசுக்கும் ஏதடா தீட்டு
காசின் சுகத்தினிலே
கற்புர புகைதானே தீட்டு

கழுத்தினிலே கத்தி வர
பயத்தினிலே காணலடா தீட்டு
பயம் வந்தா நனைந்துபோகும்
பரிகாச பூச்சுதாண்டா தீட்டு

சில்லறை வணிகம்-ii

பெருவணிகர் நிலையில் லாபமே அவருக்கு பிரதானம். அவர்கள் தங்கள் பங்குதாரருக்கு லாபமூட்டும் வகையில் மூலப்பொருள் வழங்கும் விவசாயியை நோக்கி தங்கள் கரத்தை செலுத்துவார் என்பதும் நடக்க கூடியதே.விவசாயிகள் கூட்டுறவு முறையில் இயங்கி கொள்முதல் செய்யும் முதலாளிகளோடு பேரம் பேசி விலை நிர்ணயம் செய்யும் உரிமை கொண்டிருந்தால் இந்த பிரச்சனை தவிர்க்கப்படலாம்.

இடைமனிதர்களும், கடமை உணர்வற்ற அரசு கொள்முதல் இயந்திரங்களும் அகற்றப்பட்டு விவசாயம் தொழிலாக மாற்றப்பட்டு சந்தையில் இயங்கலாம். பிரச்சனையே இல்லாத தொழிலாக விவசாயம் இருக்குமென்பதற்கான உறுதி பத்திரம் எதும் கிடையாது.எல்லா தொழில்களுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களோடு ஆனால் தனியார் மயமான விவசாயி விளைபொருளுக்கு விலை நிர்ணயம் தொழிலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

பெருவணிகர் கொள்முதல் வருகையில் வருட சாமான்கள் விற்கும் சந்தைகள் காணாமல் போகலாம் அல்லது அதன் அளவு குறைந்து போகலாம். இப்போது திருச்சியில் இருந்து கொல்லிமலை சென்று சந்தையில் பொருள் வாங்கும் எங்கள் ஊர் பொது மக்கள் அதற்கு மாற்றாக வேறு ஒன்றை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்கையில் பொருளாதார நட்டம் எங்கள் ஊருக்கு உண்டான போதும், கொல்லிமலையில் சந்தை வைக்கும் விளைவிப்போருக்கு பெருவணிகரிடம் விற்பதால் ஒரே தவணையில் விற்பனைக்கான பணம் கிடைக்கும்.

பெருவணிகர் வருகையில் அவர்களை மட்டுறுத்தும் நுகர்வோர் நலம் காக்கும் சட்டங்களை தூசு தட்டி எடுத்தலும், அவற்றின் இருப்பை பற்றிய அறிவை பொதுமக்களிடம் கொண்டு செல்லுதலும் மற்றும் இவ்வாறான சட்டங்கள் பாரபட்சமற்ற முறையில் நடைமுறை படுத்தபடுதலும் முக்கியம். நுகர்வோர் தங்கள் உரிமைகளை பற்றிய தெளிவான அறிவை கொண்டு, எல்லாம் என் விதி என்று நினையா மனநிலைக்கு வருதல் பெருவணிகர் வளர்களையில் அவசியமான ஒன்றாகும்.

பெருவணிகர் பங்குசந்தையில் பங்குகளை விற்று பொது அமைப்பாக இயங்குகையில் தொடர்சியான லாபம் முக்கியமானதாகும். கலப்படம், எடைக்குறைவு போன்றவை இவற்றை பாதிக்கும் என்பதால் இவ்வழியில் செலவதை தவிர்ப்பார். பெருவணிகம் நேரடி கொள்முதலால் பதுக்கல், கருப்பு சந்தை போன்றவற்றை குறைக்கவும் செய்யலாம்.

அடுப்பில் பாத்திரம் வைத்து விட்டு தாளிக்க கடுகு வாங்குவது நமதூரில் சகஜமான ஒரு செயல். இது போன்றவற்றால் தெருமுனை கடைகளில் நடக்கும் வியாபாரம் பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படாது. சிறு, பெரு நகரங்களில் மாத சாமான்கள் விற்கும் மத்திய தர கடைகள் இது போன்ற பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படும். தொழில்கள் விரியும் போது பாதிப்பென்பது இயல்பே. இது சில்லறை வணிகத்துக்கு மட்டுமன்று மற்ற எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.

Saturday, March 3, 2007

சில்லறை வணிகம்

சில்லறை வணிகத்தில் பெரும் வணிகர்கள் இறங்குவதன் விளைவுகளை ஆய்வு செய்து பதிப்பிக்க வேண்டி இந்திய பன்னாட்டு வணிக உறவு ஆய்வு மைய குழுவை நமது பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மாதத்தில் இதன் முடிவுகள் வழங்கப்படும்.

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலாளிகளை எதிர்ப்பவர்கள் உள்நாட்டு முதலாளிகளையும் எதிர்க்கின்றார்கள். ரிலையன்ஸின் ப்ரஸ், டாடாவின் இன்பினிட்டி போன்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் கொடி பிடிக்கப்படுகின்றது.

தற்போதைய வணிக சூழ்நிலையில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு முழுவிலை கிடைப்பதால் மகிழ்ச்சியாகவும்,நுகர்வோர் சரியான விலை உள்ளதால் மிக மிக மகிழ்ச்சியாகவும் இருப்பது போன்றும், இனி பெரு வணிகர்கள் வருவதால் இது பாதிக்கப்படும் என்றும் காட்சி வைக்கப்படுகின்றது.

எங்கள் வீட்டில் புள்ளிவிவர கணக்கு எடுத்ததில் அப்பா,அம்மா திருச்சியில் ரிலையன்ஸோ,டாடாவோ வந்தாலும் அவர்கள் போவாதாயில்லை என்று சொன்னார்கள்.நூறு கிராம், அல்லது நூற்றம்பது கிராம் என காய் வாங்குகிறோம். பால் ஒரு நாளின் தேவைக்கு பாக்கெட்டில் வாங்கி கொள்கிறோம். இதற்கு தெருமுனை கடைதான் வசதி என்றார்கள்.

நீங்கள் மொத்தமாக வாங்கி குளிர்பதன ்பெட்டியில் பதப்படுத்திக் கொள்ளலாமே என்றதற்கு செய்யலாம் ஆனால் இப்போது இருக்கும் குளிர்பதன பெட்டி சிறியது, வாரக் கணக்கில் சேகரிக்க இது ஆகாது, பெரிதாய் வாங்க வேண்டும். கோடையில் மின்சார தட்டுப்பாடு வருகையில் பெரிதாக இருந்தாலும் புண்ணியமிருக்காது என்றார்கள். மளிகை கடைகாரருக்கு எங்கள் வீட்டால் கிடைக்கும் வியாபாரம் எதிர்காலத்தில் மாற போவதில்லை.

உள்ளூர் சந்தையை காண்கையில் அங்கிருக்கும் வணிகர்கள் விவசாயிடம் இருந்து நேரடி வணிகம் செய்வதில்லை. அவர்கள் ஏல முறையில் காலையில் காய்கறிகளை இடைமனிதர்களிடத்து வாங்குகிறார்கள். அந்த இடைமனிதர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடைமனிதர்களிடத்து இருந்து பொருள்களை உள்ளூர் சந்தைக்கு தருவிக்கிறார்கள் போலும். இரண்டாம் நிலை இடைமனிதர்கள் விவசாயிகளிடத்து இருந்து விலைக்கு பொருள்களை வாங்குகிறார்கள். உள்ளூர் ்விவசாயி ்நேரடியாக விளைபொருளை கொணர்ந்து கடை விரிக்க இயலாதாம். இரண்டு இடை மனிதர்களுக்கான பங்கு பணம் பொருளின் விலையின் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்து விலை செலுத்துகின்றோம். இந்த தகவல் செவிவழி அறிந்தது.

பெரும் வணிகர் வருகையில் இரு இடை மனிதர்கள் காணாமல் போகிறார்கள். விவசாயி, பெருவணிகர், நுகர்வோர் என்ற மூன்று அடுக்கு அமைகின்றது. இரு அடுக்குகள் காணாமல் போவது அதை தொழிலாக கொண்டிருப்போருக்கு இழப்பே. அவர்களின் இழப்பு நுகர்வோருக்கும், விவசாயிக்கும் வருமானம்.

மற்றொரு முக்கிய கோணம் வரிப்பணம். இடைமனிதரோ, சிறு அளவு வணிகம் புரிவோரோ வரி பொதுவாக செலுத்துவதில்லை. வரிப்பணமே சத்துணவாக, அங்கன்வாடியாக, இலவச மின்சாரமாக பொதுமக்களுக்கு போய் சேருகின்றது. ஆனால் பெரு வணிகம் வரும்போது வரிப்பணம் அரசுக்கு சேருகின்றது.

இப்போதே சிறு பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட் கடைகள் உண்டு. இவை உள்ளூரில் உள்ள சிறு கடைகளுக்கு போட்டியே. சிறு கடைகளை விட விலை குறைவே. அவைகளை எதிர்த்து போராடுவதில்லை. பால் சில்லறையாக கதவுக்கு வருவது கிட்டதட்ட காணாமல் போய் பாக்கெட்டுகளில் கடைகளில் கிடைக்கின்றது. அதற்காக கண்டண கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனால் ரிலையன்ஸ்,டாடா என்ற பெயர்கள் வருகையில் அச்சம் பரப்பபடுகின்றது.

எனக்கு தெரிந்து காதி கதராடை கடைகளிலும், கோஆப்டெக்ஸிலும் மட்டும் வணிகம் செய்வோம் என யாரும் தீர்மானம் போட்ட்தில்லை. கெடுநாள் அறிவித்ததில்லை. மாற்று கடைகள் உண்டு, வணிகமும் உண்டு.சிறு வணிகர்,பெரு வணிகர் என்ற குரல்கள் இல்லை. கடந்த ்முறை சென்னை வந்தபோது ஆலன் சாலியும், டாக்கர் பேண்ட்ஸூம் நல்ல முறையில் ஸ்பென்சரில் இருந்தன.

Thursday, March 1, 2007

நிதி அறிக்கை

இந்த ஆண்டு நிதி அறிக்கையில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பை முன்னேற்றுதல் போன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள் கடுமையாய் கண்டணம் தெரிவித்துள்ளன. நிதி அறிக்கை வெளியாகும் முன்னரே கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.புதிய பொருளாதார கொள்கைகள் வாயிலாக அரசின் நிதி அளவு வரிகளின் மூலம் 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுவே இப்போது சமூக முன்னேற்றத்திற்கு செலவிட பட போகிறது.

இந்த வார ஜீனியர் விகடனில் சமூகத்தை அறிவியல் பூர்வமாக(?!) ஆராய்ந்து வண்ண தொலைக்காட்சி அளித்தால் சமூகம் மேம்படும் என்று அரசு முடிவு செய்து கொண்டு வந்த திட்டத்தில் ஊழல் நடப்பதை பற்றி சொல்லியிருந்தார்கள். இந்த மாதிரியெல்லாம் ஊழல் செய்ய முடியுமா என நாமெல்லால் ஆச்சரிய படுமளவுக்கு ஊழல் செய்கிறார்கள். இந்த திட்டத்தினால் சமூகம் எந்த அளவுக்கு முன்னேறுகின்றது என்பதை எப்படி அளவிட போகிறார்கள் என்று தெரியவில்லை.

மான்யங்களும் இலவச திட்டங்களும் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு படிக்கட்டுகளாகவும் இருத்தல் நலம். மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடிகள் இதற்கு சிறந்த உதாரணம்.

சமீப காலங்களில் சமூக நல திட்டங்களில் செலவிடல் நிறைய கட்சிகாரர்களின் நிதி இருப்பை அதிகரிக்கின்றதே தவிர யாரை குறிவைத்து திட்டம் அறிவிக்கப்படுகின்றதோ அங்கே போய் சேருவதில்லை. சுவரோட்டிகளிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இந்த திட்டங்களை பற்றி அதிகம் காண முடிகின்றது. ஒரு கட்சிகாரர் இன்னோரு கட்சிகாரரிடம் என் தொலைக்காட்சி சானலுக்கு அரசு விளம்பரம் கொடுங்கள் என்று பொது மேடையில் கேட்டு விட்டு சமூக நீதியும் பேசுகிறார், அதற்கும் கை தட்டுகின்றோம். ஒரு கட்சி தலைவர் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய சந்தையை போன ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணம் காட்டி மூடி விடுகின்றார், அவருக்கும் கை தட்டுகின்றோம். விதியை மீறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதித்த அரசு ஊழியர் கண்டிக்கப்படுகின்றார், அவரை பிழைக்க தெரியாதவர் என்று முத்திரை குத்தி விளையாட்டு வீரருக்கு கைதட்ட போகின்றோம். கலாச்சாரம் என்பது கைதட்டுதலிலும், புகழ்பாடுதலிலும், கையூட்டு வாங்குதலிலும் உண்டு.

கல்விக்கான நிதி அறிக்கையின் அளவு 34 சதவீதம் உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அளவு 21.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் எத்தனை சதவீதம் உண்மையில் சமூக பலனளிக்க சென்று சேர போகிறதோ தெரியவில்லை. ஊழலையும், சுரண்டலையும் கட்டுப்படுத்தாமல் விடுவது பொருளாதார முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். மக்களின் மனோபாவம் கையூட்டு வாங்கினால் என்ன தவறு என்று ்கேட்கும் நிலையில் வந்து நிற்கின்றது. இந்த மனோபாவம் வளரும்போது எங்கு போய் முடியும் என்பது பயமாக உள்ளது. இது பிரச்சனையே இல்லை என்று கண்களை மூடிக்கொண்டு சமூக மேம்பாட்டிற்கு உழைக்க முன்னே போவதும் ஒடுகிற ஆற்றில் வரிப்பணத்தை கொட்டுவதும் ஒன்றுதான்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவதலின் ஊடான பிரச்சனைகள், சலுகை மட்டும் கேட்டு ஒட்டு போட வராத மத்திய தர வர்க்கமும், மேல் தட்டு வர்க்கமும், வரப்போகும் தேர்தல்கள் போன்ற பல மூடப்பட்ட கதவுகள் நடுவே இந்த நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் அறுபது சத வீத மக்களை தாங்கும் பொருளாதார அமைப்பின் நடுவே விவசாய துறையை நவீனபடுத்துதலுக்கும், அதன் மேம்பாட்டிற்கும் எதும் சொல்லபடவில்லை. தொழிளாளர் சட்ட சீர்திருத்தங்கள், பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகப்படுத்துதல் குறித்தும் எதும் தகவல்கள் இல்லை.

Tuesday, February 27, 2007

தனியாக ஒரு பாதையில்


Snake and Fish
Originally uploaded by FotoDawg.
நெடுங்கோடு போல்
தெரிந்த பாதையில்
பயணம் ஆரம்பித்தேன்
அரவம் போல் முறுக்க ஆரம்பிக்க
அடிகளை கவனிக்க வேண்டியதாயிற்று
உறுப்புகள் தொலைந்தன
அரவத்தின் முறுக்கினில்
அழுகையும் அரற்றலும்
பாடுபொருள் ஆன
பொழுதுகள் உண்டு
தூவி விட்ட விதை
தூறலுக்கு குதிப்பதாய்
அறுந்தவை முளைக்க
ஆட்டம் பாட்டமும் இருந்தன
விம்மலுக்கும் சிரிப்பிற்கும்
நடுவே பயணம்
ஆரம்பம் நியாபகமில்லை
முடிவு நியாபகம் இருக்குமோ தெரியவில்லை
முன்னும் பின்னும் இடையிடேயேயும்
முளைத்து வரும் துணைகளும் உண்டு
விடாமல் போவதாய் உத்தேசம்
விட்டு விட்டு போகவும் வேறு இடம் ஏது?

Monday, February 26, 2007

மகள்

ஏதேதோ பேசுகிறாள்
இலக்கணங்கள் அமைக்கின்றாள்
முத்து முத்தாய் சிரிக்கின்றாள்
புத்தகங்கள் படிக்கையிலே
புதுப்பூவாய் மலர்கின்றாள்
எட்டி எட்டி பிடிக்கின்றாள்
எழுத்துகளை ரசிக்கின்றாள்
முட்டி ஓடும் யானைக்குட்டி
தட்டி வாயில் வைக்கின்றாள்
அலுவலகம் செல்கையிலே
ஆசை கொண்டு தாவுகிறாள்
மாலை வந்து சேர்கையிலே
மடியினிலே ஏறுகின்றாள்
பட்டுப்பாப்பா தன்னோடு
பறந்து போகுது நேரந்தான்

பெண்ணாயிருந்து பேசியிருந்தால்

நான் நான்தான்
நான் நானாக இருக்கின்றேன்
நான் என்னால் வரையரை செய்யப்படுபவள்

தாய் கருணை இரக்கம் அன்பு எனும் பாவனைகளால்
தனித்திருக்க மட்டும் நான் ஆள் இல்லை
காமம், பசி, வலி, சிந்தனை, கோபமும் எனக்கு உண்டு
கையில் இருக்கும் அளவுகோலை எறிந்து வந்தால்
கண் நோக்கி உரையாடலாம்.
சிநேகித்திருக்க எனக்கும் விருப்பம் உண்டு

எனக்கான கவலைகளுக்கு
காளான் குடையில் மழைக்கு ஒதுங்க வைப்பதான
குறைந்த பட்ச பால் சார்ந்த அனுதாபங்கள் வேண்டாம்
பால் தாண்டும் தீர்வுகள் இருக்கும்
சாவிகள் தேடி உடன் வர முடிவிருப்பின் வா

கணிணி துறையிலிருந்து ஒரு பார்வை

அண்மையில் பதிப்பிக்கப்பட்ட CRISIL நிறுவன ஆய்வு பதிப்பின்படி ஒவ்வாரு கணிணி துறை வேலையும் நான்கு வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதாம்.

வேலையின்றி இருப்பதன் தவிப்பு வேலையில் இருக்கையில் தெரிவதில்லை. நீளும் இரவுகள், கையில் பிடிபடா எதிர்காலமும் கொடுக்கும் கவலை உக்கிரம் வாய்ந்தது. இன்று கணிணி துறையில் வேலையில் இருக்கும் பலர் சமூகத்தின் அடித்தட்டு அல்லது மத்திய தட்டை சார்ந்தவர்களே. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு அவர்களது தலைமுறையை முன்னுக்கு இழுக்கும் ஆற்றல் வாய்ந்தது. யாருடைய பரிந்ததுரையோ, கையூட்டோ அளிக்காமல் கல்வி தகுதியும், சொந்த புத்தியும் கொண்டு ்வேலைக்கு போன பலரை கணிணி துறையில் பார்க்கலாம். அவ்வாறு வேலை கிடைக்கும் தருணம் தரும் நிறைவு வார்த்தையில் அடங்காது.

கணிணி துறை இந்தியாவின் வேலைவாய்ப்பு துறைக்கு துண் போல் நின்று உதவுகின்றது. 2006 ம் ஆண்டு 1.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் கணிணி துறையால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

2007 ம் ஆண்டு கணிணி துறையின் ஏற்றுமதி 47.8 பில்லியன் அமெரிக்க டாலரை தொடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு கூட்டு முயற்சியே. அரசின் ஆதரவு , கட்டுமானங்களில் கவனம், தனியார் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று வளரும் இந்த துறையின் முன்னேற்றம் மட்டுறுத்தப்பட்ட சந்தை பொருளாதாரத்தின் வெற்றிக்கு சிறந்த உதாரணமாகும்.

பொதுவாக அரசு உருவாக்கும் வேலைகளை கவனிப்போர், அரசின் மூதலீடுக்கு ஊழியரிடம் பொறுப்புணர்வு இன்றி இருப்பதை கண்டிருக்கலாம்.
மாறாக தனியார் மூதலீடு இருக்கையில் பணியில் ஊழியரின் கவனம் அளவீடப்படுகின்றது, அது ஊழியரின் வேலை செய்யும் திறனை அதிகரிக்கின்றது. ஊழியரின் திறன் அதிகரிக்க லாபம் அதிகரிக்கின்றது, அதனால் ஊழியரின் ஊதியம் அதிகரிக்கின்றது.

அரசுதுறை ்மெத்தனத்திற்கு விதிவிலக்குகளும் உண்டு. பாரத மிகுமின் நிறுவனம் போன்ற சில அரசு துறைகள் லாபகரமாக செயலாற்றி வருகின்றன. வளரும் பொருளாதாரத்தின் காரணமாக லாலுவின் திறம்பட்ட மேலாண்மையில் ரயில்வே துறையும் அருமையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இவர் ரயில்வே துறையில் காட்டும் கவனத்தை பீகாரில் காட்டியிருந்தால் பீகார் தனது முன்னேற்ற பாதையை தொட்டிருக்கும்.

கணிணி துறையை காழ்ப்புணர்வோடு பார்க்காமல் அரவணைத்து , அதற்கான பாதையை அமைத்து இந்த துறையிலிருந்து பெற்ற அனுபவத்தை பிற துறைக்கும் அளித்து அரசு இயங்குகையில் இன்னும் பல குடும்பங்கள் சமூகத்தின் கீழ்நிலை அடுக்களில் இருந்து மேல் வரும்.

Friday, February 23, 2007

சுடர்; த்ரிஷா மற்றும் கொஞ்சம் அரசியல்

முத்துவின் சுடர்

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

யார் வேண்டுமானாலும் ஆளலாம். நாட்டின் குடிமகனாய் அரசியலமைப்பின் அங்கீகாரம் செய்யப்பட்ட தகுதிகள் உடையவராய் இருந்தால் சரி. நடிப்பென்பதும் ஒரு தொழில்தானே, அதை காரணம் காட்டி ஏன் ஒருவரது அடிப்படை உரிமையை மறுக்க வேண்டும்?

நகலுக்கும், அசலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் பகுத்தறிவு குடிகளிடத்து வேண்டும். திரைப்படத்தில் ஏழைகளை அணைத்து, கை காசை வாரி இறைத்து ஏழை குடி உயர்த்தும் நடிகன் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரி பணத்தைதான் இலவச போர்வையில் வாரி இறைப்பார் என்ற புரிதல் வேண்டும். அந்த வித்தியாசம் புரியாமல் இருப்பது நடிகர்களின் குறையன்று. சமூதாயத்தின் குறை. ஆட தெரியாமல் மேடை குறை கூறி பயனில்லை.

பகுத்தறிவு இயக்கங்கள் மக்கள் வரிப்பணம் மற்றும் அதன் செலவீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்து உண்டாக்குவதில் முன் வரும் போது இந்த குறைகள் களையப்படும். அது வரை தலைவர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு தற்கால முடிசூடும் மன்னராய்தான் ஆள்பவர்கள் இருப்பார்கள்.

நமது ஊரில் நிலவும் தனி நபர் துதிபாடும் மனப்பான்மையும் இதன் மற்றொரு முகம். தலைவனாக ஒருவனை உருவகப்படுத்திய பின் கால் நகம் நக்கி சுத்தப்படுத்தவும் தொண்டர் தயங்குவதில்லை. தலைமையின் கொள்கைகாக தொண்டர் இன்றி தலைவனுக்காக தொண்டன் ஆகிறான். ஆண்டவன், அரசன் என்று நகர்ந்த இந்த துதி பாடல் இன்று கட்சி தலைமை, திரைப்பட நடிகர் என்று நகர்ந்து நிற்கின்றது. இது மாறும். சற்று காலமெடுக்கும். சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாக சனநாயகம் விரிய இந்த பண்பில் மாற்றம் வரும்.

********************************************************
2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

புரிகின்றது புரியவில்லை புரியவே புரியவில்லை என்ற நிலைகள் இடம், பொருள், நபர் சார்ந்து மாறும். படைப்பாளிக்கு விருப்பத்திற்கு படைக்கும் உரிமை உண்டு. வாசகனுக்கு தேர்ந்தெடுத்து வாசிக்கும் உரிமை உண்டு. எதுவும் திணிக்கப்படுவதில்லை.

சமூகத்தை பார்ப்பவன் தன் மனத்திற்கு பட்டதை எழுதுகின்றான். நாக்கூசும் வார்த்தை நடுவே உலவுகையில் எழுத்தை மட்டும் மாறுவேடம் கட்டி எழுத வேண்டிய அவசியம் எதற்கு? எழுதாததால் அந்த வார்த்தைகள் புலங்கிய இடங்கள் இல்லாமலா போகின்றது? சமூகத்தின் அதிர்வே எழுத்துகளிடையே பரவுகின்றது , சில இடங்களில் காணும் அதிர்வுகள் அந்த நேரத்தில் அதிர்ச்சி தருவதாய் இருக்கின்றது, ஆனால் அதே அதிர்வில் தொடர்ந்திருப்பவர் நிலையை வேறு எவ்வகையில் நாம் உணர முடியும்?

****************************************
3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

இல்லை மிக அழகு.

ஒரு சந்தேகம். திரிஷாவா? த்ரிஷாவா?

**********************************************
4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

எல்லாவற்றையும் நடுவன் அரசில் குவிப்பது தேவையற்ற ஒன்று. ஏரிப்பாசனம் உள்ள விவசாய பூமிகளில் தண்ணீர் பிரச்சனை எப்போதும் இருப்பதாக விழுப்புரம் அருகே கிராமத்தை சார்ந்த விவசாய நண்பன் கூறிக் கொண்டிருப்பான்.

கன்னடம் மற்றும் தமிழ் என்ற ஏடுகளை அகற்றி பேசினால் இரு வேறு விவசாய குழுக்களுக்கு நடுவே நீர் பிரித்துக் கொள்வதற்கான பிரச்சனையாக தெரியும். ஏடுகள் ஏற்றி பார்க்கையில் நீர் பிரச்சனை இனப்பிரச்சனையாக தெரிகின்றது. இனப்பிரச்சனையாக இருப்பதால் கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மாண்டியா ஹாசனில் உள்ளவன் பிழைப்பும் விவசாயந்தான். அவனுக்கும் குடும்பம் , பிள்ளைக்குட்டி உண்டு. காவிரியை குடிநீருக்கு நம்பும் ஊர்கள் அங்கும் உண்டு. தஞ்சை டெல்டாவிலும் இதே கதைதான்.

மழை அளவு, விவசாய நில அளவு, விளைச்சல் போன்ற பல விடயங்களை பல ஆண்டுகள ஆராய்ந்தான் காவிரி பேராயம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அது சரியானதாக எண்ணிதான் இரு மாநில முதல்வர்களும் முதலிலிருந்தே செயல்பட்டு வந்தார்கள். இரு புறமும் அனல் கிளம்பும் குழுக்களால் அவர்கள் தங்கள் துவக்க முடிவிலிருந்து மாற வேண்டியதாயிற்று. பொலிடிக்கல் ரியாலிட்டி நிஜத்திலிருந்து மாறுபட்டே இருக்கின்றது.

பாசன பகுதிகளில் நீர் சேமிப்புக்கு இரு அரசுகளும் மேலும் செயல் படலாம். நீர் விரயம் தவிர்த்தல் இருவருக்கும் முக்கியம்.

************************************
5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வேன்.;-)

**************************************
அடுத்த சுடரை கல்வெட்டு அவர்களிடத்து கொடுக்க நினைக்கின்றேன்.

1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன?

2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா?

3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா? அலலது அணிகலனா?

4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது

5) சிங்குரில் ்விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா?

Thursday, February 22, 2007

விபத்துகள்


Traffic Accident
Originally uploaded by silas216.

காலையில் அலுவலகம் வரும்போது போக்குவரத்து நெரிசலில் புகுந்து வேகச்சாலையில்(freeway) வருகையில் அமெரிக்கர் ஒருவர் காரின் பின்னால் மோதி விட்டார். அடுத்த நிமிடம் வண்டியை இருவரும் சாலையின் புறம் ஒதுக்கினோம். அவசரமாய் இறங்கியவர் எப்படி இருக்கிறீர்கள். நலமா? வண்டி மோதியதால் தங்களுக்கு எதுவும் பாதிப்புண்டா என்று விசாரித்தார். இருவரும் ஊர்திக்கான காப்புரிமை தகவல்களை பரிமாறிக் கொண்டு காரில் கிளம்பி விட்டோம். ஒரு பத்து நிமிடங்கள் உரையாடல்கள் நடந்திருக்கும். அமெரிக்காவில் விபத்தை காண்பது இது முதல்முறையல்ல. ஆனால் ஓவ்வொரு முறை விபத்து நேர்கையிலும் அதை ்சுற்றி நிகழும் சம்பவங்கள் கிட்டதட்ட இது போலவே இருக்கின்றன. நிற்க.

நான்கு வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த சம்பவம் நியாபகம் வருகின்றது. அப்பா அறுபது வயதை கடந்தவர். அவரிடத்து ஒரு பஜாஜ் நிறுவன ஸ்கூட்டர் அப்போது இருந்தது. கடை கண்ணிக்கு போக உபயோகப்படுத்துவார். பொதுவாக அவர் ஸ்கூட்டர் ஒட்டும் வேகம் 30 கி.மீ தாண்டாது. வரும் போகும் எல்லாவற்றிற்கும் வழி விட்டு ஒட்டும் குணம் உடையவர். ஒரு நாள் காய்கறி கடைக்கு போகையில் அப்பா மேல் ஒரு இருபது வயதை ஒத்த இளைஞன் பைக்கில் வந்து மோதி விட்டார். அப்பா கீழே விழுந்து விட்டார். அந்த இளைஞன் மிக வேகமாக வண்டியில் வந்திருக்கின்றார். அது ஓரு பத்தடி சாலை வண்டி வழுக்கி அப்பா வண்டியின் மீது ்மோதி இருக்கின்றது. கீழே விழந்த இளைஞர் அப்பாவை கோபமாக திட்டியிருக்கிறார். காய்கறி கடைக்காரரும் சுற்றி இருப்பவர்களும் அவசரமாய் ஒடி வந்து இருவரையும் தூக்கி விட்டு அந்த கவனமாய் இல்லாமல் வண்டி ஒட்டியதற்காக இளைஞனை திட்டி இருக்கிறார்கள். அப்பாவின் வண்டி சேதம் அடைந்திருப்பதால் நஷ்ட ஈடு கேட்டும் இருக்கிறார்கள். அப்பா அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். சற்று நேரத்தில் அந்த இளைஞர் ஒரு குழாமோடு (பல வயதினரும் கலந்த) எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவை கண்ட மேனிக்கு திட்டி கலாட்டா செய்திருக்கின்றார். அப்பாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்திருக்கின்றார். மாத சம்பளம்/பென்ஷன் வாங்கும் மத்திய தர வர்க்கம் நிரம்பிய தெருவில் எல்லோருக்கும் பயம். தடித்த வார்த்தைகளும், நிறைய மிரட்டல்களும், அப்பாவின் ஸ்கூட்டருக்கு ஒரு உதையும் விட்டு அந்த இளைஞர் சென்று விட்டார். அப்பாவை தூக்கி விட்ட கடைக்காரருக்கும் இதே சம்பவம் நடந்திருக்கின்றது. காவல்துறைக்கு சென்று புகார் செய்தால் மிரட்டல் அதிகமாகும் ஆகையால் புகார் கொடுக்கவில்லை.

விபத்து எவ்வாறு கையாளப்படுகின்றது மற்றும் விபத்திற்கப்புறம் தவறு செய்தவரின் குணநலன்கள் இவற்றை பார்க்கையில் சமூக நீதி என்றெல்லாம் போராடும்போது சமூக அடிப்படை உணர்வையும் மக்களுக்கு பரப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

அந்த இளைஞரை பொறுத்தவரை அவர் செய்ததது அவருக்கு நியாயமாகதான் பட்டிருக்கும். அவர் வண்டி மோதினாலும் அடுத்தவர் ஒன்று சொல்லக் கூடாதென்ற எண்ணமுடன் இருந்தவரை ஒரு சாதாரணக் கடைக்காரர் திட்டக் காரணமானது ஒரு கிழவர் என்பதை அவர் தாங்க இயலவில்லை. ஒரு சப்தம் போட்டேன் அந்த கிழவன் நடுங்கி போய்விட்டான் என்று சவடால் கடைக்காரரிடம் பேசியிருக்கிறார்.

சமூகத்தில் தான் செய்த செயல் தவறு என்ற பார்வையை விட சமூகத்தில் வலிமையை பறைசாற்ற ஒரு இடம் கிடைத்தாக பெருமையோடு இருந்திருக்கிறார். எல்லாருக்கும் சமூகத்ததி்ல் ஒரு பலகீனம் உண்டு. அதை குத்தி அவரை அடக்குவதில் ஆளுமை கொள்வதை விட பலவீனத்தை மதித்து ஆளுமை வளர்ப்பதே உயர்ந்தது. ஆனால் தற்போது விலங்குகளை ஒத்த ஆளுமையே திரைப்படங்களிலும் தெரிகின்றது, சமூகத்திலும் இருக்கின்றது. அதுவே தலைமைபண்பாகவும் காட்டப்படுகின்றது.

தான் வளர்க்கப்பட்ட விதம் , தன்மை, தான் புரிந்து கொண்ட சமூகதன்மைகள் வாயிலாகவே அவ்விளைஞர் தான் தவறிழைத்த போதும் வயதானவரை மிரட்டுதல் வீரம் என்ற கருத்துக்கும், முடிவுக்கும் வந்திருக்க கூடும். சமூகத்திற்கான நீதியை நோக்கி நகருகையில் ஒவ்வொரு சமூக உறுப்பினனும் தன் உரிமையை மதிககும் அதே நேரம் பிறருடையதை மதிக்கும் பண்பினை கற்றிடல் வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் நேரிடையாகவும், மறைமுகமாகவும் அடாவடியான போக்கே இளைய தலைமுறைக்கு போதிக்கப்படுகின்றது. அடிப்படை நாகரிகமும் , ஒழுங்கும் பலகீனமாக கருதப்படுகின்றது.

சமூகநீதி நிறுவும் பகுத்தறிவு வளரும் பொழுதில் அவவிளைஞரின் செயலுக்கும், இன்று அமெரிக்காவில் நான் கண்ட மனிதரின் செயலுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. ஆனால் அது நெடுங்கனவு.

பள்ளிகளின் போதனைகளில் அசோகரும், கனிஷகரும் மரம் நட்டதை போதிப்பதை விட்டு விட்டு அடிப்படை நாகரிகம் மற்றும் ஒழுங்கை போதிக்கலாம். நூற்றில் ஒரு பிள்ளையாவது அதை துவக்கத்தில் கற்றுக் கொள்வதால் கடைபிடிக்க முயலலாம்

Tuesday, February 20, 2007

பிடித்ததும் பழகியதும்

என்றாவது ஒருநாள்
இரவு முடிந்து பகல்
வந்தால் பண்டிகையென
காத்திருப்பு
நீளும் இரவுகளோடு
நித்திரை அதிகரிப்பு
பகல்தன்னை தேடும்
பரிதவிப்பும் உண்டு
இரவின் நுனியில்
நாட்கள் அமர அமர
பழக ஆரம்பத்தோம்

தூங்காமல் காணாமல்
போயிருந்தவன் வந்து நிற்க
போன இடம் கேட்ட போது
பகலே இதுதான் என்றான்
என்றோ முடிந்த இரவு
இன்னும் தெரியாமல்
பகலுக்கும் இருள் பூசிவிட்டோம்
வந்தவனை துரோகி ஆக்கி
கொன்று புதைப்பு
இருள் அகல இருளுக்குள்
காத்திருத்தலே பிடித்தம்
இருள் அகன்றால் என் செய்வது

Monday, February 19, 2007

சுழற்சி வாழ்க்கை

தமிழர் ஒற்றுமையென
தலைமை அறிக்கை
மாற்று மொழி ஒழித்திட்டு
மரியாதை காக்க பிரகடனம்
ரத்தம் பொங்க உணர்ச்சி முழக்கம்
இடையிடேயே இலவசமாய் சில
காஸ் அடுப்பு கலர் டிவியும் உண்டு
எல்லாமிருந்தும் ஏதோ போதலை
மழை தண்ணியில் ரோடு கரைய
குடிதண்ணிக்கு நாக்கு காஞ்சு அலைய
வெள்ளத்தண்ணி வீடு புகுந்து நிரப்ப
கொசுக் கடியோடு கையூட்டு கொடுத்து வாங்கி
களச்சி போய் உட்காரையில
மீண்டும்...

மதிய தூக்கம்

பெங்களூர் இந்திரா நகரில் உத்தியோகம் பார்த்த காலத்தில் உடனிருந்த சக தோழர் மதிய நேரம் கண்ணசர்ந்து விடுவார். இருக்கையில் உட்கார்ந்த சாயில் அழகாய் குறட்டை விட ஆளுக்கு இரண்டு தலையில் தட்டி எழுப்புவோம். மனிதர் கடைசி வரை மாறவில்லை. நாங்களும் தட்டுவதை நிறுத்தவில்லை.

இன்று பார்த்த செய்திபடி நண்பர் இதயத்திற்கு நலம் கிடைக்க உடற்பயிற்சி செய்ததாக நினைக்க ்வேண்டியிருக்கிறது. கிரேக்க நாட்டை சார்ந்த ஏதேன்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்சியாளர் ஒருவர் மதியம் தொடர்ந்து தூங்கி ஒய்வெடுக்கும் பலரை சோதித்து இந்த முடிவை வெளியிட்டுள்ளார். மதிய தூக்கம் அலுவலக வேலையினால் ஏற்படும் மண்டை சூட்டை தணித்து விடுகின்றது போலும்.

இனி தூங்கி விட்டு யாரேனும் கேட்டால் மருத்துவர் அறிவுரை எனக்கூறி விடலாம். உயிரினங்களில் காணப்படும் நாள் சுழற்சியினை அடிப்படையாக கொண்ட சிர்காடியன் ரிதம் என்பது உயிரினங்களின் மரபணுக்களியே பொதிந்துள்ளது. இந்த ரிதம் தூக்கத்தையையும் , விழிப்பையும் உயரினங்களிடத்து கட்டுப்படுத்துகின்றது. மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி இந்த ரிதத்தை கொண்டுள்ளது. வெளிச்சமும், இருளும் வெளிப்புற காரணிகளாய் சிர்காடியன் ரித்ததிற்கு உதவுகின்றன.

Thursday, February 15, 2007

கரையும் பனிக்கட்டி--ii

முதல் பகுதி

மூன்றாவது க்யுப் எங்கள் மத்தியில் கதாநாயகி மாதிரி. வேலையில் கொஞ்சம் முன்னே பின்னே என்றாலும் அட்டகாசமான தகவல் தொடர்பு நுட்பம் புரிந்தவள். தான் சொல்ல நினைத்தது, பிறர் சொல்ல நினைப்பது எல்லாம் புரிந்து கொண்டு சூழ்நிலைக்கேற்ப பேசுவதில் நிபுணி.

வாடிக்கையாளர் கையாள்வதில் எங்கள் மேலாளர் கொஞ்சம் போதாதவர். இவள்தான் அவருக்கு தூண், ஊன்று கோல் இன்னும் மற்றும் பல. எங்கள் பிழைப்பின் கோடெலுதி வாழ்வாரே மேலார் எனும் கருத்து அம்மணியை கண்ட நிமித்தம் மாறி விட்டது. பின்குறிப்பாய் சொல்ல வேண்டியது அவளுடைய உடைநயத்தை. She rocks.

அப்பேற்பட்ட அம்மணியின் ஆண்தோழர் என்ற விதத்தில் புதியவர் மேல் இன்னும் மரியாதை வந்தது.

'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாதுனுட்டா பிரதர். இப்போ ஊருக்கு போ. இன்னும் கொஞ்சநாள் இடைவெளி விட்டு நம்ம உறவை பார்க்கலாம் சொல்லறா. எத்தனை மைல் தாண்டி இவளுக்காக வந்திருக்கேன். இப்படி சொல்லிட்டா பாருங்க. கொஞ்ச நாளாவே விலகி போற மாதிரி இருந்துச்சு நான்தான் தப்பா நினைக்கிறேனோனு பயந்துகிட்டு கேட்காம விட்டுட்டேன். இப்ப இரண்டு மாசமா என் கூட பேசறதே இல்லை'- புதியவர். கண்கள் கலங்கின.

'ஏன் பிரதர் கலங்கறிங்க. ஏதாச்சும் சண்டை எதுவும் போட்டிங்களா? ' - நான். எனக்கு அவர் மீது பாவமாக இருந்தது.

மூன்றாவது க்யுபை சமீபமாக வட இந்தியரோடு அடிக்கடி பார்க்க முடிந்தது. புது வருட முதல் இரவில் சான்பிரான்சிஸ்கோ பாரில் பார்த்தேன். அறைத்தோழனுக்கும் தெரியும். புதியவரிடம் சொன்னானா இல்லையா தெரியவில்லை.

'சண்டை என்னங்க. எப்போதும் வழக்கமா வர்ரதுதான். ரெண்டு பேரும் அப்படி ஓரு அண்டர்ஸ்டான்டிங்ல இருந்தோம். என்கிட்ட போன்ல பேசாம அவ தூங்கவே மாட்டா. திடீருனு மாற்றங்கள். இந்த தடவை நான் வர்ரேனு சொன்னப்ப உங்க ரூம்மேட் வேண்டாம் வராதே, ரொம்ப குழம்பிக்காம இதை விட்டுடு சொன்னான். எனக்குதான் மனசே ஆகலை. கிளம்பி வந்திட்டேன். நேரா பார்த்து என்னனு கேட்டுடலாம்னு நினைச்சேன்' - புதியவர்.

'பிரதர் சொன்னா தப்பா நினைச்சிக்காதிங்க. அண்டர் ஸ்டான்டிங்கலாம் பெரிய வார்த்தை. அதலெல்லாம் காலம் இடம் பொருள் வைச்சு மாறும். ஊர்ல இருக்கையில இருந்த் சூழ்நிலை வேற, இப்ப இருக்க சூழ்நிலை வேற. மனசோட தேவைகளும், சந்தோஷங்களும் மாறுபடலாம் இல்லையா?
குடும்பம, நீங்க அத விட்டா பத்து மணி நேர வேலைங்கற வட்டத்தில யோசிக்கறது எப்படி? இங்க வந்து தன் கால்ல நின்னு நிறைய சொந்த நேரம் கிடைக்கறப்ப யோசிக்கறது எப்படி? வித்தியாசம் உண்டு. கொஞ்சம் இடைவெளி கொடுங்க பிரதர். உங்களுக்கும் யோசிக்க நேரம் வேணும்.' - நான்

எனது அலுவலக கதாநாயகி பக்கம் பேசினேன். நொந்து போன இவர் பக்கம் தொடர்ந்து பேசினால் அவரது குழப்பம் தான் அதிகரிக்கும்.

'நானும் இவன் பிரச்சனையை சொன்னப்ப அவள்கிட்ட பேசினேன். தேங்ஸ். பட் நோ தேங்ஸ்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அவள்கிட்ட என்னத்த சொல்றது' - அறைத்தோழன்

ஸ்காட்ச் சோகமாய் இருந்த போதும் சுகமான மனநிலையை கொடுத்தது. தோழமை உள்ள பானம் அது ஒன்றுதான். ஐஸ் க்யுபின் இடுக்குகளுக்குள் பரவி அதன் சூட்டில் ஐஸ் உருக ஸ்காட்சின் மணம் நாசிக்கு இனிதாய் இருந்தது. ஐஸ் உருகுவதற்குள் பருக வேண்டும். உருகி விட்டால் அதற்கப்புறம் ஸ்காட்ச் இல்லாமல் போய்விடும். ஸ்காட் தெளித்த தண்ணீர்தான் இருக்கும்.

'பிரதர் சொல்லறது இசி. காதல் மாறக்கூடாதுங்க. இடம் மாறினா மனசு எப்படிங்க மாறலாம். எதிர்பார்த்து காதலிச்சாதான் மனசு மாறும். என்னை பொருத்தவரை எதிர்பார்ப்பு இருந்தா அது காதலே இல்லிங்க. ஆனா நாங்க அப்படி இருந்ததில்ல'- புதியவர்.

'பிரதர் எதிர்பார்ப்பிலாம இருக்கனும்னா சவமா இருந்தாதான் உண்டு. எல்லா இடத்திலும் எதிர்பார்ப்பு உண்டு. சமயத்தில நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் இருக்கையில அதை தாண்டி வேற எதிர்பார்ப்பு வரதில்லை. அதுதான் உண்மை. எண்ணமோ சிந்தனையோ மனசில நிரந்தரம் கிடையாது. ஓடிக்கிட்டேதான் இருக்கும். சில ்விஷயங்கள் நேரமும் இடமும் மாறும் போதுதான் மனசுக்கு புரிய ஆரம்பிக்கும். காதல்ல காம்ப்ரமைஸ் பண்ணறதிலும் அளவிறுக்கில்ல. ஒரு அளவுக்கு மேல காம்பரமைஸ் பண்ணிக்கிறது மூகமுடி போட்டு நாடகம் நடிக்கிற மாதிரி ஆயிடும். எவ்வளவுதான் நடிக்கிறது , கழட்டி போட்டுட்டு எப்படா போவோமுனு ஆயிடும். அவங்களுக்கும் அப்படி பட்டிருக்கலாம். அதுதான் சொல்லியிருக்காங்க'- நான்.

புதியவருக்கு கோபம் வந்துவிட்டது. பட்டென அறைக்குள் சென்று கதவை மூடி தூங்கிவிட்டார். அறைத்தோழன் என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த ரவுண்ட் ஸ்காட்சை ஊற்ற டிவியில் எதையோ பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

' பிரதர் எதிர்பார்ப்பில்லாம வர்ரது அட்வைஸ் இவ்வளவு நேரம் வாரி வழங்கின எதையும் எதிர்பார்த்தா சொன்ன? -சிறிது நேரம் கழித்து அறைத்தோழன் சொன்னான்.

அவன் சொன்னது எனக்கு சரியாகவே பட்டது.

கடந்த வ்ருடம் காய்கறி வாங்க போன போது புதியவரை கடையில் பார்த்தேன். இபபோது மூட்டை முடிச்சுகளோடு அமெரிக்கா வந்து விட்டார். மூன்றாவது க்யுப் அவரது மனைவி இல்லை. வேறு யாரோ இருந்தார்கள். அப்பா ஆக போகிறார் போல. பார்த்து ஹாய் சொல்ல சிரிக்காமல் போய்விட்டார். இன்னும் கோபம் போல இருக்கிறது.

கரையும் பனிக்கட்டி-I

ஐந்து அல்லது ஆறு வருடம் இருக்கலாம். மழை சாரலடிக்கும் ஒரு நாளின் சாயங்கால வேளையில் கலிபோர்னியா மாகாணத்தின் சன்னிவேல் எனும் ஊரில் அந்த உரையாடல் நிகழ்ந்தது. என்னுடன் எனது நண்பனும் அறை தோழனுமாகிய ஒருவனும், அவனுடடைய நண்பனும். நானும் எனது அறைத்தோழனும் குளிருக்கு கதகதப்பாய் ஐஸ்கட்டிகளில் வழுக்கி ஒடும் பழுப்பு நிற திரவமாய் ஜாக் டேனியல்ஸை ரசித்து இருக்க புதிய நண்பர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை.

புதிய நண்பர் பெல்ஜியமிலிருந்து வந்திருந்தார். அவருக்கும், அவரது தோழிப் பெண்ணிற்கும் ஏதோ வாக்குவாதம். கொஞ்சம் நடப்பதும், பின் ஏங்க இப்படி என்று புலம்புவதுமாய் அந்த நேரம் இருந்தது.

எனது அறைத்தோழனுக்கு பெண்தோழி உண்டு. அவன் கதையை தனியாக புத்தகமாக போடுமளவிற்கு சொல்லாம். இப்போது இரண்டு குழந்தைகள். அது எனக்கு தோழி பெண்ணிடம் பேச ஆரம்பிந்து இருந்த தருணம. உள்மன வார்த்தைகளை கொட்ட பயந்து , மேலோட்டமான உரையாடல்களை நிகழ்த்தி கொண்டிருந்தேன். மின்னஞ்சலும், தொலைபேசியும் கண்கண்ட தெய்வங்களாய் இருந்தன.

'பிரதர் அவளுக்காகதான் இவ்வளவு தூரம் வந்தேன்?'- புது நண்பர்.

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. பொதுவாக அறைத்தோழன் ஒருவரை பற்றி இன்னோருவரிடம் சொல்லமாட்டான். அதனால் முன்கதை சுருக்கம் சரியாக தெரியாமல் உரையாடலில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.

'விடுங்க பிரதர். உட்காருங்க. கொஞ்சம் ஸ்காட்ச் சாப்பிட்டா எல்லாம் சரியாயிடும்' - நான். ஸ்காட்ச் ஒரு அருமையான திரவம். கண்டுபிடித்தவன் மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு.

'டேய் சும்மாயிரு.' - அறைத் தோழன்.

"அவரை ஒண்ணும் சொல்லாதேடா. அவருக்கு தெரியாது'- புதியவர் எனக்கு ஆதரவாய் பேசினார்.

' ஏங்க ஹாட் சாப்பிடமாட்டிங்களா?' - நான்

' இல்லிங்க. சாப்பிடறதை நிறுத்திட்டேன். அவள்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கேன் ' - புதியவர்

' கேட்கறேனு தப்பா எடுத்துகாதிங்க பிரதர். யார் அவங்க. என்ன பிரச்சனை'- நான். கதை கேட்பதில் எப்போதும் எனக்கு ப்ரியம் உணடு.

அறைத்தோழன் என்னை சலிப்பாய் பார்த்தான்.

' ஏன்டா ஸ்காட்ச்க்கு தொட்டுக்க சிப்ஸ் பத்தாதா. இவன் கதை வேற வேணுமா'- அறைத்தோழன்

'பிரதர். அவன் கிடக்கான். உங்களுக்கு என்னாச்சு சொல்லுங்க.நான் ஏதாவது முடிஞ்சா பண்ணறேன்' - நான்.

' அவ இங்க சான்உசேல இருக்கா. காலேஜிலேருந்து ரெண்டு பேரும் லவ் பண்ணறோம். மூனு வருஷம் முன்னால பெங்களுர்லேருந்து நான் பெல்ஜியம் போயிட்டேன். கொஞ்ச நாள்அவ இங்க வந்திட்டா. இப்போ என்னடானா ஐ நீட் எ ப்ரேக்னு சொல்லறா. என்னங்க பண்ணறது' - புதியவர். குரல் நைந்திருந்தது.

'விடுங்க பிரதர். எங்கே போக போறாங்க. எதுக்கு கேட்க வேண்டியதுதானே?'- நான்.

'அவர் சொல்லற ஆளு நம்ம ஆபிஸ்தான்டா. யாருனு தெரியுதா?' - அறைத்தோழன் புதிர் போட்டி வைத்தான்.

கிட்டதட்ட மினி மெட்ராஸாய் புரோஜக்ட் இருந்தது. அணியில் மொத்தம் பதினான்ங்கு நபர்கள். பத்து மெட்ராஸ். ஒரு திருச்சி. மூன்று தெலுங்கு. பத்து மெட்ராஸில் ஆறு பெண்கள். யாரை சொல்கிறானென புரியவில்லை. கலந்து கட்டி யோசித்ததில் தலை சுற்றல் வந்தது.

' அட டாபரு. நம்ம மூணாவது க்யுப்தான்டா.' - எனது அறிவுச்சுடர் எரிய வெகுநேரம் ஆனதால் அறைத்தோழன் சொல்லி விட்டான்.

(தொடரும்)

'

Monday, February 12, 2007

குழுக்களும் அவற்றின் சப்தங்களும்

சிந்தனையை கோர்க்கும் போது அதை வெளிப்படுத்த பல வடிவங்கள் உண்டு. சிலையாய், சித்திரமாய் , பாவனையாய், எழுத்தாய், பேச்சாய் வெளிப்படுத்தலாம். இவற்றில் எல்லா தரப்பையும் கவரக் கூடிய இரு படிமங்கள் எழுத்தும், பேச்சும். பல்லியின் நாக்கில் படியும் பூச்சியை போல எழுத்துகளும், பேச்சுக்களும் எண்ணத்தில் படியும்.

பரிணாமத்தின் துவக்கத்தில் சப்தங்கள் வார்த்தைகளாக மாற ஆரம்பித்தன. வேட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஏற்படுத்தபட்ட குழுவில் ஒரே போல் எழுப்பட்ட சப்தங்கள் வார்த்தைகளாக நிறுவப்பட்டு பகிரப்பட்டது. வார்த்தைகள் அதிகமாக அதை பாதுகாக்க எழுத்து வடிவம் உருவாகி இருக்கலாம.

குழு அமைப்பு உருவாக்கம் ஒரு செல் உயிரி பல செல்லாக மாறுவதிலிருந்தே உண்டு. பல செல் உயிரிகளில் யானைகள், சிங்களின், கழுதை புலிகள் பற்றி குழு அமைப்புகளை அன்றாடம் டிஸ்கவரி சானலில் காணலாம்.

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் யானையும், ஆசிய கண்டத்தில் இருக்கும் யானையும் ஒரே போல் சப்தம் இடுகின்றன. கிட்டதட்ட ஒரே போல் குழு அமைப்பில் இயங்குகின்றன. மனிதருக்கு ஆறாம் அறிவின் காரணமாய் இருக்கும் நில அமைப்புக்கேற்ற தனது பயம், பயத்தால் உருவான பக்தி, இனப்பெருக்க தேவைகள், வேட்டை தன்மை இவற்றிற்கேற்ப எழுப்பிய சப்தம் குழுவுக்கு குழு மாறியது. துவக்கத்தில் இருந்த சித்திர வடிவ எழுத்துக்கள் பின்பு வடிவம் மாற ஆரம்பித்தன. குழுக்களின் கற்பனைக்கு ஏற்றது போல் அவற்றின் எழுத்து வடிவம் மாறியது.

அலுவலகத்தில் இருக்கையில் வீட்டோடு தமிழில் பேசினால் அருகிலிருக்கும் சீன தோழருக்கு அது சப்தமாகதான் படுகின்றது. சீன தோழர் அவரது மொழியில் உரையாடுகையில் எனக்கும் அது சப்தமாகதான் இருக்கின்றது. முக அதிர்வுகள்,முன்னர் நடந்த உரையாடல்கள் வாயிலாக பொருள் கொள்ள முடிகிறதே தவிர அவர் சொல்வதன் பொருள் புலப்படுவதில்லை. பேச்சில்தானென்று இல்லை எழுத்தும் இதே கதைதான். நம்முடையது அவருக்கு ஜிலேபியாகவும், அவருடையது எனக்கு குச்சி கோபுரமாகவும்தான் படுகின்றது

சப்தம் மொழியானது, எழுத்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கியது. குழுக்கள் பெருகுகையில் அவை பிரிய ஆரம்பித்தன, கிட்டதட்ட உடலில் நடக்கும் செல் பிரிதல் போல் குழு பிரிதலும் ஆரம்பித்தன. குழுவின் வலிமை அதன் உறுப்பினரின் வலிமை கொண்டு மாறியது.

விலங்குகள் குழுவிலும் தலைமையை காணலாம். தலைமைக்கு நடக்கும் போட்டிதனையும் காணலாம். சிந்திக்கும் உரிமையிருந்ததால் மனித குழுக்களில் வலிமை அதிகமானவன் தலைவனாகவும், புத்தி அதிகமுள்ளவன் ஆலோசனை சொல்பவனாகவும் அமைய பெற்றது. புத்தியின் வலிமையை உணர்ந்தவன் புத்தியை பகிர்ந்து குழுக்களை வலிமையாக்குதலில் ஈடுபட்ட அதே தருணத்தில் புத்தியின் உதவியால் தன்னை தற்காத்து கொள்ளவும் ஈடுபட்டான்.

தன்னை மேம்படுத்தி கொள்வது உயிரினத்தின் மரபனுக்களில் உண்டு. தன்னை பாதுகாக்க நினைக்கும் உணர்வின் திரிபே வலிமையானதே வாழும் எனும் கோட்பாடு. தனிமனிதன் குழுவாகதான் இதை சாதிக்க முடியும் என்பதை அறிந்ததால் குழுவை வலிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டான். குழுவை இணைப்பதற்கான பொதுவானதொரு கருவி தேவைபடுகையில் மொழி சுலபமாய் அவ்விடத்தில் பொருந்தியது.அதனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சாதனமாய் உண்டான மொழி உணர்வுகளை இயக்குவதாய் மாற ஆரம்பித்தது. மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே மோதல்கள் உருவாயின. அறிவியல் பெருகி உலகம் சுருங்க தொடங்கும் இக்காலத்திலும் அது மாறாமல் உண்டு. கணிணி உலகத்திலும் டாட் நெட், ஜாவா மோதல்களாக குழு மோதல்கள் உண்டு.

சித்திரமும், சிலைகளும் காலந்தொட்டு மாறியது போல் எழுத்தும், பேச்சும் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றது. குழுக்கள் தன் விட்டம் அதிகரிக்க மொழியினை பரப்புதலும் , பிற மொழி அழித்தொழித்தலும் ஒரு வழி என அடையாளம் கண்டதால் அம்முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்தனர். சில குழுக்கள் மொழியினால் உண்டான அதிகார அமைப்பினை காக்க மொழியை குறைந்த விட்டத்திற்கு கொண்டு வர அம்மொழிகள் அழிய ஆரம்பித்தன.

பொருளாதாரத்தை உயர்த்தும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்திசைந்து அதனை விரைவாய் உள்வாங்கும் தன்மை கொண்ட சிந்தனையாளர் சார்ந்த மொழிகள் விரைவாய் வட்டங்களை விரிவுபடுத்தின. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உள்வாங்காமல் நின்ற மொழி கொண்ட குழுக்கள் நாள்போக்கில் அவற்றினை அவசரமாக கற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் பிற மொழி வாயிலாக அறிய தொடங்கி அவ்வழி நகர ஆரம்பித்தனர். மொழியால் குழு வளராமல் குழுவால் மொழி வளர வேண்டிய அவசியம் அக்தகைய மொழிகளுக்கு உண்டானது.

Friday, February 9, 2007

தோழி

முன்னோரு காலம் எழுதியது.
------------------------
வருடலாய் வரும்
இனிப்பாய் பரவும்
இதமாய் மிதக்கும்
வரையரை பல
வகுத்து கொடுத்திருந்தார்கள்
இதயம் இடிக்க வந்தது
இனிப்பினும் தாண்ட கசந்தது
இருக்கும் பூமி கனத்தது
வரையரை காணா மறைந்தது
எல்லாம் உன்னாலே தோழி

காற்றின் பரவும் காணா வாசம்
கண்மணி நீயாய் இருக்கின்றாய்
இமைக்கு உள்ளும் புறமும்
இயல்பாய் பரவி
கனவாய் காட்சியாய் தெரிகின்றாய்
இழுத்து அணைத்து என்னுள்
சேர்க்க நொடிகள்
எண்ணி இருக்கின்றேன்

Wednesday, February 7, 2007

கொந்தளிப்பின் ஊடே

நாசாவின் அஸ்ட்ராநாட் ஆவதற்கு கடுமையான பயிற்சி உண்டு. முக்கிய முடிவுகளை விநாடி நேரத்தில் எடுப்பதற்குண்டான பயிற்சிகளும் உண்டு. நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரத்தில் லிசா மேரி நோவாக் எனும் பெண் ஷிப்மென் எனும் இன்னொரு பெண்ணை காரில் தாக்கி அவர் கண்ணில் மிளகு தூளை தூவி அவரை கடத்த முயற்சி செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. இருவருக்கும் இடையேயான பிரச்சனை அவர்களுக்கும் பில் ஒப்லின் என்பவருக்கும் இடையேயான உறவை பற்றியது. இது காதல் சம்பந்தப்பட்ட விஷயம். உரிமை கோரி மோதி கொள்வது பரம்பரை பரம்பரையாக உண்டே என்று தோன்றும் அதே கணம் இவர்களது பின்புலத்தை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.

லிசா மேரி நோவாக் ஒரு அஸ்ட்ராநாட் சென்ற ஜீலையில் விண்வெளிக்கு சென்று 22 நாட்கள் இருந்து வந்திருக்கின்றார். கடுமையான மனப்பயிற்சிகளை பயின்றவர். ஆனாலும் பின் விளைவுகளை யோசிக்காமல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க பல வன்முறை சாரா வழிகள் இருந்து அந்த வழிகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுகளை யோசித்து அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அவர் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை.

கர்நாடகத்திற்கும் , தமிழகத்திற்கும் இடையேயான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சசனையை கையாண்டு யார் வளர்வது என்ற நோக்கில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பிற்கு மக்களை தயார் செய்வதில்தான் பத்திரிக்கை தலைப்பு செய்திகளும், மக்கள் தலைவர்களாக இன்று அறியப்படுபவர்களும் முன் நிற்கிறார்கள். பேருந்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வரிப்பணத்தில் வந்த பொது சொத்துகள் நொறுக்கப்படுகின்றன. அந்த படங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டு இந்திய இறையாண்மையை நோக்கிய தேவையற்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருப்பவனும் விவசாயிதான், கர்நாடகாவில் இருப்பவனும் விவசாயிதான். பகிர்ந்து கொண்டால் வளமை இருவருக்குந்தான். சொத்து பிரிப்பதில் இருக்கும் பங்காளி பிரச்சனைதான் ஆனால் அந்த நிலையை முன் வைத்தால் கவர்ச்சி குறைந்து போகிறது.

எவனேனும் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டால்தான் பார்க்க நன்றாக இருக்கின்றது. ரோம பேரரசின் போது மைதானங்களில் சாகும் வரை சண்டையிட சொல்லி வேடிக்கை பார்த்து கை கொட்டுவார்களாம். அந்த மனநிலை சற்று மருவி இன்று இங்கு வந்திருக்கின்றது.

இந்த முறை உயிர் சேதம் எதுவும் காவிரி பிரச்சனையால் ஏற்படவில்லை. இரு மாநில நிர்வாகத்தையும் இதன் பொருட்டு பாராட்ட வேண்டும். ஏற்பட்டிருந்தால் செய்தியாளர்கள் இரங்கல் வார்த்தைகளை அச்சில் ஏற்றி மனமெங்கும் மகிழ்ச்சியோடு செய்திகளை தண்டோரா அடித்திருப்பார்கள். தங்கள் நோக்கங்களை நோக்கி நிகழ்வுகளை திரிப்பதில் காட்டும் கவனத்தை நிகழ்வுகளை உள்வாங்குவதில் செலுத்தினால் நலம்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் எதிர்கட்சியாய் இருப்பவர்களின் ஒரே அரசியல் நிலை ஆளும் கட்சியை எதிப்பதே. இறையாண்மையும், அமைதியான மாநில சூழ்நிலையும், விவசாயிகளின் உண்மை பிரச்சனையும் அவர்களுக்கு முக்கியமில்லை, அக்கறையுமில்லை. மாநில நலன் என்பதை விட ஒட்டு வங்கியின் அசைவே முக்கியம்.

கொந்தளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட அஸ்ட்ராநாட் நிலையிழக்கிறார், சராசரி மனிதர் எம்மாத்திரம். சிந்திக்கும் நிலை மக்களமைப்பு அரசியலமைப்புகளுக்கு பிரச்சனை. ஆகவே அவர்களை உணர்ச்சிவசப் பட வைக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றார்கள். மக்கள் கொந்தளிக்கும் நிலையில் ஆளுங்கட்சியாய் இருப்பவர்களும் கொந்தளிப்பிற்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறது. கொதிக்கும் தணலுக்கு மற்றுமொரு விசிறி.

Friday, February 2, 2007

மென்பொருள் துறையும் இன்னும் பலவும்

மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை.விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற கருத்துகள் வலைத்தளங்களில் முன்னிறுத்தப்படுகின்றது.

விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வள பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்கு திருப்பப்டுகின்றது. இதை பற்றிய பல தகவல்களை வலைதளங்களில் காணலாம். ஆட்சில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியின் ஓட்டு வங்கியை காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்ட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசி கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமானயரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்து கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.

வெறும் மென்பொருள் துறையை பிடித்து குறைப்பட்டு கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்க படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது.தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்து கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலம் மேம்படுத்துவதை காணலாம்.

மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கி பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.

உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளை கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.

மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. என்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்ப பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமான போக்குவரத்து, மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதை சார்ந்த தொழில்களும் என பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைபடுத்தி அரசு அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.

சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வர காரணம் மனிதவளமே. அடிப்படை கட்டுமான பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தி தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகை தொழில்கள் மேம்படும்.

இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிக பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்த துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்கு சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதை காணலாம்.

திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாற காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.

Wednesday, January 31, 2007

பாடல்கள்


Crazy Music
Originally uploaded by pfly.
பாடல்கள் உடன் வந்து கொண்டே இருக்கின்றன. கார்களின் ரேடியோவிலும், கணிணியிலும் உடன் இருந்து கொண்டே இருக்கின்றன. சின்ன வயதில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த திரைப்பட பாடல்கள் மேல் ஏற்பட்ட ப்ரியம் இன்னும் அகலவில்லை. சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா என டி.எம்.சவுந்திராஜன் பாடுவது இன்னும் கேட்க இனிமையாக இருக்கின்றது. மற்றோரு பாடலான உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் என் குழந்தைக்கு நான் பாடும் தாலாட்டுகளில் ஒன்றாகவும் தங்கிவிட்டது.

பாடலை எழுதியது யாரென நியாபகம் இல்லை. வாலியோ, கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ என அடையாளம் பிரிக்க முடியவில்லை. அடிமை பெண் திரைப்படத்தில் வரும் தாயிலாமல் நானில்லை பாடல் உதடுகளுக்குள் முணுமுணுப்பாக வந்து போகின்றது.

கொஞ்சம் வளர்ந்த போது ஒன்றிரண்டு டப்பாங்குத்து பாடல்களிடத்து பார்வை திரும்பியது. எனன படமென்று நியாபகம் இல்லை குன்னக்குடியின் இசையில் வந்த கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹோ ஹோய் பாடல் பிடித்த பாடல்களில் ஒன்றாய் இருந்தது. பின்பொழுதில் இளையராஜாவின் உருமியில் மனம் லயிக்க ஆரம்பித்தது.

அப்பா முருக பக்தர். அவரது தாக்கத்தினால் சிறுவயதில் முருகபக்தி மனம் நிறைந்திருந்தது. சீர்காழியின் பாடல்கள் வீட்டில் நிறைய இருந்தன. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் மிகப்பிடித்த பாடலில் ஒன்று. ஊரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் சலிக்காமல் வீட்டில் ஒலிக்கும், அதை சலிக்காமல் கேட்க இயலும். அம்மா பேத்தி பால் சாப்பிட அடம் பிடித்தால் பேத்திக்கு கந்த சஷ்டி கவசம் படித்துக்காட்டுகிறார். சாமி கும்பிடாமல் வளர்க்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள். உம்மாச்சியின் இருப்பை பற்றிய கேள்விகளை வாரிசிடம் வளர்கையில் அறிமுகப்படுத்தலாம் என விட்டாகி விட்டது.

புன்னகை மன்னன் வந்த போது என்ன சப்தம் இந்த நேரம் கேட்க ஆரம்பித்து இன்னமும் நிறுத்தவில்லை. எனக்கு தெரிந்து அந்த பாடல் பிடிக்கவில்லையென யாரும் சொன்னதேயில்லலை.

காதல் அரும்பிய தருணம் ஆனந்தம் படத்தின் என்ன இதுவோ என்ன இதுவோ பாடல் தந்த மோகம் மறக்க இயலாத ஒன்று. ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்க காருக்குள் பாடல் பரப்பி சாலையில் அவளோடு நிகழ்த்திய உரையாடல் அசைப்போட்டு செல்லுதல் சேமிக்க கூடிய நினைவுகளில் ஒன்று.

கருத்தம்மா வந்த பொழுதில் மலேசியா வாசுதேவன் பாரதிராஜா குரலில் வந்த காடு பொட்டை காடு ்பாடல் கேட்கையில் திருச்சி அருகே ஊர் பக்கம் போகும் பாதையில் உள்ள வெயில் அடிக்கும் பொட்டை காடுகளும் மாடு மேய்க்கும் சிறார்களும் வயதானவர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆக்ரோஷமாய் காய்ந்த மண்ணிற்கு சொந்தகாரர்கள் பாடும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்.

கோட்டையை விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமாட சாமி பாடல் பிடித்தில் ஒன்று. குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த படம். பாடலின் முழு வரிகளோ, இல்லை படமோ நியாபகம் இல்லை. பாடலின் முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் உண்டு.

காதல் ஓவியம், முதல் மரியாதை இரண்டு படமும்தான் எல்லாப் பாடல்களும் பிடித்த படங்கள். கேட்க வைத்த ராசாவிற்கு நன்றி. நிலாவதான் நான் கையில புடிச்சேன் என்று கேட்பது கார் ஸ்டியரிங்கிலும் தாளம் போட வைக்கின்றன.

ஆங்கில பாடல்களுக்கு பரிச்சயம் கல்லூரி காலத்தில்தான் பரிச்சயம் கிடைத்தது. ஈகிள் குழுவினரின் வெல்கம் டு தி ஹோட்டல் கலிபோர்னியா பாடல் மிக பிடிக்க ஆரம்பித்தது. வரவேற்று வெளியே அனுப்ப மறுக்கும் அந்த வகை இடம் பிடித்திருந்தது. பின்னோரு நாளில் வேகாஸின் கேசினோ ஒன்றில் கொஞ்சம் ஜேக் ்டானியல்ஸ் மற்றும் மால்பரோ துணையோடு அமர்ந்திருந்த போது பான் ஜோவி குழுவினரின் இட்ஸ் மை லைப் பாடல் கேட்க நேர்ந்தது. அது முதல் தனியே நானும் ஜேக் ்டேனியல்ஸூம் இருக்கையில் அந்த பாடலை துணைக்கு வைத்துக் கொள்ளுதல் மரபாக வைத்துக் கொண்டேன். தற்சமயம் அந்த குறுந்தட்டும் தொலைந்து விட்டது, ஜேக் டேனியல்ஸையும் விட்டாகி விட்டது.

திருமணத்தின் பின் ்துணைவியின் கர்நாடக இசை ஆர்வத்தின் காரணமாய் எம்.எஸின் குறையொன்றுமில்லை பாடலை கேட்க நேர்ந்தது. அதற்கப்புறம் அடிக்கடி அந்த பாடலை கேட்க வேண்டியிருக்கிறது. மீராவில் எம்.எஸ் பாடிய பாடலையும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.