Tuesday, January 30, 2007
பட்டாம்பூச்சி விளைவுகள்
எதிர்காலம் என்பது நிகழ்கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. எந்த ஒரு சிறு செயலும் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரம் வெளிப்படையாகவும் , சில நேரம் மறைமுகமாகவும் பரவுகின்றன. அந்த பரவுதலின் தாக்கம் அடுத்த அடுத்த நிகழ்வுகளின் துவக்கத்தில் சேர பரவுதலின் விட்டம் அதிகரிக்கின்றது.
மில்லியன் விந்தனுக்களில் ஒன்று சினைமுட்டையுடன் சேர கரு உருவாகின்றது. இந்த சேருதல் என்னும் சிறு நிகழ்வு ஒரு உயிரை உருவாக்குகின்றது. அந்த உயிரின் உருவாக்கம் சமூகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளை உருவாக்குகின்றது. சில விந்தனுக்கள் முட்டையுடன் சேரும் சிறு நிகழ்வு ஏற்படாமல் போனால் உலகில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். போர், நாட்டின் வளர்ச்சி, அமைதி, அறிவியல் வளர்ச்சி, வன்முறை வெறியாட்டம்,ஜாதிக் கட்சி போன்ற பல நிகழ்வகளும் ஒரு சிறு நிகழ்விலிருந்தே தோன்றுகின்றன.
கேயாஸ் கருத்தாக்கம் எனப்படுவது கணிக்கமுடியாத,தொடர்ச்சியான, குறிப்பிட்ட இடைவெளி இல்லாத மாறிக்கொண்டே இருக்க கூடிய சூழல்களை அவதானித்து அவற்றை கணித வடிவப்படுத்தும் முயற்சியாகும். இந்த கருத்தாக்கத்தில் பட்டாம் பூச்சி நிகழ்வு குறிப்பிடதக்க ஒன்றாகும்.
Monday, January 29, 2007
ஊடல் வேளைகள்
எப்போதோ சொல்லப்பட்ட வார்த்தைகளின்
இருட்டு மூலைகளில் அது ஒளிந்திருந்தது
இப்போது பிடறிமயிர் சிலிர்த்து
வெளிவந்து ஆட்டமிடுகிறது
வெளிவராமல் இருந்தால்
விஷவிருட்சம் ஆகியிருக்கலாம்
ஆட்டத்தினை காணும் போது
ஆட்டத்தின் விளிம்புகள் காண
ஆட்டத்தின் எச்சங்கள் எல்லா புறமும் சிதறும்
சிதறுவது ஆட்டதின் நியதி
முடிவில்லா சங்கிலியாய்
நீள்வதாய் நர்த்தனம் வேடமிட்டாலும்
கடைசியில் அதையும் அதோடு உள்ளதையும் சேர்த்து
கடாசிவிட்டு கட்டிக் கொண்டு முடங்குகையில்
வேறோரு ஆட்டம் தொடங்குகிறது
Tuesday, January 23, 2007
மூளையின் அடுக்குகள்
பரிணாம வளர்ச்சியை பார்த்தாமானால் மூளைப்பகுதி மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது.
முதல் பகுதி ஆர்க்கிபாலியம் என்று அழைக்கப்படுகின்றது. ஊர்வன வகை விலங்களிடத்தும் இப்பகுதி உண்டு. இந்த பகுதி தன்னை தானே காத்துக் கொள்ளும் இயல்பை உயிர்களிடத்து உருவாக்குவதில் பங்கேற்கிறது
இரண்டாம் பகுதிதான் லிம்பிக் பகுதி. இது பாலுட்டிகளிடத்து உண்டு. இது செக்ஸ், தாபம், நெகிழ்வு, காதல், பரிவு போன்ற பல வகை உணர்வுகளுக்கும் காரணமான பகுதியாக உள்ளது.
இந்த பகுதி ஆராயும் சிந்தனைகளை தூண்டுவதில்லை.நேரும் சம்பவங்களை இந்த பகுதியில் சேமிக்கப்பட்ட நினைவுகளோடு ஒப்பீடு செய்து அதனோடு பொருந்துவதை கண்டு உடனே முடிவு செய்ய தூண்டுகின்றது.
உதாரணத்திற்கு சில
ஒரு பெண் திரும்பி சிரித்தால் அது ்காதல் என்ற தமிழ் சினிமா கதாநாயகனின் உணர்வு.
தனக்கு ஒரு மோதிரம் வித்தைக்காரர் கொடுத்தவுடன் உறவுக்கு ஒன்று கேட்டு வயதை மறந்து பஞ்சுமிட்டாய் கண்ட குழந்தை போல் பேசுவது
பழுதை கண்டு பாம்பென அரண்டு ஒடுவது
நடிகருக்கு கட்அவுட் வைப்பது
மூளையின் மூன்றாம் பகுதி முக்கியமானது. இது குரங்களிடத்தும், மனிதரிடத்தும் உண்டு. இதன் பெயர் நியோகார்டெக்ஸ். இந்த பரிமாண வளர்ச்சி லிம்பிக் பகுதியின் வளர்ச்சிக்கு அடுத்த நிலையில் நிகழ்ந்தது. நியோகார்டெக்ஸ் மனிதரிடத்து மூளையின் அளவில் 90 சதவீதமாக உள்ளது. குரங்குகளிடத்து இதன் அளவு குறைவு. சில நபர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தா பொழுதும் இது நிச்சயம் அவர்களிடத்து உண்டு.
இந்த பகுதிதான் ஆராயும் தன்மையை உண்டாக்குகிறது. இதன் ்மூலம் அமையும் செயல்கள் லிம்பிக் பகுதியின் முடிவுகளை மாற்றி அதன் காரணங்களை ஆராய சொல்கின்றது. உணர்ச்சிகளின் விளிம்பில் பிரச்சனையில் மறுகாமல் அலசி பார்க்க உதவுதலின் அவசியம் பரிணாமத்ததில இருக்க போய் இந்த பகுதி உருவாகி இருக்கிறது.
இந்த பகுதியின் உதாரணங்கள் சில
அந்த பெண் என்னை பார்த்து சிரித்தால் அதன் அர்த்தம் தேடக் கூடாது. திரும்ப சிரித்தால் போதும் என நிஜவாழ்வில் முடிவெடுப்பது
நடிப்பு பிடித்திருந்தால் படம் பார்த்து பொழுதை போக்கி விட்டு கட்அவுட் பின்னால் அலையாமல் வீட்டுக்கு செல்லும் போது
கையூட்டு வாங்கும் போது
கோவில் சன்னதியில் வெளியில் விட்ட செருப்பை நினைக்கையில்
Monday, January 22, 2007
கிராமபுற உள்கட்டமைப்பு மேம்பாடு
இந்த 20 லட்சத்தில் முதல் 15 லட்சம் சாலை வசதிகள், குடிநீர் வசதி, சாக்கடை வசதிகள், சுடுகாடு, நூலகம் போன்ற வசதிகளுக்கு பயனபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து லட்சம் பிற திட்டமிடா செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். உள்கட்டமைப்பை கிராமங்களில் மேம்படுத்துவதன் மூலம் நகரங்களுக்கு வரும் மக்களை குறைக்கலாமென்றும் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்கள்.உள்கட்டமைப்பு உயர்த்துதல் மக்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.
சிறந்த பஞ்சாயத்து விருது ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 15 பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.
நிறைய நல்ல திட்டங்கள் அரசின் உத்தரவிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு செல்வதற்குள் காணாமல் போய்விடுகின்றது. அதை தடுக்க இது போன்ற திட்டங்களில் பணம் செலவிடுதற்கான கணக்கு வழக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு எளிதில் படுமாறு வைக்கலாம்.
நன்றி; தி ஹிண்டு
தண்ணீர் பிரச்சனையும் கருணாநிதியும்
கருணாநிதியின் துணைவியார் காலில் விழ துரை முருகன் தோத்திரம் பாட தயாநிதி மோதிரம் அணிந்திருக்க கண்ட புகைப்படமெதிலும் கருணாநிதி கரங்கட்டியோ முகத்தில் பரவசம் பொங்கியோ பார்க்கவில்லை. சரியாசனம் தன்னில் ஆன்மிகவாதியாடு அமர்ந்திருப்பதையே காணமுடிந்தது.
கடவுள் மறுப்பு கொள்கை காரணம் காட்டி தமிழக மக்களின் வாழ்வோடு அரசியல் சித்து புரியாமல் மாற்றுக் கொள்கை உடையோரையும் அரவணைத்து செல்லுதல் பாரட்ட வேண்டிய குணமே. மக்களின் ஜீவாதார பிரச்சனையான குடிநீர் பிரச்சனை நோக்கி பார்வை செலுத்தும் ஆன்மிகவாதியும் பாராட்ட பட வேண்டியவரே. எதையும் பிரதி உபகாரமாய் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் செய்திருப்பார் என நம்புகிறேன். ஊடகங்களிலும் ஆன்மிக தரப்பிலிருந்து கோரிக்கை எதுவும் வந்தது போல் தெரியவில்லை.