Monday, August 21, 2006

நாட்டு நடப்பு (தேசியம்)

ஊர் ஆலமரத்தடியில இருந்த சண்முகத்துக்கு எதையுமே பிடிக்கவில்லை. அம்மாவும்,அப்பாவும் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பது எரிச்சலாக இருந்தது. சோறு சமைச்சி போட்டுட்டு, துணி துவைச்சி கொடுத்திட்டு,செலவுக்கு காசு கொடுத்திட்டு வாயை மூடிக்கிட்டு இருக்க தெரியல்லை அவங்களுக்கு என நட்பு வட்டாரத்திடம்(அல்லக்கைகள்) சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அல்லக்கைகளுக்கும் சண்முகம் வருத்தமாய் இருப்பது பிடிக்கவில்லை.தெருமுனை கழைக்கூத்தாடி போனதிலிருந்து சண்முகம்தான் அவர்களை சந்தோஷமாய் வைத்துக் கொண்டிருந்தான். அப்பப்ப அல்லக்கைகளுக்கு டீ வேறு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் டீயும் வாங்கி தருவதில்லை.

"சினங்கொண்ட சிங்கமே.எங்கள் தங்க தலைவா,நீங்க வருத்தப்படலாமா? குடும்பம் அப்பா,அம்மாலாம் சும்மா.துடைச்சி எறி தலை."-அல்லக்கை ஓன்னு.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"குடும்பத்தில இருந்து என்னத்த கண்டோம். பொழுதனைக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. இதை மடிச்சு வை.அத்த க்ளின் பண்ணுனு. நல்லா படி. கேட்டு கேட்டு காதே புளிச்சு போச்சு. வீட்ல என்ன பண்ணறாங்க ்வெட்டியா? சுத்தம் பண்றதுதான் நம்ப வேலையா? எத்தனை வேலைகள் நமக்கு வெளில இருக்கு"-சண்முகத்துக்கு சினிமாவில் வரும் ஹிரோக்கள் போல கண்ணெல்லாம் சிவந்து உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

சண்முகத்துக்கு இவன் ஏன் எப்போதும் இதையே சொல்லறானு கொஞ்சம் டவுட் வர ஆரம்பித்தது. ஆனாலும் அவன் சொல்லறதை கேட்க சுகமாயிருப்பதால் இப்போதைக்கு இதை விட்டுடலாமுனு முடிவு பண்ணிக்கிட்டான்.

"குடும்பமே ஒரு போலி. அப்பா,அம்மா நமக்கு ஏமாத்தி போதனை பண்ணிட்டாங்க. அவங்க அடக்கு முறையை நான் ஒழிக்கனும். எதுக்கேட்டாலும் ஒன்னுக்கொதாவாத ஜடியா கொடுக்கறாங்க.
மூனு வருஷமா பைனல் இயர் பேப்பர் கிளியர் பண்ணலேனு சொன்னா,ட்யுஷன் போனு சொல்லறாங்க. இதுக்குதான் இவங்க இருக்காங்களானு நான் கேட்கறேன். படிக்க வைச்சா போதுமா, பரிட்சைல பாஸ் பண்ண அவங்கதான் ஏதாவது பண்ணனும். அப்புறம் ஒரு வேலை வாங்கி தரனும். அதேல்லாம் ஏன் பண்ணலேனு கேட்கறேன்? அக்கறையே இல்லாத கும்பல். இதெல்லாம் பண்ண பத்து லட்சம் காசு கொடுங்கனு சொன்னா கைல காசு இல்லடா. படிப்புக்கே வட்டிக்கு பணம் வாங்கிதான்டா தாரேனு சொல்லறாங்க. கடன் வாங்கறதெல்லாம் ஒரு பொழப்பா? எனக்கு அவங்க கூட இருக்கறதுக்கே அருவருப்பா இருக்கு. இந்த லட்சணத்தில இவங்க வாங்கின கடனை பின்னாடி நான்தான அடைக்க உதவி பண்ணனுமாம். கிண்டலை பாத்தியா? இந்த கும்பலை நான் என்ன பண்ணறேன் பார்"-சண்முகம் மூச்சிறைக்க பேசி முடித்தான்.

தொடர்ந்து 2 நிமிஷம் பேசினா கை தட்றதா முடிவு பண்ணியிருந்த அல்லக்கைகள் உடனே கைதட்டி விசில் அடிக்க ஆரம்பிச்சார்கள்

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"தலைவா, புதிசுபுதிசா உனக்கு சிந்தனைகள் கொட்டுது. நீ குடும்பத்துக்கு வை ஒரு வேட்டு"- அல்லக்கை ஒன்னு.

வடிவேலு ்வாத்தியார் எலிமெண்ட்ரி பள்ளிக்கூடத்தில வேலை பாக்கறவரு. அவர்தான் சண்முகத்துக்கும், அவனோட புரட்சிக்கூட்டதுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவரு. வெயிலுக்கு மரத்தடில ஒதுங்கனவர் இந்த வீர உரைகளை கேட்டுட்டார்.

"தம்பி சண்முகம் கோவப்படாதப்பா. அவங்க அம்மா,அப்பாதானெ கொஞ்சம் கொணமாத்தான் பேசேன்"-வடிவேல் வாத்தியார்.

"நீங்க பெரிசா பேச வந்திட்டிங்களே. நீங்களும் இதுல பங்கு வச்சிருக்கிங்க. அப்போ அல்ஜிப்ரா ஒழுங்கா சொல்லிக் கொடுத்திருந்தா இந்த கஷ்டம் வந்திருக்காதில்ல"-சண்முகம் நக்கலாக கேட்டான்.

அல்லக்கைகள் வாத்தியாரை கை காட்டி சிரித்தனர். எப்படி சண்முகம் வாத்தியாரை ஒத்த கேள்வில மடக்கிட்டானு சந்தோஷமாயினர்.

வாத்தியாருக்கு ஒரு நிமிஷம் குழப்பமாயிருந்தது.

"சண்முகம் ஒன்னும் குடிக்கலாமில்லையே. என்னையே அடையாளம் தெரியலையா. நான்தாம்பா வடிவேலு. உன்னோட ரண்டாம் கிளாஸ் வாத்தியாரு.நான் எப்படிப்பா அல்ஜிப்ரா ்சொல்லி தருவேன்?"-வடிவேல்

"என்னை குடிக்காரனு சொல்லறிங்களா? இந்த சமுதாயம் ஒரு புரட்சிக் கூட்டத்தை எப்படி பாக்குது பாருங்க"-சண்முகம் தோழர்களை பார்த்துக் கேட்டான்

்வாத்தியார் பயந்து போய் வீட்டுக்கு கிளம்ப சண்முகமும் அவனது புரட்சிக் கூட்டமும் வட்டமாக உட்கார்ந்து அம்மா அப்பாவோடு வாத்தியாரையும் திட்ட ஆரம்பித்தார்கள்.

பின் குறிப்பு;

"என்ன நீங்க சண்முகத்துக்காக இவ்வளவு செய்யறிங்களே. அவன் உங்களை திட்டிட்டு ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான்"-வடிவேல்

"ஆயிரம் திட்னாலும் மகன் வாத்தியரய்யா. அவனுக்கும் நல்ல வாழ்க்கை அமையனுமில்ல"-சண்முகத்தின் அப்பா

"கொஞ்சம் கண்டிக்கலாமே?"-வடிவேல்

"சொன்னேன். என்னை போடா பைத்தியக்காரானு சொல்லிட்டாங்க"-அப்பா

No comments: