Monday, September 11, 2006

தேவை

அங்கு ஒரு பிணம்
இருந்தது
நாங்களெல்லாம் கூடி
அது கொலையா
படுகொலையா
களையெடுப்பா
தற்கொலையா
யுத்ததின் எச்சங்களாவென
விவாதம் கொண்டோம்
விவாதத்துக்கு தொந்தரவாய்
கண்ணீரும் கம்பலையுமாய்
அடிவயிற்றின் எரிச்சலோடு
சப்தம் கிளப்பி சிலர்
குடும்பமாம் அழுகையாம்
வேடிக்கை மனிதர்களென
அங்கதம் பேசி
விவாதம் தொடர்கையில்
நடு நடுவில்
அங்காங்கே புதுப்பிணங்கள்
பிறந்துக் கொண்டிருந்தன
அவை புது விவாதங்களுக்கு
கொண்டு சென்றன
வர வர
பிண நாற்றத்தில்
எதை விவாதிக்கிறோமென
தெரியவில்லை
தீர்வுகளின் தேவைகள் மறந்து
போனதால்
விவாதங்களே தேவை ஆனது
அதனால்..

No comments: