Tuesday, June 26, 2012

தமிழ் வழி நாத்தீகம்

 நாத்திகவாதம் எதிர்மறை மனநிலை மட்டும் உடையதா என்பதில் எனக்கு தொடர் கேள்விகள் உண்டு. நாத்தீகம் என்பது பல்பொருள் கொண்டது எனவே எனக்கு படுகின்றது. பொது வெளியில் கடவுள் மறுப்பு எனும் தளம் கொண்டு முன் வைக்க படுகின்றது. ஆனால் கடவுள் இருக்கலாம் ஆனால் நிறுவனமாக பட்ட மத அமைப்பு வேண்டாம் என்பதே நாத்தீக கொள்கை கொண்டவரின் உள் தேடல் என எனக்கு தெரிந்த தமிழ் நண்பர் வட்டாரத்தில் கண்டிருக்கின்றேன். ஆனால் அதை நண்பர்கள்  வார்த்தையில் சொல்லும் பொழுது கடவுள் மறுப்பு என முடிப்பர். இந்த இரு வார்த்தை முடிவுக்கு  காரணம்  லௌகீக வாழ்வில் விரிவான உரையாடலும் , உரையாடல் சார்ந்த தொடர் சிந்திப்பும் பெரும்பாலும்  இல்லை என நினைக்கின்றேன்.  பெரும்பாலான கருத்துகள் பொது நம்பிக்கை தளத்தில் நேர்ந்து விட பட்டுள்ளன. பொது நம்பிக்கை தனி மனிதர் அகங்காரம் சார்ந்தது. அதை  கையாளுவது அனைவருக்கும்  சுலபம் அல்ல. 

 நாத்தீகவாதம்  நகர கூடிய ஒரு தேர். பிருமாண்டமாய் அது  கட்ட பட்டு கிடக்கின்றது. அதை இழுத்து நகர்த்தும் பொறுப்பு உள்ளவர் முடங்கி போதலில் தேரும் பழுதானதாய் படுகின்றது. நாத்தீக வாதம்  நிறுவன உடைப்பு வாதம் எனும் பொருளில் முன் வைக்க பட்டு நகருதல் வேண்டும் என்று சில நேரம் படும். அந்த நேரத்தில்  கையில் உளியை வைத்து கொண்டு உருட்டி விளையாடி கொண்டு இருக்கின்றோமா என தோன்றும். உளியில் செயல் சிலையாய் பூத்தலில் உண்டு.

நிறுவனமாய் கூட்டபட்டு ,அதிகாரமும், மூலதனமும் தேங்கி அலையும் அமைப்புகளின் இயங்கு தன்மையை உடைத்து நெறி செய்யும் அமைப்பினையே நாத்தீகம் எனலாம். அது வெற்று கடவுள் மறுப்பன்று. கடவுளோடு அதற்கு பேச ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை தனி மனித உரிமை என பூரண  நாத்தீகம் உணரும். அது மறுப்பது நிறுவன அமைப்பின் செயல்தளத்தினையே.

நாத்தீகம் கடவுள் மறுப்பாய் குறைத்து நிற்கையில் அது உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை என உருவம் வரலாம் . ஆனால் அது உண்மையன்று. நாத்தீகம் அற வடிவினை, கருணையை ,அழகை  நிறுவன  அமைப்பின் வெளியே தேடுகின்றது ,இந்த தேடல் கவிதையை , கவித்துவதினை  கொடுக்க கூடியதே என  நான் நினைக்கின்றேன்.  

எல்லாவகை மன எழுச்சியிலும் தர்க்க முழுமை உடையவர் நடை முறை சாத்தியம் அல்ல எனவே படுகின்றது. அவ்வாறு உள்ளவர் பூரணம் ஆனவர் ஆவார். நாத்தீகம் கோரும் தர்க்கம் மன எழுச்சியின்  மறுப்புக்கு அல்ல, மன விரிவுக்கு என்பதே என் எண்ணம்.   

No comments: