Thursday, September 14, 2006

எது நிஜம்

நிலத்தில் நாம்
நிற்பதால் இறக்கைகள்
கொடுத்தோம் கடவுளுக்கு
அளக்க இயலாமல்
விரிந்து கிடந்ததால்
வானத்தில் வீடு கட்டினோம்
வசதியாய் கடவுளுக்கு
அதற்கப்புறம்
அசரீரியும் கட்டளைகளும்
அங்கிருந்தே வழங்கப்படுகின்றன

பொன்னும் மணியும்
தின்னும் சோறும்
கலவியின் சுகமும்
தேடி தீர்த்தோம் நிதமும்
தேடல்கள் நமக்கானதால்
இருக்கையில் வணங்கினால்
இம்மையில் கொடுப்பவரே
கடவுளானார்

வேண்டினால்தான் கொடுப்பவனென்றால்
தேவைகளுண்டு கடவுளுக்கு
தேவைகள் தீர்ந்த
கடவுள் தேடி
இனியாவது
வேண்டுதல் கேட்டவனை
விட்டு விடுவோம்
நீண்டதொரு கற்பனையை
நிஜமாய் நினைத்தல் சாத்தியமே
அது எல்லாரிடமும்
இருக்கும் பொழுதில்

No comments: