Wednesday, January 17, 2007

சில முடிவுகள்

அவனும் அவளும் அங்கு நின்றிருந்தார்கள். கண்ணுக்கெட்டிய வரை வெறும் வெளியாய் நிலம் பரவியிருந்தது. மதிய நேர மழை பூமியை குளிர்வித்திருக்க, சாரல் கலந்து காற்று மணத்தது. இன்னும் வானம் இருட்டிதான் இருந்தது. அடுத்த மழை இப்போதோ எப்போதோ வரலாம்.

பதட்டம் கலந்த சந்தோஷம் ஒட்டியிருந்த மனநிலைக்கு மழை ்வாசம் வசதியாய் இருந்தது. ஒரு சிகெரெட்டோ அல்லது காபியோ தேடி வந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும் வந்தது.

மூன்று வருடத்துக்கு முன் இங்கு வந்தபோதும் இப்படிதான் இருந்தது. வெற்றுத்தரையும் அடித்துப் போடும் அமைதியும் மட்டும் அங்கிருந்தது. வரப்போவதாய் சொன்ன பேருந்து நிலையமோ, பள்ளியோ வருவதாய் தெரியவில்லை. வாங்கின அனைவரும் விற்பனைக்கு வாங்கியது போல் வீடுகளும் முளைக்கவில்லை. ஆனால் வேறு விஷயங்கள் நடந்து விட்டன.

"அப்பாவுக்கு பயம் சண்முகம். யாராவது வந்து ்கொட்டாய் ்போட்டுட்டா என்ன பண்ணறதுனு புலம்பல். இங்க யார் வர போறானு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு. சந்திரா ஆசைப்பட்டதால் இந்த எடம் வாங்கினோம். வருஷம் மூனாச்சு. வாங்கின மாதிரியே இருக்கு. அப்பா பிடிவாதத்துக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் வந்துட்டு போறதுதான் மிச்சம்"- நித்யா

"ம்."-சண்முகம்

"என்ன சண்முகம். நீ ஏதாவது டவுன்குள்ள வாங்க வேண்டியதுதானே. நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஏதாவது பண்ணு கல்யாணத்துக்கப்புறம் ஒரு உதவியா இருக்கும்"- நித்யா

"ம்"- சண்முகம்

"ஏண்டா இவ்வளவு சொல்லறேன். ம் ,ம்னு. போரடிக்குதா"- நித்யா

"ஏன் நித்யா. அமெரிக்காவிலியே இருந்துக்கறதா முடிவு பண்ணிடியா"- சண்முகம்

"அப்பா சொன்னாங்களா? இங்க என்னடா பண்ணறது. ஐடில இருந்தா இங்க தெனம் பத்து பன்னென்டு மணி நேர வேலை. அங்க அப்படியில்லடா பெரும்பாலும் எட்டு மணி நேர வேலைதான். ஜிம், நீச்சல், பிரண்ட்ஸ்னு நேரம் கழிக்க முடியுது. ஒய்வா போகுது. ஊரும் வசதியா இருக்கு"- நித்யா

"ஏன் நாங்களேல்லாம் இல்லியா?"- சண்முகம்

" உன்னைய பாக்கவே முடியலேனு உங்கம்மா புலம்பறது எனக்கு தெரியாதா என்ன? "- நித்யா

" என்னவோ பண்ணி தொலை. எனக்கென்ன. இங்க இருக்கறவனெல்லாம் மனுஷனா தெரியலேனா என்ன பண்ணறது "- சண்முகம்

" ஏன் நீ அங்க வாயேன்டா. நான்தான் விசாவுக்கு ஏற்பாடு செய்யறேனு சொல்றேன். நீதான் கேட்க மாட்டேங்கற " - நித்யா

" ஒண்ணும் வேண்டாம். உன் வேலையை பாரு "-சண்முகம்

அவளுக்கு கோபமாய் வந்தது. அவள் ஊருக்கு வந்ததில் இருந்து கீறல் விழுந்த டேப்பாக இதே பேச்சு. என்ன நினைக்கிறான் என்பதே அவளுக்கு புரியவில்லை. நேராக சில விஷயங்களை சொல்ல முடிவதில்லை. இவள் நினைப்பது அப்பாவுக்கு புரிந்ததால் அவர் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளார்.
புதிதாய் கொத்து புகைப்படங்கள் சாப்பாட்டு மேஜையில் முளைத்திருந்தது. காய் ்வெட்டிக் கொண்டிருந்தவள் கத்தியால் எல்லாவற்றையும் கிழித்து விட நினைத்து அமைதியாகி விட்டாள்.

அம்மா வேறு சாதி பெருமையை ஆரம்பித்து இருந்தாள். அம்மா பெருமை பேசுவதில் குறையே வைப்பதில்லை. அவரது அப்பா வீட்டு களத்தில் எத்தனை ஆட்களை நெல்லறுக்க காத்திருந்தனர் என்பதெல்லாம் கேட்டு கேட்டு இவளுக்கு காது புளித்து விட்டிருந்தது. கவுரம், கலாச்சாரம் என்ற வார்த்தை புழக்கங்கள் வீட்டை சுற்றி சுற்றி வர இவளுக்கு தடுமாற்றமாய் இருந்தது.

சண்முகத்திற்கு கேட்பதா, வேண்டாமா என்பது தர்ம சங்கடமாய் இருந்தது. வீட்டில் சொன்னபோது அப்பா குதித்து விட்டார். அம்மா வழக்கம் போல இவனிடம் ஆதரவாய் பேசினாலும், தாலியறுத்தவளை எல்லாம் வீட்டுக்கு கூட்டி வராதேடா என்ன விதிமுறைகள் வழங்க ஆரம்பித்து இருந்தாள்.

அப்பா கடையில் முடி வெட்டி கொண்டிருக்கும் போது அவருக்கு உதவலாமென போய் நின்றால் இவனிடம் அவர் பேசவே இல்லை. உதவிக்கு நிற்கும் கதிரவன்தான் அப்புறம் வா சண்முகம் இப்ப கெளம்பு என்று அனுப்பி விட்டான். அவரை எதிர்த்து இது வரை பேசியதில்லை. பேசவும் இவனுக்கு தயக்கமாய் இருந்தது. இவளுக்காக ஒரு வாரம் விடுப்பு வாங்கி வந்தது சரியா தவறாவென அவனிடத்து எண்ணம் ஒடியது.

கல்லுரி காலத்து பழக்கம். சிநேகிதியாய் அறிமுகமானவள், மெல்ல சண்முகத்து வாழ்க்கையின் ரேகைகளானாள். அவளின் அசைவுகளே அவனது நல்லது கெட்டதுகளை தீர்மானித்தது. அத்தை மகனை மணந்து அவள் நகரும் போது அவனுக்கு வலித்தது. வாழ்க்கை ்சில புதிர்களை புதிராகவே வைத்திருந்தது.

சண்முகத்தின் தோழமை அவளுக்கு அச்சத்தையும் பாதுகாப்பையும் ஒரு சேர அளித்தது. மனம் விட்டு பேச, இவள் இப்படிதான் என வரையறுக்காத அன்பு அவனிடமிருந்தது. அதே நேரம் அவனை பற்றிய மனதின் பிம்பங்கள் நட்பின் அடுத்தக்கட்டத்தை அவள் மனதில் நிறுத்துதல் அவளுக்கு அச்சத்தை அளித்தது. நடைமுறை பேதங்கள் விரிவாய் இருந்ததால் பெற்றோரின் சம்மதம் வாங்க முடியுமா என்பது தெரியவில்லை.

பெற்றோரை மீறுதல் சாத்தியமா என யோசிக்கும் முன்னமே அப்பா சந்திராவை கை காட்டினார். மிக்க சந்தோஷமென பத்திரிக்கை வாங்கி கல்யாண வேலைகளுக்கு உதவி வேண்டுமா என அவன் கேட்க ஏமாற்றமாயிருந்தது. அதற்கப்புறம் தெளிவானது போல் அவளுக்கு இருந்தது.

சந்திரா இனிமையானவனாய் இருந்தான். ஒரு வருடம் விரைவாய் நகர புரிந்து கொள்ளல் நிகழும் முன்பே கனவு போல் இருந்த வாழ்க்கை கார் விபத்தில் முடிந்து விட்டது. தோழன் ஒருவனை விமான நிலையத்தில் விட சென்ற சந்திராவை அதன் பின் அவள் உயிரோடு அவள் பார்க்கவில்லை.

நீண்ட தனிமை கொண்ட இரவுகள் அழுகையையும் , அசசத்தையும் கொடுத்தது. உறவினர்களின் இரக்க பேச்சு முள்ளாய் குத்த அமெரிக்காவிற்கு வந்து விட்டாள். தொடக்கத்தில் இவன் சில முறை தொலைபேசியில் பேசினான். தட்ப வெப்பம், விளையாட்டு, வேலை அரசியல் என வேறு ஏதேதோ பேசினான். கொஞ்சம் வளையத்திலிருந்து வெளி வர அவளுக்கு உதவியாய் இருந்ததது. சில முறை பேச்சு பல முறை ஆனது.

இரண்டு வருடத்தில் மீண்டும் பழைய உணர்வுகள் தலைகாட்டுவதை உணர்ந்தாள். ஊருக்கு வர முடிவு செய்து இந்த முறை வந்தாள். அவன் அவளுக்காக விடுப்பு எடுத்து வர சந்தோஷமாய் இருந்தாள். அவனுடன் தனியே பேசுவதை அவள் அப்பா மறைமுகமாய் தடுத்தே வந்தார். அவன் வீட்டிற்கு வரும் வேலையில் அவருடன் அவன் நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொண்டார். அதுதான் நிலத்தை பார்த்து வருகிறேன் என தனியே கிளம்பி விட்டாள். வழியில் அவன் வீட்டில் அவனை கூட்டிக் கொள்கையில் அவன் பெற்றோரின் பார்வை அவளுக்கு கொஞ்சம் மாறியிருப்பதாய் தோன்றியது. வந்ததும் ஆரம்பித்த உரையாடல் போக கூடாத இடத்திற்கு போய் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் அமைதி இருந்தது. இருவரும் பேச வார்த்தைகளை துலாவி வந்தனர். என்ன சொல்வது , எப்படி சொல்வது, பெற்றோரின் முகம் என பல துளிகள் மனதில் தெறித்துக் கொண்டிருந்தது. சோவென வெளியில் மழைக் கொட்ட ஆரம்பித்தது. ஒடி போய் காரில் ஏறிக் கொண்டாள்.

சட சடவென மழையின் சப்தம் உரத்து ஒலித்தது. இவ்வளவு நேரம் இருட்டி இருந்த மேகம் இப்போதே பெய்து முடித்து விட வேணுமென முடிவு செய்தது போல் இருந்தது. அவன் இன்னும் மழையிலேயே நின்றிருந்தான். காரிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியிருந்தது. கூப்பிடலாம் என நினைத்ததை நிறுத்திக் கொண்டாள். காரின் கண்ணாடியில் மழையின் வேகம் தெரிந்தது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். வினாடிகள் நகர மறுத்தன. நேரத்தின் கணம் மனதில் ஏறியது.

சட்டென காரை விட்டிறங்கி அவன் அருகே சென்று தோளை பிடித்துக் கொண்டாள். அவன் அவள் உதடுகளில் காதல் தேடினான். மழை குறையவில்லை. இன்னும் அதிகமாக ஆரம்பித்தது.

1 comment:

Anonymous said...

nallae kathai