Tuesday, January 9, 2007

ரயில் பயணம்


Train journey
Originally uploaded by Mahatma4711.

ரயில் அதன் உச்ச வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. முத்தையா கதவருகே நின்று கொண்டிருந்தார். எந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம் என்பது அவருக்கு மறந்து விட்டது. வயதாக வயதாக இப்போது நிறைய விஷயங்கள் அவருக்கு அடிக்கடி மறந்து விடுகிறது. எங்கோ போகிறோம் என்பது அவருக்கு நியாபகம் இருக்கிறது. எங்கே போகிறோம் என்பது குழப்பமாக இருந்தது. கையிலிருக்கும் பெட்டியை இறுக்க பிடித்துக் கொண்டார்.

பெட்டியை கீழே வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. ஒவ்வோரு வைக்க நினைக்கும் போதும் அவள் காற்றில் வருகின்றாள். அவருக்கு கட்டளை இடுகின்றாள். பெட்டியை இறுக்க பிடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. ரயில் தண்டவாளத்தோடு பாடும் சுருதி இதய துடிப்பு போலிருந்தது.ரயிலின் வேகம் அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

*****

"ஏங்க எங்க போறோம்"- ராணி. அழுகை கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.

"ஊர்ல இனி இருக்க முடியாது ராணி. உங்கப்பா நம்பளை கோவில்ல பாத்திட்டாரு. இன்னேரம் ஊரேல்லாம் உன்னை தேடிகிட்டு இருப்பாங்க."- முத்தையா

"பயமா இருக்குங்க"-ராணி

"நான்தான் இருக்கேன்ல பயப்படாதே. கம்பார்மெண்ட்ல எல்லாம் தூங்கறாங்க பாரு. மொய் மொய்ங்காம படு"- முத்தையா

ராணி பெட்டியை தலைக்கு வைத்து கண்ணை மூட முயற்சி செய்ய ஆரம்பித்தாள். யாரும் பெட்டியை எடுத்து ்விடுவார்களோ என பயமாக இருந்தது.

"பெட்டியை வேண்ணா குடு. நான் வைச்சிருக்கேன்"-முத்தையா

"வேணாங்க என்கிட்டயே இருக்கட்டும். எல்லாம் எங்கம்மா நகைங்க. நீங்க கண்ணசந்திட்டா கஷ்டம்"- ராணி

முத்தையா நகர்ந்து அவள் காலோரம் உட்கார்ந்து கொண்டான். ரயில் நகர்ந்து கொண்டிருந்தது. மெல்ல ஒவ்வொருவராக கண்ணயரும் நேரம் ஆரம்பித்தது.

********

முத்தையாவுக்கு கை வலித்தது. பெட்டி நாளாக நாளாக கனக்க ஆரம்பித்திருந்தது.ரயிலில் ஆங்காங்கே பல குடும்பங்கள் இருப்பதை கண்ட போது தனக்கேன குடும்பத்தை பிரிந்த கொடுமை அவருக்கு நினைவுக்கு வந்தது. வயதான காலத்தில் சாய இடம் கூட இல்லாமலாகி விட்டதே என கவலையோடு இருந்தார்.

அவள் எதையையும் செய்ய விடாமல் தடுத்தே வந்தாள். கல்யாணம் ஆன போது பெண்டாட்டி முகத்தில் அவள் வாசனை இருந்தது. அன்று இரவு பெண்டாட்டியை நெருங்கும் போதேல்லாம் அந்த வாசனை அதிகரித்தது. வாசனை பயத்தை கொடுத்தது. பயம் எல்லாவற்றையும் தடுத்தது. அன்றுதான் அந்த பெட்டியை மீண்டும் பார்த்தார். கட்டிலோரம் உட்கார்ந்திருந்தது.அதை எடுத்துக் கொள்ளேன காதில் அவள் சொன்னது இன்னமும் நியாபகம் இருந்தது. அப்புறம் கொஞ்ச நாளில் கட்டியவள் பால்காரனோடு ஒடியது நியாபகம் வந்தது.

******

"ராணி காப்பி தண்ணி ஏதும் சாப்பிடறியா? "- முத்தையா ராணியை எழுப்பினான்

"காபி வேண்டாங்க.நான் பாத்ரூமுனு போய்ட்டு வர்ரேன்"-ராணி எழுந்தாள்

"கடைசில இருக்கு. வா காட்டறேன்"-முத்தையா அவளுடன் நடந்தான். ரயில் அடுத்த நிறுத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.

"இந்த பெட்டியை கொஞ்சம் பிடிங்க. நான் போயிட்டு வாரேன்"- அவள் உள்ளே போனாள்.

ரயில் நின்றது. முத்தையா அவசரமாக ரயிலை விட்டிறங்கி நடக்க ஆரம்பித்தான். அவள் பார்க்குமுன் போய் விட வேண்டுமென்ற அவசரம் காலில் தொற்றிக் கொண்டது. ஸ்டேஷனின் ்வெளிப்புறம் காடாய் இருந்தது. அது வழி நடக்க ஆரம்பித்தான்.

"இந்தாங்க கொஞ்சம் நில்லுங்க" - அவள் குரல் அவன் முதுகை தொட்டது

திரும்பி பார்த்தான். அவள் ஒடி வந்து கொண்டிருந்தாள்.

"என்னை விட்டுட்டு எங்க போறீங்க?"

"சனியனே ஏண்டி என் பின்னாடி வந்த. ரயில்ல போய் தொலைய வேண்டியதுதானே"- திரும்பி ஒட ஆரம்பித்தான்.

"என் பெட்டியை குடுங்க. என் பெட்டியை குடுத்துட்டு போங்க"-பின்னால் குரல் துரத்தியது.

திரும்பி நின்று அவளை பிடித்து அறைந்தான். கீழே விழுந்தவள் கல்லையும் மண்ணையும் வாரி இறைக்க ஆரம்பித்தாள். பெட்டியை பிடுங்கி இருட்டில் எங்கேயோ வீசினாள்.

கோபம் தலைக்கேறி கையில் கிடைத்த கல்லை தூக்கி தலையிலடித்தான். ரத்தம் கொட்டி கீழே விழுந்தாள்.

காலை பிடித்து இழுத்து காட்டுக்குள் போட்டான். தேடியதில் இருட்டில் பெட்டி கிடைக்கவில்லை. செத்து போயிருப்பாளோ என பயமும் வந்தது. அவசரமாக பஸ் ஸ்டேன்டை தேடி காட்டு வழி ஒட ஆரம்பித்தான்.

*********

முத்தையாவிற்கு கண்ணீர் பொங்கியது. சில நேரம் அவர் அழும் போது அவள் குரல் ஆறுதலாய் இருக்கும், ஆனால் அப்போதும் பெட்டியை கீழே வைக்க விடமாட்டாள். அதை திறந்து பார்க்க ஆர்வமாய் இருக்கும் நேரங்களில் அவள் மிரட்டலுக்கு பயந்து திறப்பதுமில்லை. இரண்டு முறை ஆற்றில் வீசியும் பெட்டி மீண்டும் அவரை தேடி வந்து விட்டது.

பெரியண்ணண் மளிகை கடையில்தான் வேலை செய்து வாழ்க்கை ஒடியது. அண்ணாச்சியும் வேலை நேரம் போக மீதி நேரம் என்னடா இழவு எப்போ பார்த்தாலும் கையே கட்டிக்கிட்டே இருக்கியேனு கேட்பார். வேலை நேரத்தில் அவள் வந்து பெட்டியை வாங்கி கொள்வாள். அதை அவரிடம் சொன்னால் போடா பைத்தியகாரானு திட்டி விடுவார். அவள் அப்போது கைக்குள் இருக்கும் பெட்டி யாருக்கும் தெரியாது என்பாள்.

அடிக்கடி எங்கேயாது ரயில் போகலாம் என்று கூட்டிச் செல்வாள். முத்தையாவும் மறுப்பதில்லை.

************

ராணி கண் விழித்த போது காலை வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தது. தலை பக்கம் ரத்தம் கட்டிக் கொண்டு வலித்தது. முள்ளுக்காட்டுக்குள் கொஞ்சநாள் இருந்தாள். அப்புறம் அந்த ஊரிலியே இருந்துக் கொண்டாள். பின்னாளில் சித்தாள் வேலைக்கு போகும் மணியை கல்யாணம் கட்டிக் கொண்டு குழந்தையையும் பெற்றுக் கொண்டாள். என்னைக்காவது முத்தையாவை ரயில்வே ஸ்டேஷனில் பார்ப்பாள். எதையோ பறிக் கொடுத்தவன் போல் கையை இருக்க கட்டிக் கொண்டு நிற்பான். அவள் அவனிடம் ஆனால் பேசுவதில்லை. அவனை கண்டால் அவளுக்கு பிடிப்பதில்லை.

********

ஒருநாள் முத்தையாவுக்கு ராணியின் குரல் ரயிலில் இருந்து குதிக்க சொல்ல ஓடும் ரயிலில் இருந்து குதித்து விட்டார். அதுதான் கடைசியாய் அவர் குரல் கேட்டது.

1 comment:

Unknown said...

நல்ல கதை நிர்மல்!

குற்றவுணர்ச்சியை அழகா உருவகப்படுத்தி எழுதியிருக்கீங்க..