Wednesday, August 9, 2006

பயம்

சத்தியவாணி பூச்சி மருந்தைக் குடிச்சி செத்து போச்சு. சண்முகத்துக்கு சத்தியவாணி பக்கத்து வூடு.சண்முகத்தை எப்போதும் குரங்குனுதான் கூப்பிடுவா.அதனால அவனுக்கு அவளை கண்டாலே பிடிக்காது

ரண்டு நாள் முன்னாடிதான் கோடி வீட்டு கார்த்தி அவ தாவணி புடிச்சி இழுத்துட்டு தொடக்கூடாத எடத்த தொட்டுப்புட்டான்.அந்த கார்த்தி கலாட்டா செய்யயில சண்முகமும் கூட இருந்தான். நா போய் சாவ போறேனு மிரட்டிடு சத்தியவாணி ஓடினா.அன்னைக்கு அம்மா கையால விழுந்த வெளக்குமாத்து அடி சண்முகத்துக்கு தழும்பாய் இருந்துச்சு.அடி தாங்காம வூட்டை வுட்டு ஓடி போய், பக்கத்தூருல அவனோட மாமா ஊட்ல ஓக்காந்துக்கிட்டான்.சண்முகத்தோட அப்பா அன்னைக்கு நைட்டு அவனை தேடி மாமா வூட்டுக்கு சைக்கள்ல வந்து ரண்டு அடி வுட்டு போனாரு.

சனி,ஞாயிறு தாண்டி திங்ககெழம மாமா வூட்லெருந்து நேரா பள்ளிக்கூடம் போனாதான் அவனுக்கு தெரிஞ்சது. சத்தியவாணி ஞாயித்துகெழம நைட்டு செத்து போயிட்டானு. கார்த்தி பயலெயும் காணோம்.வூட்டு பக்கம் போனா ஓரே எழவு சத்தம்,ஓப்பாரி.

சண்முகத்துக்கு வயத்தை கலக்கிடிச்சு.அடாடா வூட்டுக்கு இப்ப போனா மாட்டிடுவோமுனு ஊர் கடைசில இருக்க மாந்தோப்புக்கு போய்ட்டான்.

பசிக்கு ரண்டு பழத்த அடிச்சி தின்னுட்டு,சட்டையை கழட்டி மரத்தடில போட்டு படுத்தான்.திடிருனு அவனுக்கு சலக்கு சலக்குனு கொலுசு சத்தம் கேட்டுச்சு. அலறி அடிச்சு சுத்துக்கும் பாத்தான்.யாருமில்லை.நெஞ்சு வலி அதிகமா இருந்துச்சு.கையை வேற வலிச்சுது.
யாரது? யாரதுனு கத்திக்கிட்டே தோப்புக்குள்ள ஓடுனான். கண் வேற அவனுக்கு மங்கிச்சு. அப்ப தூரத்துல அந்த ரோஸுக்கலர் தாவணி தெரிஞ்சுது. சண்முகத்துக்கு அழுகையா வந்திச்சு. சத்தியவாணி என்ன உட்டுடுனு கத்திக்கிட்டே ஓடினான். கால வேற ஏதோ இழுக்க அப்படியே கீழ விழுந்தான்.

அன்னைக்கு சாயங்காலம் சண்முகத்து வூட்லியும் எழவு இருந்திச்சி. சாமி எறங்கி செத்து போன சண்முகத்தையும், சினிமாக்கு போக காசு கொடுக்காத அம்மாக்காக பூச்சி மருந்து குடிச்ச சத்தியவாணி பத்தியும் எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. மாந்தோப்புக்கு சுள்ளி பொறுக்க போன லட்சுமி சண்முகம் சாமி வந்து மாந்தோப்புக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தத கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தா.

No comments: