Wednesday, May 30, 2007

பண்ணை மன நிலை

தமிழக மக்களால் வாக்களிப்பட்டு தேர்ந்தெடுத்த முதல்வராய் இருப்பதால் மொத்த தமிழகத்தின் பிரதிநிதியாய் அவர் தன்னை முன் நிறுத்தி உள்ளார். அவரது சொல்லும் செயலும் தமிழக கலாச்சாரம் எனும் கட்டப்பட்டும் பிம்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருத்தல் நலம். மக்களாட்சி அமைப்பின் நான்காம் தூணாண பத்திரிக்கை அமைப்பை சார்ந்தவரை அடா புடா என்றழைத்து அதை பற்றிய குற்ற உணர்வோ மனசாட்சி உறுத்தலோ இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. கலாச்சார காவலர்களாய் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் புனித உருவங்களும் இது போன்ற செயல்களை கண்டு மவுனம் சாதிப்பது அவர்களது கலாச்சாரம் குறித்த அக்கறையை காட்டுகின்றது. அரசியலமைப்பை மதிப்பேன் என உறுதி எடுத்து கொண்டு ஆளும் நிலைக்கு வருவோர் அதனை பற்றிய அடிப்படை அறிவை கூட இழந்து நிற்பதும் அதற்கு வலுவாக ஜால்ரா தட்டும் நிலையில் மக்கள் மந்தையும் இருப்பது வேதனை தருகின்றது.

பரந்த சிந்தனையும், பகுத்தறிவு முன்னிறுத்தும் ஆளுமையும் கொண்ட அரசியல் வளராமல் வியாபார சிந்தனையுள்ள தனிநபர் புகழ் வளர்க்கும் குருட்டு பக்தி உள்ள ஜமீன் ரீதியான அரசியலே தொடர்ச்சியாக முன்னிறுத்தப்படுகின்றது. சின்ன ஜமீன் சிறு வயதிலேயே அடையாளம் காணப்பட்டு பண்ணை ஆட்களால் கவனிக்கப்படுகின்றார். பண்ணை ஆள் என்றைக்கும் ஜமீன் ஆக இயலாது. பண்ணையில் வலுவான நிலையில் குரல் உயர்த்தும் நிலையில் ஜமீன் குடும்பமே உள்ளது. பண்ணையாள் மனநிலையில் ஜமீன் வாரிசுகளை விமர்சிப்பதே பண்ணைக்கு செய்யும் துரோகமாக தோன்றும். பண்ணை என்றைக்கும் பொது சொத்தல்ல. பண்ணை என்றைக்கும் ஜமீன் குடும்பத்திற்கே. வர்ணாசிரம தன்மையுள்ள பிறப்பால் தகுதி நிர்ணயிக்கும் அமைப்பே உள்ளது. அடிமை தன்மை மூளையின் அடுக்குகளில் ஊரியுள்ள நிலையில் இதனையெல்லாம் சொன்னால் பிரச்சனை ஆகி விடும்.

கே.எஸ். ரவிக்குமார் , ஆர்.வி.உதயகுமார் படங்களில் காட்டப்படும் புனிதமான ஜமீன்களும், காலையில் வாசலில் நின்று துண்டை அக்கத்தில் வைத்து வாயெல்லாம் பல்லாக வணக்கம் சொல்லும் பண்ணை ஆட்களுமே நினைவுக்கு வருகின்றார்கள். அந்த திரைப்படங்களில் பண்ணையார் விமர்சனத்துக்கும் கேள்விகளும் அப்பாற்பட்டவர்.

போற்றி பாடடி பெண்ணே மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கக்கத்தில் பை வைத்துக் கொண்டு பண்ணையாருக்கு ஆலோசனை சொல்லும் நிலையில் கொஞ்சம் கும்பல் உண்டு. அந்த கும்பல் அதிக பட்ச இடம் அதுதான். பண்ணையாள் பண்ணைக்காக வால் இருந்தால் ஆட்டும் நிலையில் சித்தரிக்கப்படுவார். இந்த மனநிலை உள்ளவர்கள் பகுத்தறிவு குறித்து பேசும் போது வேடிக்கையாக இருக்கின்றது. இவர்கள் செயலும் வர்ணாசிரமும் வேறல்ல.

No comments: