Friday, July 13, 2012

தமிழ் விழாவும், ஆசிரியருக்கு எழுதிய பதிலும்

நான் ஆசிரியராக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள் பெட்னா நடத்திய தமிழ் திருவிழா குறித்து எழுதியது மன வருத்தம் தந்தது.  இது நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதம்.


ஆசிரியருக்கு,

வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ் சுழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள் ,வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைகைக்கு ஏற்றது போல அதை வெளி படுத்தவும் செய்கிறனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைபையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.



இது ஒரு தமிழ் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரை தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு

தெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னை போல் மொழி பேசும் ஒருவனை , என்னை போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகதினை கண்போமா எனபது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு கானினும் தமிழ் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லா பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகதின் அனைத்து தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்கு தோன்றியது.



தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினை குறித்து எஸ்ரா பேசினார். அவருக்கு பின்னர் சுதந்திர போராட்ட அனுபவங்கள் குறித்து நல்ல கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்க்கு பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்து பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்கு கடிதம் எழுதியவர் இதை குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்கு படவில்லை.



ஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றி காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்து பேசினார், இலக்கிய வினாடி வினா நட்ந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.



இந்த நிகழ்வு நன்றாக நடக்க எனக்கு தெரிந்த வகையில் சில தன்னார்வ  நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாக படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்த தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.



உதாரனத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கதிலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை அவர் கொளுத்தும் 104 வெய்லில் காருக்கும் உணவு கூடதுக்கும் சுமந்தலைந்தார். அவர்

உழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசதில் அவர்கள் உள்ளம் இருந்ததை கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.



அமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லா தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலது உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்கு திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அனைவருக்குமான பொதுவான ஒரு நிகழ்வு.



நிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு  விழாவில் கலந்து கொண்ட பார்வையாளன் என்ற அளவில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டென காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவ்ளுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரை காணும் தருணங்களில் ஒன்று.



அன்புடன்

நிர்மல்

1 comment:

மயிலாடுதுறை சிவா said...

Excellent Write up...

Thanks for understanding about FeTNa ....

See you in Toronto


Sivaa....